நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவன் வழிகாட்டுவான்

விக்கிமூலம் இலிருந்து

131. ஆண்டவன் வழி காட்டுவான்

எனினும், உடன்படிக்கையின்படி, மக்காவிலே தங்கியிருந்த முஸ்லிம்களைக் குறைஷிகள் கொடுமைப்படுத்தி துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

அந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்காகப் பலர், மதீனாவுக்கு வரத் தொடங்கினார்கள். அவ்வாறு முதன்முதலில் வந்தவர் உத்பதுப்னு உஸைது என்னும் அபூபஸீர் ஆவார்.

அவர் மதீனாவுக்குப் போய் விட்ட செய்தியை அறிந்த குறைஷிகள் அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக, இருவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பினார்கள். பெருமானார் அவர்கள், அவரை மக்காவுக்குத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

அப்பொழுது அவர் பெருமானார் அவர்களிடம், "குபிரில் சேருமாறு நிர்ப்பந்திக்கும் காபிர்களிடமா, என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார்.

பெருமானார் அவர்கள், "அபூ பஸீர்! உமக்கும் உம்மைப் போன்ற நிராதனவானவர்களுக்கும் நிச்சயமாக, அல்லாஹ் ஒரு வழி செய்வான்” என்று கூறி, அவரை குறைஷித் தூதர்களுடன் அனுப்பி விட்டார்கள்.

அபூ பஸீர் தூதர் இருவருடன் மக்காவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அத்தூதர்களில் ஒருவரை வாளால் வெட்டி வீழ்த்தினார். மற்றொருவர், அதைப் பார்த்து மதீனாவுக்கு ஓடி வந்து, பெருமானார் அவர்களிடம் நிகழ்ந்ததைக் கூறி முறையிட்டார்.

அப்பொழுது அபூபஸீரும் திரும்பி மதீனாவுக்கு வந்து விட்டார்.

அவர் பெருமானார் அவர்களிடம், “உடன்படிக்கைப்படி தாங்கள் என்னை அனுப்பி விட்டீர்கள். பிறகு நிகழ்ந்ததற்குத் தாங்கள் பொறுப்பு இல்லை” என்று கூறி விட்டு வெளியே போய்விட்டார்.