உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - தொகுதி 2/செய்யுட்கள் 201 - 400

விக்கிமூலம் இலிருந்து

நற்றிணை

இரண்டாம் தொகுதி


201. திருநல உருவின் பாவை!

பாடியவர் : பரணர்.
திணை : .....
துறை : கழறிய பாங்கற்குத் தலைமகன் உரைத்தது.

[(துறை விளக்கம்): தலைமகன், ஒரு தலைவிபால் காதலுற்றான். 'அது பொருந்தாது' எனப் பாங்கன் அதனை மறுத்து உரைக்கின்றான். அப்பாங்கனுக்குத் தனது காதல் நிலையைத் தெளிவுபடுத்தி உரைப்பதுபோலத், தலைவனின் கூற்றாக அமைந்த செய்யுள் இது.]


மலையுறை குறவன் காதல் மடமகள்
பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள்
சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள்
உள்ளல் கூடா தென்போய்-மற்றும்
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் 5
தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு
அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்
கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும்
உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும்
பெருநிலம் கிளறினும் திருநல வுருவின்
மாயா இயற்கைப் பாவையின் 10
போதல் உள்ளாள்என் நெஞ்சத் தாளே!

தெளிவுரை : "மலைக்கண்ணே வாழ்கின்றவனான குறவனின் அன்புக்குரிய இளமகள் அவள். அவள் நின்னால் பெறுவதற்கு அரியவள்; நின்னால் நெருங்குவதற்கும் அரிதான காவலிடத்தே இருப்பவள்; நின் சொல்லைக் கேட்டு எதிரேற்றுக் கொள்ளுதற்கு ஏற்றவாறு முதிர்ச்சியடையாத சிற்றிளம் பருவத்தினள். அத்தன்மையளாகிய அவளை நீயும் காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந்தாது" என்கின்றவனாகிய பாங்கனே!

செவ்விய பழங்கள் பொருந்திய வேர்ப்பலா மரங்களையுடையது கொல்லிமலை. அதன்கண், தெய்வக்காவலையுடையதனாலே தீமையில்லாத, நெடிய கோட்டினின்றும் வீழுகின்ற அழகிய வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்ததான பாறையிடத்தே அமைந்திருப்பது, கொல்லிப் பாவை. காற்று மோதி இடித்தாலும், மிக்க மழைத்துளிகள் விரைய வீழ்ந்தாலும், இடிகள் சினந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய இயற்கையினாலான ஊறுகள் வேறு பலவும் தோன்றினாலும், அன்றி இந்தப் பெருநிலப் பகுதியே நிலநடுக்கத்தால் நடுங்குமாயினும், தான் கொண்டுள்ள, கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மையைக் கொண்டது அக்கொல்லிப் பாவை. அதனைப் போலவே, நீ யாது கூறினும், அன்றி யாது நேரினும், அவளும் என் நெஞ்சத்தே நீங்காதாளாகி நிலை பெற்றனள்; அதனைவிட்டு எக்காலத்தும் போவாள் அல்லள். இனி, யான்தான் யாது செய்வேனோ?

சொற்பொருள் : காதல் மகள்—அன்புக்குரிய மகள்; அருந்தவமிருந்து பெற்ற செல்வ மகள்; பேரன்பு காட்டிப் பேணி வளர்த்த மகளும் ஆம். மடமகள்—இளமகள்; மடப்பத்தை உடைய மகளும் ஆம்; மடமாவது நன்மை தீமை தெளியாப் பேதைமை. பெற லருங் குரையள்—பெறுதற்கு அரியவள். கடி—காவல், காப்பினள்—காவலுக்கு உட்பட்டவள். எதிர்கொள்ளல்—எதிரேற்று விடை கூறல், செவ்வேர்ப் பலா—சிவந்த வேர்ப்பலா; சற்றே சிவந்த சுளைகளைக் கொண்ட இது பலாவிற் சிறந்தது; பயம்—பழம். கோடு—மலைமுகடு. குடவரை—மேற்குப்பகுதி மலைச்சாரல். கால்—காற்று. உடன்று—சினந்து. பெருநிலம்—பெரிய நிலவுலகம். கிளரினும்—நடுக்கமுற்றாலும். 'பாவை' என்றது, கொல்லிப் பாவையை.

விளக்கம் : குறவன் விருப்பத்தோடு மணஞ்செய்து தரினன்றி, அவளை வேறுவழியாக அடைதல் இயலாது என்பவன், 'காதல் மடமகள்' என்றனன். அவனை மீறி, அவளைப் பெறுதலும் இயல்வதன்று என்பவன் 'பெறலருங் குரையள்' என்றனன். அவள் வெளிப்போந்து நின்னைக் காண்பதும், அன்றி நீதான் சென்று அவளைக் காண்பதும் கைகூடா தென்பவன், 'அருங்கடிக் காப்பினள்' என்றனன். அரிதின் முயன்று அவளைச் சந்திப்பினும், நின் பேச்சைக் கேட்டு நினக்கு இசைவு தருவதற்குத் துணியும் தகைமையில்லா இளம் பருவத்தாள் என்பவன், 'சொல்லெதிர் கொள்ளா இளையள்' என்றனன். அத்தன்மையள் ஆதலின் அவளை நீ தான் உள்ளல் கூடாது என்றும் பாங்கன் வலியுறுத்தினன். இதனைக் கேட்டுத் தலைமகன் கலங்கினான் அல்லன். 'கால்பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், பெருநிலம் கிளறினும், தன் திருநல உருவின் மாயா இயற்கையுடைய கொல்லிப் பாவையை அறிவாயே! அதனைப்போலவே அவளும் என் உள்ளத்தாள்; இனி எதாலும் போதல் செய்யாள்' என்கின்றான். இதனால், பாங்கன், அவளைத் தலைவன் பாற் கூட்டுவிக்கவே இனித்துணை நிற்பானாதல் வேண்டும் என்பது தலைவன் முடிவாகும். கொல்லிப் பாவை அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுவான், 'நெடுங்கோட்டு அவ்வெள் அருவிக் குடவரை யகத்து' என்றனன். இதன் சிறப்பும், கண்டாரைத்தன் பெருங்கவினால் தன்பால் ஈர்க்கும் வனப்பும், எவரும் அறிந்தது; அத்துணை வனப்பு மிக்க அழகியள் தலைவி என்பதும் இதனால் விளங்கும்.

தெய்வம் காத்தலால் தீதின்றியும், பலவின் பழம் பொருந்தியும் விளங்கும் கொல்லியைப் போலத் தெய்வத் துணையாலே தன் காதலும் தீதின்றி இனிது நிறைவெய்தும் என்றானும் ஆம். கொல்லியைச் சிறப்பாகக் குறித்தது தலைவன் அப்பகுதியைச் சார்ந்தவனாதலாலும் ஆம்.

கண்டார், தாமே அதன் அழகிலே பித்துற்று அடிமையாகும் பெருவனப்புக் கொண்ட கொல்லிப் பாவையைப் போலவே, அவளும் அத்துணை வனப்பினள் என்பதும் இதனால் விளங்கும். வரை—மலை; பெரும்பாலும் இரு நாடுகளின் எல்லையாக மலையே அமைதலால் 'வரை' என்றனர்.

'பாங்கன்' தலைவனின் துணையாக உடன் செல்லும் இளைஞன். தோழனின் நெருக்கம் பாங்கனுக்கு இல்லை.

202. செல்சுடர் நெடுங்கொடி!

பாடியவர் :பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : ......
துறை: உடன் போகா நின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.

[(து-வி.) தன் இல்லத்தைவிட்டு நீங்கித் தலைவனுடன் உடன்போக்கிற் செல்கின்றாள் தலைவி. அவள் வழியிடை வருத்தத்தைப் போக்குவானாகக், காட்டைக் காட்டித், தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


புலிபொரச் சிவந்த புலவுநா றிருங்கோட்டு
ஒலிபல் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து
வண்சுவற் பராரை முருக்கிக் கன்றொடு
மடப்பிடி தழீஇய தடக்கை வேழம்
தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப் 5
பொன்புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மாமலை விடரகம் கவைஇக் காண்வரக்
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கட்
செல்சுடர் நெடுங்கொடி போலப் 10
பல்பூங் கோங்கம் அணிந்த காடே!

தெளிவுரை : புலியோடு போரிட்டுக் கொன்றதாலே சிவப்புக்கறை படிந்ததும், புலவுநாற்றத்தை யுடையதுமான பெரிய கொம்பினிடத்தே உண்டாகிய பலவாகிய முத்துக்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிசெய்ய, வன்கண்மையிலே மிகுந்ததாய், வலிய மேட்டு நிலத்திலேயுள்ள பருத்த அடியையுடைய வேங்கை மரத்தைத் தகர்த்துத் தள்ளியது, பெரிய கையையுடையதான வேழம் ஒன்று. கன்றோடும், இளமை நலங்கொண்ட தன் பிடியையும் அருகே கொண்டுள்ள அது, மொய்த்துத் தேனீட்டக் கருதிக்கூடியிருந்த வண்டினத்தின் பெருங்கூட்டமானது அகன்று போகுமாறு, அவ்வேங்கையின் பொன்னைப்போன்ற பூவும் தழையுங் கலந்த உணவுக் கவளத்தை, அவற்றுக்கு அன்போடு பறித்து ஊட்டியபடி யிருக்கும். பெருமலையிடத்துள்ள, அத்தகைய பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டதாய், அழகுற இக்காடும் தோன்றுவதைக் காண்பாயாக! இளையவளே, நீயும் வாழ்க! நின் தந்தைக்கு உரியதான, கார்த்திகை மீன் பொருந்தியதும், அறஞ்செய்தற்கமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாக செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப், பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக!

சொற்பொருள் : சிவந்த–புலியின் குருதிக்கறை படிந்ததனாலே சிவப்புற்ற. புலவு நாறு–புலால் நாற்றங்கொண்ட. இருங்கோடு–பெரிய கொம்பு. ஒலிதல்–தழைத்தல்–உண்டாதல். ஆர்ப்ப–ஒலிக்க. வலிசிறந்து–வன்கண்மை மிகுந்து. வன்சுவல்–வலிய மேட்டுநிலப் பகுதி; வன்மையாவது நீர்ப்பசையால் நெகிழ்வு பெற்றிராத வறட்சித் தன்மை. பராரை–பருத்த அடிமரம். முருக்கி–ஒடித்துத்தள்ளி. தடக்கை–பெரியகை–துதிக்கை. பொன்புரை கவளம்–பொன் போலத் தோன்றும் வேங்கைப் பூவும் தழையுமாகக் கூடிய உணவுக் கவளம். தேன் செய்–தேனை ஈட்டும். பெருங்கிளை–பெரிதான வண்டின் கூட்டம். புறந்தருபு–அன்போடுங் கூடியதாய். விடரகம்–மலைக்கண்ணுள்ள பிளவிடங்கள்; வெடிப்பிடங்கள் என்பர். கவைஇ–தன்பாற் கொண்டு. காண்வர– காட்சிக்கு இனிதான அழகோடு. குறுமகள்–இளமகள். அறுமீன் கெழீஇ அறம்செய் திங்கள்–கார்த்திகை மீன் பௌர்ணமியன்று கூடிவருகின்றதும், அறம் செய்தற்கு உரியதுமாகிய கார்த்திகைத் திங்கள் பௌர்ணமி நாள். கோங்கம்–கோங்கமரம். அணிந்த காடு–அழகுறப் பெற்றுள்ளதனாலே அணிபுனைந்தாற் போலத் தோன்றும் காடு.

விளக்கம் : 'புலிபொரச் சிவந்த புலவு நாறு இருங்கோட்டு வேழம்' என்றது, 'புலியை அணிமையில் தானே தன் கோட்டால் குத்திக்கொன்று, அதன் குருதிக்கறை படிதலால் சிவந்தும், புலவு நாற்றங்கொண்டும் விளங்கிய பெரிய கோட்டையுடைய வேழம்' என்றதாம். அத்தகு ஆண்மையன் தான் என்பதும் உணர்த்தினான். அவ்வேழம் வலிசிறந்து வன்சுவற் பராரை வேங்கையை முரித்துத் தள்ளியது; அதுவும் புலிபோலத் தோன்றிய தோற்றத்தினால் என்க. அடுத்து, கன்றோடுங் கூடிய தன் பிடியைக் காணவும் அதன் சினம் தணிகின்றது. மென்தழையும் பூவுங் கூடிய வேங்கைக் கவளங்களை அன்போடே தன் கன்றுக்கும் பிடிக்கும் கொய்து ஊட்டுகின்றது. இவ்வாறே தலைவனும், தலைவியை மீட்கக் கருதித் தன்னை எதிர்த்து வருவாரை வென்றும், அலர் உரைப்பாரை ஒதுக்கியும், தலைவியைத் தன்னூர்க் கண்ணே கொண்டுபோய் மணம் புரிந்து, இல்லத்தே வைத்து அன்புடன் காத்துப் பேணுவான் என்பதாம். இது பகற்போதில் காட்டகத்தே கண்டது.

இரவில், முழுநிலவு எறிக்கக் கோங்கம் பூக்களால் அழகுடன் தோன்றும் காட்டைக் காட்டி, 'அவள் தந்தை அறம் செய்யும் கார்த்திகை நாளில் எடுத்த கார்த்திகை விளக்கு வரிசைகள் போலிருக்கின்றது' எனப் புனைந்து கூறி, அவளை மகிழ்விக்கின்றான். இதனால், காட்டிடையே இரவில் ஏதும் இடையூறில்லை என்று கூறினானுமாயிற்று.

விளக்கொழுங்கு கோங்கம் பூப்போலத் திகழ்தலைக் 'கோங்கின் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும்' (அகம். 153) எனப் பிற சான்றோரும் உரைப்பர். காடு விளக்கம் பெறுவதுபோல, நீயும் மனைவாழ்க்கையில் என்னால் பேணப்பட்டுப் பெரிதும் விளக்கம் பெறுவாய் என்று உணர்த்தி அவளைத் தெளிவித்தானும் ஆம்.

203. கானல் இயைந்த கேண்மை!

பாடியவர் : உலோச்சனார்.
திணை: .....

துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிதலைமகட்குச் சொல்லுவாளாய் வரைவு கடாயது.

[(து. வி.) தலைமக்களின் களவுறவை மணவுறவாக்க விரும்பினாள் தோழி; தலைவன் கேட்டு உணருமாறு, தலைவிக்குச் சொல்லுவாள்போல, அவள் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]


முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த்
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுங்கோட்டு
அகமடற் பொதுளிய முகைமுதிர்பு அவிழ்ந்த
கோடுவார்ந் தன்ன தோடுபொதி வெண்பூ
எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு 5
சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலால் மறுக்கும்
மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை
ஒருநாள் கழியினும் உய்வரிது என்னாது
கதழ்பரி நெடுந்தேர் வரவாண் டழுங்கச்
செய்ததன் தப்பல் அன்றியும் 10
உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே!

தெளிவுரை : முழங்கும் கடலலைகளாலே கொழித்து இடப்பெற்ற, பெரிய மணல்மேட்டிலே நிற்கின்றது, பெரிய தாளையுடையதான தாழை. அத்தாழையினது, முள்ளுடைய நெடிய கிளையினிடத்தேயுள்ள அகமடற்கண்ணே, முகையானது, தான் முதிர்தலாலே கட்டவிழ்ந்தது. அதுதான் சங்கு நீண்டாற்போன்ற தோடுகளாலே மூடப்பெற்ற, வெண்பூவாகவு மானது. மோதுகின்ற அலையினது தாக்குதலாலே அப்பூத் தான் சிதைவுற்றுத் தாது உதிர்ந்தும் போயிற்று. அதனின்றும் எழும் நறிய மணத்தாலே, அதுதான் சிறிய குடியிருப்பையுடைய பாக்கத்துத் தெருக்களிலுள்ள புலால் நாற்றத்தைப் போக்கும். அத்தகைய தாழை மணம் கமழுகின்ற கானற்சோலையிலே ஏற்பட்டது நம்முடைய காதல் உறவு. இவ் உறவானது, ஒருநாள் தலைவனைக் காணாதே போயினும், அதன்பின் உய்தல் அரிது என்னும் தன்மையது. இதன் உண்மையைக் கருதாமல், விரைந்த செலவையுடைய குதிரைகள் பூட்டிய நம் காதலரது நெடிய தேரினது வரவைத், தாம் தூற்றிய அலருரைகளாலே, அவன் ஊரிலேயே அழுங்கச் செய்தனர் நம் ஊரவர். அத் தவற்றோடும் அமையாதாராய், இவ் ஆரவாரத்தையுடைய ஊரவர், அவரைப் பிரிந்ததனாலுண்டாகிய நம் மெலிவுகண்டு வருத்தங்கொண்டு இரங்குதலும் உடையராயினரே! இதுதான் எதனாலோ தோழீ?

சொற்பொருள் : கொழீஇய – கொழித்த தெள்ளித் தூற்றிய. மூரி எக்கர்–பெரிதுயர்ந்த மணல்மேடு. கொஞ்சங் கொஞ்சமாக மணல் சேரச்சேரத் தான் உயர்வதுபற்றி 'எக்கர்' என்றனர். தடந்தாள்–பெரியதாள்; தாள்–அடிமரப் பகுதி. அகமடல்–மடலகத்து உள்ளிடப் பகுதி. பொதுளிய–பூத்துத் தோன்றிய. முகை–மொட்டு. முதிர்பு–முதிர்ச்சி பெற்று. அவிழ்தல்– கட்டவிழ்தல். கோடு–சங்கு. வார்தல்–வளர்தல். தோடு–புறவிதழ். உதைத்தலின்–மோதித் தாக்குதலினால். சிறுகுடிப் பாக்கம்–சிறுகுடியாகிய பரதவர் பாக்கம். பாக்கம்–கடற்கரை சார்ந்த ஊர். மறுகு–தெரு. புலால்–புலால் நாற்றம்; மீனுணங்கப் போடலால் உண்டாவது. கானல்–கடற்கரைக் கானற்சோலை. கேண்மை–நட்புறவு. கழியினும்–வாராதே கழிந்தாலும். உய்வு–உயிர் பிழைத்தல். கதழ்வு–விரைவு. ஆண்டு–அவ்விடத்தே; அவர்தம் ஊரிடத்தே. தப்பல்–தவறு. உயவு–மேனி மெலிவு; இது தலைவனைப் பிரிதலால் வந்தது. அழுங்கல் ஊர்–அலருரைத்து

. ஆரவாரிக்கும் தன்மைகொண்ட ஊர்; அலர் உரைப்பார் பெரிதும் மகளிர் என்று கொள்க.

விளக்கம் : 'மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை' எனக் கானற்சோலையிடத்தே நேர்ந்த தலைவன் தலைவியரின் முதற்சந்திப்பையும் பிறவற்றையும் கூறினாள், தலைவன், ஊழ்கூட்டிய அந்த உறவின் சிறப்பை நினைவுகொளற்கும், அதுபோது கூறிய உறுதிமொழிகளை நினைத்தற்கும். 'ஒரு நாள் கழியினும் உய்வரிது என்னாது' என்றது, அவன் பிரிவைப் பொறாத கழிபெருங் காதலள் தலைவி என்றற்கு. 'தேர்வரவு கண்டு அழுங்க' என்றது, அவன் வரையக் குறித்துச்சென்ற காலத்துக் கழிவினும் வராதேபோயினமை குறித்துப் புனைந்து சொல்லியதும், ஊரலர் ஏற்பட்டதை உணர்த்தியதும் ஆம். 'உயவுப் புணர்ந்தன்று' என்றது தலைவியின் மெலிவைக் குறிப்பிட்டது. தலைவியின் மெலிவு கண்ட முதுபெண்டிர் முதலியோர் வெறியாடல் முதலாயின மேற்கொள்ளலைக் குறித்துக் கூறியதும் ஆம். இதனால், இனிக் களவில் தலைவியை அடைதல் அரிது என்பதும், வரைந்து மணந்துகொள்ளலே தக்கதென்பதும் உணர்த்தினள். ஊர் மேல் பழியைச் சார்த்திக் கூறினாலும், தலைவியை விரைந்து மணந்து கோடலே தலைவன் இனிச் செயத்தக்கது என அவன் கடமையை உணர்த்தியதுமாம்.

உள்ளுறை உவமம் : தாழையின் வெண்பூத் திரைமோதுதலாலே பொங்கித், தாது சொரிந்து, சிறுகுடிப் பாக்கத்தே உளதாகிய புலால் நாற்றத்தைப் போக்கும். அது போக்குமாறு போலத், தலைவனும், களவை நீட்டித்தலால் உண்டாகும் அலரைப் போக்க முன்வந்து, தலைவியின் பெற்றோர்க்கு வேண்டும் வரைபொருளைத் தந்து, தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்வதன் மூலம், ஊரலரைப் போக்குதல் வேண்டும் என்பதாம். தலைவியின் மேனி மெலிவால் அவள் இனியும் பிரிவு நீட்டிப்பின் இறந்து படுவாள் ஆதலின், அதனைப் போக்குவதற்குக் கருதினையாயின் விரைய மணம்வேட்டு வருதலைச் செய்வாயாக என்றனள்.

பயன் : இதனைக் கேட்டலுவானாகிய தலைமகன், விரைந்து வந்து மணந்து கோடலிலே, தீவிரமாகத் தன் மனத்தைச் செலுத்துவான் என்பதாம்.

204. விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே!

பாடியவர் : அம்மள்ளனார்.
திணை: .....
துறை: பின்னின்று தலைமகன் ஆற்றானாய்த் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து. வி.) தோழியின் உதவியாலே தலைவியை அடைய நினைக்கும் தலைவன், அவள்பால் சென்று இரந்து வேண்டுகின்றான். அவள் உதவுதற்கு மறுத்துவிடவே, அவன் தலைவிக்கும் தனக்குமுள்ள பிரித்தற்கு இயலாத உறவைத் தன் நெஞ்சோடு உரைத்துக்கொள்வானே போலத் தோழியும் கேட்குமாறு உரைத்துத் தோழிக்கும் தெளிவு படுத்துகின்றான். இவ்வாறமைந்த செய்யுள் இது.]


தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை
குளிர்கொள் வியன்புனத் தெற்பட வருகோ
குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாம் புணரிய
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ
இன்சொல் மேவலின் இயலுமென் நெஞ்சுணக் 5
கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென
யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து
தான்செய் குறிவயின் இனிய கூறி
ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்
டுறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி 10
விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே!

தெளிவுரை : "தளிர்சேர்ந்த தண்மையான தழையுடையை உடுத்து, குளிரென்னும் கிளிகடி கருவியைக் கையிற்கொண்டு, நீதான் காவல் புரியும் நின் தந்தையுடைய அகன்ற தினைப்புனத்திடத்தே, ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப்போதிலேயே யான் வரவோ? அல்லது, குறுகிய சுனையிடத்தே கொய்த குவளைப்பூவை அணிந்து, நாம் தலைப்புணர்ச்சி பெற்ற நறிய தண்ணிய மலைச்சாரலிடத்தே ஆடிக்களித்தற்கு வரவோ? நின் இனிய சொல்லினை விரும்பித் துடிக்கும் என் நெஞ்சமானது அமைதி கொள்ளுமாறு, மடந்தையே! நின் கூர்மையான பற்களிடத்தே ஊறுகின்ற வாயூறலைப் பருகுவேன்" என்று யான் தனக்கு உரைத்தேன், அதனைக் கேட்டாளாகிய அவளும், தான் செய்தகுறியிடத்தே என்னைக் கொண்டு சென்று, இனிய சொற்களைக் கூறி, என்னையும் தெளிவித்தனள். கலைமானைப் பிரிந்து செல்லும் அதன் இளைய பெண்மானைப்போல, என்னைவிட்டு வேறாகப் பிரிந்து நீங்கி, மிகுதியான மூங்கில்கள் உயர்ந்த தன்னுடைய சிறுகுடி நோக்கியும் அவள் சென்றனள். அப்படிச் சென்ற அவளது முதுகுப்புறத்தை நோக்கியபடி போகவிடுத்த என் நெஞ்சமானது, அவளை நினைத்தலை எதனாலும் இனிக்கைவிடாது. இனி, யான்தான் யாது செய்வேனோ?

