உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/259

விக்கிமூலம் இலிருந்து

259 என்ன செய்வோமோ?

பாடியவர் : கொற்றங் கொற்றனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது.

[(து.வி.) தலைவனின் மனத்தைத் தலைவியை மணந்து கூடி வாழ்தலிலே செலுத்த விரும்புகின்றாள் தோழி. அதனை அவனுக்கு உணர்த்த நினைப்பவள், பகற்குறியிடத்தே, அவன் வந்து ஒரு சார் ஒதுங்கிச் செவ்வி பார்த்து நிற்பதறிந்தவள், தலைவிக்குச் சொல்வாளேபோல அவனுங்கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகின்றனள். இங்ஙனம் அமைந்த செய்யுள் இது].


யாங்குச்செய் வாங்கொல் தோழீ! பொன்வி
வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரல்
பெருங்கல் நாடனொடு இரும்புனத் தல்கிச்
செவ்வாய்ப் பைங்கிளி யோப்பி அவ்வாய்ப்
பெருவரை யடுக்கத் தருவி யாடிச் 5
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்
பெரிதமர்ந் தியைந்த கேண்மை சிறுநனி
அரிய போலக் காண்பேன் விரிதிரைக்
கடல்பெயர்ந் தனைய வாகிப்
புலர்பதங் கொண்டன ஏனற் குரலே? 10

தெளிவுரை : தோழீ! தினைக் கதிர்கள் எல்லாமும் விரிந்த அலையையுடைய கடல் நீரெல்லாம் வற்றி நிறம் மாறினாற்போலத் தாமும் காயும் பருவத்தை அடைந்தன கண்டாய்! இனி, நமர் அவற்றைக் கொய்வாராதலின், நம்மையும் இவண் வரவிடாராய் இல்லின் கண்ணேயே செறிப்பதும் நிகழும். பொன்போலப் பூக்களைக் கொண்ட வேங்கை மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கின்ற, தேன்மணங் கமழுகின்ற மலைச்சாரல் இது. இதனிடத்தே பெரிய மலைநாடனோடே கரிய தினைப்புனத்திலே தங்கியிருந்து, சிவந்த வாயையுடைய பசுமை நிறங்கொண்ட "கிளிகளை ஒப்பியும், அவ்விடத்தேயுள்ள பெரிய மலைப்பக்கத்தேயுள்ள அருவியிலே நீராடியும், சாரலிடத்தே பெற்ற சந்தனத் தேய்வையை வண்டு மொய்க்கும்படியாகப் பூசியும், மிகவும் விருப்பமுடனே செய்துகொண்ட பொருந்திய நட்புறவானது, இன்னுஞ் சிறிது நாளிலே வாய்த்தற்கு மிகவும் அரிதாகித் தேய்ந்து இல்லாதே போகும்போலத் தோன்றக் காண்கின்றேன்! இனி, நாமும் என்ன செய்ய மாட்டுவேமோ!

சொற்பொருள் : தேம்கமழ்சாரல் – புதுப்பூக்களின் மிகுதியினாலே தேனின் நறுமணம் கமழ்ந்தபடி இருக்கின்ற மலைச்சாரல். பெருங்கல் நாடன் – பெரிய மலை நாட்டினன். இரும் புனம் – கரிய தினைப்புனம்; பெரிய தினைப்புனமும் ஆம். அல்கி–தங்கி, ஆரம்–சந்தனம்; ஆரம் நீவி என்றலின் சந்தனத் தேய்வையைக் குறித்தது. அமர்ந்து – விரும்பி. இயைந்த கேண்மை – கூடிய நட்புறவு, கடல் பெயர்தல் – கடல் நீர் வற்றிப்போதல்.

விளக்கம் : இனி முன்போல அவனைக் அவனைக் காண்பதும், கூடியிருந்து இன்புறுவதும் வாய்த்தல் அரிதாகும் என்றனள்; அது நீங்கியவழி யாமும் இறந்துபடலும் கூடும் என்பதும் குறிப்பாகப் புலப்படுத்துவாள், "யாங்குச் செய்வாங் கொல்" என்றனள்.

கடல்நீர் வற்றிவிட, அவ்விடம் மெல்ல மெல்லக் காய்ந்து நிறம் மாறுபட்டாற்போலத் தினைக்கதிர்கள் நீர் வற்றியவையாய்க் காய்தலை அடைந்து வருகின்றன என்கின்றனள். காற்றிலே அசைந்தாடும் பசுந்தினைக் கதிர்களின் தோற்றத்திற்கு விரிதிரைக் கடலின் தோற்றத்தையும், அக்கதிர்கள் காய்ந்தவழித் தோன்றும் நிலைக்கு நீர்வற்றிக் காய்ந்த கடலின் தோற்றத்தையும் கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/259&oldid=1698433" இலிருந்து மீள்விக்கப்பட்டது