நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/படைபலம் மட்டும் போதுமா?

விக்கிமூலம் இலிருந்து

167. படை பலம் மட்டும் போதுமா?

மதீனாவிலிருந்து பெருமானார் அவர்களுடன் வந்த பதினாயிரம் பேர்களுடன், மக்காவாசிகளில் இரண்டாயிரம் பேர்களும் அப்படையில் சேர்ந்திருந்தார்கள். மக்காவில் போதுமான ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டார்கள்.

ஏராளமான சேனைகளும், போதிய ஆயுதங்களும் தங்களிடம் இருப்பதால் வெற்றி நிச்சயமாகத் தங்களுக்குக் கிடைக்கும் என்ற பெருமையான எண்ணம் முஸ்லிம் வீரர்களிடையே தலைதூக்கியது.

இஸ்லாத்தின் வெற்றி, ஆண்டவனுடைய உதவியினால் மட்டும் கிடைக்கக்கூடியதேயன்றி, சேனையின் எண்ணிக்கையினாலோ, ஆயுதங்களினாலோ உண்டாவதில்லை என்பதை ஆண்டவன் அவர்களுக்கு அறிவுறுத்தக் கருதினான் போலும்!

முன்னர் நடந்த போர்களில், முஸ்லிம் வீரர்கள் தங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான பகைவர்களுடன் கூடப் போரிட்டு வெற்றி பெற்று வந்திருக்கின்றனர். ஆனால், சேனையின் எண்ணிக்கையினால் மட்டும் வெற்றி பெற்று விட இயலாது என்பதை ஆண்டவன் ஹூனைன் சண்டையின் ஆரம்பத்திலேயே முஸ்லிம்களுக்கு உணர்த்திவிட்டான்.