நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இருதரப்பிலும் அணிவகுப்பு

விக்கிமூலம் இலிருந்து

83. இருதரப்பிலும் அணிவகுப்பு

பெருமானார் அவர்கள், தங்கள் கருத்துக்கு மாறாக, பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கு ஏற்ப, வீட்டினுள் சென்று போர்க் கவசத்தை அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள்.

பெருமானார் அவர்கள் கருத்துக்கு மாறாகச் செய்யும்படி நம்மால் ஏற்பட்டுவிட்டதே என எல்லோரும் வருந்தி, அவர்களிடம், “எங்கள் அபிப்ராயத்தைக் கை விட்டு விடுகிறோம்” என்று கூறினார்கள்.

“இனித் திட்டத்தை மாற்றுவது அழகல்ல” என்று பெருமானார் கூறிவிட்டார்கள்.

***

தங்கள் படையுடன் குறைஷிகள் மதீனாவுக்கு இரண்டு மைல் தூரமுள்ள ‘உஹத்’ என்னும் குன்றின் அடிவாரத்தில், கூடாரம் அடித்துத் தங்கிவிட்டார்கள்.

***

ஹிஜ்ரீ மூன்றாவது வருடம் ஷவ்வால் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை, ஜூம்ஆத் தொழுகை முடிந்ததும், பெருமானார் அவர்கள் ஆயிரம் தோழர்களுடன் மதினா நகரை விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உபை தம்மோடு முந்நூறு பேரைக் கொண்டு வந்திருந்தார். ஆனால் கொஞ்ச தூரம் சென்றதும், “பெருமானார் என் அபிப்பிராயப்படி நடத்தவில்லையே” என்று சொல்லித் தம்முடைய படையைத் திருப்பிக் கொண்டு போய் விட்டார்.

அப்பொழுது பெருமானாருடன் எழுநூறு வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் நூறு பேர் மட்டுமே கவசம் அணிந்திருந்தனர்.

சிறுவர்களை எல்லாம் திரும்பிப் போகும் படி, பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

படைகள் உஹத் வந்து சேர்ந்ததும், உஹத் குன்றை, முஸ்லிம்களுக்குப் பின்புறமாக வைத்துப் படைகளை அணி வகுத்தார்கள். அக்குன்று தங்களுக்குப் பக்க பலமாக இருக்கும் என்று அவ்வாறு செய்தார்கள்.

முஸ்அப் இப்னு உமைர் என்பவரைக் கொடி பிடிக்கும் வேலையில் நியமித்தார்கள்.

ஸூபைர் இப்னு அவ்வாம் என்பவர் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஹம்ஸா அவர்கள் கவசம் அணியாத படைகளுக்குத் தலைவராக அமைக்கப்பட்டார்கள்.

முஸ்லிம் படைக்குப் பின்புறத்திலுள்ள உஹத் குன்றில் சிறு கணவாய் ஒன்று இருந்தது. அதன் வழியாகக் குன்றின் பின்புறமிருந்து பகைவர்கள் வரக்கூடும். ஆதலால், பாதுகாப்பிற்காக அம்பு எய்வோர் ஐம்பது பேரை அங்கே நிறுத்தி, “சண்டை வெற்றியடைந்தாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது” எனப் பெருமானார் அவர்கள் கண்டிப்பான உத்தரவு இட்டிருந்தார்கள்.

****

குறைஷிகளோ பத்ருச் சண்டையில் அனுபவம் அடைந்தவர்கள். ஆதலால், இப்பொழுது முழுமையான தயார் நிலையில் வந்திருந்தார்கள். படைகளை ஒழுங்காக அணி வகுத்திருந்தனர். பத்ருப் போரில் மாண்ட வலிதின் குமாரர் காலித் படையின் வலது புறத் தளபதியாக இருந்தார்.

அபூஜஹிலின் குமாரர், இக்ரிமா இடது புறத் தளபதியானார்.

மத்தியப் பகுதியின் குதிரை வீரர்களுக்குத் தலைவராக ஸப்வான் இப்னு உமையா ஏற்படுத்தப் பட்டார்.

அம்பு எய்வோர்களை, வேறு பகுதியில் ஒதுக்கி வைத்திருந்தனர்.

அவசியமான சந்தர்ப்பத்தில், உதவுவதற்காக இருநூறு குதிரைப் படையைத் தனியாக வைத்திருந்தனர்.