நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலைச் செயலுக்குப் பரிசா?

விக்கிமூலம் இலிருந்து

36. கொலைச் செயலுக்குப் பரிசா?

ஹம்ஸா அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்த செய்தியைக் குறைஷிகள் அறிந்தனர். அதனால் முன்னிலும் அதிகமாக வருத்தம் அடையலானார்கள்.

இஸ்லாத்தின் வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என அவர்கள் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கூடி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் குறைஷிகள் அளவற்ற கொடுமைகளையும், இடையூறுகளையும் செய்தார்கள். அவற்றால் எவ்விதப் பயனையும் காணாமல் அலுத்துப் போய்விட்டனர். அப்பொழுது கொடுமையே உருவான அபூஜஹில் குறைஷித் தலைவர்களை எல்லாம் அழைத்து,

“அன்பார்ந்த குறைஷிகளே! உங்களுடைய மதம் கேவலப் படுத்தப் படுகின்றது. உங்களுடைய மூதாதையர் பழிக்கப் படுகின்றனர். நீங்கள் வணங்கும் விக்கிரகங்கள் நிந்திக்கப் படுகின்றன. இன்னும் உங்களுக்கு உணர்ச்சி உண்டாகவில்லை, நீரில் மூழ்கியாவது நீங்கள் உயிர் இழக்கக் கூடாதா? தன்னந்தனியாக ஒரு மனிதன் நின்று கொண்டு நம்மைப் பழிப்பதும், அதைப் பார்த்துக் கொண்டு நாம் ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமனே இருப்பதும் வெட்கப் படத் தக்கது அல்லவா? இவற்றை எல்லாம் இனி என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அரபியர்களே! உங்களுடைய வீரமும், சுதந்திரமும் மாய்ந்து விட்டனவோ! நாம் கோண்ழகளா? உங்களில் யார் அந்த முஹம்மதைச் சிரச்சேதம் செய்து வருகிறாரோ, அவருக்கு அத்தகைய தொண்டுக்காக நான் நூறு ஒட்டகங்கள் பரிசாக வழங்குகின்றேன்” என்று உரக்கக் கூவினான்.

அபூஜஹிலின் இந்தச் சொற்கள், குறைஷிகளுக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகிவிட்டது.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து அபூஜஹீலை நோக்கி “நீர் குறிப்பிட்ட காரியத்தை நான் செய்து வருகிறேன்; ஆனால் நீர் சொன்ன வாக்கை நிறைவேற்றுவதாக, எனக்கு உறுதி அளிக்க வேண்டும்” எனக் கேட்டார்.

உறுதிமொழி கேட்டவர் யார்? இஸ்லாத்தின் மீது கடுமையான பகை கொண்டு பலரைத் துன்புறுத்தியவர். இவர் கத்தாப் என்பவரின் மகன் உமர். குறைஷிகளின் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

உடனே அபூஜஹில், உமரைக் கஃபாவுக்கு அழைத்துக் கொண்டு போய், குறைஷிகள் பெரிதாக மதிக்கும் ஹூபல் முன் நின்று. "நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாக” உறுதிமொழி கூறினான்.

‘பகைவரைக் கொல்லும் வரை, வேறு எவ்வித சுகத்தையும் நாடுவது இல்லை’ என உமரும் உறுதி செய்தார்.