நீதிக் களஞ்சியம்/வெற்றிவேற்கை

விக்கிமூலம் இலிருந்து
(நறுந்தொகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


வெற்றி வேற்கை
(அதிவீரராம பாண்டியர்)

கடவுள் வாழ்த்து


பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.


வெற்றி வேற்கை வீரராமன்,
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்—தமிழ் தெரிந்த நறுந்தொகைதன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே.

வாழிய, நலனே! வாழிய, நலனே!

நூல்

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.1
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.2
செல்வர்க்கு அழகு செழுங் கிளை தாங்குதல்.3
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.4
மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை.5
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்.6
உழவர்க்கு அழகு இங்கு உழுது, ஊண் விரும்பல்.7
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.8
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை.9
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.10

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்.11
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.12
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.13
அறிஞர்க்கு அழகு கற்று, உணர்ந்து, அடங்கல்.14
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.15

தேம் படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி, வளம்பெற வளரினும்,
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.16

தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள் நீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை.
அணி தேர், புரவி, ஆட் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.17

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.18
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்வர்.19
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.20
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்.21
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்.22
அடினும் ஆவின்பால் தன் கவை குன்றாது.23
சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது.24
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.25
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.26
கலக்கினும் தண் கடல் சேறாகாது.27
அடினும் பால் பெய்து, கைப்பு அறாது. பேய்ச் சுரைக்காய்.28
ஊட்டினும் பல் விரை, உள்ளி கமழாதே.29
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.30

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோர் ஆயின், பொறுப்பது கடனே.31

சிறியோர் பெரும் பிழை செய்தனர் ஆயின்,
பெரியோர் அப் பிழை பொறுத்தலும் அரிதே.32

நூறாண்டு பழகினும், மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாதே.33

ஒரு நாள் பழகினும். பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே.34

கற்கை நன்றே: கற்கை நன்றே:
பிச்சை புகினும், கற்கை நன்றே.35

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே.36

நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின், கீழ் இருப்பவனே.37

எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும்,
அக் குடியில் கற்றோரை, 'மேல் வருக!' என்பர்.38

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.39

அச்சம் உள் அடக்கி, அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின், அக் குடி
எச்சம் அற்று, ஏமாந்திருக்கை நன்றே.40

யானைக்கு இல்லை, தானமும் தருமமும்.41
பூனைக்கு இல்லை, தவமும் தயையும்.42
ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும்.43
சிதலைக்கு இல்லை, செல்வமும் செருக்கும்.44
முதலைக்கு இல்லை. நீத்தும் நிலையும்.45
அச்சமும் நாணமும் அறிவு இலோர்க்கு இல்லை.46
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.47
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.48
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.49

குடை நிழல் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து, ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்.50

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.51

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்.52

குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்.53

எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு,
கழுதை மேப் பாழ் ஆயினும்,ஆகும்.54

பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப் பாழ்
பொன்—தொடி மகளிரும் மைந்தரும் கூடி,
நெல் பொலி நெடு நகர் ஆயினும் ஆகும்.55

மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து, தம் கொழுநரைத் தழீஇ,
உடுத்த ஆடை கோடியாக,
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.56

இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே.57

இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே.58

நல்லஞாலமும் வானமும் பெறினும்,
எல்லாம் இல்லை, இல் இல்லோர்க்கே.59

தறுகண் யானைதான் பெரிதுஆயினும்,
சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சும்மே.60

குன்றுடை நெடுங்காடூடே வாழினும்,
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சும்மே.61

ஆரையாம் பள்ளத்தூடே வாழினும்,
தேரை பாம்பிற்கு மிக அஞ்சும்மே.62

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கடும் புலி வாழும் காடு நன்றே.63

சான்றோர் இல்லாத் தொல் பதி இருத்தளின்,
தேன் தேர் குறவர் தேயம் நன்றே.64

காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.65

குடி அலைத்து, இரந்து, வெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.66

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து,
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே.67

வித்தும் ஏரும் உளவா இருப்ப,
எய்த்து, அங்கு இருக்கும் ஏழையும் பதரே.68

தன் மனையாளைத் தாய் மனைக்கு அசுற்றி,
பின்பு அவட் பாராப் பேதையும் பதரே.69

தன் மனையாளைத் தனிமனை இருத்தி,
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே.70

தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே.71

வாய்ப் பறை ஆகவும், நாக் கடிப்பு ஆகவும்,
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்;72

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்.
மெய்போலும்மே; மெய் போலும்மே.73

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்,
பொய் போலும்மே; பொய் போலும்மே.74

இருவர்தம் சொல்லையும் எழு தரம் கேட்டே.
இருவரும் பொருந்த உரையார் ஆயின்,
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்
மனமுற மறுகிநின்று அழுத கண்ணீர்,
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்,
வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே.75

பழியா வருவது மொழியாது ஒழிவது.76

சுழியா வருபுனல் இழியாது ஒழிவது.77

துணையோடு அல்லது நெடு வழி போகேல்!78

புணைமீது, அல்லது நெடும் புனல் ஏகேல்!79

எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.80

வழியே ஏகுக! வழியே மீளுக!81

வைகாண் உலகிற்கு இயல்பாம் ஆறே.82