சொற்பொருள் : தளிர்–இளந்துளிர். தழை–தழையுடை. குளிர்-கிளிகடி கருவி. வியன் புனம்–அகன்ற தினைப்புனம்; தகப்பனின் வளமையைக் குறித்தது. ஏற்பட–காலையில். குறுஞ்சுனை–குறுகலான சுனை; 'குறுகல்' என்றது, சுனையின் மேற்பரப்பை. சுனை–மலைக்கண் மழைநீர் தங்கிநிற்கும் பள்ளமான இடம். குவளை–நீர்க்குவளைப் பூ. புணரிய–தலைக் கூட்டம் வாய்க்கப்பெற்ற. சாரல்–மலைப்பகுதிச் சோலை. ஆடுகம்–கூடிவிளையாடுதற்கு. மேவல்–விரும்புதல். இயலும்–ஒழுகும். நெஞ்சு உண–நெஞ்சம் தன் கவலை தீர்ந்து களிப்பெய்த. குறிவயின்–குறியிடத்தில். குறியிடம்–இருவரும் சந்திக்கக் கருதிக் குறிப்பிட்ட இடம். ஏறு–மானேறு. கொடிச்சி–குறக்குலப் பெண், பூங்கொடி போன்றவள் என்பது சொற்பொருள்.

விளக்கம் : 'தளிர்சேர் தண்தழை' என்றது பெரும்பாலும் அசோகந்தளிர் போன்றவையே தழையுடைக்குப் பயன்பட்டு வந்ததனால்; 'தளிரும் பூவும் சேர்ந்த தண்ணிய தழையுடை' எனலும் பொருந்தும். 'எற்பட' என்பதனை 'மாலைநேரம்' எனவும் சிலர் கொள்வர்; ஆயின் புனத்து வருதலும் சாரற்கண் ஆடுதலும் பிறவும் மாலைநேரத்து நிகழக்கூடாமையின் காலைநேரமாகக் கொள்ளப்படுதலே சிறப்பு; படுதல்–தோன்றுதல். 'குறிவயின்' என்றது, தலைவியால் 'இன்னவிடத்துக்கு இன்ன போதிலே நீயிர் வருக' எனச் சுட்டப்படும் இடத்தை; 'களஞ் சுட்டு கிளவி கிளவியது ஆகும்' என்பது விதி—(தொல். பொருள். சூ 120). முதற்சந்திப்பு புனத்திடத்தும், அடுத்து மலைச்சாரலிலும், பின் குறியிடத்தும் இவர்கள் களவிற் சந்தித்துப் பழகி நட்புச் செய்தனர் என்று கொள்க. 'ஏறுபிரி மடப்பிணை கடுப்ப' என்றது, தங்கள் பழைய உறவைப் பற்றிய உண்மையை உரைத்ததோடு, அவளும் தன்னைப் பிரிந்து, பிரிவைத் தாங்கி வாழ்ந்திராள் என்பதையும் தோழிக்கு உணர்த்தியதாம்.


இதன் பயன், தோழி தலைவிபால் பேரன்பினளாதலின், அவர்கள் கூட்டத்திற்குத் தானும் துணையாக அமைந்து உதவுவாள் என்பதாம்.

மேற்கோள் : 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துச், 'சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும்' என்னும் பகுதிக்கண், 'வகை' என்றதனானே இதனின் வேறுபட வருவனவும் கொள்க' என்று கூறி, இச்செய்யுளைக் காட்டினர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 102 சூ. உரை.)

205. மாமைக்கவின் மறையுமே!

பாடியவர் : இளநாகனார்,
திணை : .....
துறை : தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; தோழி செலவழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.

[(து. வி.) இச்செய்யுள் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாவும், தோழி தலைமகன் கேட்கச் சொல்லியதாவும் கொள்ளப்படும். தலைமகனது கடமையுணர்வும் காதற்பாசமும் சமநிலையிலே தமக்குள் போராடும் இனிய சுவையை இதன்கண் கண்டு உணரலாம். கடமை தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்லலே தக்கது என்று அவனுக்குக் கூறுகிறது; காதற் பாசம், பிரிந்து செல்லின் தலைவியின் கவினழியுமே என்று நினைத்து ஏங்குகிறது. இல்வாழ்வின் சுவையான கட்டம் இது.]


அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்து
ஆளி நன்மான் வேட்டெழுபு கோள்உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு வயக்களி றீர்க்கும்
துன்னருங் கானம் என்னாய் நீயே! 5
குவளை யுண்கண் இவள்ஈண் டொழிய
ஆள்வினைக் ககறி யாயின் நின்னொடு
போயின்று கொல்லோ தானே படப்பைக்
கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர்
நீர்மலி கதழ்பெயல் தலைஇய 10
ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!

தெளிவுரை : அருவிகள் ஆரவாரத்துடன் வீழ்ந்தபடியேயிருக்கின்றதான பெரிய மலைப்பக்கத்தே, ஆளியாகிய நல்விலங்கானது இரைகுறித்து வேட்டையாடுவதற்கு எழும். கொள்ளுதல் வல்ல நகங்களையும், அழகிய பொறிகளையுமுடைய புலியைக் கொன்றொழித்த, மிகவும் கூர்மையும் உயர்வான அமைப்பும் கொண்டதான வெண்ணிறக் கோட்டையுடைய வலிய களிற்றினைக் கொன்று, தன் முழைஞ்சிற்கு அதனை இழுத்துக்கொண்டும் செல்லும். நீ செல்லுதற்குரிய வழியானது அத்தகைய புகுதற்கரிய காடு என்றும் கருதாயாயினை!

குவளை போலும் மையுண்ணும் கண்களையுடைய இவள், இவ்விடத்தே நின்னை நீங்கித் தனித்திருக்க, நீயும் ஆள்வினைப் பொருட்டாக அகன்று போகின்றனை! அங்ஙனமாயின்,

தோட்டப் புறத்துள்ள வளைவான முட்களைக் கொண்ட ஈங்கைச் செடியின் நெடிய அழகிய இளந்தளிரானது, நீர்மிகுதியுடையதாக வேகத்தோடு பெய்யும் பெருமழையால் நனைந்தபோது தோன்றும் அழகிய நிறத்தைப் போன்றதான், இவளது மேனியின் மாந்தளிர்க்கவினானது, நின்னோடு, தானும் இவளைவிட்டு அகன்று போய் விடுமே!

சொற்பொருள் : பெருவரை அடுக்கம்–பெரிய மலையிடத்துள்ள அடுக்கடுக்காக விளங்கும் சாரற்பகுதிகளுள் ஒரு பகுதி. கோள்–கொள்ளுதல். பூம்பொறி–அழகிய பொறிகள். உழுவை–புலி. வைந்நுதி–கூரிய நுனிப்பகுதி. ஏந்து–மேல் நோக்கி உயர்ந்து. வயம்–வலிமை. ஈர்க்கும்–இழுத்தபடியிருக்கும். துன்னல்–நெருங்கல். ஆள்வினை–செயன்முயற்சி. படப்பை–தோட்டக்காற் பகுதி. கொடுமுள் – வளைந்தமுள். ஈங்கை–ஈங்கைச்செடி; வேலியில் வைக்கப்படுவது. மாமைக்கவின்–மாந்தளிர் போன்று மென்மையும் ஒளியும் பளபளப்பும் கொண்ட அழகு. ஆய்நிறம்– அழகிய நிறம்.

விளக்கம் : கானமோ நெருங்குதற்கு அரியது; கொடுவிலங்குகளையுமுடையது; அதனூடே செல்ல நினைத்தால் நினக்கு யாதாகுமோ? அதுவும் இனிதாகக் கூடியிருக்கும் நின் மனைவியை நலமிழந்து மெலிவடையச் செய்துவிட்டுப் போவதாற் பெறும் பயன்தான் யாதோ? நீ மீண்டும் வரும் வரை இவள்தான் நலன் அழியாதிருப்பாளோ? என்று கூறிச் செலவை நிறுத்துகின்றனன் எனக் கொள்க; அல்லது தோழி கூறக்கேட்டுத் தலைவன் நிறுத்தினன் எனக் கொள்க.

ஈங்கை வளைவான முள்ளைக் கொண்டது; அதன் நனைந்த தளிர் மகளிரது மேனி வனப்புக்கு ஒப்பிடப் படுவதை, 'மாரியீங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி ஆயிழை மகளிர்' எனப் பிற சான்றோரும் கூறுவர் (அகம். 208) உழுவை தொலைச்சிய வயக்களிற்றைக் கொன்று இழுத்துச் செல்லும் என ஆளியின் பெருவலிமைபற்றிக் கூறப்பட்டது. ஆள்வினை செயன்முயற்சி. 'மாந்தளிர்' கரிய அழகிய தளிருமாம்; மாமரத்தினது இளந்தளிருமாம்.

'மாமைக்கவின் நின்னொடு போயின்று கொல்' என்றது, பிரிந்ததன் அத்துணையே அதுதான் பசலையால் உண்ணப் பட்டுப் பாழாகுமே எனத் தலைவியது பேரன்பினைக் காட்டுதற்காம்.

இறைச்சிப் பொருள் : களிறு தனக்குப் பகையாகிய உழுவையைக் குத்திக் கொன்றதன் வலிமையைக் கூறினான், தன் மனத்திண்மையை வென்று தன்னைத் தனக்கு ஆட்படுத்திக் கொண்ட தலைவியது மாண்புமிக்க மாமைக்கவினைச் சிறப்பித்தற்கு; அவ்வலிய களிறு ஆளி நன்மானாற் கொன்று இழுத்துச் செல்லப்பட்டதைக் கூறினான், அத்தகைய அவளது மாமைக் கவினும் பிரிவு நேர்ந்துவிட்டபோது பசலையால் உண்ணப்பட்டு அழிந்து போம் என்பதைச் சிறப்பித்ததற்கு

மேற்கோள் : 'விழுமம் ஆவன, பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியும் என்றலும், பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்' என்று, 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை' என்னும் சூத்திரத்து, 'வேற்று நாட்டகல்வயின் விழுமத்தானும்' என்பதன் உரைக்கண் கூறுவர் நச்சினார்க்கினியர். 'இஃது இவள் நலன் அழியுமென்று செலவு அழுங்கியது' எனவும் உரைப்பர்–(தொல். பொருள். 185,146)

206. கேண்மை அறிந்தாளோ?

பாடியவர் : ஐயூர் முடவனார்.
திணை : ......
துறை தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

[(து. வி.) தலைவன் தலைவியரின் நீடித்த களவு ஒழுக்கத்தை நிறுத்தித் தலைவனை அவளை வரைந்து கொள்ளும் முயற்சிக்குத் தூண்டவேண்டும் எனக் கருதுகின்றாள் தோழி. தலைவனுக்காகத் தலைவி குறியிடத்தே காத்திருக்கும் சமயம், அவன் வந்து, தான் அகலுதலை நோக்கி ஒருசார் மறைந்து நிற்றலை அறிந்தவள், அறியாதாளாகக் காட்டித் தலைவிக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது. கேட்கும் தலைவன் வரைந்து மணத்தொடு கொள்ளற்கு முற்படுவான் என்பது இதன் பயன்.]


'துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன எனல்' என்றும்,
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச்
செவ்வாய்ப் பாசினம் கவருமென் நவ்வாய்த்
தட்டையும் புடைக்கக் கவணும் தொடுக்கென 5
எந்தைவந் துரைத்தன னாக, அன்னையும்
நன்னாள் வேங்கையும் அலர்கமா இனியென
என்முகம் நோக்கினள் எவன்கொல் தோழி?
சென்ற கென்னுங்கொல் செறிப்பல் என்னுங்கொல்?
கல்கெழு நாடன் கேண்மை 10
அறிந்தனள் கொல்லஃ தறிக்லென் யானே!

தெளிவுரை : தோழீ! துய்யினைத் தலையிலே கொண்ட மிக்க இளமையான தினைக் கதிர்க் குலைகள் பால் கொண்டு தலைசாய்த்து, மூடியிருந்த தோடுகள் பிரிந்துபோயின வாயின என்றும்; துறுகற் பாறைகளின் மேலாகத் தினைக்கதிர்களைக் கொய்துபோகும் பொருட்டாகக் கூடியிருந்த சிவந்த வாயையுடைய பசிய கிளியினங்கள் தினைக்கதிர்களைக் கவர்ந்து போதலும் நேருமென்றும்; அவற்றை ஓட்டும் பொருட்டாகப் புனத்திடைச் சென்று தட்டையையும் புடைப்பீராக, கவண் கற்களையும் தொடுத்து எறிவீராக என்றும்; எம் தந்தை வந்து தாயிடத்தே உரைத்தனன். அதனைக் கேட்டாளான எம் அன்னையும், திருமண நன்னாளைக் காட்டுகின்ற வேங்கையும் இனி மலர்வதாகுக என்று சொல்லியவளாக, என் முகத்தையும் கூர்ந்து நோக்கினள். அதுதான் எதனாலோ, தோழி? புனங்காவலுக்குச் சென்று வருக என்றனளோ?" இனி மனைக்கண்ணேயே செறித்துவைப்பேன் என்றனளோ? மலைநாடனது நட்பினை அன்னையும் அறிந்தனளோ? யான் யாதும் அறிந்திருக்கின்றேனே தோழி!

சொற்பொருள் : புனிற்றுக் குரல்–இளைதான தினைக்கதிர்கள். பால் கொள்ளல்–பாலேற்றுக் காய்ப்பருவங் கொள்ளுதல். இறைஞ்சி–தலைசாய்த்து. தோடு–மூடியுள்ள மேலிலைகள். துறுகல்–வட்டக் கற்பாறை. மீமிசை–மேற் புறத்தே. பாசினம்–பசிய கிளியினம். தட்டை–கிளிகடி கருவிகளுள் ஒன்று. நன்னாள்–திருமணத்திற்கான நல்ல நாள். அலர்க–மலர்க.

விளக்கம் : தினைக் கதிர்கள் பாலேற்றுக் காய்ப்பருவம் எய்தின; ஆதலின் கவர்ந்துபோகக் கிளியினம் வருதல் கூடும்; அவற்றை வெருட்டக் கிளிகடி கருவிகளை எடுத்துக் கொண்டு புனங்காவலுக்குச் செல்லுதல் வேண்டும் என்று நினைத்திருந்த அன்னை அது கேட்டு, நன்னாள் வேங்கையும் அலர்க என்று கூறியவளாகத் தோழியை நோக்குகின்றாள். மலைநாடனோடு தலைவிக்கு நேர்ந்துள்ள நட்பை அறிந்த தோழி திகைக்கின்றாள். அன்னைக்கு உண்மை தெரிந்து தான் அப்படிச் சொன்னாளோ எனக் கலங்குகின்றாள். இவ்வாறு அமைந்துள்ளது செய்யுளின் பொருள். இதனைச் சிறைப்புறமாக நின்று கேட்கும் தலைவன், தலைவியை விரைய மணம்வேட்டுக் கொள்ளுதலிலேயே மனஞ்செலுத்துவான்; அப்படிச் செலுத்தவேண்டும் என்பதுதான் தோழியின் கருத்துமாகும்.

கதிர் முற்றித் தலைசாய்ந்த தினையைக் கவர்ந்து போகக் கிளியினம் வந்து குழுமுவதுபோலப் பருவ மலர்ச்சியுற்ற தலைவியைக் மணந்துகொள்ளக் கருதிப் பலரும் வருதல் கூடும். அவரிடமிருந்து அவளைக் காத்தல் வேண்டும் எனவும் உட்பொருள் அமைத்துக் கூறியதாகவும், அதனைக் கேட்டு உணர்ந்தே தாய் வேங்கை மலர்க என்றாளாகவும் கொள்ளுதலும் பொருந்தும்.

'திருமணம் செய்யப் பெற்றோர் கருதினர். அவள் இனி இற்செறிக்கப் படுவாள்; களவுக்குறி வாய்த்தல் அரிது; விரைய மணத்தற்குமுயல்க' என்பதும் உணர்த்தப்பெற்றது.

207. பெருமீன் நினைத்த சிறாஅர்!

பாடியவர் : ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்.
திணை: நெய்தல்.
துறை : நொதுமலர் வந்துழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

[(து – வி.) தலைவியின் களவு உறவை அறிந்தனள் தோழி. அவள், தலைவியை மணம்பேசி நொதுமலர் வந்தபோது அதிர்ச்சி அடைகின்றாள். தலைவியின் உறவைப் பற்றிய உண்மையைத் தன் தாயாகிய செவிலியிடம் உரைக்கின்றாள். இவ்வாறு அமைந்தது இச்செய்யுள். செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் உரைக்கத், தலைவியின் காதலனையே அவளுக்கு மணமுடிக்க அவர்கள் இசைவார்கள் என்பது இதன் பயனாகும்.]


கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந்தேர் பண்ணி வரல்ஆ னாதே;
குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி 5
வந்தனர் பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக்
கோட்சுறா எறிந்தெனக் கீட்படச் சுருங்கிய
முடிமுதிர் வலைகைக் கொண்டு பெருங்கடல்
தலைகெழு பெருமீன் முன்னிய 10
கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே!

தெளிவுரை : கண்டல்களை வேலியாகக் கொண்டதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தோட்டக் கால்களிலேயுள்ள, நீர்முள்ளிச் செடிகளாலே வேயப்பெற்ற குறுகிய இறைப்பையுடைய குடிசைகளிலே வாழ்பவர் பரதவர்கள். கொழுமையான மீன்களை வேட்டையாடிக் கொள்பவரான அவர்களது பாக்கம் ஆரவாரிக்கும்படியாக, நெடிய தேரானது, செல்லுதற்கு ஏற்றவாறு பண்ணப்பட்டு வருதலிலே என்றும் தவிர்வதில்லை. குன்றைப் போலக் குவிந்து கிடக்கின்ற மணல் மேடுகளைக் கடந்து வருகின்ற அவர்தான், இனி வறிதே தான் மீள்வாரோ? அங்ஙனம் நேர்வதாயின்—

இளையரும் முதியருமாகத் தத்தம் கிளையோடு கூடியிருந்து, கொலைவல்ல சுறாமீன் தாக்கியதனாலே கிழிதற்பட்டுச் சுருங்கிப்போன, முடிகள் மிகுதியாயுள்ள வலையினைச் செப்பஞ் செய்வர். அதனைத் தம்பாற் கொண்டு, பெரிதான கடலிடத்தே பொருந்தியுள்ள பெரிய மீன்களைக் கொள்ளக் கருதியவராக, கொல்லுந் தொழிலிலே விருப்பமுடைய சிறுவர்கள் செல்வார்கள். நம் தலைவியும் அச்சிறுவர்களாலே கொள்ளப்பட்டவள் ஆவாள்.

சொற்பொருள் : கண்டல் – ஒருவகை நீர்த்தாவரம்; முள் உள்ளது; வெண்பூக்கள் பூப்பது. முண்டகம் – நீர் முள்ளி. குவவு மணல் – குவிந்த மணல். அல்கல் – இரவுப் போதில். சிறாஅர், இளையர், முதியர் என மூவகைப் பருவமும் குறிக்கப்பட்டமை காண்க. கீட்படக் – கிழிதற்பட்டதனாலே. முடிமுதிர்வலை—முடிகள் மிகுந்தவலை. முன்னிய – கருதிச் சென்ற.

விளக்கம் : 'பாக்கம் கல்லென வரல் ஆனாது' என்றது, அவள் காதலனும் வரைவொடு வருவான் என்றதாம், 'நெடுந்தேர் பண்ணி' என்றது, அவன் நொதுமலர் குறிக்கும் இளைஞனிலும் தகுதியான் மிக்கவன் என்றற்கும், அவனும் தலைவிபாற் பெருங்காதலினன் என்றற்கும் ஆம். 'வந்தனர் பெயர்வர் கொல்' என்றது, அவன் தலைவியோடன்றி மீளான் என்றதாம். 'கொலைவெஞ் சிறாஅர் கோட்பட்டனள்' என்றது, தலைவி தானும் வேற்று வரைவுக்குத்தமர் இசையின், கடலில் வீழ்ந்து உயிர் துறந்து, சிறுவரால் கொள்ளப்படுபவள் ஆவாள் என்பதாம்.

உள்ளுறை பொருள் : கீட்படச் சுருங்கிய முடிமுதிர் வலையைக் கைக்கொண்டு, கொலைவெஞ் சிறாஅர் பெருங்கடலிடத்துப் பெருமீனைக் கருதிச் சென்றாற்போல, நொதுமலரும் தம்மாற் பெறவியலாத தலைவியின் வரைவை விரும்பித்தம் அறியாமையாலே வந்தனர் என்பதாம்.

மேற்கோள் : 'இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது' என்று கூறி, இச்செய்யுளை 'நாற்றமும் தோற்றமும்' (தொல்.பொருள். 144) என்னும் நூற்பா உரையிடத்தே, 'பிறன் வரைவாயினும்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

இவ்வாறு துறையமைதி கொண்டால், நொதுமலர் வரைவுமலிந்தமை போலப் படைத்து மொழிவாளாய்த் தலைவிக்குக் கூறுவாள் போலச், செவ்விநோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கும் தலைவனும் கேட்டு உணரும் பொருட்டுத்தோழி கூறியதாகக் கொள்க.

208. பிரிந்தாரைத் தரும் மழைக்குரல்!

பாடியவர் : நொச்சி நியமங் கிழார்.
திணை : பாலை.
துறை : செலவுற்றாரது குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்பத், தோழி சொல்லியது.

[(து – வி.) 'தலைமகன் பொருள் தேடி வருதலைக் கருதினான். அதனால் தன்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லவும் முடிவு கொண்டான்' எனக் குறிப்பாலே அறிந்தாள் தலைமகள். அதனால், அவள் பெரிதும் வருந்தி நலிய, அவளுக்குத் தோழி தேறுதல் உரைப்பதாக அமைந்தது இச்செய்யுள்.]


விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி
அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப
விளிவில கலுழும் கண்ணொடு பெரிதழிந்து
எவன்நினைபு வாடுதி, சுடர்நுதற் குறுமகள்?
செல்வர் அல்லர்நங் காதலர்; செலினும் 5
நோன்மார் அல்லர் நோயே; மற்றவர்
கொன்னு நம்பும் குரையர் தாமே
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள்
முடியா தாயினும் வருவர்; அதன்தலை 10
இன்துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலுமிப் பெருமழைக் குரலே!

தெளிவுரை : ஒளி சுடருகின்ற நெற்றியை உடையாளான இளமகளே! வலி குறைந்தவாய் விளங்கும் இழைகள் நெகிழ்வுற்று நீங்கும்படியாக விம்முகின்றனை! முத்துப்போலும் கண்ணீர்த் துளிகள் மார்பகங்களின் இடையே விழுந்து நனைந்தபடியும் உள்ளனை! விடாதே அழுகின்ற கண்களோடும் பெரிதும் நலனழிந்து எதனை நினைந்தோ நீயும் வாடுகின்றனை! நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரே அல்லர்! அவ்வாறே சென்றாரானாலும், தமக்கு உண்டாகும் காமநோயைப் பொறுத்திருப்பாரும் அல்லர்! அவர் நின்னிடத்தே பெரிதான விருப்பத்தையும் உடையவர். நின்பாற் சிறந்த அன்பினையும் கொண்டவர். மிக்க மென்மைத் தன்மையினையும் உடையவர். அவரைப் பிரிந்து வாழும் நம்மினுங் காட்டில் இரக்கமுற்றவராய், தேடிச் சென்ற அரும் பொருள் முடியாத நிலையே யானாலும், காலத்தை நீட்டியாது, உடனே நம்பால் வந்துவிடுவர். அதன் மேலும், இப்பெரிதான மேகத்து முழக்கமானது, இனிய துணையாயினாரைப் பிரிந்திருப்போரையும் நாடித்தருவதே போலுமாய் இராநின்றது காண்! ஆதலினாலே நீயும் இனி வருந்தாதிருப்பாயாக!

