உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/209

விக்கிமூலம் இலிருந்து

209. உயிரோடு உடன் வாங்கும்!

பாடியவர் : நொச்சி நியமங் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : குறை மறுக்கப் பட்டுப் பின்னின்ற தலைமகன், ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது.

[(து-வி.) தலைவியை அடைவதற்கு, அவளுடைய உயிர்த் தோழியின் உதவியை நாடுகின்றான் தலைவன். அவள் உதவ மறுக்கவே, அவன் தலைவிக்கும் தனக்கும் இடையேயுள்ள காதலன்பின் திறத்தைத் தோழிக்கு உணர்த்தியவனாய்த், தான் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல இவ்வாறு கூறுகின்றான்.]


மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளிபதம் பெற்ற கானுழு குறவர்
சிலவித்து அகல விட்டுடன் பலவிளைந்து
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலையங் குறுமகள் மிழலையந் தீங்குரல் 5
கிளியும் தாம்அறி பவ்வே! எனக்கே
படுங்காற் பையுள் தீரும்; படாஅது
தவிருங் காலை யாயினென்
உயிரோ டெல்லாம் உடன்வாங் கும்மே!

தெளிவுரை : மலைச்சாரலிடத்திலேயுள்ள தமக்குரிய தோட்டக்கால்களை, மேலும் அகலப்படுத்தி வளைத்து வேலியிட்டனர். மழை பெய்யும் பதத்தினைப் பெற்றதும், காட்டினை உழுது வாழ்வோரான உழவர்கள் அப்பகுதியை உழுது பண்படுத்திச் சிலவாய விதைகளையும் கலப்பாக விதைத்தனர். அவை வளர்ந்து ஒரு சேரப் பலவாகவும் விளைந்தன. தலைசாய்ந்த கதிர்களுடனே விளங்கிய தினைப் புனமாகவும் ஆயிற்று. அவ்விடத்தே உள்ளாளான தலைவியது – மழலைச்சொல்லும் மாறாத இளமடந்தையது–பேச்சாகிய இனிதான குரலைக் கிளிகளும் கேட்டு அறிந்திருப்பனவே! அத்தகைய இனிதான சொற்கள் என் பொருட்டாகவும், என்னருகே அவள் இருந்தபடியே எழுமானால், என்னுடைய இக்காமநோயும் தீர்ந்து போகுமே! அங்ஙனம் மிழற்றப்படாது, அதுதான் விட்டுப்போயின் செயலும் நிகழ்வதாயின், என் உயிரோடு, என் அறிவு முதலாகிய குணங்களையும் அத் தவிர்தல் தன்னோடும் உடன்கொண்டு போய்விடுமே! அவளின்றியாம் உய்வது தான் எவ்வாறோ, நெஞ்சமே ?

சொற்பொருள் : இடம்படுத்தல்–காடுகொன்று திருத்தி தினைக்கொல்லையை விரிவுபடுத்தல். கோட்டுதல்–புனத்தை வளைத்து வேலியிடல். தளிபதம்–மழை பெய்தலாகிய ஈரப்பதம்; என்றது உழவுக்கு ஏற்றதாகி செவ்விதான பதத்தினை. செய்யுழும் உழவர் போலாது, கடுமுயற்சியோடு உழவைச் செய்வதற்கு உரியவர் காட்டை உழுபவராய் குறவர் என்பதற்கு, 'கானுழு குறவர்' எனக் கூறினர்.

'சில வித்து அகல விட்டு' என்பது, விதைப்பதன் மரபை உணர்த்தும். அகல விதைப்பதனால், செடிகள் நன்கு வளர்வதற்கு வாய்ப்பு உண்டாகும். 'பலவிளைந்து' என்றது, பலவாகக் கிளைத்து வளர்ந்து விளைச்சலைத் தந்து என்றதாம். 'மிழலையம் தீங்குரல்' என்றது, தலைவியின் குரலினிமையின் சிறப்பை வியந்து பாராட்டிக் கூறியதாகும்; இதனால் அவளுக்கும் தனக்கும் முன்னதாகவே பழக்கம் உண்டெனக் குறிப்பாக உணர்த்தியதும் ஆம். பையுள்–காம நோயாகிய துன்பம். எல்லாம்–அறிவும் வீரமும் ஆகிய ஆண்மைப் பண்புகள் எல்லாம். இதனாலே, அவர்களது மெய்யான காதலன்பை அறிந்தாளான தோழி, அவன் குறையை முடிக்கவே முற்படுவாள் என்பது மரபாகும்.

இறைச்சிப் பொருள் : சிலவாய விதைகளை விதைத்துப் பலவாய பயனைப் பெறுவார்போலத், தலைவியை விரும்பி யான் கூறும் இச்சிலவாய சொற்கள் நின் உள்ளத்தே நிலைபெற்று, நீயும் உதவினை ஆயின், யானும் அவளும் பலவாய இன்பங்களிலே திளைத்து வாழ்வோம் என்பதாம்.

விளக்கம் : தளிபதம் பெற்றன்றி வித்தல் நிகழாதவாறு போல, நீயும் நின் உள்ளத்தே என்பால் இரங்குதலாகிய மனநெகிழ்வைப் பெற்றாயாயின், என் சில சொற்கள் பெரும் பயனைத் தருதலும் நிகழும் என்பதாம். 'தன்பால் தோன்றும் அவலத்தை தலைவன் தோழிபால் உரைப்பது அவன் தகுதிக்கு இழுக்காகாதோ?' என்றால், காமவசப்பட்டார் அதனின்றும் உய்ந்து கரையேற எதனையும் மேற்கொள்ளத் தயங்கார் என்று கொள்க. இதுபற்றியே சான்றோரும் இத்தகைய காட்சிகளைப் படைக்கின்றனர் என்பதும் அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/209&oldid=1698369" இலிருந்து மீள்விக்கப்பட்டது