நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனைத் தொழுது வேண்டிக் கொள்ளுங்கள்

விக்கிமூலம் இலிருந்து

174. “ஆண்டவனைத் தொழுது வேண்டிக் கொள்ளுங்கள்”

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு மரியா கிப்தியா அவர்களிடமிருந்து பெருமானார் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு இப்ராஹிம் என்ற பெயர் சூட்டினார்கள். அந்தக் குழந்தையிடம் பெருமானார் அவர்கள் மிகுந்த பிரியமாக இருந்தார்கள். ஒரு வருடம் வரை தான் அக்குழந்தை உயிருடன் இருந்தது.

அந்தக் குழந்தை உயிர் நீத்த தினத்தில், சூரிய கிரஹணம் உண்டாயிற்று. சிறப்பு மிக்க ஒருவனுடைய மரணத்தின் அறிகுறியாக சூரிய கிரஹணம் உண்டாகும் என்பது அரேபியர்களின் கொள்கை.

குழந்தை இப்ராஹிம் அவர்களின் மரணத்திற்காகவே, சூரிய கிரஹணம் உண்டானதாக, மக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெருமானார் அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்ததும், அவர்களை எல்லாம் அழைத்து, “ஒருவர் இறந்ததற்காகவாவது அல்லது உயிருடன் இருப்பதற்காகவாவது சூரிய-சந்திர கிரஹணங்கள் உண்டானதில்லை. கிரஹணத்தைக் கண்டால், நீங்கள் தொழுது ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறி, கூட்டமாக ஒன்று சேர்ந்து கிரஹணத் தொழுகை நடத்தினார்கள்.

இவ்வாண்டு பெருமானார் அவர்களின் மகள் ஸைனப் அவர்கள் உயிர் துறந்தனர்.