நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பெருமானார் அவர்களின் பெருமை

விக்கிமூலம் இலிருந்து

130. பெருமானார் அவர்களின் பெருமை

பெருமானார் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், மக்காவுக்குப் போகும் போது பதினாயிரம் முஸ்லிம்களும் சென்றார்கள். முன்னர், போகும் போது ஆயிரத்தி நானூறு பேர்களே சென்றார்கள். குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையினர் இஸ்லாத்தில் எவ்வாறு சேர்ந்தனர்?

முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்கும் மத்தியில் ஓயாமல் சண்டைசச்சரவு நிகழ்ந்து வந்ததால், ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஹூதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு, அவர்களுக்குள் போக்குவரவு உண்டாயிற்று. வியாபாரத் தொடர்புக்காகவும், குடும்ப சம்பந்தமாகவும் காபிர்கள் அடிக்கடி மதீனாவுக்கு வந்தார்கள்; அங்கே சில காலம் தங்கினார்கள். அப்பொழுது அவர்கள் முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள்; அதனால், இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார்கள். பெருமானார் அவர்களின் மேன்மையும், எளிமையும், நற்செய்கைகளும் சிறப்பாகக் கண் முன் காணும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டாயிற்று. இவை யாவும் குறைஷிகளின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்து, ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கிற்று.

இஸ்லாத்தின் கொள்கைகள் குறைஷிகளை ஈர்த்தன. கூட்டம் கூட்டமாக அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இவ்வளவு அதிகமான பேர் இதற்கு முன் ஒரு பொழுதும் வந்து சேரவில்லை,

குறைஷிகளில் பிரபலமான வீரரும், உஹத் சண்டையின் போது, முஸ்லிம்கள் அதிக இழப்புக்கு முக்கிய காரணமாயிருந்தவர்களுமான காலித் இப்னு வலிது, அம்ருப்னுல் ஆஸ் ஆகியோர் இக்காலத்தில் இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.