நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவைத் தாக்க ஏற்பாடு

விக்கிமூலம் இலிருந்து

175. மதீனாவைத் தாக்க ஏற்பாடு

மக்காவின் வெற்றிக்குப் பின், அரபியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு, கிறிஸ்துவர் ஆட்சி புரியும் ரோமாபுரி அரசுக்குப் பொறாமை உண்டாயிற்று.

இன்னும் சிறிது காலத்திற்குள், அரேபியா முழுவதிலுமே இஸ்லாம் பரவி விடும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். அதனால் முன் கூட்டியே அதை நசுக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆகையால், மதீனாவைத் தாக்குவதற்கு முன்னேற்பாடு செய்தனர்.

ஷாம் மாகாணத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கஸ்ஸான் என்னும் கூட்டத்திலுள்ள சிறறரசன் ஒருவன் அதில் முக்கியமானவனாக இருந்தான்.

மதீனாவைத் தாக்குவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு சிற்றரசனுக்கு ரோமாபுரி அரசு கட்டளையிட்டிருந்தது. அவனும் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தான். மதீனாவைத் தாக்குவதற்காக, ரோமாபுரி அரசு, ஷாம் மாகாணத்தில் படையைப் பெருக்கிக் கொண்டிருந்தது. அந்தப் படையில் கஸ்ஸான் கூட்டத்தாரும், வேறு சில கூட்டத்தாரும் சேர்ந்திருந்தனர். சேனைகளுக்கு ஒரு வருடச் சம்பளம் முன்னதாகவே கொடுத்து விட்டனர். முதல் அணி பல்கா என்னும் இடத்துக்கு வந்து விட்டது. இத்தகவலை ஷாம் மாகாணத்திலிருந்து வந்த ஸைத்தூன் எண்ணெய் வியாபாரிகள் மதீனாவில் விளம்பரப் படுத்தினார்கள்.