நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மத்தியில் உண்டான இடையூறு

விக்கிமூலம் இலிருந்து

128. மத்தியில் உண்டான இடையூறு

உடன்படிக்கையை எழுதிக் கொண்டிருக்கும் போது, சிறு சலசலப்பு உண்டாயிற்று.

குறைஷிகளின் தூதர் ஸூஹைலும், பெருமானார் அவர்களும் நிபந்தனைகளை விவாதித்து, உடன்படிக்கை எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, ஸூஹைலின் குமாரர் அபூஜந்தல் என்பவர் இஸ்லாத்தைத் தழுவி இருந்ததால், மக்கா குறைஷிகள் அவரை துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் எப்படியோ தப்பி, காலில் பூட்டப்பட்ட விலங்கோடு, சமாதான உடன்படிக்கைக் கூட்டத்தின் மத்தியில் வந்து விழுந்தார்.

அப்பொழுது ஸூஹைல் பெருமானார் அவர்களிடம், “முஹம்மதே! இந்த மனிதன் உங்களிடம் வருவதற்கு முன்னரே நாம் உடன்படிக்கை (யைப் பற்றிப் பேசி) முடித்து விட்டோம் அல்லவா?” என்றார்.

“ஆம்! நீங்கள் கூறுவது சரியே” என்று பெருமானார் பதிலளித்தார்கள்.

உடனே ஸூஹைல் தம் மகனின் சட்டையைப் பிடித்து, முரட்டுத்தனமாக இழுத்துக் கொண்டு புறப்படலானார்.

குறைஷிகள் அடித்த அடியால், அபூ ஜந்தலுடைய உடல் முழுவதும் இரத்தக் காயங்களாக இருந்தன.

அங்கே கூடியிருந்த முஸ்லிம்களிடம், தம்முடைய காயங்களை எல்லாம் காட்டி, “இஸ்லாமிய சகோதரர்களே! இதே நிலைமையிலா மீண்டும் என்னைப் பார்க்க விரும்புகிறீர்கள்? நானோ முஸ்லிம் ஆகிவிட்டேன். என்னைக் காபிர்களுடைய கையிலா ஒப்படைக்கிறீர்கள்?” என்று அபூ ஜந்தல் கூறியதும், அவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தம் உண்டாயிற்று.

பிறகு, பெருமானார் அவர்கள், “அபூ ஜந்தலே, பொறுமையோடும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வீராக. துன்பத்துக்குள்ளான இதர முஸ்லிம்களுக்காகவும் ஆண்டவன் ஏதாவது வழி காட்டுவான். இப்பொழுது உடன்படிக்கை நிறைவேறி விட்டது. அதற்கு மாறாக நாம் எதுவும் செய்ய இயலாது” என்று கூறினார்கள்.

அதன் பின் குறைஷிகளால் அபூ ஜந்தல் மக்காவுக்குக் கொண்டு போகப்பட்டார்.