சொற்பொருள் : விறல் சாய் விளங்கு இழை – பிறர் அணிபவான ஒளிவிளங்கும் இழைகளினுங்காட்டில், தன் ஒளியுடைமையும் செய்வினைச் சிறப்பும் மிகுத்துக் காட்டி, அவற்றை வெற்றிகொள்ளும் வல்லமை சிறந்த இழைகள் என்றனர். அவை நெகிழ்தல், அவன் பிரிவை நினைந்தேங்கி உடல் மெலிவுற்றதனால். அறல் – கருமணல். தெள் மணி – தெள்ளிய மணிபோலும் கண்ணீர்த்துளிகள். இடைமுலை – முலைகளின் இடைப்பட்ட பகுதி. விளிவில் – விடுதலில்லாதபடி. கலுழல் – கலங்கி அழுதல். அழிந்து – நலன் கெட்டு. நினைபு – நினைத்து. நோன்மார் – பொறுப்பவர். நம்பு – விருப்பம். சாயல் – மென்மை. குரல் – இடிக்குரல்.

விளக்கம் : மழைக் குரலைக் குறித்துக் கூறியது, அங்ஙனமே அவர்தாம் செல்லற்கு நினைத்தாலும், அதற்குரிய காலமும் கார்காலமாகிய இதுவன்று; இதுதான் பிரிந்தோரை நாடித் தருவதன்றி, உடனுறைவோரைப் பிரிப்பதன்று என்கின்றனள். 'செல்வர் அல்லர்' என்றவள், படிப்படியாகச் 'சென்றாலும்' என, இப்படியே ஒவ்வொன்றாகச் சொல்வதை எண்ணி மகிழ்க. தோழி கூற்றாக அமையும் சொல்லாட்சிச் சிறப்பையும் உய்த்து உணர்ந்து இன்புறுக.

இதனால், தலைவன் பொருள் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்து போவதற்குத் துணிந்தான் என்பதனை, அவனது குறிப்புக்களாலே அறிந்து, தலைவி அவன் பிரிந்தாற்போலவே உடல் மெலிந்து கலங்குவள் என்பதும், அதனைக் காணும் தலைவன், தன் செலவைத் தள்ளிப்போடுவான் என்பதும் உணரப்படும். உணரவே, இல்லற வாழ்விலே தலைவன் தலைவியரிடையே விளங்கிய நெருக்கமான மனவீடுபாட்டுச் செறிவும் விளங்கும்.

209. உயிரோடு உடன் வாங்கும்!

பாடியவர் : நொச்சி நியமங் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : குறை மறுக்கப் பட்டுப் பின்னின்ற தலைமகன், ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது.

[(து-வி.) தலைவியை அடைவதற்கு, அவளுடைய உயிர்த் தோழியின் உதவியை நாடுகின்றான் தலைவன். அவள் உதவ மறுக்கவே, அவன் தலைவிக்கும் தனக்கும் இடையேயுள்ள காதலன்பின் திறத்தைத் தோழிக்கு உணர்த்தியவனாய்த், தான் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல இவ்வாறு கூறுகின்றான்.]


மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளிபதம் பெற்ற கானுழு குறவர்
சிலவித்து அகல விட்டுடன் பலவிளைந்து
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலையங் குறுமகள் மிழலையந் தீங்குரல் 5
கிளியும் தாம்அறி பவ்வே! எனக்கே
படுங்காற் பையுள் தீரும்; படாஅது
தவிருங் காலை யாயினென்
உயிரோ டெல்லாம் உடன்வாங் கும்மே!

தெளிவுரை : மலைச்சாரலிடத்திலேயுள்ள தமக்குரிய தோட்டக்கால்களை, மேலும் அகலப்படுத்தி வளைத்து வேலியிட்டனர். மழை பெய்யும் பதத்தினைப் பெற்றதும், காட்டினை உழுது வாழ்வோரான உழவர்கள் அப்பகுதியை உழுது பண்படுத்திச் சிலவாய விதைகளையும் கலப்பாக விதைத்தனர். அவை வளர்ந்து ஒரு சேரப் பலவாகவும் விளைந்தன. தலைசாய்ந்த கதிர்களுடனே விளங்கிய தினைப் புனமாகவும் ஆயிற்று. அவ்விடத்தே உள்ளாளான தலைவியது – மழலைச்சொல்லும் மாறாத இளமடந்தையது–பேச்சாகிய இனிதான குரலைக் கிளிகளும் கேட்டு அறிந்திருப்பனவே! அத்தகைய இனிதான சொற்கள் என் பொருட்டாகவும், என்னருகே அவள் இருந்தபடியே எழுமானால், என்னுடைய இக்காமநோயும் தீர்ந்து போகுமே! அங்ஙனம் மிழற்றப்படாது, அதுதான் விட்டுப்போயின் செயலும் நிகழ்வதாயின், என் உயிரோடு, என் அறிவு முதலாகிய குணங்களையும் அத் தவிர்தல் தன்னோடும் உடன்கொண்டு போய்விடுமே! அவளின்றியாம் உய்வது தான் எவ்வாறோ, நெஞ்சமே ?

சொற்பொருள் : இடம்படுத்தல்–காடுகொன்று திருத்தி தினைக்கொல்லையை விரிவுபடுத்தல். கோட்டுதல்–புனத்தை வளைத்து வேலியிடல். தளிபதம்–மழை பெய்தலாகிய ஈரப்பதம்; என்றது உழவுக்கு ஏற்றதாகி செவ்விதான பதத்தினை. செய்யுழும் உழவர் போலாது, கடுமுயற்சியோடு உழவைச் செய்வதற்கு உரியவர் காட்டை உழுபவராய் குறவர் என்பதற்கு, 'கானுழு குறவர்' எனக் கூறினர்.

'சில வித்து அகல விட்டு' என்பது, விதைப்பதன் மரபை உணர்த்தும். அகல விதைப்பதனால், செடிகள் நன்கு வளர்வதற்கு வாய்ப்பு உண்டாகும். 'பலவிளைந்து' என்றது, பலவாகக் கிளைத்து வளர்ந்து விளைச்சலைத் தந்து என்றதாம். 'மிழலையம் தீங்குரல்' என்றது, தலைவியின் குரலினிமையின் சிறப்பை வியந்து பாராட்டிக் கூறியதாகும்; இதனால் அவளுக்கும் தனக்கும் முன்னதாகவே பழக்கம் உண்டெனக் குறிப்பாக உணர்த்தியதும் ஆம். பையுள்–காம நோயாகிய துன்பம். எல்லாம்–அறிவும் வீரமும் ஆகிய ஆண்மைப் பண்புகள் எல்லாம். இதனாலே, அவர்களது மெய்யான காதலன்பை அறிந்தாளான தோழி, அவன் குறையை முடிக்கவே முற்படுவாள் என்பது மரபாகும்.

இறைச்சிப் பொருள் : சிலவாய விதைகளை விதைத்துப் பலவாய பயனைப் பெறுவார்போலத், தலைவியை விரும்பி யான் கூறும் இச்சிலவாய சொற்கள் நின் உள்ளத்தே நிலைபெற்று, நீயும் உதவினை ஆயின், யானும் அவளும் பலவாய இன்பங்களிலே திளைத்து வாழ்வோம் என்பதாம்.

விளக்கம் : தளிபதம் பெற்றன்றி வித்தல் நிகழாதவாறு போல, நீயும் நின் உள்ளத்தே என்பால் இரங்குதலாகிய மனநெகிழ்வைப் பெற்றாயாயின், என் சில சொற்கள் பெரும் பயனைத் தருதலும் நிகழும் என்பதாம். 'தன்பால் தோன்றும் அவலத்தை தலைவன் தோழிபால் உரைப்பது அவன் தகுதிக்கு இழுக்காகாதோ?' என்றால், காமவசப்பட்டார் அதனின்றும் உய்ந்து கரையேற எதனையும் மேற்கொள்ளத் தயங்கார் என்று கொள்க. இதுபற்றியே சான்றோரும் இத்தகைய காட்சிகளைப் படைக்கின்றனர் என்பதும் அறிக.

210. செல்வமும் செய்வினைப் பயனும் !

பாடியவர் : மிளைகிழான் நல்வேட்டனார்.
திணை : மருதம்.
துறை : தோழி, தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது.

[(து-வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன், மீன்டும் தன் வீட்டிற்கு வருகிறான். தலைவி புலந்துகொள்ள, அவள் புலவியைத் தணிவிக்க உதவுமாறு தலைவன் தோழியிடம் வேண்டுகின்றான். அவள், அவன் செயலைக் கண்டித்து உரைத்துப், பின் தலைவியைப் புலவிதீரச் செய்கின்றனள். அவள் உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் 5
செல்வம் அன்று, தன் செய்வினைப் பயனே!
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புண்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வம்என் பதுவே!

தெளிவுரை : தலைவனே! நெல் அறுத்து நீங்கப்பெற்றதான அழகிய இடமகன்ற வயலினிடத்தே, மீளவும் உழுத ஈரத்தையுடைய சேற்றிலே, விதைக்கும் பொருட்டாக வித்தோடும் போயின உழவர், வட்டியினிடத்தே, பற்பலவகையான மீன்களோடும் திரும்பிக் கொண்டிருக்கின்ற, புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! எதனையும் பெரிதாக நெடுநேரம் பேசுதலாகிய பேச்சுவன்மையும், தேர் யானை குதிரை முதலாயவற்றை விரைவாக ஏறிச் செலுத்துதலாகிய உடல்வலிமையும் 'செல்வம்' என்று கொள்ளப்படுவதன்று. அவை வாய்த்தல் முன் செய்த நல்வினைப் பயனாலேயே யாகும் என்று அறிவாயாக. இனிச்சான்றோர் 'செல்வம்' என்று சொல்வதுதான், தன்னை அடைக்கலமாகச் சேர்ந்தோரது துயரத்தை நினைத்து அச்சங்கொள்ளும் பண்பினைக் கொண்டாயாய், அவர்பால் இனிய தகையாளனாயிருந்து உதவும் பண்புச் செல்வமே 'செல்வம்' என்று சொல்லப்படுவதாகும். நீதான் அதனை இல்லாதானும் ஆயினமையின், நின்பால் எதனையும் கூறிப் பயனின்று காண்.

சொற்பொருள் : அரிகால்–பயிர் அறுத்துவிட்ட பின்னுள்ள தாளடி நிலம். மறுகால் உழுதல் – மீளத் தாளடிப் பயிர் செய்யக் கருதி உழுதல். செறு–சேறு. வட்டி–வட்டமான கடகப்பெட்டி. பற்பல மீன்– வயலில் கலித்துப் பெருகியிருந்த பல்வகையான மீன்கள். யாணர்–புதுவருவாய். நெடிய மொழிதல் – தன் பெருமிதம் புலப்படக் கூறுதலும் ஆம். ஆடிய – விரையச் செல்வன ; அவை மாவும் தேரும் களிரும் போல்வன. சான்றோர்–சான்றாண்மையாளராகிய மறமாண்பினர். புன்கண் – துயரம். மென்கண்–இனிதான செயல்கள் செய்யும் தன்மை.

உள்ளுறைபொருள் : தாளடியிலே விதைப்பதற்கு விதையோடுஞ் சென்ற பெட்டியானது, மீனொடும் திரும்பும் என்றனள். இது தலைவியோடு இல்லறம் நிகழ்த்தும் நின்பால், அதன் பயனைச் செறிவுடன் பெறுவதற்குரிய மனநிலையில்லாதே, பரத்தையர்பாற் பெறலாகும் இழிந்த இன்பத்தினை நாடும் புல்லிய ஒழுக்கம் உண்டாயிருக்கிறது எனக்கடிந்து கூறியதாம்.

விளக்கம் : தலைவியை நெற்பயனுக்கும், பரத்தையை மீன்பயனுக்கும் உவமித்தனள். குலமகளிர்போலக் குலமரபு பேணும் மகப்பெற்றுத் தருவதற்குப் பரத்தையர் உரிமையற்றார். ஆதலின், அவர் உறவு இழிந்ததாயிற்று என்று கொள்க. இவ்வாறு தோழியாற் கடிந்து கூறப்பெற்ற தலைவன், தன் செயலுக்கு நாணி நிற்க, அதுகண்டு இரங்கிய தோழி, அவனுக்கு உதவக் கருதித் தலைவியை இசைவிக்க முற்படுவாள் என்பதாம். புன்கண் – வருத்தம் ; மென்கண்–அருள். நெடிய மொழிதல்–ஆண்மையான பேச்சுப் பேசுதல் எனினும் ஆம். செய்யானது நெல்விளைத்துப் பயன் கொள்ளுதலுக்கு உரியது; அதனிடைய மீன் கலித்துப் பெருகுதல் இடைவரவே யாகும். இவ்வாறே தலைவனுக்கு உரியவள் மனைவி எனவும், இடைவரவேபோல வந்தவள் பரத்தை என்பதும் கொள்க.

உரிமை கடமையோடு இன்பமும் தருபவள் மனைவி என்பதும், இன்பமாகிய ஒன்றான் மட்டுமே தருபவள் பரத்தை என்பதும் கருதுக.

211. குருகும் தாழைப் போதும்!

பாடியவர் : கோட்டியூர் நல்லந்தையார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவு நீட, ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி, சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகிவரும் தலைவனின் உள்ளத்திலே, 'தலைவியை விரைந்து முறையாக மணஞ்செய்துகொள்ளல் வேண்டும்' என்னும் உணர்வை எழுப்பக் கருதுகின்றாள் தோழி. ஆங்கே, ஒருபுறமாக வந்து நின்றானாகிய தலைவன் கேட்டு உணருமாறு, தான் தலைவியிடம் கூறுவதுபோல இவ்வாறு சொல்லுகின்றாள்.]


யார்க்குநொந்து உரைக்கோ யானே! ஊர்கடல்
ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவில்
கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த
கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய
முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை 5
எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத்
துறுமடல் தலைய தோடுபொதி தாழை
வண்டுபடு வான்போது வெரூஉம்
துறைகெழு கொண்கன் துறந்தனன் எனவே.

தெளிவுரை : ஊர்ந்து செல்லுகின்ற கடலினது பெருக்கானது சென்று பாய்தலினாலே உப்புப்படுதலை உடையவான உப்புப் பாத்திகளுள், வளைந்த கழியிடத்தேயுள்ள மீன்களை வேட்டையாடி உண்ணக் கருதியதாகி எழுந்த, கருங்கால்களையுடைய நீர்க்குருகின் குத்துக்குத் தப்பிப் பிழைத்தோடிய, வளைந்த மேற்புறத்தைக் கொண்ட இறாமீனின் மீசையுடைய ஆணானது, மோதுகின்ற அலைகளாலே கொழிக்கப்பெற்ற எக்கர்மணலினது, நெடுங்கரைப் பகுதியிடத்தே வளர்ந்துள்ள, நெருங்கிய மடலிடத்தே இலைகளாலே பொதியப்பட்டு விளங்கும் தாழையினது, வண்டு மொய்க்கும் வெண்மையான பூம்போதைக் கண்டு 'வெண் குருகோ' என அச்சமுறும். இத்தகைய கடற்கரைக்கு உரியவனாகிய நம் தலைவன் நம்மைத் துறந்து போயினன் என்று, யான்தான், யாவர்பாற் சென்று மனம்நொந்து உரைப்பேன் கொல்லோ?

சொற்பொருள் : ஊர் கடல்–ஊர்ந்து செல்லும் கடல்; கடல் ஊர்தல் என்றது, அலைகளின் தொடர்ந்த இயக்கத்தை. ஓதம்–கடல்நீர். செறு-'வயல்'; என்றது உப்பு விளையும் உப்புப் பாத்திகளை. கொடுங்கழி–வளைந்த உப்பங்கழிகள். கோள்–குத்து. முடங்குபுறம்–வளைந்த மேற்புறம். 'மோவாய்' என்றது, இறாமீனின் மீசையை. ஏற்றை–ஆண்; மீசை ஆணுக்கு மட்டுமே என்க. எக்கர்–மணல் மேடு. நெடுங்கோடு–நெடியதான கரைப் பகுதி. துறு மடல்–செறிந்த தாழையின் மடல். தோடு–இதழ். வான்போது–வெள்ளை நிற மொட்டு; உருவால் வெண்குருகைப் போலத் தோற்றுவது இது. வாலிமை–வெண்மை.

விளக்கம் : 'கொண்கன்' என்றது, வரையாது ஒழுகினன் ஆயினும், அவனே நம்மை மணக்கும் தலைவன் எனத் தாம் கொண்டுள்ள கற்புறுதி தோன்றக் கூறியதாம். 'யார்க்கு உரைக்கோம்?' என்றது, 'அவனையன்றி வேறு யார்தாம் நமக்கு உறுதுணையாவார்? அவனே துணையிலன் எனில் பிறர் யாவர் நமக்கு உதவுவார் என வருந்திக் கூறியதாம். இறவு முடங்கு புறத்தை உடையதாதலை, 'முடங்குபுற இறவொடு இனமீன் செறிக்கும்' எனப் பிறரும் கூறுவர் (அகம் 220). மோவாய் மீசை தாடிகளைக் குறிப்பதனைப் 'புன்றாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை' என (அகம் 133) வருவதனால் உணர்க. தாழையின் வெண்பூ குருகெனத் தோற்றுதலைத் 'தயங்கு திரை பொருத தாழை வெண்பூக் குருகென மலரும்' என வருவதனாலும் அறிக (குறு. 226).

உள்ளுறை பொருள் : 'கருங்காற் குருகின் கோள் உய்ந்து போகிய இறவின் ஏற்றை, தாழை வெண்போதுக்கு அஞ்சி மெலியுமாறு போல, இவளும். இனியும் நீதான் வரைவு நீட்டித்தாயாயின், எழுகின்ற ஊரலரானே வரும் ஏதப்பாட்டிற்கு உய்ந்து பிழைத்துள்ள யாம், இனி நின் வரைவும் வாய்க்காது இறந்து படுதலே உறுவேம் என்பதாம். ஊரவர் காவலும் பிறவும் கடந்துவந்து முன்னர் இவளைத் துய்த்துச்சென்ற நீதான், இனி வரைந்து வருதற்கு அஞ்சினையாய், நீன் ஊர்க்கண்ணேயே ஒடுங்கினை போலும் என்றதூஉம் ஆம்.

இதனைக் கேட்கலுறும் தலைவன், வரைந்து சென்று மணங்கொள்ளுதலிலேயே நாட்டத்தைச் செலுத்துவானாவான் என்பதாம்.

212. வந்தனர் வாழி தோழி!

பாடியவர் : குடவாயிற் கீரத்தனார்.
திணை : பாலை.
துறை : பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவுகேட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[(து-வி.) பொருள் முடித்த தலைவன், தான் மீண்டுவருகின்றதான செய்தியைத் தலைவிக்கு முன்னதாகத் தெரிவிப்பதற்காகத், தன் ஏவலருட் சிலரை அவள்பால் அனுப்புகின்றான். அவர்கள் செய்தி சொல்லக் கேட்ட தோழியானவள், தலைவியிடஞ் சென்று, அவளை வாழ்த்துவது போன்று அமைந்த செய்யுள் இது.]


பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண்
கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் 5
நெடும்பெருங் குன்றம் நீந்தி, நம்வயின்
வந்தனர்; வாழி தோழி! கையதை
செம்பொன் கழல்தொடி நோக்கி, மாமகன்
கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும்
அவவுக்கொள் மனத்தேம் ஆகிய எமக்கே! 10

தெளிவுரை : தோழீ! நீதான், இனிமேலும் நெடுங்காலம் இனிதாக வாழ்வாயாக! பறவைகளைப் பற்றக் கருதிய வேட்டுவன், பார்வைப்புள்ளை வைத்து அமைத்த வலையைக் கண்டதும், நெடிய கால்களையுடைய கணந்துள் பறவையானது அச்சங் கொள்ளும். தான், தன் துணையை அழைத்துப் புலம்புதலையும் செய்யும்! அதன் தெளிவான விளிக்குரலானது, சுரத்தின் வழியாகச் செல்கின்றவரான கூத்தாடுவோர், தம் நடை வருத்தம் தோன்றாமற்படிக்கு விரைவாக இசைக்கின்ற யாழின் இசையோடும் மாறு கொண்டதாய் இருக்கும். அத்தகைய காட்டு நெறியின் அவ்விடத்தே, கடுங்குரற் பம்பையினைக் கொண்டாராகவும், சினங்கொண்ட நாயுடன் கூடியவராகவும் வடுகர் வருவர். அத்தகையதான, நெடிதும் பெரிதுமான குன்றத்தையும் கடந்து, நம் தலைவரும், நம் ஊருக்கு மிக அணித்தாகவே வந்து கொண்டிருக்கின்றனர். நம் கையிடத்தே விளங்கும் செம்பொன்னாற் செய்யப் பெற்ற தொடியானது கழன்று சோர்தலைப் பார்த்தவனாக, நம் சிறந்த மகன் வந்து, நம்மை அழுதபடியே அணைத்துக் கொண்டோனாய், அதுதான் கழல்வது ஏனோ அன்னாய்?' என வினவுகின்ற அந்த இனிய அழுகையினது மழலைக்குரலைக் கேட்கும்போதெல்லாம், நம் தலைவனிடத்தே மேலும் விருப்பங் கொண்டேமாய்த் தளர்கின்ற மனத்தை உடையேமாகிய நம்மிடத்திற்கே, அவரும் விரைவில் வந்து சேர்வர். அதனால், துயரற்றனையாய், இனிதே இன்பத்து ஆழ்ந்தனையாய், நெடிது மகிழ்வாயாக என்பது கருத்து.

சொற்பொருள் : பார்வை என்பது கைப்புள். இதனைக் கொண்டு பிறபுட்களை வரச்செய்து, வலைக்குள் அவை வந்து அகப்பட்டுக் கொள்ள, அவற்றை எளிதாகப் பிடிப்பது வேட்டையாடுவோர் கொள்ளும் மரபு ஆகும். படுவலை–அகப்படுத்தும் வலை. வெரீஇ–அச்சங்கொண்டு. தெள்விளி–தெளிந்த கூப்பீட்டுக் குரல். கோடியர்–கோடு–ஊதுகொம்பு; ஊது கொம்பினை உடையவரான கூத்தர்; நரம்பு–நரம்புகளையுடைய யாழைக் குறிப்பது; சினையாகு பெயர். அத்தம்–காட்டு வழி. பம்பை–ஒருவகைத் தோல் வாத்தியம்; தென்பாண்டி நாட்டிலே இந்நாளிலும் வழக்கத்தில் இதே பெயரோடு இருந்து வருகின்றது. கதம்–சினம். வடுகர்–வடுகுமொழி பேசுவோர்; தமிழகத்தின் வடபுறவெல்லைப் பகுதியில் வாழ்ந்தோர். நீந்தி–கடந்து; முயற்சியோடே கடப்பது பற்றி நீந்தி என்றனர். கழல் தொடி–கழலும் தொடி; தொடி செறிப்புத் தளர்ந்து கழலுதல் பிரிவுத் துயரத்தின் உடல்நலிவினால். கவவு–உடலோடு ஒன்ற அணைத்துக் கொள்ளுதல். அவவு–அவா; ஆசை.

