நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்களின் பொறாமை

விக்கிமூலம் இலிருந்து

139. யூதர்களின் பொறாமை

மதீனாவிலிருந்து இருநூறு மைல் தொலைவில் உள்ளது கைபர். அது செழிப்பான ஒரு பகுதி. அதனால் யூதர்கள் அங்கே சென்று கோட்டை கட்டிக் கொண்டு வாழ்ந்தனர். பனூ நலீர் கோத்திரத்தைச் சேர்ந்தோர் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அங்கே குடியேறினர் என்பதை முன்னர் படித்தோம். அப்பொழுது முதல், யூதர்களுக்கு கைபர் மிகவும் முக்கியமான இடமாக இருந்தது.

முஸ்லிம்களின் செல்வாக்கு, யூதர்களைப் பொறாமைப் படச் செய்தது.

முன்பு அகழ்ச் சண்டையைத் தூண்டியவர்கள் அங்கே இருந்த யூதர்களே.

கைபரில் உள்ள யூதர்களுக்கு ஹுயையுப்னு அக்தப் என்பவர் தலைவராக இருந்தார். பனூ குறைலாச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின் அபூராபி அஸ்லம் என்பவர் தலைமை வகித்தார். அவர் மிகுந்த செல்வாக்குள்ள வியாபாரி. அரபு நாட்டில் அதிக செல்வாக்குள்ள கத்பான் குடும்பத்துக்கும், கைபர் யூதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அந்த இரு கோத்திரத்தினரும் நட்புறவு உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள்.

ஹிஜ்ரி 6-வது ஆண்டு, அபூராபி யூதர் தலைவர் கத்பான் கோத்திரத்தாரிடம் சென்று, அவர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் இஸ்லாத்துக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டிவிட்டார். அவர்கள் மதீனாவைத் தாக்குவதற்குப் பெரிய படையைத் திரட்டித் தயாராகி விட்டார்கள்.

அப்பொழுது ரமலான் மாதம். யூதர் தலைவர் அபூராபி கைபர் கோட்டையில் தூங்கிக் கொண்டிருக்கையில், அன்ஸாரி ஒருவர் அங்கே போய், அவரைக் கொன்று விட்டார்.

அவருக்குப் பின், யாஸிர் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். யூதர்களையும், கத்பான் கூட்டத்தாரையும் இணைத்து, மதீனாவைத் தாக்குவதற்கு, அவரும் பெரும் படையைத் திரட்டினார்.

இச்செய்தியை அறிந்த பெருமானார் அவர்கள், யாஸிரை அழைத்து வருமாறு முப்பது பேரை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் போய் யாஸிரை அழைத்துக் கொண்டு திரும்பும் போது, யாஸிருக்கு ஏதோ சந்தேகம் தோன்றி, முஸ்லிம் ஒருவரின் வாளைக் கைப்பற்ற் முற்பட்டார். ஆனால் வீரரோ, குதிரையை விரைவாகச் செலுத்தினார். யாஸிர் அவரை வேகமாகப் பின் தொடர்ந்து வெட்ட முயன்றார். ஆனால், அந்த முஸ்லிம் யாஸிரை வெட்டவே, அவர் கீழே விழுந்தார். அப்பொழுது வெட்டிய முஸ்லிமையும் அவர் காயப்படுத்தி விட்டார்.

அதிலிருந்து முஸ்லிம்களுக்கும், யாஸிருடன் வந்த முப்பது யூதர்களுக்கும் சண்டை மூண்டது. யூதர்களிலே ஒருவர் மட்டுமே தப்பினார்.

கைபரிலுள்ள யூதர்கள் குறைஷிகளையும், கத்பான் கூட்டத்தாரையும், முஸ்லிம்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, மதீனாவில் உள்ள முனாபிக்குகளும் முஸ்லிம்களுடைய நிலைமையை பலவீனமாகக் காட்டி, யூதர்களுக்கு ஊக்கமூட்டி வந்தார்கள்.

பெருமானார் அவர்கள், யூதர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பி, அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை அவர்களிடம் அனுப்பினார்கள். ஆனால், இயல்பாகவே கல் நெஞ்சர்களான யூதர்கள் மேலும் சந்தேகம் கொள்ளத் தொடங்கினார்கள்.

முனாபிக்குகளின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு உபை, கைபரிலுள்ள யூதர்களுக்கு “முஹம்மது உங்களைத் தாக்கப் போவதாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் அவருக்குப் பயப்படக் கூடாது. அவருடன் சேர்ந்திருப்போரின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. தவிர, அவர்களிடத்தில் தகுந்த ஆயுதங்களும் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

இச்செய்தியைக் கேட்டதும் யூதர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.