உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/304

விக்கிமூலம் இலிருந்து

304. அவன் மார்பு!

பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது.

[(து-வி.) தலைவன், தலைவியை வரைந்து மணந்து கொள்வதற்கு நெடுநாளாயின்போதும் முயன்றிலன்; களவின்பத்தையே விரும்பி நாடியவனாக, நெடுங்காலம் வந்தும் துய்த்தும் பிரிந்து போவானாயினன்; அவன் வரும் வழியின் ஏதம் முதலியவை குறித்துத் தலைவி வருந்தினள். அத்தலைமகளைத் தோழி பலவாறாகத் தேற்றி வந்தனள்; எனினும், துயர நெஞ்சம் பொறுக்கலாற்றாத தலைவி, தன் துயரத்தின் நிலையை இவ்வாறு தோழிக்கு உரைக்கின்றனள்.]


வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச்
சாரல் வரைய கிளையுடன் குழீஇ
வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும்
நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன்
புணரிற் புணருமார் எழிலே பிரியின் 5
மணியிடை பொன்னின் மாமை சாயவென்
அணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனால்


அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே! 10

தெளிவுரை : தோழீ! நீண்ட மெல்லிய தினையின் மணமுள்ள கதிர்களைக் கிளிகள் நிறையத் தின்னும். தின்று விட்டு, மலைச் சாரலிலுள்ள பாறைப் பக்கத்தேயுள்ள தன் சுற்றத்தோடும் சென்று கூடியவாய்க், காற்றாலே ஒலியெழுப்புகின்ற கொம்பு வாத்தியத்தைப் போல், அவை ஒன்றை யொன்று கூவி அழைத்தபடியிருக்கும். நெருங்கிய பக்கமலைகளையுடைய, அத்தகைய நல்ல மலைநாட்டவன் நம் தலைவன்!

அவன் வந்து என்னைக் கூடினான் ஆயின், என்பால் நல்ல அழகும் உண்டாயிருக்கும். அவன் என்னைவிட்டுப் பிரிந்தானாயின், நீலமணியின் இடைப்பட்ட பொன்னைப்போல என் மேனியின் மாந்தளிர் நிறமானது அழிந்துபோகப் பசலையும் தோன்றி, என் அழகையும் நலத்தையும் கெடுக்கா நிற்கும். ஆதலினாலே, தண்ணிதாக மணம் கமழும் நறிய தாரினைக் கொண்ட வல்லமையாளனான நம் தலைவனின் மார்பானது, இசையறி விலங்காகிய அசுணமாவைக் கொல்பவரது கையைப் போலவே, இன்பமும் துன்பமும் ஒருசேரப் பெரிதும் மிகுதியாக விளைவித்தலை உடைத்தாயிருப்பது காண்!

கருத்து : "அவனே இன்பமும் துன்பமும் தருபவனாயின் என் செய்வது?" என்பதாம்.

சொற்பொருள் : வாரல் மென் தினைப் புலவுக்குரல் – நெடுமையும் மணமும் கொண்ட தினையின் மென்மையான கதிர்கள்; 'மென்மை' என்றது கதிர் முற்றாதிருக்கும் பாலேற்ற காய்ப்பருவ நிலையைக் குறித்தது; அதுதான் சில நாட்களில் முற்றுதலும், அதன்பின் தான் கிளிகடிதற்கு வாராதே இச்செறிப்புறுதலும் நிகழும் என்பதும் குறிப்பாற் கூறியதாம். கிளை – சுற்றம். வயிர் – ஊதுகொம்பு. விளிபயிற்றல் – ஒன்றையொன்று கூப்பிட்டுக் குரல் பயிற்றல். மணி – நீலமணி. மாமை – மாந்தளிரின் செம்மை நிறம்; கருஞ்சிவப்பான வண்ணம். அசுணம் – அசுணமா என்னும் இசையறி விலங்கு; இதனைப் பற்ற நினைப்பவர், இன்னிசையை இசைத்து, அது அதில் மயங்கித் தம்மருகே வந்தவுடன், கடும் இசையான பறையினைக் கொட்ட, அது அதனால் உயிர்துறக்க, அதனைக் கொள்வர் என்று சொல்லப்படும். அசுணத்திற்கு இன்பம் நல்கித் தொடர்ந்து உயிரையும் வாங்கும் இசைப்பாரின் கைபோன்றது தலைவனின் கொடிய மார்பு என்றதால், அவனைப் பிரியின், தான் படும் வேதனைப் பெருக்கத்தையும் உரைத்தனளாம். விறலோன் – வெற்றியாளன்; வல்லமையாளன்; 'காதலியை வதைக்கும் விறலோன்' என்று, மனம் வெதும்பிக் கூறியதும் ஆகும்.

உள்ளுறை : கிளி 'தினைக்கதிரைக் கிளையோடும் தின்று விட்டுச் சென்று, கூடி விளிபயிற்றும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவியைக் களவிற்கூடிய தலைவனும், தன் சுற்றத்தார்க்குச் சொல்லி, சான்றோர் குழுவினருடன் வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதாம்.

விளக்கம் : மணியிடை யிடப்பெற்ற பொன்னானது, நீலமணியின் ஒளியால் தன் இயல்பான நிறத்தில் நீலவண்ணங் கலப்புற்றுத் தோன்றுமாறுபோலத் தலைவியின் மேனியும் பசலையால் நிறங்கெட்டுத் தோன்றிற்று என்பதாம். மாமை மேனி நிறத்திற்கும்; அணிநலம் மெய்ப் பொலிவுக்கும் சுட்டப்பட்டன.

மேற்கோள் : 'அவனறிவாற்ற அறியும் ஆதலின்' என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தின், (சூ. 147) 'இன்பமும் இடும்பையுமாகிய விடத்தும்' என்பதற்கு, இச்செய்யுளை நக்கினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/304&oldid=1698554" இலிருந்து மீள்விக்கப்பட்டது