விளக்கம் : பிரிவுத் துயரின் மிகுதியாலே மெய் இளைத்ததனைக் குறிக்கக் ‘கழல் தொடி' என்றாள்; அதனை நோக்கிய புதல்வன் வருந்தித்தாயை அணைத்து அழுகின்றனன். 'தன் சோர்வைக் கண்டு வருந்தும் இச்சிறு புதல்வனின் உள்ளந்தானும் தலைவனுக்கு இல்லையே' என நினைக்கத் தலைவியின் துயரம் மிகுதியாவதுடன், தலைவனை அணைத்து மகிழத் துடிக்கும் ஆசையும் பெருகுவதாயிற்று என்க. தனித்திருக்கும் கணந்துள் பறவையானது, வேட்டுவனின் படுவலைக்கு அஞ்சி வெருவுவதுபோன்று, தலைவியும் அத்தத்து வருவோனாகிய தலைவனின் பயணத்தில் ஆபத்து நிகழுமோ எனக்கவலையுற்றுப் புலம்புவாள் என்பதாம். அதன் தெள்விளியோடு கோடியரின் யாழொலியும் சேர்ந்து இசைத்தல், அவரும் தம் வழிநடை வருத்தம் தீர, இசையிலே மனஞ்செலுத்தி மகிழ்ந்தார் போலத், தலைவியும் தலைவனுடன் இன்புற்று இனிது மகிழ்பவளாவாள் என்பதாம். 'வடுகர்' அந்நாளில் ஆறலைப்போராய் இருந்தனர் போலும். அதுபற்றியே அவராலும் துயரம் ஏதும் கொள்ளாதே இனிது வழிகடந்து சென்று என்றனர்.

கணந்துள்–நீர்ப் பறவை இனத்துள் ஒன்று. 'எந்நில. மருங்கிற் பூவும் புள்ளும்' (தொல். பொருள் 19) என்னும் விதிக்கு இணங்கப் பாலைக்கண் நெய்தற் கருப்பொருளாகிய கணந்துள் பயின்று வந்ததும் காண்க.

இறைச்சி : கணந்துட் பறவையது புலம்புங் குரலோசையானது, வழிநடை வருத்தந்தீரக் கோடியர் மீட்டும் யாழிசையிற் கலந்து விடுவதுபோலத் தலைவியின் புலம்பல் எல்லாம், தலைவன் அளிக்கும் இன்பத்திலே இணைந்து தலைவியை மகிழ்விக்கும் என்பதாம். மெய்ப்பாடு தோழியின் உள்ளத்தே தோன்றிய உவகை.

பயன் : தலைவிக்கும் அவளுக்கும் உண்டாகும் மகிழ்ச்சி.

213. புனம் காவலும் நுமதோ?

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.

[(து.வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன்பின்னர், ஒருநாள், தலைமகளும் தோழியும் ஓரிடத்தே இருப்பதனைக் கண்டானாகிய தலைமகனின் உள்ளத்திலே வேட்கை பெருகுகின்றது. ஆயினும், தோழிக்குத் தம் உறவை வெளிப்படக்காட்டவும் துணியானாய், அவர்பால் வரும் புதியவன் ஒருவன் போல வந்து, அவரோடு உறவுடையான்போல் இவ்வாறு வினவுகின்றான். தன் கருத்தோடு அவர் கருத்தையும் ஒன்றுபடுத்து உணரக் கூறுதலின் 'மதி உடன்படுத்தல்' ஆயிற்று.]


அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்
கன்றுகால் யாத்த மன்றப் பலவின்
வேர்க்கொண்டு தூங்கும் கொடுஞ்சுளைப் பெரும்பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் 5
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதுஎனச்


சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய்புனம் காவலும் நுமதோ?—
கோடேந் தல்குல் நீள்தோ ளீரே! 10

தெளிவுரை : பக்கம் உயர்ந்த அல்குல் தடத்தையும், பருத்த தோள்களையும் உடையவரான பெண்களே! அருவியின் ஒலியானது கேட்டபடியே இருக்கின்ற பெரிய மலையிடத்தே சென்று சேர்ந்து, இளங்கன்றைக் காலிலிட்ட கயிற்றால் பிணித்துள்ள மன்றிடத்துள்ள பலாமரத்தினை இளங்கன்றையுடைய சிவந்த நிறப்பசுவும் சென்று அடையும். அவ்விடத்தே, அப்பலாவினது வேர்ப்புறத்தே பழுத்துக் கிடக்கும் கொழுவிய சுளைகளைக் கொண்ட பெரிய பலாப்பழத்தையும் அப்பசு தின்னும். தின்றபின், மூங்கில்கள் நெருங்கிய சிறுமலைப் பக்கத்தேயுள்ள குளிர்ந்த நீரையும் பருகும். இத்தகைய வளமுடைய பெருமலைகளே வேலியாகவுள்ள இம்மலைநாட்டிடத்தே அமைந்துள்ள நமது சிற்றூர் தான் யாதோ?' என யான் கேட்டேனாயினும், அதற்கு யாதொரு சொல்லும் விடையாகச் சொல்லாதே இருக்கின்றீர். ஆயினும், தொகுதி கொண்ட கார்மேகங்கள் கல்லென்னும் இடிமுழக்கோடும் பெயலைச் செய்தலினாலே விளைந்துள்ள, செழுமையான செந்நிறம் பொருந்திய கதிர்களைக் கொண்ட சிறுதினையின், கொய்தற்கான பருவத்தைக் கொண்ட இத்தினைப்புனத்தின் காவலும் உமது தானோ? இதையேனும் கூறுவீராக!

சொற்பொருள் : மன்றப் பலா–மன்றிடத்துள்ள பலா; அல்லது, தழைத்துப் படர்ந்து மன்று போல் விளங்கும் பலாவும் ஆம். குழவிச் சேதா–இளங்கன்றையுடைய செந்நிறப் பசு. அறல்–அறல்பட்ட நீர். கல்லென–ஒலி முழக்கோடுங் கூடியதாக. கருவி–தொகுதி. செங்கேழ்–செந்நிறம்.

விளக்கம் : கன்றின் பேரிலுள்ள பாசத்தாலே அதனை நாடிவந்த சேதாவுக்கு, பலாப்பழமும் பருகுதற்கு அறல் நீரும் வாய்த்ததுபோலே, வேட்டையாடலைக் கருதியே வந்தவனாகிய எனக்கும், தலைவியைக் காணலும் அவளோடும் இன்புறுகின்ற வாய்ப்பும் கிடைத்தது என்கின்றான் தலைவன். இது தம் உறவு ஊழானது கூட்டுவித்ததனாலே வாய்த்தது என்றதாம்; இதனால் தெய்வீக வுறவை வலியுறுத்தினான். தலைவியது நாட்டின் வளமையை கூறிப் புகழ்ந்ததும் ஆம்.

'கோடேந்து அல்குல்' என்றது, முன்னர்த் தான் தலைவியோடு கொண்ட களவுறவை நினைவுபடுத்தியது. 'நீள்தோளீர்' என்றது தோழிக்கும் தலைவிக்கும் இடையேயிருந்த வேற்றுமையற்ற அன்புச் செறிவைச் சுட்டியது. இதனாலே, தலைவியது கருத்துக்கு உதவுவதே தோழியின் செயலாக வேண்டும் என்றதாம்.

'கொய்புனம்' என்றது புனம் அழிந்தாற் கூட்டம் நிகழாது எனக் குறித்துப் பகற்குறி வேட்டது; புனம் அழிந்தபின் தலைவியும் மனையகம் புகுதல் நிகழுமாதலின் இரவுக்குறி வேட்பவன் சிறுகுடி யாதெனவும் வினவினான் எனக் கொள்க.

உறவுடையாளாகிய தலைவி உட்பொருளை உணர்ந்து களிக்க, அஃதறியாதாளாகிய தோழி அதனை அன்பினால் மட்டுமே வினவியதாக முதலிற் கொள்ளினும், தலைவன் தலைவியரின் மெய்ப்பாடுகளைக் கண்டதும் உண்மையினை உணர்வாள் என்று கொள்க.

உள்ளுறை பொருள் : 'கன்றையுடைய செந்நிற பசுவானது, பலாப்பழத்தைத் தின்று இறும்பின் அறல் நீரைப் பருகும்' என்றது, தலைவியை முன்பே இயற்கைப் புணர்ச்சியாலே பெற்றவனாகிய யானும், இனிப் பகற்குறியும் இரவுக்குறியும் பெற்றுக் கூடி மகிழ்வேன்' என்றதாம்.

மேற்கோள் : 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் நூற்பாவின் உரைக்கிடையிலே (தொல்.பொருள். 99), 'ஊரும் பேரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்' என்பதற்கு இச்செய்யுளைக் காட்டி, இதனை 'ஊர் வினாயது' என்பர் இளம் பூரணனார்; 'ஊரும் பிறவும் வினாயது' என்பர் நச்சினார்க்கினியர். இவ்வாறு பொருந்தக் கொண்டு பொருள் காணலும் இனிமை தருவதே.

'செங்கேழ் ஆடிய' என்பதற்குத் தலைசாய்ந்த கதிர்கள் மழையால் செந்நிறப் புதுநீர் பட்ட தரையிலே படிய எனவும் கொள்க.

214. அவரும் கேளாரோ தோழி!

பாடியவர்: கருவூர்க் கோசனார்;
திணை: பாலை.
துறை: உலகியலாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைவன் குறித்த பருவங் கண்டு, தலைமகள் சொல்லியது.

[(து. வி.) உலகியல் வாழ்விற்கான பொருளைத் தேடி வருவதன் பொருட்டாகப் பிரிந்த தலைமகன், பிரியுங் காலத்தே மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவத்தினது வரவைக் கண்டாள் தலைவி. அவள் மனவேதனையை. உணர்த்துவது போல அமைந்தது இச்செய்யுள்.]

‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்’ என,
வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை
‘அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது
அணிய வருதும்நின் மணியிருங் கதுப்பு’ என, 5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி,
மைசூழ் வெற்பின் மலைபல இறந்து,
செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர்
கேளார் கொல்லோ தோழி! தோள
இலங்குவளை நெகிழ்த்த கலங்களும் எள்ளி 10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலுமிக் கார்ப்பெய்ல் குரலே!

தெளிவுரை: “தோழீ! இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறம் ஆற்றலாகிய இன்பவாழ்வும், மறுமைக்கு இன்பந் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதனவாகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்தடைவதில்லை” எனத் தலைவனும் கருதினார். அதனாலே, வினை செய்தலின் பாற் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டினரும் ஆயினார். அப்படிப் பிரியுங் காலத்திலே, “நின்னது நீலமணியைப் போன்றதான கரிய கூந்தலிலே, கார் காலத்தே அரும்பு விரிகின்ற, சுரும்புகள் தேன் உண்ணா நிற்கும் பல வகையான மலர்களையும் அணிந்து இன்புறும் பொருட்டாக யானும் வருவேன்” என்று, குறையற்ற வஞ்சினத்தினை என் நெஞ்சமும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். கார்மேகங்கள் திரண்டு மொய்த்திருக்கின்ற வெற்புக்களைக் கொண்ட மலைகள் பலவற்றையும் கடந்து, பொருளைச் செய்து கொணர்வதற்கும் சென்றனர். அவர்தாம், தாம் சென்றிருக்கின்ற தேயத்திடத்தும், "என் தோள்களிலே விளங்கிய தோள்வளைகள் நெகிழும்படியாகச் செய்ததனாலே ஆகிய பிரிவுக்கலக்கமாகிய துன்பத்தை நோக்கி, எள்ளி நகையாடுவதுபோல மின்னலிட்டு ஆரவாரித்தபடி தோன்றியுள்ள இக்கார்ப் பெயலின் இடிக்குரலைத் தாமும் கேட்டிருக்க மாட்டாரோ?"

சொற்பொருள் : இசை–புகழ். இன்பம்–தலைவியோடு கூடிவாழ்ந்து பெறுதலாகிய இன்பம். ஈதல்–வறுமையாளராய் வந்து இரந்தவர்க்கு வழங்கி மகிழ்தலாகிய இன்பமும், அந்தச் செயலாலே விளைகின்றதாகிய மறுமை இன்பமும். அலரி–விரிந்த பூ. மணி நீலமணி. கதுப்பு–கூந்தல். வஞ்சினம்–சபதம். செயிர்–குற்றம். கலக்குஅஞர்–கலக்கந்தருவதான பிரிவுத் துயரம். கார்ப்பெயல்–கார் காலத்துப் பெயலாகிய பெருமழை.

விளக்கம் : பல் தெரியக் காட்டி நகுதலின்போது உண்டாகும் ஆரவாரத்திற்கு இடிக்குரலையும், பல்லொளிக்கு மின்னலையும் நயமாக உவமித்தனர். 'கேளார் கொல்லோ!' என்றது, கேட்டனராயின், சொற்பிழையாராகிய அவர் தாம் இதற்குள் மீண்டும் வந்திருப்பாரே எனக் கருதும் ஆற்றாமை மிகுதியாற் கூறியதாகும். தேயந்தோறும் பருவங்களும் வேறுபடுதலினாலே, அவர் சென்றுள்ள நாட்டிடத்தே இக்கார்ப்பருவமானது இன்னும் தோன்றிற்றில்லை போலும் என்று மனந்தேறுவதற்கு முயன்றதாம். வஞ்சினம் பொய்த்தார் என்று அவருக்குத் தெய்வக்கேடு சூழாமை கருதுவாள், தன் அருளுடைமையாலே இவ்வாறு கூறுகின்றனள் என்க. இதுபற்றியே 'செயிர்தீர் காதலர். என அவர் வஞ்சினம் பொய்த்தல் இலர் என்று கூறினளாம். நெஞ்சு உணக் கூறுதலாவது, நெஞ்சமும் ஏற்றுத் தெளிவு கொள்ளுமாறு உறுதிச் சொற்களால் தெளிவு கூறுதல். தெய்வம் அஞ்சல், அழுகையாகிய மெய்ப்பாடுகளும், அயாவுயிர்த்தல் பயனும் இதற்குக் கொள்ளப் படும்.

இசையும் இன்பமும் ஈதலும் என்னும் மூவகை அறங்களும் இதன்கண் கூறப்பட்டன.

215. தங்கினால் என்னவோ?

பாடியவர் : மதுரைச் சுள்ளம் போதனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) பகற்குறி வந்து மீள்வானை, 'அவள் ஆற்றுந்தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. (2) இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.

[(து.வி.) பகற்குறி இரவுக்குறி வருவானை மண முயற்சிகளிலே மனஞ்செலுத்துமாறு தோழி தூண்டுவதற்குச் சொன்னதாக இச்செய்யுளைக் கொள்க.]


குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப்
பகல்கெழு செல்வன் குடமலை மறையப்
புலம்புவந் திறுத்த புன்கண் மாலை
இலங்குவளை மகளிர் வியனகர் அயர,
மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் 5
நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக்
சுரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்றுநீ இவணை யாகி எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய? செங்கால்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிய 10
கோட்சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே!

தெளிவுரை : சேர்ப்பனே! கீழைக் கடலினின்றும் எழுந்து வந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பியவனாகப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய செல்வனாகிய ஆதித்தனும் மேலைத்திசைக்கண் மலையிடத்தே போய் மறைவானாயினன். துன்பத்தை முற்படுத்தியதாக வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலையும் வந்தது. இலங்கியவளையணிந்த இல்லுறை மகளிர்கள் தத்தம் மாளிகையிலே இருந்தபடியே இம்மாலைப்போதினை விரும்பி வரவேற்று இன்புறுவர். மீன் கொழுப்பை உருகச் செய்து தொகுத்த ஊனாகிய நெய்யினை வார்த்து ஏற்றியுள்ள ஒள்ளிய விளக்குச் சுடர்களின் ஒளியினை, நீலநிறக் கடற்பரப்பிலே அசையும் அலைகள் மோதிமோதி அலைக்கின்றன, இவ்வண்ணமாகிய இப்பொழுதிலே, கடற்கரையைச் சார்ந்தபடியே சென்று பலரும் காத்திருந்த கல்லென்னும் ஒலியையுடைய தான் இப்பாக்கத்திலேயே, இன்று நீயும் இவ்விடத்தேயே இருந்தவனாகி எம்மோடும் தங்கியிருந்தால், அதனால் நினக்கேதும் குறை உண்டாகுமோ? சிவந்த கோல்களோடும் பிணித்த, வளைவாக இடப்பெற்ற முடிகளையுடைய அழகிய வலையானது கிழியும்படியாக, அதனை அறுத்துத் தப்பிச்சென்ற, கொல்லவல்ல சுறாமீனைக் கருதியபடி, மிகுந்த வலிமையுடனே சென்றுள்ளவரான எமரும், அதனைப் பிடித்துக் கொணராதே கரைநோக்கி வருவார் அல்லர்காண்!

சொற்பொருள் : இவர்ந்து – எழுந்து தோன்றி. குரூஉக்கதிர் – நிறம் அமைந்த கதிர்; செந்நிறக் கதிரும் ஆம். 'பகல் கெழு செல்வன்' என்பதற்குப் பதிலாகப் 'பகல் செய் செல்வன்' எனப் பாடபேதம் கொள்வர் சிலர். புலம்பு – தனிமைத் துயரம். புன்கண் – புன்கண்மை; வருத்தும் தன்மை. நகர் – மாளிகை. ஊன்நெய் – ஊனாகிய நெய். நீல் நிறப்பரப்பு – நீலநிறத்தையுடைய கடற்பரப்பு. 'ஒண்சுடர்' என்பது, கரையோரத்தே, கடலில் மிதக்குமாறு, பாக்கத்தை அடையாளம் காணற்பொருட்டாக ஏற்றிவிடப் பெற்றுள்ள திமில் விளக்குகள் அல்லது மிதவை விளக்குகள் எனினும் ஆம். அன்றிப் பாக்கத்தே ஏற்றியுள்ள விளக்கு நிழல்களை அலைகள் அசைக்கும் என்பதும் ஆம். 'தெய்ய' அசை. பரிய – கிழிய. முன்பு – மிகுந்த வலிமை.

விளக்கம் : மாலையும் வந்து அடுத்து இருளும் வரப்போகின்றது; வலையறுத்துப் போன சுறாமீனைப் பற்றிக் கொணரக் கருதி எம்மவரும் கடலிடைச் சென்றுள்ளனர். அவர் வெற்றி வருகையை நோக்கிப் பாக்கத்தவரும் கரை சேர்பு கல்லென்னும் ஆரவாரத்தோடு கூடியுள்ளனர். எனவே, நீதான் எவ்விதப் பயமுமின்றி எம்மோடு இன்றிரவு தங்கிப் போவாயாக. இவள் மாலையை நோக்கி வருந்தும் பிரிவுத்துயரைத் தணிப்பாயாக என்கிறாள் தோழி. இதனால், தலைவி இரவிற்படும் துயரை நினைந்து, தலைவன் அவளை வரைந்து கோடற்கே முயல்பவன் ஆவான் என்பதாம். 'ஒண்சுடர் தயங்கு திரை உதைப்ப' என்பதுபோல், நம் உண்மைக் காதலுறவையும் குறிப்பான் உணர்ந்து அலவற் பெண்டிர் பழிதூற்றலும் நிகழும் என்றதுமாம்.

இனி, இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதற்கு, 'மணஞ் செய்து கொண்டால் அன்றித் தலைவியின் இல்லத்தே வைகுதல் நினக்கு இயலாதது ஆதலினாலும், வேட்டம் வாய்ப்பின் எமர் எந்நேரமும் திரும்புதல் கூடுமாதலானும், அவர் வந்து நின்னைக் காணின் ஏதம் உண்டாதல் கூடுமாதலானும், மாலை புன்கண் உடையதாகலின் தலைவியும் ஆற்றியிருப்பாள் அல்லள் ஆகலானும், இவை எல்லாம் இல்லாதிருக்க, இவளை நீதான் மணந்து கொள்ளலே இனிச் செய்வதற்கு உரியது எனக் குறிப்பால் உணர்த்தினள் என்றும் கொள்க.

மெய்ப்பாடு – பெருமிதம். பயன் – வரைவு கடாதல், இவை இரு துறைகட்குமே கொள்ளுக. ஒன்றை உணர்த்தும் போதும் குறிப்பால் நயமாக உணர்த்தும் நுட்பத்தை அறிந்து இன்புறுக.

'இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை' (அகம் 90), "கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை' (அகம் 340) எனப்பிற சான்றோரும் உரைத்தலைக் காண்க.

216. வேட்டோரே இனியர்!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : மருதம்.
துறை : தலைமகளுக்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகன் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, பாணற்காயினும் விறலிக்காயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது.

[(து.வி.) தலைமகனின் காதல் பரத்தையானவள், தனக்கு அவன்பாலுள்ள காதலின் மிகுதியை இவ்வாறு தலைவியின் பாங்கிலுள்ளோர் கேட்குமாறு எடுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. பரத்தையரினும் இத்தகைய உழுவலன்பு உடையாரும் பலர் இருந்தனர் என்பதற்குக் கோவலன்பால் மாதவிக்கு இருந்த அன்பினையும் கூறலாம்.]


துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்!
கண்ணுறு விழுமங் கைபோல் உதவி
நம்முறு துயரங் களையார் ஆயினும்
இன்னா தன்றே அவரில் ஊரே! 5
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்


குருகார் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும், 70
வேட்டோர் அல்லது பிறர்இன் னாரே!

தெளிவுரை : ஊடலுணர்த்திக் கூடுகின்ற கலவியோடே பொருந்தியவராக, என்பால் எய்திலராயினும், காண்டற்கு இனியராகிய தலைவரைக் கண்டு இன்புறுவதற்கான எல்லையிலேனும் வாழ்ந்திருத்தலும் அந்த அளவிலே எனக்கு இனிதாவதாகும். கண்ணில் விழுதலானவொரு சிறு துகளையும் கையானது அப்பொழுதுதானே சென்று விலக்குமாறு போல, நம்மிடத்தே பொருந்தியுள்ள அவரது பிரிவாலுண்டாகிய இக்காமநோயினை வந்து விலக்காராயினும், அவரில்லாத ஊரிலே யானிருப்பது என்பது மேலும் துன்பந்தருவதாகும் அல்லவோ! எரிபோலும் பூக்களைக் கொண்ட வேங்கை மரத்திடத்தே உறைவோனாகிய கடவுள் காத்தலைச் செய்கின்ற, குருகுகள் ஆரவாரிக்கின்ற வயலின் கண்ணே இருந்த கட்டுப்பரணாகிய அவ்விடத்திலே, அயலானாகிய ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை வருத்துதலினாலே, தன் ஒரு முலையையே அறுத்துக் கொண்டவளான திருமாவுண்ணியின் கதையினைக் கேட்டோரும், அத்தன்மையராகவே நம்மைக் கைவிட்டனராயினும், நம்மால் விரும்பப்பட்டோராகிய அவரையன்றிப், பிறர் யாவராயினும் நமக்கு இன்னாதாரே யாவர்!

சொற்பொருள் : துனி – புலவியாகிய துன்பம். துன்னல் – வந்து சேர்தல். காணுநர் – காண்டற்கு இனியராய தலைவர்–காண்புழி – காணற்கு ஏற்கும் ஓர் இடத்து. விழுமம் – துயரம். எரி – நெருப்பு. வேங்கைக் கடவுள் – வேங்கையிடத்தே உறையும் கடவுள்; வேங்கை மலரும் காலமே திருமண நிகழ்வை அறிவிக்குங் காலம் எனக் கொள்வது பண்டைய மரபு; அதுகாலை அதன்கண் தெய்வம் உறைவதாகக் கருதி அதனைப் பூசிப்பதும் வழக்கம்; இதுபற்றியே தன் உறவுக்கு அத்தெய்வத்தைச் சான்றாக்கிய திருமாவுண்ணி, பின்னர்க் காதலனாற் கைவிடப்பெற்ற போதிலே சான்றோர்பால் வழக்குரைத்த காலத்து, அத்தெய்வம் சான்று கூறாதிருக்கத் தன் ஒரு முலையை அறுத்தெறிந்து நன் கற்பை நிலைநாட்டியபோது, நெய்வமும் தோன்றிச் சான்று கூறிற்று என்பதும், அவனும் மனந்திருந்தி அவளை மணந்து வாழ்ந்தான் என்பதும் பழங்கதை. கேட்டோர் – கேட்டறிந்தவராகிய தலைவரும் பிறரும்.

