நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மீண்டும் தாக்க வருதல்

விக்கிமூலம் இலிருந்து

79. மீண்டும் தாக்க வருதல்

இஸ்லாத்துக்குக் கொடிய விரோதிகளாக இருந்த வீரர்கள் பலருடன், சண்டையில் உத்பாவும், அபூஜஹிலும் மாண்டுவிட்டனர்.

அதன்பின் குறைஷிகள் அபூஸூப்யானைத் தலைவராக்கிக் கொண்டனர்.

அவர் தலைவரானதும், பத்ருப் போரில் இறந்து போன குறைஷிகளின் இரத்தத்துக்குப் பழி வாங்க வேண்டியது அவருடைய கடமை எனக் கருதினார். இருநூறு ஒட்டகப் படையுடன் மதீனாவுக்கு வந்தார். முஸ்லிம்களுக்கு விரோதமான யூதர்கள் தமக்கு உதவுவார்கள் எனக் கருதி, அந்தத் தலைவரிடம் சென்றார். அவரும் உதவி புரிவதாக வாக்களித்து, மதீனாவின் அந்தரங்கக் குறைகளை எடுத்துக் கூறினார். உடனே அபூஸூப்யான், மதீனாவின் அருகில் உள்ள ஓர் இடத்தைத் தாக்கி, சில வீடுகளையும் தீக்கிரையாக்கியதோடு, அன்சாரிகளில் ஒருவரையும் கொன்று விட்டார். தம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு இதுவே போதுமானது என்று எண்ணிக் கொண்டார். முஸ்லிம்கள் விஷயம் அறிந்ததும் அவரைப் பின் தொடர்ந்தனர். அதை அறிந்ததும் அபூஸூப்யான் ஒடத் தொடங்கி விட்டார்.

ஒடிய வேகத்தில், உணவுக்காகக் கொண்டு வந்திருந்த மாவு மூட்டைகளை விட்டு விட்டு ஓடினார். அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

அந்த மாவுக்கு அரபியில் 'ஸ்வீக்' என்று பெயர். அதனால் இச்சண்டைக்கு 'ஸ்வீக்' சண்டை என்று பெயர் உண்டாயிற்று.