நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தடை நீங்கியது

விக்கிமூலம் இலிருந்து

132. தடை நீங்கியது!

அபூபஸீர் மதீனாவை விட்டுத் தப்பி, கடற்கரை ஓரமாக இருந்த அல் ஈஸ் என்னும் இடத்தில் போய்த் தங்கிவிட்டார்.

அங்கே போய் அவர் தங்கி இருக்கும் செய்தியானது, மக்காவில் ஆதரவற்ற நிலையில், துன்பத்தில் உழன்று கொண்டிருந்த முஸ்லிம்களுக்குத் தெரிந்தது.

குறைஷிகளின் கொடுமையிலிருந்து தாங்கள் தப்பிச் செல்வதற்கு வழி ஏற்பட்டு விட்டது என்று கருதி, அபூ பஸீர் தங்கியிருந்த பகுதிக்கு ஒருவர் பின் ஒருவராக, மறைவாக, வரத் தொடங்கி விட்டார்கள்.

நாளுக்கு நாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அல் ஈஸில் அதிகமாயிற்று. அவர்கள் அனைவரும் அங்கே நிலையாகத் தங்கிவிட்டார்கள். குறைஷிகளின் வியாபாரப் பொருட்கள், அல் ஈஸ் வழியாகத்தான் ஷாமுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு செல்லும் குறைஷிகளின் சரக்குகளை முஸ்லிம் கூட்டத்தினர் மடக்கிக் கைப்பற்றத் தொடங்கினார்கள்.

இந்தச் செய்தி குறைஷிகளுக்குத் தெரிந்தது. அவர்கள் பெருமானாருக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.

அக்கடிதத்தில்: “முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தால், அவர்களைத் திரும்ப மக்காவுக்கு அனுப்பி விட வேண்டும் என்று ஹூதையிய்யா உடன்படிக்கையில் குறிப்பிட்டிருந்த நிபந்தனையை நீக்கி விட வேண்டும் என்றும், நம் இரத்த பந்துவத்தின் பேரால் பெரிதும் வேண்டுகிறோம்" என்றும் எழுதியிருந்தார்கள்.

அதன்படி, அல் ஈஸிலிருந்த முஸ்லிம்களை எல்லோரையும் பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு அழைத்துக் கொண்டார்கள்.

அவ்வாறு வந்தவர்களுள் அபு ஜந்தலும் ஒருவர்.

அதன் பிறகு, குறைஷிகளின் வியாபாரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்தது.