நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மீண்டும் படைகளுடன் புறப்படுதல்

விக்கிமூலம் இலிருந்து

166. மீண்டும் படைகளுடன் புறப்படுதல்

மக்காவுக்கும், தாயிபுக்கும் மத்தியில் உள்ளது ஹூனைன். அது ஒரு பள்ளத்தாக்கு. அதில் ஹவாஸின் என்ற பெயரில் பல பிரிவினர் கூட்டமாக வசித்து வந்தனர்.

அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இஸ்லாத்தின் மீது கடுமையான பகைமை உடையவர்களாயிருந்தார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின், இஸ்லாம் மிக வேகமாகப் பரவி வருவதைக் கண்டு ஹவாஸின் கூட்டத்தார், பொறாமை கொண்டனர்.

அரேபியாவின் பல பகுதிகளுக்குச் சென்று, மக்களை இஸ்லாத்துக்கு விரோதமாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள், மக்காவைப் பெருமானார் அவர்கள் வெற்றி கொண்டதும் அவர்களுக்கு அளவு கடந்த வருத்தம் உண்டாயிற்று.

இப்பொழுதே இஸ்லாத்தை நசுக்காவிடில், பின்னர் அதன் செல்வாக்கு மேலும் அதிகரித்து விடும் என்று கருதி, முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாரானார்கள். அச்செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே ஒருவரை அனுப்பி, உளவு அறிந்து வரச் சொன்னார்கள். அது உண்மையே என அறிந்து கொண்டார்கள்.

பின்னர், பெருமானார் அவர்கள் சேனைகளைச் சேர்த்துக் கொண்டு ஹவாஸின் கூட்டத்தாரை நோக்கிச் சென்றார்கள்.