விளக்கம் : தலைவன் தன் உறவை மறுப்பினும், தானும் திருமாவுண்ணி போலத் தங்கள் உறவை மெய்ப்பித்து அவனைப் பெறுவதற்கு மனவுறுதி கொண்டவள் என்கிறாள் அவள். 'வேங்கைக் கடவுள்' முருகனைக் குறிப்பதும் ஆகலாம். குறமகளிர் தம் காதலனோடு தம்மைச் சேர்ப்பிக்க முருகனை வேண்டிக் குரவையாடுதலைச் சிலம்பிற் கண்டு இன்புறுக. நாணுடைப் பெண்டிர் இவ்வாறு மன்றேறி வழக்குரைத்தல் வழக்கமில்லை. எனினும், அருகிய நிலையில் இவ்வாறுஞ் செய்து தம் கற்பறத்தைக் காத்தாரும் உளர் என்பதும் இதனால் அறியப்படும்.

கண் பரத்தையாகவும், விழுமம் அவள் கொண்ட பிரிவுத் துயராகவும், கைபோல் உதவுங் கடப்பாட்டினன் தலைவன் எனவும் உவமங்களைப் பொருத்திக் காண்க.

திருமாவுண்ணி கதை கண்ணகி கதையையே ஒத்திருத்தலைக் காண்க. 'குருகார் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற' என்பதற்கு, அதற்கேற்றவாறு கோவலனின் கொலை நிகழ்வைப் பொருத்திப் பொருள் கொள்ளுதல் பொருந்தும்.

'முலையறுத்தல்' என்பது நகில் குறைத்தல் என்பதும், அது காமவின்ப நுகர்ச்சிக்கண் இன்புறுத்திய உறுப்புக்களின் ஒன்றான முலைக்கண்களைத் தாம் பிரிவுத்துயரால் வெதும்பிய வெம்மையின் வேகத்தால் திருகி எறிதல் என்பதும் ஆய்வாளர் உறுதிப்படுத்திய செய்திகள்.

217. விடுவேன் தோழி!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தலை மகன் வாயில் மறுத்தது.
[(து.வி.) பரத்தமை உறவிலே பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியின் ஊடற்சினத்தைக் கண்டு, அவள் சினத்தைத் தணிவிக்குமாறு தோழியை விடுக்கின்றான். தோழியும் தலைவிபாற் சென்று, தலைவனை மீளவும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதுபோல அமைந்த உருக்கமான செய்யுள் இது.]


இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்டொறும் பொலியும் கதழ்வாய் வேழம்
இருங்கேழ் வயப்புலி வெரீஇ, அயலது
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்
பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் 5
நனிபெரிது இனியன் ஆயினும், துனிபடர்ந்து
ஊடல் உறுவேன், தோழி! நீடு
புலம்புசேண் அகல நீக்கிப்
புலவி உணர்த்தல் வண்மை யானே!

தெளிவுரை : தோழீ! புகழ் மிகுதிப் படும்படியாக வாழ்கின்றவருடைய செல்வமானது நாளுக்குநாள் சிறந்து விளங்கும். அதுபோலக் காணுந்தோறும் சிறந்து விளங்குகின்றதாயிருந்தது விரைந்த செலவினையுடைய வேழம் ஒன்று. அதுதான் கரு நிறத்தை உடையதும் வலிமை கொண்டதுமான புலினையக் கண்டு அஞ்சி, அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றது. அது காலை அயலிடத்தே உள்ளதாகிய கரிய அடிமரத்தையுடைய வேங்கை மரமானது எதிரிட, அதுதான் சிதைவுபடுமாறு முறித்துத்தள்ளித் தன் பெருஞ்சினத்தைத் தணித்துக் கொண்டது. இத்தகைய குன்றுகளுக்குரிய நாடன் நம் தலைவன். அவன் நமக்கு மிகப் பெரிதும் இனியவனே! ஆயினும், அவனோடு ஊடுதற்கு உரியவற்றையே மேற்கொண்டு அவன்பால் ஊடலைச் செய்வேன். நீளவும் நின்று நம்மை வருத்தும் தனிமைத் துயரமானது, சேய்மைக் கண்ணே அகன்று போமாறு செய்து, என் ஊடலைத் தெளிவிக்கக் கருதிச் சொல்லாலும் செயலாலும் என்பால் அன்புகாட்டும் வண்மையைச் செய்யும் அன்புடையவன் அவன் என்பதனைக் காண்பாயாக!

சொற்பொருள் : பொலியும்–சிறந்து விளங்கும். 'கதழ்வாய் வேழம்' கதழ்வரல் வேழம் என்பதும் பாடம். கதழ்வு–விரைவு. கேழ்– நிறம். வயம்–வலிமை. மறலி–மோதிச் சிதைத்து. துனி–வருத்தம். புலவி–வருத்தம். புலவி–ஊடல்.

விளக்கம் : கொடையால் புகழ்பெற்றோனின் செல்வமானது பலருக்கும் பயன்பட்டு வறுமை தீர்த்தலால் சிறந்து தோன்றுவதாயிற்று; அவ்வாறே விரைந்த செலவினதான அந்த வேழமும் அயலாக நின்ற வேங்கை மரத்தைப் புலியென மயங்கி, மோதிச் சிதைத்து ஊறுபடுத்தும்; அதனால் தன் சினம் தணியும் என்றது, பகையை ஒழித்தற்கு உரித்தான இடத்திலே ஒதுங்கிப்போய், பகையாகா ஒன்றைப் பகையென மயங்கி அதற்கு ஊறுசெய்யும் அறியாமையைத் தன் சினத்தால் மேற்கொண்டது என்றதாம். வேழத்தின் இச்செயல் நகையாடற்கே உரியது. இத்தகைய நாடன் எனவே, அவனும் அத்தகைய மயக்கத்தை உடையனாயினான் என்பதாம். இது, தனக்குரிய காதன் மனைவிக்குத் தலையளி செய்து இன்புறுத்தலை செய்யாது ஒதுங்கிப் பரத்தையின் அழகினாலே மயங்கினான்; அவளோடு இன்புற்று வாழ்தலை நாடி மனைவியை வருத்தமுறச் செய்த கொடுமையைக் குறித்துக் கூறியதாகலாம்.

பிரிவுத் துயராலே வருந்திய தலைவி, தலைவன் மீண்ட காலத்திலும், ஊடிச்சினந்து, அந்த வருத்தத்தை அவனும் சிறிது பொழுதேனும் அநுபவிப்பதைக் கண்டு ஆறுதல் கொள்ள நினைப்பாள் என்பதும், அதனாலே அவன் அவள் பால் இரந்தும் உறுதி கூறியும் சொல்லும் பணிவான சொற்களைக் கேட்டு மனம் மகிழ்வாள் என்பதும், அதன் பின்னர் அவன் அளிக்கும் கூடலிலேயும் திளைப்பாள் என்பதும் தலைவியரின் மனநிலையைக் குறித்துக் கூறப்படுவதாம்.

உள்ளுறை : களிற்றியானை புலிக்கு அஞ்சி ஒதுங்கி, வேங்கையைச் சிதைத்துத் தன் சினந்தணிவது போலத், தலைவனும், தலைவியின் சினத்தைக் கண்டு அஞ்சித் தலைவியின் தோழி மூலம் அவளை இசைவித்துத் தன் தாபத்தைப் போக்குதற்கு முயன்றான் என்பதாம். இந்த அச்சம் அவன் கொண்ட பரத்தைமை உறவென்னும் குற்றத்தால் அவன்பால் ஏற்பட்டது என்க.

'வெரீஇ' என்பதற்கு வெருவி ஓடச் செய்து எனப் பொருள் கொண்டு, புலி வெருவி ஓடியதனாலே சினந்தணியாதாய், அயலது வேங்கை மரத்தைச் சிதைத்தது எனவும் பொருள் கொள்வர். இதுவும் பொருத்தமாகலாம்.

218. தனியனாகக் கேட்பேனோ?

பாடியவர் : கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார்.
தினை : நெய்தல்.
துறை : வரைவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

[(து. வி.) களவு உறவிலே கூடிய காதலன் குறித்தபடி வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ளாததனாலே தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அது கண்டு ஆற்றாளாகிய தோழி, 'இன்னும் சில நாட்பொறுத்திரு' என்று கூறுகின்றாள். அதனைக் கேட்டதும், தலைவி தன் ஆற்றாமை தோன்ற அவருக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]


ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே,
எல்லியும் பூவீகொடியிற் புலம்படைந் தின்றே,
வாவலும் வயின்தொறும் பறக்கும், சேவலும்
நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்,
மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளிந்தோர் 5
கூறிய பருவங் கழிந்தன்று—பாறிய
பராரை வேம்பின் படுசினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்,
ஆனா நோயட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ. 10
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

தெளிவுரை : தோழி! ஞாயிறும் மேலைத் திசையிலே இறங்கித் தன் கதிர்களும் மழுக்கம் அடைந்ததாய் உள்ளது. அதனாலே, இரவுப்பொழுதும் பூவுதிர்ந்த கொடியினைப் போலத் தனித்துத் துயருரா நின்றது. வௌவால்களும் இடந்தோறும் பறந்து கொண்டிருக்கும். ஆந்தைச் சேவலும் தான் மகிழ்ச்சியினை மிகவும் பெற்றதாகி நகைக்குந்தோறும் தன் பெட்டையை அழையாநிற்கும். அழிவற்றதான காதலோடும் நெறிப்படப் பலவுங் கூறி என்னைத் தெளிவித்துப்போன காதலர் வரைந்து வருவதாகக் கூறிய பருவமும் மெல்ல மெல்லக் கழிந்து போகின்றது. இடையிடையே பட்டுப்போன பருத்த அடிமரத்தையுடைய வேம்பினது இலையுதிர்ந்த கிளையினிடத்தே தங்கிய குராஅலாகிய கூகையும் இரவெல்லாம் குழறா நிற்கும்; நீங்காத காமநோயானது வருத்துதலாலே வருந்தியிருக்கும்யானும், பருத்த அடியினையுடைய பனைமரத்தின் மடலிலே இருந்தபடி தன் துணையை விளித்துக் கூவும் அன்றிற் பறவையினது குரலையும் இன்னும் தனிமையளாக இருந்த படியே கேட்டிருப்பேனோ? எவ்வண்ணம் ஆற்றி இருப்பேன் என்பதாம்.

சொற்பொருள் : ஞாயிறு ஞான்று–ஞாயிறு சாய்ந்து. எல்லி–இரவுப் பொழுது. புலம்படைந்தது–பொலிவிழந்துவிட்டது. வயின்தொறும்–இடந்தோறும். 'சேவல்' என்றது ஆந்தைச் சேவலை. விளிக்கும்–கூவி அழைக்கும். மாயாக்காதல்–குன்றாத காதல். அதர்ப்பட–நெறிப்பட. பாறிய–பட்டுப்போன. பாருசினை–இலைகள் உதிர்ந்துபோன கிளை. குராஅல்–கபில நிறம். கூகை–பேராந்தை. ஆனா–அமையாத, நீங்காத. அன்றில்–அன்றிற் பறவை.

விளக்கம் : ஞாயிறு சாய்ந்து கதிர் மழுங்கினாற்போல யானும் ஒளியிழந்தேன்; எல்லியிற் பூவீழ் கொடியிற் புலம் படைந்தாற் போன்று யானும் புலம்படைந்தேன் என்கின்றாள். கூடியிருந்த காலத்து இனிதாயிருந்த மாலையும் இரவுப்பொழுதும் இதுகாலை மகிழ்வூட்டவில்லை என்பாள் இவ்வாறு கூறுகின்றாள்.

'ஆந்தைச் சேவல் இரைதேடப் போன தன் துணையை விரும்பிக் கூப்பிடும்' என்றாள், அத்தகைய அன்புதானும் தலைவனிடம் இலையாயிற்றென்று வருந்துகின்றாள். அதுவும் இன்புற்றிருத்தலையே நினையும் பொழுதில், அவன்தான் பிரிந்து உறைகின்றானே எனவும் நோகின்றனள்.

'மாயாக் காதலொடு அதற்படத் தெளிந்தோர்' இன்று அக்காதலையும் மறந்தனர் போலும் என்கின்றாள். பகற்போது பிறவாற்றான் ஒருவாறு தேறியிருக்கின்றமனம், இரவுப் போதில், அவனே நினைவாக நின்று வருந்தித் துயிலையும் கெடுத்து நோயும் செய்யும் என்பாள், 'கூகையும் இராஅ இசைக்கும்' என்கின்றாள். இனியும் தான் உயிரோடு ஆற்றியிருத்தல் தானும் இயலாது என்பாள் 'அன்றிற் குரலைத்தமியேன் கேட்குவென் கொல்லோ?' எனச் சொல்லி வேதனையுறுகின்றாள். இதனால் அவள் கொண்ட துயரத்தின் மிகுதியும் புலப்படும்.

மாலைப் பொழுதானது காமநோயினை முற்படவிட்டு வருதலால், அது வருவதற்கு ஏதுவாய் அமைந்த ஞாயிறு படுந்தன்மையைக் கூறினாள்; தனித்து உறையும் வாழ்விலே இரவுப்போது இன்பந் தராமையின் எல்லியும் புலம்பு அடைந்தது என்றாள். ஏனைப் புள்ளினந்தானும் புணர்ச்சி கருதித்தத்தம் துணையை விளிக்கும் குரலைக் கேட்பதனாலே, தன் துயரம் மிகுவதனையும் கூறிப் புலம்புகின்றாள்.

219. என்னதூஉம் புலவேன்!

பாடியவர் : தாயங்கண்ணனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

[(து.வி.) பொருளீட்டி வந்து நின்னை மணப்பேன் என்று உறுதி கூறிப்பிரிந்தானாகிய காதலன், தான் குறித்த பருவத்தில் வராது போயினதனால், அதுவரை ஆற்றியிருந்த தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதுகாலை, அவள் துயர்கண்டு பொறாதாளான தோழியானவள் தலைவனின் பாற் குறையாகச் சில கூற, அது கேட்டுத் தலைவி தன் காதலுறுதி புலப்படக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


கண்ணும் தோளும் தண்நறும் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய,
இன்னுயிர் பெரும்பிறி தாயினும், என்னதூஉம்
புலவேன் வாழி—தோழி!—சிறுகால்
அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடல் 5
பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர்
முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்கும்
கானலம் பெருந்துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே! 10

தெளிவுரை : தோழீ! நீயும் நெடிது வாழ்வாயாக! கண்களும் தோள்களும் தண்ணிய நறியகூந்தலும் தத்தம் உடைய பழைய அழகினை இழந்தன. என் மேனியிலும் பசலை பாய்ந்தது. இனிதான உயிரும் இறந்துபடுவதான எல்லைக்கண்ணே உள்ளது. ஆயினும், நம் சேர்ப்பனோடுயான் சிறிதேனும் புலத்தலைச் செய்யேன் என்று அறிவாயாக. சின்னஞ்சிறு கால்களை உடையவான ஞெண்டுகளோட பெயர்ந்து செல்லும் புலவு நாற்றத்தைக் கொண்ட அலைகளை நெருங்கியிருப்பது பெருங்கடல். அதனிடத்தே சென்று பெரிய பெரிய மீன்களை வேட்டையாடிக் கொள்ளும் தொழிலினர் நம் சிறுகுடிப் பரதவர்கள். அவர்கள் கடலிடை மீண்டு வருவார்க்கு அடையாளமாக இரவுப்பொழுதிலே ஏற்றி வைத்துள்ள மிக்க கதிர்களையுடைய ஒள்ளிய விளக்குகள் தானும், முதிராத இளஞாயிற்றினிது எதிராகத் தோன்றுவதோர் ஒளியைப் போலத் தோன்றா நிற்கும். இத்தகு கானற் சோலையையும் கடற்றுறையும் உடையோனாகிய நம் தலைவன், தானே தமியனாக வந்து என்னை முன்னர்க் கூடினோன் ஆதலினாலே, இனியும் அவனாகவே மீளவும் வருவான் எனும் நம்பிக்கையுடையேன். அதனால் அவன்பால் சினங்கொள்ளேன்!

சொற்பொருள் : 'பழநலம்' என்றது, அவனைக் கூடுதற்கு முன்பாக விளங்கிய கன்னிமைக்காலத்தின் அழகுநலத்தை. பசலை –தேமலாகிய படர் நோய், பெரும்பிறிது–சாக்காடு. அலவன்–ஞெண்டு. புலவு–புலால் நாற்றம். கனைகதிர்–மிக்க கதிர்கள். முதிரா ஞாயிறு. –இளஞாயிறு. எதிரொளி–எதிரான ஒளி; அன்றிக் கானற் சோலையிலே அதனால் உண்டாகும் எதிரொளியும் ஆம். 'கானலம் பெருந்துறை'–அழகிய கானற் சோலைகளையுடைய பெரிதான கடற்றுறை.

விளக்கம் : இதனாலே, தலைவிக்குத் தலைவனிடத்தேயுள்ள தளராத நம்பிக்கை தெளிவாகும். அவனது அன்பின் செறிவைக் களவிற்கூடி அநுபவித்துக் கண்டவளாதலின் 'அவன் தன்னை மறந்தான்; அதனாலேயே காலம் நீட்டித்தான்' என்று குறைகாணும் தலைவியின் சொற்களை இப்படி மறுத்துக் கூறுகின்றனள். 'தன் மனையறத்துக்கு வேண்டிய பொருளைத் தானே முயன்று தேடிவந்த பின்னரே, தன் காதலியை மணந்துகூடி இல்லறம் நாடத்தல் பண்டைத் தமிழ் மரபு. பெற்றோர் செல்வத்து இன்பநலம் துய்த்தலை எவரும் விரும்பார். 'ஆகவே, அம் முயற்சிகளுக்குத் தலைவன் பிரிதலைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் தலைவியரின் கோட்பாடு ஆகியிருந்தது. 'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்' (நற்.110) ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே' எனப் போதனார் காட்டும் பண்பே தமிழ் மகளிர் பண்டைப் பெரும் பண்பு ஆகும்.

இறைச்சிப் பொருள் : பரதவர் கங்குல் மாட்டிய விளக்குகளின் ஒளியானது இளங்கதிரின் செவ்வொளிபோல விளங்கும் என்றது. தலைவன் கூடிப் பிரியுங் காலத்தே 'நின்னைப் பிரியேன்' என்று கூறிய வாய்மையானது; அவன் மறந்து விட்ட இன்றும் என்னுளத்தே பசுமையாக நின்று என் உயிரைப் போகாதே தாங்கி நிற்கின்றது என்பதாம்.

இதனாலே விளங்கும் மெய்ப்பாடு அழுகை; பயன் அயாவுயிர்த்தல் என்பர்.

அகவாழ்விலே திளைக்கும் பண்டைக் கன்னியர் காளையர் எத்துணைச் செம்மையான நெறியிடத்தே நின்று, உறுதியோடு வாழ்வியலைக் கண்டனர் என்பதனை இச்செய்யுளால் அறியலாம்.

220. பெரிதும் சான்றோர் !

பாடியவர் : குண்டுகட் பாலியாதனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. (2) பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்தது. (3) தான் ஆற்றானாய்ச் சொல்லியது.

[(து-வி.) (1) தலைமகன் அடைந்த துயரத்தைப் போக்குமாறு தலைவியிடஞ் சொன்ன தோழி, அவளும் அதற்கு இசையாளாக, ஊரவரின் அறியாமையைக் குறித்துத் தலைவியும் கேட்டு மனம் மாறுமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. (2) தன் குறையைத் தோழிபால் உரைத்து நின்றானாகிய தலைவன், அவள் கேட்கும் எல்லையிலே பின்பக்கமாக ஒதுங்கி நின்று, தோழியின் சிறந்த நிலையை வியப்பான் போலக் கூறுவதாகவும் இது அமையும். (3) தோழிபால் குறையிரந்து நின்றவன், தான் தன் துயரத்தை ஆற்றானாகி, அவள் கேட்குமாறு கூறுவதாசுவும் கொள்ளலாம்.]


சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நீறீஇக்
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள்
பெரிதுஞ் சான்றோர் மன்ற—விசிபிணி 5
முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண்
'ஊரேம்' என்னுமிப் பேரேம் உறுநர்
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்
கயலேர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆக'லென்று எம்மொடு படலே! 10

தெளிவுரை : உணவு உண்ணாததாகிய நல்லதொரு குதிரையைப் பனைமடலாலே பண்ணிக் கொண்டோம். அதற்குச் சிறிய மணிகளையும் தொடராகக் கோத்தேம். பெரிய கச்சையையும் பூட்டி நிறுத்தினோம். குறியதாக முகிழ்த்துள்ள எருக்கின் பூவாலாகிய கண்ணியையும் சூட்டினேம். அதிலே ஏறினேமாய் அதனை ஈர்த்துக் கொண்டேமாய்த் தலைவியின் ஊரிலுள்ள தெருவிடத்தேயும் எம்குறையைக் கூறியபடி வந்தேம். அதுகாலை அத்தெருவின் கண்ணே எம்மைப் பின்தொடர்ந்து திரிகின்றவராகச் சிறிய குறிய பிள்ளைகளும் பலர் சூழ்ந்தனர். அவர்கள் தாம் பெரிதும் சான்றோர் ஆவர் காண்! நன்றாக இறுகக்கட்டிய குடமுழாவின்கண் ஓயாது அடித்தலாலே எழுகின்ற முழக்கத்தோடுங் கூடிய திருவிழாவையுடைய அவ்வூரினிடத்தே, 'யாமும் இவ்வூரினேம்' எனச் சொல்லியபடி, எம்மோடும் உரையாடியவர்தாம், பெரிதான மயக்கத்தை உடையவர்கள் ஆவர். தாந்தாம் உலகநடையினை அறிந்திருப்பாராயின், 'தேன்போலே இனிக்கின்ற பேச்சினையும் கெண்டைமீனைப்போல விளங்கும் மையுண்ட கண்களையும் உடையவளான நம் இளமடந்தைக்கு இத்தோழியர்தாம் அயலாம் தன்மை உடையராவர் என்று சொல்லுகின்றனரே! அவர் தாம் எத்துணை மயக்கம் கொண்டவர்!

சொற்பொருள் : தொடர்தல்–தொடர்ந்து கோத்துக்கட்டுதல்; தொங்கலாகக் கட்டுதலும் ஆம். கச்சு–பனைமடலின் கறுக்கால் புண்ணாகாமைப் பொருட்டு மேலாக இடப்படும், பெரிய துணியாலாகிய கச்சு. குறுமுகிழ்–எருக்கு–குறிதாக முகிழ்த்த எருக்கு; நன்கு இதழ் விரியாத பூ என்றபடி; குவிமுகிழ் எனவும் பாடம். 'நன்மா' என்றது, அதுதான் தனக்குத் தலைவியை இசைவித்தலாகிய நன்மையைச் செய்தலினால். முழவு–குடமுழவு என்னும் தோல் கருவி. ஏமுறல்–மயங்குதல். ஒப்புரவு–ஒத்தது அறிந்து அதற்கேற்ப நடக்கின்ற ஒழுகலாறு. மனத்திற்பட்டதைப் பட்டபடியே ஒளியாது உரைத்தல் சிறுபிள்ளைகளின் இயல்பாதலின் 'சான்றோர்' என்றனர்.

