நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருகை

விக்கிமூலம் இலிருந்து

197. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருகை

இஸ்லாம் மார்க்கம் பூரணமாக்கப்பட்டது. பெருமானார் அவர்கள் இவ்வுலகத்தை விட்டுப் பிரிய வேண்டிய காலம் நெருங்கி விட்டது; ஹிஜ்ரீ பதினோராவது வருடம், ஹஜ் சமயத்தில், அவர்களுக்கு ஆண்டவனால் இது உணர்த்தப் பெற்றது.

பெருமானார் அவர்கள் மக்காவிலிருந்து பிரிவு உபசாரம் பெற்று, மதீனா வந்து சேர்ந்தார்கள்.

மதீனாவுக்கு வந்ததிலிருந்து பெருமானார் அவர்கள், பெரும்பகுதி நேரத்தை ஆண்டவனுடைய வணக்கத்திலேயே செலுத்தினார்கள்.

உஹதுப் போரில் உயிர் துறந்தவர்களுக்கு, இதுவரை மரணப் பிரார்த்தனை செய்யவில்லை. ஆதலால், அவர்களை அடக்கம் செய்திருந்த தலத்துக்குச் சென்று, அவர்களுடைய மறுமை நலத்துக்காகப் பெருமானார் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அதன் பின், அதே வருடம் ஸபர் மாதம் 19-ம் தேதி நடு இரவில் பெருமானார் அவர்கள், மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் அடக்கத் தலத்துக்குச் சென்று, அங்கு அடக்கமாகி இருப்பவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அங்கிருந்து திரும்பி வந்ததிலிருந்து, பெருமானார் அவர்களுக்கு உடல்நலக் குறைவு உண்டாயிற்று. நாளுக்கு நாள் ஜூரம் அதிகரித்து, உடல் பலவீனமாகியது.

பெருமானார் அவர்கள் நோயுற்றிருந்த போது, ஆயிஷாப் பிராட்டியார் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள்.