நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆறாயிரம் கைதிகளுக்கும் விடுதலை

விக்கிமூலம் இலிருந்து

173. ஆறாயிரம் கைதிகளுக்கும் விடுதலை

ஹுனைன் சண்டையில் பிடிபட்ட ஆறாயிரம் கைதிகளையும், முஸ்லிம்கள் பங்குப்படி பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கைதிகளை விடுவித்துக் கொண்டு போவதற்காக அவர்களின் உறவினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர், பெருமானார் அவர்களிடம் வந்தனர்.

அந்தத் தூதுக் குழுவினர் பெருமானார் அவர்களின் வளர்ப்புத் தாயாரான ஹலீமா அவர்களின் பனூ ஸஃது கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

தூதுக் குழுவினரின் தலைவர் எழுந்து நின்று, பெருமானார் அவர்கள் முன்னிலையில், “ஆண்டவனுடைய தூதரே! நாங்கள் உங்களுக்கு உறவினர்களாயும், நெருங்கிய தொடர்புடையவர்களாயும் இருக்கிறோம். உங்களுடைய வளர்ப்புத் தாயாரான ஹலீமா அவர்கள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அல் ஹாரிது, அந்நுஃமான் போன்ற குறுநில மன்னர்கள் எவரேனும் எங்கள் குடும்பத்தில் பால் அருந்தி இருந்தால், அவர்களிடம் கூட நாங்கள் தயவையும், கருணையையும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் நீங்களோ, நம்பிக்கைக்குரியவர்களில் சிறப்பு மிக்கவர்கள். ஹூனைன் சண்டையில் சிறைப்பட்ட பெண்களில் உங்களுடைய சிறிய தாயார்களும், மாமியார்களும் இருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்குப் பெருமானார் அவர்கள், “என்னுடைய பங்கிலும், அப்துல் முத்தலிப் வம்சத்தார் பங்கிலும் எத்தனை கைதிகள் வந்திருக்கலாமோ, அவர்கள் அனைவரையும் உங்களிடமே திருப்பி அனுப்பி விடுகிறேன். ஆனால் கைதிகள் எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்றால், பகல் தொழுகைக்குப் பின், மக்கள் கூட்டத்தில், உங்கள் கோரிக்கையைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே, தொழுகைக்குப் பின், அக்குழுவினர் வந்து, தங்கள் கைதிகளை விடுவிக்கும்படி முஸ்லிம்களிடம் வேண்டிக் கொண்டார்கள். அவ்வேண்டுகோளைக் கேட்டதும் பெருமானார் அவர்கள், “அப்துல் முத்தலிப் அவர்களின் சந்ததியாருக்குக் (பெருமானார் வசம்) கிடைத்த கைதிகளை நான் உங்களுக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறினார்கள்.

உடனே முஸ்லிம்கள் எல்லோரும் "எங்கள் பங்குக்கு கிடைத்த கைதிகளையும் நாங்கள் பெருமானார் அவர்களுக்குக் கொடுத்தோம்” என்று சொன்னார்கள்.

இவ்வாறு ஆறாயிரம் கைதிகளும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

பெருமானார் அவர்கள் அங்கிருந்து மதீனாவுக்குத் திரும்பினார்கள்.