விளக்கம் : தலைவி இசையாதபோது, 'அச்சிறுவர் தாம் உண்மையே உரைத்தனர்; யாம் நினக்கு அயலோர் ஆகலே உண்மையாயிற்று' எனத் தோழி வருந்துவதாகவும், அதனால் தலைவி தெளிவடைந்து இசைவு கூறுவதாகவும் கொள்க. 'அயலோர் ஆகலே உண்மை' என அவர் கூறியது சான்றாண்மையான பேச்சுப் போலும்" எனத் தலைவன் கூறியதைக் கேட்ட தோழி, தலைவியின் முன்னுறவை உணர்ந்தாளாய்த் தன் நட்புரிமை தோன்ற அவனுக்கு உதவ முற்பட்டு அவளை அவனோடு கூட்டுவிப்பள் என்பதாம். 'முகம்' என்பது, தான் புகுதற்கு இடமாகிய நோக்கு; புகுதல்–அந் நோக்கிற்கு எதிரே தான் சென்று புகுதல். மெய்ப்பாடு, பிறன்கட்டோன்றிய இளிவரல்; பயன்– தலைமகளை முகம் புகுவித்தல்,

221. செல்க நின் தேர்!

பாடியவர் : இளவேட்டனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.

[(து-வி.) வினைமுடித்து மீள்வானாகிய தலைமகனின் உள்ளத்திலே அதுவரை ஒடுங்கி நின்ற இன்பவேட்கை மேலோங்குகின்றது. விரையச் சென்று தலைவியைக் காணற்கு விரும்புகிறவன், 'தேரை விரையச் செலுத்துமாறு பாகனிடம் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]


மணிகண் டன்ன மாநிறக் கருவிளை
ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணியப்
பொன்தொடர்ந் தன்ன தகைய நன்மலர்க்
கொன்றை ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க
வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின் 5
நீரணிப் பெருவழி நீளிடைப் போழச்
செல்க—பாக—நின் செய்வினை நெடுந்தேர்
விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள்
மின்னொளிர் அவிரிழை நன்னகர் விளங்க
நடைநாட் செய்த நவிலாச் சீறடிப் 80
பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி
'வந்தீக, எந்தை!' என்னும்
அந்தீம் கிளவி கேட்க நாமே!

தெளிவுரை : பாகனே! வருகின்ற விருந்தினை எதிரேற்று உபசரிக்க விருப்பங் கொண்டவள், பெருத்த தோள்களைக் கொண்டாளாகிய இளமை கொண்டவள், மின்னலைப்போல ஒளிசிதறும் விளங்கிய அணிகளைப் பூண்டவள், என் தலைவி, அவள்தான். எம் நல்ல மாளிகையானது விளக்கங்கொள்ளுமாறு, நாட்காலையிலே, நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும், பூப்போன்ற கண்களையும் உடையோனாகிய எம்புதல்வன் தூங்கும் இடத்தருகே சென்று, அவனருகே குனிந்து, 'எந்தாய் வருவாயாக' என்று அழைத்தபடியே அவனைத் துயிலெழச் செய்வாள். அந்த இனிதான பேச்சை நாமும் கேட்டு மகிழவேண்டும். ஆதலினாலே,

நீலமணியைக் கண்டாற்போல்க் கருநிறத்தோடு தோன்றும் கருங்காக்கணங் கொடியின் பூக்கள், ஒள்ளிய பூக்களைக் கொண்ட தோன்றியோடும் கலந்து தண்ணிய புதல்தோறும் அழகு செய்தபடி இருக்கின்றன. பொற்காசினைத் தொடராகக் கோத்துவைத்தாற்போல விளங்கும் நல்ல மலர்களைக் கொண்ட சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள், அதன் கிளைதோறும் தொங்கியபடி இருக்கின்றன. இவற்றாலே புதியதொரு மணத்தினைப் பரப்பினாற் போலப் பொலிவோடு விளங்குகின்றது, சிவந்த தரையையுடையதான இம்முல்லை நிலம். நீராலே அழகு பெற்றிருக்கும் இதன் பெருவழியின் நெடிதான இடமெங்கணும் கவடுபிளக்குமாறு, நின் செய்வினைத் திறனைக்கொண்ட நெடிய தேரானது விரையச் செல்லுவதாகுக!

சொற்பொருள் : மாநிறம்–கருநிறம். கருவிளை–கருங்காக்கணம். ஒண்பூ–ஒளிசுடரும் புதுப்பூக்கள். புதல்–புதர்; சிறுதூறு. 'பொன்' என்றது பொற்காசுகளை. தூங்க–தொங்க. வம்பு–புதுமணம். நீரணிப் பெருவழி–நீரால் அழகு பெற்றுள்ள பெரிய வழி; நீரால் அழகுபெற்றது கார்ப் பெயலால். செய்வினை நெடுந்தேர்–செயல்படும் வினையை முடித்து வரும் வரைக்கும் ஊறின்றிச் செலுத்துவதற்கு ஏற்புடையதாகப் பண்ணப்பட்ட நெடியதேர். குறுமகள்–இளையோள். 'நடை நாள் செய்த' என்பதற்கு, நடத்தலை அன்றுதானே தொடங்கிய எனினும் ஆம். நவிலா–தரையிற் பொருந்தாத; நடை பயன்றறியாத தன்மை. ஒல்கல்–இடைநுடங்க அசைந்து நிற்றல்.

விளக்கம் : புதல்வன் இதுகாறும் நடைபயிலத் தொடங்கியிருப்பான் என்று எண்ணமிடும் தலைவன், அந்த இனிய காட்சியின் நினைவிலே திளைக்கின்றான். அவன் அயர்ந்து உறங்கியிருப்ப, அவனருகே சென்று குனிந்தபடி. பாசத்தின் பெருக்கோடு அவனை எழுப்பவாளாய், 'எந்தாய் வந்தீக' என அழைக்கின்ற தலைவியின் தாய்மைச் செயல் அவன் மனத்திரையிலே எழுந்து நிறைகின்றது. அதனைப் பாகனிடம் உரைத்துத் தேரை விரையச் செலுத்துமாறு கூறுகின்றான் தலைவன்.

அதுகாறும் கோடையாலே வெதும்பிக் கிடந்த செம்புலப்புறவு, கார்காலத்து வருகையாலே பொலிவு பெற்றும், புதர்கள் தோறும் தோன்றிப் பூக்களும் கருவிளையின் பூக்களும் அழகு செய்யவும், கோடுதோறும் கொன்றைச் சரங்கள் தூங்கவுமாக விளங்கிய செவ்வியைக் கூறினான். அவ்வாறே, பிரிவுத் துயராலே அதுகாறும் வாட்டமுற்றிருந்தாளான தலைவியும், இனிப்புதுப் பொலிவு பெறுவாள் என்னும் உட்கருத்தும் தோன்றுதல் கண்டு இன்புறுக. மெய்ப்பாடு, உவகை; பயன்–பாகன் தேரினை விரைவாகச் செலுத்துதல்.

222. ஊக்கிச் செலவுடன் விடுகோ!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்பறமாகச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

[(து.வி.) தலைவனின் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணங்கொள்ளுதலிலே செலுத்த விரும்புகின்றாள் தோழி. தலைவியிடம் கூறுவாள்போலத், தலைவனும், ஒருசார் நிற்பவன் கேட்டுத் தெளியுமாறு, தலைவியைப் பெற்றோர் ற்செறித்தல் நேரும் என்று குறிப்பாகக் கூறுகின்றாள்.]


கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை
வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென
விசும்பாடு ஆய்மயில் கடுப்ப, யான் இன்று
பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச் 5
செலவுடன் விடுகோ, தோழி—பலவுடன்
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது
பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர்
சேணெடுங் குன்றங் காணிய நீயே! 10

தெளிவுரை : தோழீ! பலாமரங்களுடனே மலைவாழையும் உயரமாக வளர்ந்து செறிந்துள்ளதும், உயரமிக வளர்ந்த சுரபுன்னை மரங்களும் உடையதுமான பக்கமலைச் சாரலிலே துயிலுகின்ற, பிடியானையின் பக்கத்திலே மேகங் கவிந்து அதை மறைத்தது. அதனால், அதனைக் காணாதுபோன அதன் பெருங்களிறானது, அதனை அழைத்ததாகப் பிளிறாநிற்கும். இத்தகைய சோலைகளைக் கொண்டதான, நின் தலைவருக்கு உரியதும், தொலைவிடத்தே இருப்பதுமாகிய நெடிய குன்றத்தினை நீயும் காணும் பொருட்டாக—

கரிய அடியையுடைய வேங்கையது சிவந்த பூக்களோடுங் கூடியதான வளைந்த கிளையினிடத்தே வடுக்கொள்ளுமாறு பிணித்திருக்கின்ற, முறுக்கேறிய புரிகளோடுங் கூடிய கயிற்றினைச் சார்ந்ததும், கைவினைத் திறனாலே புனையப்பெற்ற சிறிய முடக்கத்தை உடையதுமான ஊசலை இழுத்து, மெல்ல நின்னை அதன்பால் ஏற்றிவைத்து, நீதான் விசும்பிடத்தே ஆடிப்பறக்கின்ற அழகான மயிலைப் போல எழிலுடன் தோன்றுமாறு, யானும், இன்று, நின் அல்குலிடத்தே கிடக்கின்ற பசும்பொன் மணிகள் கோத்துள்ள மேகலையைப் பற்றினேனாய், மேலே செல்ல உயர்த்தி, உடனே பின்னே செல்லுமாறும் விடலாமோ? இதனைச் சொல்வாய் காண்!

சொற்பொருள் : செவ்வீ–சிவந்த மலர். வாங்கு சினை–தரைப்பக்கமாக வளைந்து தாழ்ந்துள்ள கிளை. விடுபுரி முரற்சி–புரிகள் முறுக்குற்று அமைந்த கயிறு. 'கைபுனை சிறுநெறி' என்றது, அக்கயிற்றிடத்தே அமர்ந்து ஆடுதற்கு ஏற்றபடியாகக் கையால் அழகிதாகப் புனையப்பெற்ற சிறியவளைவான பகுதி. பசுங்காழ்–பசிய மணிகள்; இதனை மேகலை என்னும் அணியாகக் கொள்க. ஊக்கி-மேலே உயரத் தூக்கி. பலவுடன்–பலாமரங்களுடன். 'பலவுடன் வாழை ஓங்கிய' என்பதற்குப் பலவாகச் செறிந்துள்ள வாழைகள் உயரமாக வளர்ந்துள்ள என்றும் உரைப்பர்.

விளக்கம் : அவர்களது சிறுகுடியின்கண், அவர்களது இல்லின் அணித்தாகவுள்ள சோலையிடத்தே இருந்து அவள் இவ்வாறு சொல்லுகின்றாள் எனக் கொள்க. 'அவனைத்தான் யாம் வரக்காண்கிலேம். இற்செறிப்புற்ற யாம் இனிமேல் அவனைக் கூடித் துயர்தெளிதல் என்பது அரிதாகலின், அவன் குன்றத்தைக் கண்டேனும் தேறியிருப்பேம்' என்பது இது. இதனைக் கேட்டலும் தலைவன், இனிக் களவுறவு வாய்த்தற்கு இயலாமையினையும், தன்னைப் பிரிந்துறைதல் ஆற்றாளாய்த் தலைவி கொள்ளும் நோயின் மிகுதியையும் அறிந்தானாய், அவளை வேட்டுவந்து முறைப்படி மணத்தற்கு மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம்.

'இனிக் களவு நிகழ்தல் கூடாமையின், தலைவன் வரைந்து எய்துதலே செய்யக்கூடியது' என உணர்த்தலின், இது வரைவு கடாயது ஆயிற்று. மெய்ப்பாடு; பெருமிதம்; பயன்; வரைவு கடாதல். உயர்ந்தும் தாழ்ந்தும் ஊசலாடும் தலைவியை 'விசும்பாடு ஆய்மயில் கடுப்ப' என வியந்து கூறியது, தலைவன் தலையளி செய்யானாயின் அந்த அழகு நலம் அழியும் என அவனுக்கு அறிவித்தற்கு ஆகும்.

உள்ளுறை : 'மேகம் மறைத்தலாலே பிடியைக் காணாது வருந்திய களிறு பிளிறும்' என்றது, தலைவனும் நின்னைக் காணாதே நின்போலவே துயருற்றிருப்பன் என உள்ளுறுத்துக் கூறித்தலைவியைத் தேற்றியதாம்; அவனை வரைந்து வருதற்குத் தூண்டியதும் ஆம்.

223. எல்லி வம்மோ புலம்ப!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது.

[(து-வி.) பகற்குறி வந்து மீளும் தலைவனிடம், "எங்கள் ஐயன்மார் அறியின் இவளை இல்லத்தே காவற்படுத்துவர்; இனி எம் இல்லின் அணிமைக்கு இரவுப்போதில் வருக" எனக் கூறுவாள்போல, அதுவும் வாயாமை உணர்த்துதன் மூலம், வரைந்து வருக என்று வலியுறுத்துகின்றாள் தோழி.]


இவள்தன்,
காமம் பெருமையிற் காலையென் னாள்நின்
அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப்
பகலும் வருதி பல்பூங் கானல்
இந்நீ ராகலோ இனிதால்! எனின், இவள்
அலரின் அருங்கடிப் படுகுவள்; அதனால், 5
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப—
சுறவினங் கலித்த நிறையிரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்திவ் அம்பல் ஊரே!

தெளிவுரை : மென்புலமாகிய நெய்தல் நிலத்தின் தலைவனே! இவள் நின்பாற் கொண்டுள்ள காமத்து மிகுதியினாலே, இதுதான் காலைப்பொழுதாயிற்றே எனவும் கருதாளாயினாள்! நீயுந்தான் இவள்பாற் கொண்டுள்ள நின் அன்பு பெரிதாக உடைமையினாலே, இவளுக்குத் தலையளி செய்தலை விரும்பினையாய்ப் பகற்பொழுதின் கண்ணும் வருகின்றனை! பலவாகிய பூக்களைக் கொண்டதான இக்கானற் சோலையிலே நீவிர் இருவீரும் இத்தன்மையராகினராய்க் கூடியிருத்தல் எமக்கும் இனிதாகுவதே! எனினும், அயலவர் உரைக்கின்ற பழிச்சொற்களே காரணமாக, இவளும் வெளிவருதற்கரிதான காவலுக்கு இனி உட்படுபவள் ஆவாள்காண்! அதனாலே, நீதான் இனிமேல் இரவுப் போதிலேயே வருவாயாக. ஆயின், சுறாமீன்களின் கூட்டமானது மிகுதியாயுள்ள நிறைந்த கடற்பரப்பினிடத்தும், அதனைச் சார்ந்துள்ள துறையினிடத்தும், உறங்காத கண்ணினராய்க் கூடியிருக்கும் கொடிய பெண்களையும், அம்பல் உரைத்தலே இயல்பாகவுடைய இவ்வூரும் உடைத்தாயிருப்பது, அதனையும் கருதுவாயாக!

சொற்பொருள் : பெருமையின்–பெரிதாக உடைமையாலே. காலை – காலைப்பொழுது. அன்பு – காதலன்பு. அளித்தல்–அருளுதல்; தலையளி செய்தல், 'கானல்' என்றது, கானற் சோலையினை. நீர்–தன்மை. அலர்–பழிச்சொல். கடி–காவல். எல்லி–இரவு. கலித்த–பெருகியுள்ள. அம்பல் ஊர்–பழிகூறும் இயல்பினராகிய ஊரவர்.

விளக்கம் : 'வருதி' என்றது வந்து திரும்புகின்றவனை நோக்கிச் சொல்லியது. இரவுக்குறி நேர்வாள்போல, 'எல்லி வம்மோ' என்றனள். அதுதான் இயலாமை கூறுவாள். கடற்பரப்பு சுறவினம் கலித்தது; ஆகலின் நினக்கு ஏதமாகுமென யாம் கவலையடைவோம் எனவும், துறையினும் துஞ்சாக் கண்ணரான பெண்டிரை இவ்வூர் உடையது ஆதலின், அலர் மேலும் பெரிதாவதற்கு அஞ்சுவோம் எனவும் குறிப்பாக உணர்த்துகின்றாள். இனிச் செயத்தக்கது இவளை நீதான் வரைந்துவந்து மணந்து கொள்ளுதலே என்பதனை இவ்வாறு உணர்த்தினள். இருவருமே ஒத்த காதலன்பை உடையவர் என்பதனைக் கூறினாள், பிரிவு நீட்டிப்பின் தலைவி ஆற்றியிராளாய் அலமருவாள் என்பதனையும் புலப்படுத்தினாள். மெய்ப்பாடு, பெருமிதம்; பயன் வரைவுகடாதல்.

இறைச்சி : சுறாமீன் இருக்கின்ற கடலினது துறையிடத்தே துஞ்சாத கண்ணை உடையவரான மாதரை இவ்வூர் உடையது என்றது, மனையிடத்தே தலைவியிருக்கின்ற துஞ்சாக் கண்ணினளாகக் காவலிருக்கும் அன்னையையும், புறத்தே வலியுடையராய்க் காத்திருக்கும் ஐயன்மாரையும் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்தியதாம்.

224. இன்ப வேனிலும் வந்தது!

பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ,
திணை : பாலை.
துறை : தோழியாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள், பெயர்த்துஞ் சொற்கடாவப்பட்டு, அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியாராகாரோ?' என்று சொல்லியது.

[(து-வி.) தலைவன் பிரிவைத் தோழி தலைவிபாற் சென்று கூறுகின்றாள். அவன் பிரிந்தது அறிந்த பின்னரும், அவன் பிரிவைத் தாங்கமாட்டாளாய்த் துயரங்கொள்ளும் தலைவி, தோழியிடத்தே கூறி நொந்து கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலைப்
பின்பனி அமையம் வருமென முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவரும் பினவே
புணர்ந்தீர் புணர்மி னோவென இணர்மிசைச்
செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 5
இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனியெவன் மொழிகோ யானே—பயன்றக்
கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி
வினைமூசு கவலை விலங்கிய 10
வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே ?

தெளிவுரை : தோழீ! நம் தலைவர்தானும் நம்மிடத்தே அன்புடையவர், மிகவும் பெரியவர்! அதன் மேலும், பின் பனிக் காலமானது அடுத்துவரும் என்பது குறித்ததாய், முன்பனிக் காலத்தே தளிர்களை முற்படற் தோற்றுவித்தபடி அரும்புகளைக் குராமரங்களும் கொள்ளா நின்றன. "தலைவனும் தலைவியுமாகி ஒன்று கூடினீர்! பிரியாதே கூடியிருந்து இன்புறுவீராக' என்று கூறுவனபோல, மாமரத்தின் பூங்கொத்துக்களைத் தாங்கியுள்ள கொம்புகளிலே இருந்தபடி, சிவந்த கண்களையுடையவான கருங்குயில்கள் எதிர்எதிர் ஒன்றோடொன்று மாற்றி மாற்றிக் கூவியபடியே இருக்கின்றன; இத்தகு இன்பந்தரும் இளவேனிலும் வந்தது; ஆதலினாலே நம்மிடத்தேயிருந்தும் பிரியமாட்டோம் என்று நம்மைத் தெளிவித்தோரும் அவர். இப்போதோ,

பயன் அற்றுப் போனதாய்ச் செவ்வியழிந்து காய்ந்து கிடக்கின்ற பல பெரிய நெடிய வழியிடத்தே, வில்லேந்திய ஆறலைகள்வர்கள் மொய்த்துச் செவ்வி நோக்கியிருக்கும்படியான கவர்த்த வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும் வெண்மை கொண்ட பகைவரூர்களையும், கடத்தற்கரியதான சுரத்தினையும் கடத்துபோகக் கருதியவரான அவருக்கு, யான் இனியாது சொல்ல மாட்டுவேனோ?

சொற்பொருள் : பெரியர் – பெரிதும் பண்புடையவர். கொழுந்து–துளிர்கள். அரும்பு–பூவரும்பு. இணர்–பூங்கொத்து. இருங்குயில்–கருங்குயில். எதிர்குரல் பயிற்றல்–ஒன்று மாற்றி மற்றொன்றாகத் தொடர்ந்து கூவுதல். தெளித்தோர்–தெளிவு கொள்ளச் செய்தோர். தெளித்தோர் தேஎத்து–தெளித்தோரிடத்து. பயன்–பசுமையும் வளனுமாகிய பயன்; 'கயன்' எனவும் பாடம்; கயன்–குளம். கண்ணழிதல்–இடத்தின் செவ்வி கெட்டுப் போதல். கவலை–கவர்த்த வழிகள். விலங்கிய–குறுக்கிட்ட. 'வெம்முனை' என்றது முனையிடத்துள்ள வெம்மைமிக்க பகைவர் ஊர்களை.

விளக்கம் : அன்பற்றாரும் பண்பற்றாரும் பிரியக் கருதினால் யாமும் பொறுத்திருப்போம். அன்புடையரும், பெரியரும், 'காலமல்லாக் காலத்தே பிரிவேனோ' எனக் கவலைகொண்ட என்னை முன்பு தெளிவித்தோருமாகிய அவரே பிரிந்து போயினரே! இனி அவரைப்பற்றி யாது கூறுவது காண்?

இன்பத்தை விட்டுக் கொடிய வெம்மையான நெறியையே நாடியதனால், அவர் மனமும் அவ்வாறு கொடியதாயிற்றுப் போலும் என்று நினைத்து வருந்துகின்றாள்.

'அன்பர்! பெரியர்!' என்றது, அன்பும் மறந்தார், சொற்பிழைத்துப் பெருமையும் மறந்தார் என்று அசதியாடிச் சொல்லியதாம். இதனால், தலைவி அயா வுயிர்த்து ஆற்றியிருப்பாள் என்பதும் உணரப்படும்.

225. இரந்தாரும் உள்ளாரோ?

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) வன்புறை எதிரழிந்தது; (2) பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி.) (1) பிரிவாலே வருந்தி நலனழியும் தலைவியைத் தெளிவிக்க நினைத்த தோழி, அவள்பாற் சென்று, 'அவர் இன்றே வருவார்; வருந்தாதே' என்று வலியுறுத்திக் கூறுகின்றாள். தலைவன் வருகையைப் பல நாட்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து, அவன் வரவைக் காணாமல் வாடியிருக்கும் தலைவி, அதனைக் கேட்டதும், தன் பொங்கிவரும் துயரத்தை ஆற்ற மாட்டாதவளாகக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.

(2) காதற்பரத்தையானவள் தலைமகட்குப் பாங்காயினார் கேட்கும்படியாகத், 'தலைவன் தானே விரும்பி வந்து என்னைச் சேர்ந்திருப்பதனை நினைந்து, தலைவி உள்ளம் வருந்துவதனாலே யாது பயனோ?' எனச் செருக்கிக் கூறியதுமாம்.]


முருகுறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப்
பொருத யானை வெண்கோடு கடுப்ப
வாழை ஈன்ற வையேந்து கொழுமுகை
மெல்லியல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல், தோழி? திருந்திழைத்
தொய்யில் வனமுலை வரிவனப்பு இழப்பப்
பசந்தெழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நாரின் மார்பே!

தெளிவுரை : தோழீ! திருத்தமாகச் செய்யப் பெற்ற அணிகலனை அணிந்தவும், தொய்யிற் குழம்பாலே எழுதப் பெற்ற அழகினைக் கொண்டவுமான வனப்புடைய முலைகளது இரேகையின் அழகெல்லாம் இழந்துபோகும்படியாகப் பசலை நோயானது பாய்வதனாலே உண்டாகின்ற, பிரிவுத்துயராகிய வருத்தம் எல்லாம் நீங்குவதற்குத் தன்னைக் காதலித்தோர்க்கு உதவியாக அமையாத, அன்பற்ற மார்பினை உடையவன், நம் காதலன்!

முருகவேளைப் போன்ற வலிமையோடு, கடுமையான சினத்தை மிகுத்துக் கொண்டு போரிட்ட யானையினது குருதிக் கறைபடிந்த வெண்மையான கொம்புகளைப்போல, வாழையினது அப்பொழுதுதானே ஈன்ற கூர்மை பொருந்திய கொழுத்த முகையானது, வெவ்விய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடியிட்டுக் கொண்டையாகப் போட்டாற்போல, அதன் பூவோடும் கூடியதாக அசைந்து கொண்டிருக்கும், பெரிய மலைகளுக்குரிய நாடனாகிய அவனை, அதுகுறித்து இரந்து வேண்டினாரும் உளரோ, காண்!

சொற்பொருள் : முருகு – முருகப்பெருமான். முன்பு–வலிமை. சினம் செருக்கல்–சினத்தை மிகுத்துக்கொள்ளல்; சினத்தால் செருக்குறுதல். 'பொருத யானை வெண்கோடு' எனவே, அதன்மேல் படிந்துள்ள குருதிக்கறையும் பெற்றனம். வை–கூர்மை. முகை–மொட்டு. வெண்கோடு தாறுவிடுதலுக்கும், ஓதி பூவுக்கும் உவமை. துயல்வரல்–அசைதல். வரி – இரேகைகள். பருவரல் – பிரிவுத்துயரம். நார்–அன்பு.

விளக்கம் : 'தானே வந்து தலையளி செய்தவன், இன்று நாம் இவ்வாறு நலனழிந்து வாடியிருக்கும்போது, அருளற்றவனாய் நம்மை மறந்தானே?' என்பவள், 'இரந்தோர் உளர்கொல்?' என்கின்றாள். உதவாத தன்மையை நினைவாள் 'நாரில் மார்பு' என்கின்றனள். நார்–அன்பு.

"விரும்பினார்க்கு உதவாத அன்பற்ற அவன் மார்பினை இங்கு விரும்பினாரும் எவரேனும் உளரோ? அவன் பலர் மாட்டும் துய்க்கச் செல்லும் தன் பரத்தைமை இயல்பினாலே தூண்டப் பெற்று என்னிடத்தும் வந்தனன். இதுகொண்டு தலைவியும் என்னை நோவது எதன்பொருட்டோ?" எனப்பரத்தை கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்திப் பொருள் கொள்ளுக.

'வாழை ஈன்ற கொழுமுகையானது, பகையைக் கொன்று குருதிக்கறை படிந்து விளங்கும் யானைத் தந்தம் போல விளங்கும் மலைநாடன்' என்றனள். இதுதான், அவன் அன்புடையான் போலவே தோன்றினாலும், உள்ளத்தே பெரிதும் கொடுமை செய்யும் இயல்பினைக் கொண்டவனாகவும் இருக்கின்றான் எனக் குறிப்பால் கூறியதும் ஆகலாம்,

'தொய்யில்' என்பது, கொடிபோல மணச்சாந்தால் வரைவது; அதனை 'விரித்தல்' என்றும் கூறுவதுண்டு. இது பற்றியே அதனாலமையும் வனப்பை 'வரிவனப்பு' என்றனர்.

'பசந்தெழு பருவரல் கூறியது' தன்வயின் உரிமை கூறியதாம்; நயந்தோர்க்கு உதவாமை சொன்னது, அவன்வயிற் பரத்தைமை சுட்டியதாம் என்று அறிதல் வேண்டும்.

226. மரஞ்சாக மருந்து கொள்ளார்!

பாடியவர் : கணியன் பூங்குன்றார்; கணிபுன் குன்றனார் என்னும் பாடம்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

[(து-வி.) தலைமகனது பிரிவிடையே மெலிந்தாளாகிய தலைவியிடம் சென்று, 'இன்னுஞ் சிறிது காலம் வலிதிற் பொறையோடு இருப்பாயாக' என்கின்றாள் தோழி. அவளுக்குத் தன் வருத்தமிகுதியானது தோன்றத் தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்!
நாந்தம் உண்மையின் உளமே; அதனால்,
தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து 5
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர் மன்ற, நங்காதலர்! என்றும்
இன்ன நிலைமைத் தென்ப
என்னோரும் அறிய இவ் உலகத் தானே!

தெளிவுரை : அழகிய நுதலை உடையவளே! இவ்வுலகத்திலேயுள்ள மாந்தர்கள், மரம் பட்டுப் போகுமாறு, அதனிடத்தே உளதான மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்; உயர்வான தவத்தைச்செய்வாருங் கூடத், தம்முடைய உடலது வலிமையானது முற்றவும் கெட்டுப்போகும் எல்லைக்கண்ணும் தொடர்ந்து அத்தவத்தைச் செய்ய மாட்டார்கள். தம் நாட்டுக் குடி மக்களின் வளமெல்லாம் முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன்னை எல்லாம் நாடாளும் மன்னர்கள் முற்றவும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இவற்றை நீயும் அறிவாய் அல்லவோ! நாம் அவர் நம்பால் கொண்டுள்ள அன்பினது தகைமையினாலேயே உயிர் வாழ்கின்றோம் ஆதலினாலே,

"தாம் செய்யும் பொருளினது அளவும் அதனாலே அடையவிருக்கும் பயனும் பற்றித் தெளிவாக நம் காதலராகிய அவரும் அறியாராயினர்; பொருளீட்டுதல் ஒன்றே செயத்தக்கதாவது என்று தாம் அதன்பால் மனநெகிழ்ச்சி பெரிதும் உடையராயினர்; வெயிலானது நிலைகொள்ளுதலாலே நெடிதுபட்டுக், கோடையின் வெம்மையில் அழகிழந்த சுரத்தின் வழியும் பிற்பட்டு ஒழியுமாறு, அதனையும் கடந்து, அதற்கு அப்பாலுள்ள நாட்டிற்கும் அவர் சென்றனர். எக்காலத்திலும் ஆடவரது நிலைமை இப்படிப்பட்டதே என்பார்கள் உலகத்தார். இதனை இவ்வுலகினிடத்து யாவருமே அறிவர் கண்டாய். எனவே, யானும் அவர் மீண்டுவரும் வரையும் பொறுத்திருப்பேன் என்று அறிவாயாக."

சொற்பொருள் : 'மரம்' என்றது மருந்துப் பயனுள்ள மரத்தை. உரம்–உள்ள வலிமை. வளம்–வளமை. கசிந்து–நெகிழ்ந்து. என்றூழ்–வெயிலின் வெம்மை. ஒழிய–பிற்பட்டுப் போக; அஃதாவது அதனைக் கடந்து. என்னோரும்–எல்லாரும்.

விளக்கம் : "பொருள் ஈட்டி வருவது இன்பநுகர்வின் பொருட்டாகவே அன்றோ! ஆயின், அதற்கு இன்றியமையாதேமாகிய யாம், அவர் பிரிவாலே நலிவுற்று அழிந்தபின் அதுதான் வாய்ப்பதாகுமோ? என்னை இவ்வாறு நலியச் செய்துட்டு எந்த இன்ப நுகர்ச்சியை விரும்பிப் பொருளீட்டச் சென்றனரோ, நம் காதலர்?" என்று உவமைகளால் தன் நிலையையும், தன்னைப் பிரிந்த தலைவனின் தன்மையையும் தலைவி விளக்குகின்றாள்.

பின்னும் மருந்து கொள்ளக் கருதி, மருந்து மரத்தை மாந்தர் முற்றவும் சிதைத்துக் கொள்ளார்; வலிமை பெற்று மீளவும் உயர்தவத்தைத் தொடரக் கருதியே வலிமை இழந்தபோது அதனைக் கைவிடுவர்; மீண்டும் வரிவாங்கும் பயனைப் பெறக்கருதியே அரசரும் தமக்குரிய இறையை அளவோடு பெறுவர்; இதுதான் உலக இயல்பு. தமக்கு நிலையாகப் பயன்படுவதான ஒன்றை எவருமே முற்றவும் அழித்தற்கு மனம் ஒப்பார். இருப்பவும், அவர், நம் காதலர், நம்மைப் பிரிந்து போய் இவ்வாறு வருத்தினரே என்று தலைவி நினைத்து மனம் நோகின்றாள்.

"இவ்வாறு உளம் நைந்தாளாயினும், உலகத்து ஆடவர் தன்மை இதுவென்று சான்றோர் கூறுவராதலின், அதனை உலகத்து எல்லோரும் அறிவர். ஆதலின், இதற்கு அவரை நோவதாலும் பயனில்லை; ஆற்றியிருத்தலே செயத்தக்கது" என்று முடிவிற்கூறித் தான் அமைதி கொள்ளவும் முயல்கின்றாள் என்று கொள்ளுக.

"வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என்பது குறுந்தொகை (135) இந்த நெறியைப் போற்றுவாள், 'நாம் தம் உண்மையின் உளமே' என்றாள். மெய்ப்பாடு, அழுகை; பயன், அயா வுயிர்த்தல்.

227. அருளே அலராகின்றது!

பாடியவர் : தேவனார்; பூதன் தேவனார் என்றும் பாடம்
திணை : நெய்தல்.
துறை : வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.

[(து-வி.) தலைவியை மணஞ்செய்து கொள்ளுதலிலே மனத்தைச் செலுத்தாது, களவுப் புணர்ச்சியிலேயே மனங்கொண்டவனாக ஒழுகிவரும் தலைவனிடம், தோழி தலைவியின் நிலையை எடுத்துக் கூறி, அவளை வரைந்துவந்து மணந்து கொள்ளுமாறு தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.]


அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே!
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த
பின்னேர் ஓதியென் தோழிக்கு அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர் 5
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள்ளொலித்து ஓவாத்
தேர்வழங்கு தெருவின் அன்ன
கௌவையா கின்றது ஐயநின் அருளே!

தெளிவுரை : ஐயனே! புன்னை மரங்கள் செறிந்துள்ள அழகிய கானற் சோலையிடத்தே, நீ குறித்தபடியே பல காலத்தும் வந்து, நின்னையும் இன்புறுத்தியவள், பின்னலிட்ட அழகிய கூந்தலையுடையாளான என் தோழி! அவளுக்கு, ஐயோ! ஒலிக்கின்ற மணியையுடைய யானையினையும், பசும்பொன்னாலாகிய பூண்களையும் உடையவர் சோழர். அவருக்கு உரித்தானது, கொடிகள் அசைந்தாடியபடி விளங்கும் தெருக்களைக் கொண்டதான ஆர்க்காடு என்னும் பேரூர். அவ்வூரிடத்தே, கஇளையுடைய தான குடங்களிலே வண்டினம் மொய்த்து நீங்காதபடியே இருக்கும். இடையறாது தேர்கள் செல்லுகின்ற அவ்வூர்த் தெருவின்கண் விளங்கும் பூசலைப்போல விளங்குகின்றது, நின் அருளாலே என் தோழிக்கு இவ்வூர்த் தெருவின்கண் எழுந்திருக்கும் அலர் உரைகளின் ஆரவாரம். 'அறிவுடையோர் என்பவர் எல்லாரும் அறநெறியிலே நிற்பார் அல்லர்’ என்று பலரும் கூறுவர். அதுதான் நின்னதும் ஆயின், அவளது சிறந்ததான இனிய உயிர்தான் இறந்துபட்டதன் பின்னரும், இப்பழிச்சொற்கள் அவள் குடிக்கும் மிகவும் துன்பம் தருவதாகிய தன்மையது என்றேனும் அறிவாயாக. 'அவள் இறந்து படாவாறும், அலர் நிற்குமாறும் விரைந்து வந்து வரைந்து மணந்து வாழ்விப்பாயாக!

சொற்பொருள் : அறிந்தோர் – அறிதற்குரிய அறநெறிகளின் கூறுபாடுகளை அறிந்தோரான் நம் காதலர். அறனிலர் – அறன் தழுவிய நெறியின் கண்ணே நிற்பாரல்லர்; களவின்கண் கூடிய தலைவியை முறைப்படி வரைந்து கொள்ளலே அறத்தொடு பட்டது; அதனை மறந்தமையின் அறனிலர் என்றனள் போலும். 'இன்னுயிர் கழியினும் இன்னாதே' என்றது, அவள் பிறந்த குடியிடத்தே உள்ளார்க்கு நீங்காத பழியாகி வருத்தந் தருதலினால். புணர்குறி – சேர்தற்கு என்று குறித்த குறியிடம். படுமணி – ஒலிக்கும் மணி. தடவு–கள்சாடி ; அல்லது கட்குடம். 'புள்' என்றது வண்டினை.

விளக்கம் : ஆர்க்காட்டுத் தெருவிலே, கட்குடிப்பவர் எப்போதும் கூடியிருத்தலாலும், தேர்களின் செலவு மிகுந்திருத்தலாலும் உளதாகும் ஆரவாரத்தைப் போல, உங்கள் களவுறவைப் பற்றிய பழிச்சொற்களைப் பற்றிய பூசலும் நீங்காது மிகுவதாயிற்று என்பதாம். 'ஆர்க்காடு' சோழர் பேரூர்களுள் ஒன்று என்பது இதனுள் கூறப்படுகின்றது. தொண்டை நாட்டு ஆர்க்காட்டிலும், பாண்டி நாட்டு ஆர்க்காட்டிலும் வேறுபடுத்திக் காட்டுதற் பொருட்டு இதனைச் 'சோழர் ஆர்க்காடு' என்றனர். இது காவிரிக்குத் தென்கரையில் உள்ளதென்பர் ஔவை அவர்கள். இதனைக் கேட்டதும் தலைமகன் மனங்கலங்கியவனாகத் தலைவியை வேட்டு வருதலை உளங்கொள்வான் என்பது இதனால் ஏற்படும் பயன் ஆகும்.

'அறிந்தோர் அறனிலர் என்றலின், சிறந்த இன்னுயிர் கழியினும்' என்பதற்கு, 'உங்கள் களவு ஒழுக்கத்தை அறிந்தவர் நின்னை அறனில்லாதான் எனப் பழித்தலின், அதுபொறாதே அவள் இன்னுயிர் கழிதலும் கூடும்' எனத் தலைவியின் காதல் மேம்பாட்டைக் கூறியதும் ஆம். 'நனி இன்னாதே' என்பதற்கு, அப்படி அவள் இறப்பின் அப்பழிதானும் நின்னைச் சூழும் என்று எச்சரித்த தென்றும் உட்பொருள் கருதலாம்.

228. நமக்கு அருள மாட்டானோ?

பாடியவர் : முடத்திருமாறனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

[(து-வி.) சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைமகன் கேட்டுத், தலைவியை விரைவிலே வந்து மணமுடிப்பதிலே ஈடுபடல் வேண்டும் எனக் கருதும் தோழி, தான் தலைவியிடம் கூறுவாள் போல் இவ்வாறு கூறுகின்றனள்.]


என்னெனப் படுமோ தோழி! மின்னுவசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக்
கண்டூர்பு விரிந்த கனையிருள் நடுநாள்
பண்பில் ஆரிடை வரூஉம் நந்திறத்து!
அருளான் கொல்லோ தானே—கானவன் 5
சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம்
வரிகொள் சாபத்து எறிகணை வெறீஇ
அழுந்துபடு விடரகத்து இயம்பும்
எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே!

தெளிவுரை : தோழி! கானகத்தே வாழ்வோனான வேட்டுவனது முதுகைப் போலத் தோன்றும், பெரிதான துதிக்கையை உடையதான வேழமானது, வரிந்து கட்டுதலையுடைய வில்லிலிருந்து ஏவப்படும் அம்புக்கு அச்சங்கொண்டது. அதனாலே, ஆழ்ந்துபட்டுள்ள மலைப்பிளவினிடத்தே மறைவாகச் சென்று நின்றபடி பிளிறா நின்றது. அத்தன்மைத்தான, மேலெழுந்து வீழ்கின்ற அருவிகளையுடைய மலைநாட்டிற்கு உரிமையுடையோனானவன் நம் தலைவன். அவன், மின்னலிட்டதாய் இருளைப் பிளந்து கொண்டு மேகங்கள் முழக்கமிடுகின்றதும், தாம் சூலுற்று முதிர்ந்ததனாலே அதனாலுற்ற கடனைத் தீர்க்குமாறு கண்ணொளி மறையுமளவு நாற்புறமும் பரந்து, மிக்க இருளினைச் செய்கின்றதுமாக விளங்கும், செறிந்த இருளையுடையதான நள்ளிரவுப் பொழுதிலே, நற்பண்பாடுகள் ஏதும் இல்லாததான கடத்தற்கரிய வழியினைக் கடந்தேமாய், அவன் பொருட்டாக வருகின்ற நம்மாட்டு, அவன்தான் அருளினைச் செய்ய மாட்டானோ? அவன் அவ்வாறு அருளாதிருத்தல் தான் எதனாலே என்று சொல்லப்படுமோ? அதனை யானும் அறியேனே!

சொற்பொருள் : வசிபு–பிளந்து; இருளைப் பிளந்து எழுகின்ற மின்னலின் ஒளியாதலின் 'வசிபு' என்றனர். அதிர் குரல்–அதிர்கின்ற குரல்; இடி முழக்கம்; பிற உயிரினங்களை அதிரச்செய்கின்ற கடுங் குரலும் ஆம். முதிர் கடன்–சூல் முதிர்ந்ததனாலே உண்டாகிய கடமை; அது அதனைக் கழித்தல்; அதாவது, மழையாகப் பெய்தல். கண் தூர்பு–கண்ணொளி மறையுமாறு. கனையிருள்–செறிந்த இருள். பண்பில் ஆரிடை–பண்பிலாத கடத்தற்கரிய காட்டுவழி; பண்பில்லாமை கரடு முரடு உள்ளமையும், கொடு விலங்குகள் உள்ளமையும், பசுமை கெட்டு பாலைப்பட்டமையும் ஆம். சிறுபுறம்–முதுகுப் புறம். வரிகொள்–வரித்தலைக் கொண்ட; வரித்தலாவது வரிந்து கட்டுதல், இதனால் வில்லுக்கு வலிமை மிகுதிப்படும். அழுந்து–பள்ளம். விடரகம்– மலைப்பிளப்பிடம்.

விளக்கம் : வரும் வழியது ஏதங்கருதிக் கவலையுறுதல் இயல்பேயாகலின், இனி இவ்வாறு வருதலை மேற்கொள்ளவிடாது, விரைய வரைந்து கொள்ளுதலே செயற்கு உரியது. எனத் தலைமகன் கருதுவானாவது இதன் பயனாகும். கடன் தீர்த்தலாவது, தன் கடமையைச் செய்தல். மாரியும் தன் கடமையை மறவாதே தீர்த்தலைத் செய்தலை மேற்கொள்ளுகின்றது; ஆயின், தலைவனோ தன் கடனைத் தீர்த்தலாகிய, அடைந்தார் துயர் தீர்த்தல் ஆகிய நம்மை மணந்து கொள்ளுதலை நினையானாயினான் என்று குறிப்பாக உணர்த்தியதும் ஆம்.

சூலுற்ற மேகங்கள் தம் கடனைத் தவறாதே தீர்த்தலைப் போலத் தலைவிக்கு உறுதுணையான தோழியும், அவளுக்குத் தான் செய்தற்குரிய கடனாகிய தலைவனோடு மணம் புணர்த்தும் செயலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாள், இவ்வாறு கூறுவாள் எனக் கொள்ளுதலும் பொருந்தும்.

உள்ளுறை : யானையானது,வேட்டுவனின் கணைக்கு வெருவியதாகி, விடரகத்துச் சென்று முழங்குவது போலத் தலைவியும் இனி ஏதிலாட்டியர் உரைக்கின்ற பழிச்சொற்களுக்கு அஞ்சினளாய்த் தன் மனையகத்தே தனித்திருந்து புலம்பி வருந்துவள் ஆவள் என்பதாம்.

229. வாடையும் வந்து நின்றது!

பாடியவர் :........ இளங்கண்ணனார் எனக் கொள்வர் உரையாசிரியர் ஔவை.
திணை : பாலை.
துறை : (1) தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது. (2) செலவழுங்குவித்த தூஉம் ஆம்.

[(து-வி.) (1) தலைமகன் பிரியக்கருதிய செய்தியைத் தலைவியிடஞ் சென்று பக்குவமாகச் சொல்லி அவளை அதற்கு இசைய வைத்த பின்னர், தலைவனிடம் வந்து, தோழி, அவன் செலவுக்கு உடன்பட்டு கூறியதாக அமைந்தது இச்செய்யுள். (2) தலைமகன் பிரிந்து போதலைத் தடுத்துவிடக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.]


சேறும் சேறும் என்றலின் பலபுலந்து
செல்மின் என்றல் யானஞ் சுவலே!
செல்லா தீமெனச் செப்பின் பல்லோர்
நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே!
அதனால்,
செல்மின்; சென்றுவினை முடிமின்; சென்றாங்கு 5
அவண்நீ டாதல் ஓம்புமின்! யாமத்து
இழையணி யாகம் வடுக்கொள முயங்கி


உழையீ ராகவும் பனிப்போள், தமியே
குழைவான் கண்ணிடத் தீண்டித் தண்ணென
வாடிய இளமழைப் பின்றை
வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே!

தெளிவுரை : நாம் வினை கருதிப் பிரிந்தேமாய்ச் செல்வேம் செல்வேம் என்று நீர்தான் பலகாலும் கூறுதலினாலே, யான் தலைவியின் துயரை நினைந்தேனாய்ப் பலவாகப் புலந்து, 'செல்வீராக' என்று சொல்லுதற்கும் அஞ்சா நிற்பேன். 'நீர்தான் செல்லாதீராய் இவண் இருப்பதாக' என்று சொன்னால், பலருங் கூறாநிற்கும். மார்பில் எறியும் அம்புகளைப் போலுங் கடுஞ் சொற்களின் நிமித்தமாக அஞ்சா நிற்பேன். அதனாலே, நீரும் செல்வீராக; சென்று செயக் கருதும் வினையினையும் முடிப்பீராக; சென்ற அவ்விடத்திலே நெடுங்காலம் நிற்றலைக் கைவிடுதற்காவது பார்த்துக் கொள்வீராக! இரவின் நடுயாமத்தே கலன் அணிந்த மார்பகம் வடுக்கொள்ளுமாறு தழுவியபடி நீர் தாம் அருகிலேயே இருப்பீராயினும், அந்தச் சிறுபிரிவையும் நினைத்து நடுங்குபவள் தலைவி கண்டீர்! அவள்தான் தனியே இருந்து வருந்துமாறு, அகன்ற இடமெங்கணும் பரவியபடி நெருங்கித் தண்ணென்னும்படி பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர் வந்து நின்ற வாடைக் காற்றையும் கண்டீர் அல்லவோ! ஆயின், ஆராய்ந்து செய்யத்தகுவன கருதிச் செய்வீராக!

சொற்பொருள் : சேறும்–செல்வேம். புலந்து–வேறுபட்டு. நிறம்–மார்பு. புன் சொல்–பழிச் சொற்கள். நீடாதல்–நீட்டித்து இருத்தலைச் செய்யாதிருத்தலையாவது மேற்கொள்ளாமல். யாமம்–இரவின் நடு யாமம். உழையீர்–அருகிருப்பீர். பனிப்போள்–நீர் தாம் பிரிந்தும் போவீரோ எனச் சிறு பிரிவுகட்கே நடுங்குபவள். வாடை– வாடைக்காலம்.

விளக்கம் : 'பலபுலந்து' என்றது, தலைவனின் பிரிவைப் பற்றிக் குறிப்பினாலே அறிந்தாளான தலைவியின் நடுக்கமும் மெலிவும் ஆகிய பலவற்றையும் நினைந்து புலந்து என்றதாம். அதனால், தலைவனைச் 'செல்மின்' என்று சொல்ல முடியாதவளாகின்றாள். ஆயின், உலகியல் அறநெறி கருதிப் பிரிதலை மறுக்கவும் முடியாதவள், ஊரவர் உரைக்கும் பழிச்சொற்கள் குறித்து அஞ்சுகின்றாள். இதனால், இதனை நாடு காவலைக் குறித்த பிரிவு என்று கொள்ளுக; அதற்குப் போவதே கடன் என்பதும், அதனை மறுத்தல் பெண்களுக்கும் மரபாகாது என்பதும், அவன் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதும் தோன்றச் 'செல்மின்', 'சென்று வினை முடிமின்' என்கின்றனள். 'முயங்கி உழையீராகவும் பனிப்போள்' என்று தலைவியைக் கூறியது, அவள் பிரியின் உயிரினையும் தரித்திருப்பாளோ எனக் கலங்கியதாம். அதனை அவனும் நினைவிற் கொண்டு வினைமுடித்ததும் விரைய மீளவேண்டும் என்றதும் ஆம். 'வாடையும் கண்டீரோ' என்றது, அது உடனுறைந்து இன்புறுத்தற்கு உரிய காலம் என்பதை நினைவுபடுத்தி, அக்காலத்துப் பிரிவை ஆற்றியிருப்பதற்கு இயலாளாய்த் தலைவி கொள்ளும் நடுக்கத்தை உணர்த்தியதாம்.

செலவழுங்குவித்தல் என்னும் துறைக்கு ஏற்பப்பொருள் கொள்ளுவதாயின், பிரிவைக் கல்வியிற் பிரிவாகவும், இதனைக் கேட்டலுறும் தலைவன், அதனை அப்போதைக்கு கொள்க.

230. காணுங்கால் இனிது!

பாடியவர் : ஆலங்குடி வங்கனார்.
திணை : மருதம்.
துறை : தோழி வாயில் மறுத்தது.

[(து-வி.) பரத்தையிற் பிரிந்து வீட்டிற்கு வருகின்றான் தலைவன். தலைவியின் சினத்தை அறியானாதலால், அவளைச் சமாதானப் படுத்துமாறு தோழியை வேண்டுகின்றான். அவள், அவனுக்கு இசையமறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்
கயக்கணக் கொக்கின் கூம்புமுகை யன்ன
கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது
குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்செட விரியும்
கயற்கணங் கலித்த பொய்கை ஊர! 5
முனிவில் பரத்தையை என்துறந் தருளாய்
நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்
புதுவறங் கூர்ந்த செறுவில் தண்ணென
மலிபுனல் பரத்தந் தா அங்கு
இனிதே தெய்யநின் காணுங் காலே! 10

தெளிவுரை : இளம் பிடியானையினது செவியைப்போல விளங்கும் பசுமையான இலைகளையும், குளத்தினிடத்தேயுள்ள கூட்டமாயிருக்கும் கொக்கைப்போலத் தோன்றும் குவிந்த முகைகளையும், அவற்றிற்கேற்ப அமைந்த திரட்சியான தண்டினையும் கொண்டிருப்பது நீராம்பல். அதன் அமிழ்தைப் போல மணம் பரப்புகின்ற தண்மையான மலரானது கீழைத்திசைக்கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல, இருளைப் போக்கியபடி மலர்ந்திருக்கும். அத்தகையதும், கயல்மீன்களின் கூட்டம் கலித்துப் பெருகியிருப்பதுமாகிய பொய்கையினையுடைய ஊரனே!

என்னை வேண்டி நிற்றலைக் கைவிட்டுவிட்டு, நின்பால் சினம் ஏதும் இல்லாதிருப்பவளாகிய பரத்தையிடஞ் சென்று அவளுக்கு அருள்வாயாக! தனிமையானது எம்மைப் பெரிதாகத் துன்புறுத்திய காலத்திலே, அதுதான் நீங்குமாறு, புதுவதாக வற்றிக் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள வயற்பகுதிகளிலே குளிர்ச்சியுற நிறைந்த புதுப்புனலானது பாய்ந்து பரவினாற்போல, நின்னைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சியே எமக்கு இன்பந் தருவதாயிருக்கின்றது. எமக்கு அதுவே போதும் !

சொற்பொருள் : வயப்பிடி – இளைய பிடி; முயப் பிடி எனவும் பாடம். பாசடை–பசிய இலை. கூம்புதல்–குவிந்திருத்தல். கணைக்கால்–திரட்சியான தண்டு. தண்போது–குளிர்ச்சியுள்ள மலர். குணக்குத் தோன்று வெள்ளி–கீழ்த்திசையிலே தோன்றும் விடிவெள்ளி; வெள்ளிஎழப் பொழுது புலரும் என்பதாம்; இது கதிரவன் உதயத்திற்குமுன் ஏற்பட்ட புலர்காலைப் பொழுது. முனிவு–சினம். புலம்பு–தனிமைத்துயரம். புதுவறம்–புதுவதாக உண்டான வறட்சி. மலிபுனல்–மிகுதியான புதுப்புனல். 'தெய்ய' அசைநிலை.

விளக்கம் : தலைவியைத் தானாகக் கொண்டு கூறியது இது. பரத்தையானவள் நின்னைத் தன்பால் விருப்புக் கொள்ளச் செய்து தான் பயனடைதலிலேயே கருத்தாயிருப்பாள் என்று கூறுவாள். அவளைப் பிரிந்து நீ தான் இங்கு வந்ததற்காகவும் சினம் கொள்ள மாட்டாள் என்றனள். ஆனால், நின்பால் உரிமையுடைய யாமோ சினங்கொள்வேம் என்றதும் ஆம். நீதான் இங்கு வருதலையே மறந்தாய் போலும் என்று இருந்தேமாகிய எமக்கு, நீதான் வந்து காட்சியளித்தனை. நின்னைக் கண்டு மகிழ்ந்த அந்தக் காட்சியே எமக்கு இன்பமாயிற்று. எமக்கு அது போதும் என்பதாம். பொருந்தா ஒழுக்கமாகிய அவன் செயலை இவ்வாறு இகழ்ந்து உரைக்கின்றனள்.

நின்னைக் காணவும் பெறேமாய் வாடி நலிந்திருந்த எமக்கு, நின்னைக் கண்டதே இன்பந்தந்தது போலச் சிறந்த உதவியாயிற்று; வறங்கூர்ந்த செறுவில் புதுப்புனல் பாய்ந்தாற்போல எம்மனத்து வெம்மையும் தணிந்தது என்றதும் ஆம். இவ்வாறு, சினந்து வாயின் மறுத்து உரைக்கின்றாள் தோழி.

இறைச்சி : ஆம்பலந் தண்போது வெள்ளிபோல மலர்ந்திருந்தபோதும், அதுதான் வெள்ளியாக ஆகாததுபோல, நீதான் பரத்தைக்குச் செய்யும் தலையளியும் நினக்கு மகனைப் பெற்று நின் குடிக்கு ஒளியூட்டும் உறவு ஆகாது என்பதாம். அவள் தலைவியாகும் தன்மையைப் பெறமாட்டாள் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது.

231. போதவிழ்ந்த புன்னை!

பாடியவர் : இளநாகனார்.
திணை : நெய்தல்.
துறை : சிறைப் புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாயது.

[(து.வி.) தலைவன் ஒருசார் வந்து நிற்றலைக் கண்டாள் தோழி. அவன் உள்ளத்திலே, 'தலைவியை மணந்து கொள்ள வேண்டும்' என்னும் எண்ணத்தை ஊட்டக் கருதினாள். தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்குமாறு கூறுகின்றனள்.]


மையற விளங்கிய மணிநிற விசும்பின்
கைதொழு மரபின் எழுமீன் போலப்
பெருங்கடற் பரப்பின் இரும்புறந் தோயச்
சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்
துறைபுலம் புடைத்தே தோழி! பண்டும் 5
உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக்
கானலங் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்கா மாறே.

தெளிவுரை : தோழீ! முன்னேயும் மனைக்கண்ணேயுள்ள ஊர்க் குருவியினது முட்டையை உடைத்தாற்போலத் தோன்றும் பெரிதான அரும்புகள் இதழவிழ்ந்துள்ள, கருமையான அடியையுடைய புன்னைமரங்களைக் கொண்ட கானற் சோலையிடத்தே, நம் தலைவன் நமக்குத் தந்த காதலானது, நம் உள்ளத்தினின்றும் நீங்காதே யுள்ளதுகாண்! அதனாலே,

மாசற விளங்கிய நீலமணியின் நிறத்தையொத்த வானத்தினிடத்தே தோன்றி, உலகினரால் கைகூப்பித் தொழப்படுகின்ற மரபினையுடையது எழுமீன் மண்டிலம் என்னும் சப்தரிஷிகள் மண்டிலம். அஃதேபோலத் தோற்றுமாறு சிறு வெண்காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாகப் பெரிய கடற்பரப்பின் கண்ணே தம் கரியமுதுகுப்புறம் தோயுமாறு நீரிற் குடைந்து ஆடியபடியே யிருக்கும். அதனைத் தமியேமாய் நோக்குங்கால், அது நமக்கும் துயர்தருவதாயுள்ளது! அங்ஙனம் நாமும் களித்து மகிழ்வதற்கு நம் தலைவரும் நம் அருகே இலராயினரே!

சொற்பொருள் : மை–குற்றம்; கருமையும் ஆம். அப்போது 'மையற' என்பதற்கு மேகங்களால் மறைக்கப்பட்டிராத நிர்மலமான என்று கொள்க, நட்சத்திரங்கள் தெளிவாகத் தோன்றுதலின். மணிநிற விசும்பு–நீலமணியின் நிறத்தைக் கொண்டதான விசும்பு. எழுமீன்–ஏழு நட்சத்திரக் கூட்டம் எனப்படும் சப்தரிஷி மண்டிலம்; இவர்கள் தம்முடைய தவத்தாலும் ஒழுக்கத்தாலும் விண்மீன்களாகும் உயர்நிலை பெற்றவர்; இவர்களைத் தொழுவதனாலே நன்மையுண்டு என்பது பழந்தமிழரின் நம்பிக்கையாகும்; இதனை அடுத்திருப்பதும், இதனோடு இணைந்த சிறப்பினதுமான அருந்ததியைக் குறிப்பதாகக் கொள்க. இன்றுவரை மகளிர் தம் கற்புக்குச் சான்றாக அருந்ததியைக் காட்டித் தொழுதல் மரபு; இது மணச்சடங்குகளுள் ஒன்றாகவே அமைந்துள்ளது. இரும்புறம்–கரிய முதுகுப்புறம்; இதனைக் காக்கையின் முதுகுப்புறமாகக் கொள்வர்; அன்றிப் 'பெருங்கடல் பரப்பின் இரும்புறம்' எனக் கடலோடு சேர்த்துக் கடலின் கருமையான மேற்புறம் எனலும் பொருந்தும். வானத்தே தோன்றும் எழுமீன்போல அவை அப்போது தோன்றும் என உவமை கொள்க. 'துறை புலம்பு உடைத்து' என்றது, அவைபோலத் தானும் நீர்விளையாட்டயர்தற்குக் காதலன் அருகே இன்மையால். 'போதுவிரிந்த மலர்', அதன் அமைப்புக்கு உடைந்த குருவிமுட்டையின் வடிவம் உவமை கூறப்பெற்றது.

விளக்கம் : புன்னையங் கானலை நோக்கியதும், முன்பு கூடிய இடமாதலின், பழைய நினைவுகளாலே கலங்கித் துயருற்றனள்; அவனோடும் ஆடற்குரிய துறையாதலின் அது நினைந்தும் மனம் வாடினாள். காலம் மாலையாதலைச் செய்யுளின் அமைப்பால் அறிதல் வேண்டும். அறியவே, இஃது இரவுக் குறிக்கண் கூறுதல் என்றும் கொள்ளப்படும்.

இறைச்சிப் பொருள் : சிறு வெண்காக்கை தத்தம் துணையோடு பலரும் காணக் கூடிக் களித்து நீராடி இன்புறுதலைப் போலத் தானும் தலைவனை முறையாக மணந்து கடலாடி இன்புறவில்லையே எனக் கலங்குவாள் தலைவி என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவனின் உள்ளத்தே, 'களவு உறவைக் கைவிட்டு விரைய மணந்து கோடலே செய்யத் தக்கது' என்னும் தெளிவு உண்டாகும். அவனும் அவள்பாற் கழியக் காதலன் ஆதலின், அதனால் மணமும் விரைவில் கைகூடும் என்பதாம்.

232. வேரல் வேலிச் சிறுகுடி!

பாடியவர் : முதுவெண்கண்ணனார்; முதுவெங்கண்ணனார் எனவும் பாடம்.
திணை : குறிஞ்சி.
துறை : பகல் வருவானை இரவுவா எனத் தோழி சொல்லியது.

[(து.வி.) பகற்குறிக்கண்ணே வந்து ஒழுகுவானாகிய தலைவனைத் தோழி எதிர்கொண்டு, இரவுக்குறி நேர்வாளே போல இவ்வாறு கூறுகின்றனள். அதுவும் இயலாமையைக் குறிப்பால் உணர்த்தித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனள்.]


சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்
செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் 5
மாமலை நாட தாமம் நல்கென
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீயுக விரிந்த முன்றில்
கல்கெழு பாக்கத்து அல்கினை சென்மே.

தெளிவுரை : சிறுத்த கண்களையும் பெருத்த கைகளையும் கொண்ட யானையின், ஆணும் பெண்ணுமாகிய இரண்டின் இனம், தண்ணிய குளக்கரையிலே செறிந்திருந்த மலைப் பச்சை குழையுமாறு மெய்யுறத் தம்முட் புணர்ந்து கூடிய பின்னர், சோலையிடத்தேயுள்ள மலைவாழைகளைத் தின்பதையும் வெறுத்தவாய், அதற்கு அயலதாயுள்ளதும், மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலியை உடையதுமாகிய சிறிய குடியிருப்பிலே யுள்ளவர்கள் அச்சத்தால் அலறுமாறு சென்று, சிவந்த அடிமரத்தையுடைய பலாவினது இனிய பழங்களை உதிர்த்துத் தின்னாநிற்கும். அத்தன்மையுடைய பெரிதான மலைநாட்டிற்கு உரியவனே, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! எந்தைக்கு உரியதும், வேங்கையின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற முற்றத்தை உடையதும், மலையிடத்தே பொருந்திய பாக்கத்திலுள்ளதுமாகிய எம் மனையகத்திலே இன்றிரவும் போதுமட்டும் நீதான் தங்கினையாய்ப் பிற்றைநாளிற் செல்வாயாக! அதற்கு இசைவாயாயின், நின் மாலையினை அடையாளமாகத் தருவாயாக!

சொற்பொருள் : சிறுகண்–சிறுத்துள்ள கண்கள். ஈரினம்–களிறும் பிடியுமாகிய யானையினம். குளவி–மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறப்படும். 'தீண்டி' என்றது அதன்பால் மெய்யுறக் கூடிக் களித்து என்றதாம். 'வாழை' என்றது மலைவாழையினை. முணைஇ–வெறுத்து; 'முணைவு முனிவாகும்' என்பது தொல்காப்பியம். வேரல்–மூங்கில்; வேரல் வேலி என்பதனை மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலி எனக் கொள்ளலும் பொருந்தும். 'செங்கால் பலவின்' என்றது, செம்பலா எனக் குறித்தற் பொருட்டு. தாமம்–மாலை. 'தாமம் நல்குக' என்றது, நின்னைக் காணாது அலமரும் தலைவி அதனை அணைத்தாயினும் இன்புறுவள் என்றற்காம். முன்றில்–முற்றம். 'பாக்கம்' குடியிருப்பு; கடற்கரையூர்க் குரிய பெயர், குறிஞ்சிச் சிற்றூர்க்கும் இங்கே கூறப்பெற்றது.

விளக்கம் : உடலின் பெருமையை நோக்கக் கண் மிகவும் சிறுத்து உளதாதலின், 'சிறு கண் யானை' என்றனர். 'இரவில் தங்கிச் செல்வாயாக' என வேண்டியது, 'பகற் பொழுதின் கண்ணே இவளோடு கூடிக் களித்து நீதான் இன்புறுத்தினை; இரவிலே இவள்தான் தனிமையில் துயருற்றாளாய்ப் பெரிதும் நலிவள்; ஆதலின் இரவும் தங்கிப்போவாய் என் வேண்டுவதாகும். இதனால், இரவில் அவள்படும் துயரத்தை நீக்குதற்குக் கருதினையாயின், அவளை ஊரறிய மணந்து கொள்வாயாக எனக் குறிப்பாகக் கூறினள் என்று கொள்க.

உள்ளுறை : யானையின் ஈரினம் தலைவனும் தலைவியுமாகவும், 'குழையத் தீண்டி' என்றது, அவர் இயற்கைப் புணர்ச்சியிற் கூடியதைக் குறித்ததாகவும், 'வாழையை வெறுத்து' என்றது, மீளவும் களவுறவை வெறுத்துவிடலே தக்கது எனவும், 'சிறுகுடி அலற' என்றது, அலவற் பெண்டிர் நடுங்கி வாயடங்குமாறு செய்து எனவும், 'பலவின் பழம் மிசையும்' என்றது, வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்தி இன்பம் துய்ப்பாயாக எனவும் உள்ளுறை பொருளாகக் கொண்டு கூறினளாகக் கொள்ளுக.

233. நாருடை நெஞ்சத்து ஈரம்!

பாடியவர் : அஞ்சில் ஆந்தையார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக, 'இவள் ஆற்றாள்' என்பது உணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

[(து.வி.) வரைந்து கொள்ளற்கு முற்படாதவனாகத் தலைமகன் நெடுங்காலம் வந்து களவு ஒழுக்கத்திலேயே நீடித்திருப்பான் ஆகின்றான். 'இது நீடிப்பின் இனியும் தலைவி ஆற்றாள்' எனக் கருதிய தோழி, தலைவன் கேட்டுத் தெளியுமாறு, தலைவியிடத்தே சொல்லுவாளேபோல இவ்வாறு கூறுகின்றனள்.]


கல்லாக் கடுவன் நடுங்க முள்எயிற்று
மடமா மந்தி மாணா வன்பறழ்
கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும்
பெருங்கல் நாடனை அருளினை யாயின்,
இனியன கொள்ளலை மன்னே! கொன்னொன்று 5
கூறுவன் வாழி தோழி! முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் சென்னெறி வழாஅச்
சான்றோன் ஆதல்நற் கறிந்தனை தெளிமே!

தெளிவுரை : தோழீ! நீயும் நெடிது வாழ்வாயாக! தன்னுடையதான தொழிலையன்றி வேறு தொழிலைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு, முட்போன்ற கூர்மையான பற்களைக் கொண்டதும், மடப்பத்தை உடையதுமான பெரிய மந்தியானது, வளர்ச்சி நிரம்பாத வலிய தன் குட்டியோடும், உச்சிகள் உயர்ந்த மலையடுக்கத்தே இயங்கும் மேகங்களுக்கு உள்ளாகச் சென்று ஒளித்துக் கொள்ளும். அத்தன்மையுடைய பெரிய மலைநாட்டுத் தலைவனுக்கு நீயும் அருளிச் செய்தனையாயின், இனியேனும் அத்தன்மைத்தான செயல்களை மேற்கொள்ளாதே இருப்பாயாக! வெறிதே ஒன்று கூறுவேன்! அதனையும் கேட்பாயாக தலைமகன் நின்முன்னே வந்தடைந்தபோது, அன்பை உடையதான நின் நெஞ்சத்திலே மிக்கெழுகின்ற காதலை மறைத்துக் கொண்டனையாய், அவனோடு சொல்லாடி, அவன்தான், ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறியாகிய இல்லறம் மேற்கொண்டு ஒழுகுதலிற் பிழையாத சான்றோன் ஆகுதலை நன்றாக அறிந்து கொண்டனையாகி, அதன் பின்பே அவனை ஏற்றுக்கொள்ளலையும் தெளிவாயாக!

சொற்பொருள் : கல்லாக் கடுவன் தன் தொழிலன்றிப் பிறவற்றைக் கற்றறியாத ஆண் குரங்கு; பிறவென்றது மகவோடுங்கூடிய தன் மந்தியைப் போற்றி உதவுதலாகிய கடப்பாட்டுணர்வு. அஃதன்றித் தன் புலனிச்சையொன்றே கருதுமாதலின், 'கல்லாக் கடுவன்' என்றனர். மடமா மந்தி–இளமைப் பருவத்துக் கருமுக மந்தி; பெரிய மந்தி. 'மாணாவன்பறழ்' குலத்தொழில் பயிலாத வலிய குட்டி. கோடு– மலையுச்சி. ஆடு மழை – இயலும் மேகம். ஒளிக்கும்–ஒளித்து மறையும். இனியன கொள்ளலை – இனி அத்தன்மையான அன்புச் செயல்களை மேற்கொள்ளா திருப்பாயாக. 'இனி என கொள்ளலை' எனவும் பாடம்; இனி என் சொற்களை ஏற்றுக்கொள்வாய் அல்லை என்பது பொருள். நார்–அன்பு. ஈரம் – காதலன்பு. சென்னெறி – செவ்விதான நெறி; செல் நெறி எனக் கொள்ளின் செல்லும் ஒழுகலாறு எனக் கொள்க. வழாஅ – வழுவாத, வாழா என்று பாடம் கொள்ளின் அந்நெறிப்படி வாழாத என்று கொள்க சான்றோன் – சால்பினன்.

விளக்கம் : ஆன்றோர் சென்னெறியானது பலரறியக் கோடலும், களவினைக் கடிதலும். அந்நெறிப்படி வாழான் எனவே, அவன் அன்பிலன், ஒதுக்கத் தக்கவன் என்றதாம். ஊரலரால் நாம் வேதனையுறுவோம்; அவன் பிரிவால் நீயும் கலங்கி நெஞ்சழிவாய்; இவற்றைக் கருதாது களவிற் பெறும் இன்பமே நாட்டமாகி வரும் அவன் சால்பிலன் என்கின்றனள். இதனைக் கேட்டலும் தலைமகன் தன்பால் தெளிவு பெற்றானாகி, விரைய வரைந்து மணந்து கோடலில் மனஞ் செலுத்துவான் ஆவன் என்பதாம்.

உள்ளுறை : கடுவன் மனம் நடுங்க மந்தியும் பறழும் மேகத்தூடே சென்று மறைந்தாற்போல, நாமும், அவன் நம்மைக் காணாதே வருந்துமாறு அயலே சென்று மறைந்து கொள்வேம் என்று கொள்க. அங்ஙனம் செய்வோமாயின், களவுறவு தடைப்படுதலின், அதன் பின்னாவது அவன் வரைந்து வருதலைப்பற்றி நினைப்பவனாவான் என்பதாம்.

234. ..........

இச்செய்யுள் கண்டெடுக்கப்பெற்ற பல பழைய ஏட்டுப் பிரதிகளிலும், மற்றும் வெளியான பல அச்சுப் பிரதிகளிலும் காணப்பெறவில்லை. குறுந்தொகையுள் ஒரு பாடல் அதிகமாக வந்துள்ளது. அதில் ஒன்பது அடிகளோடு வந்துள்ள செய்யுள் (எண் 307) இந்தக் காணாமற்போன செய்யுளாக இருக்கலாம் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். அந்தச் செய்யுளை ('வளையுடைய' எனத் தொடங்குவது) இத்தெளிவுரை நூலின் பின்னிணைப்பாகத் தந்திருக்கின்றோம்.

235. குன்றின் தோன்றும் குவவுமணல்!

பாடியவர் : பழைய பிரதிகளில் பெயர் காணப்படவில்லை; வெள்ளி வீதியார் எனக் கொள்வர் ஔவை அவர்கள்.
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

[(து. வி) மணம் செய்து கொள்ளாது தலைவன் காலம் நீட்டிப்பக் கண்டு பொறாளாயின தலைவிக்கு, தோழி, 'அவன் வரைவொடு வருதல் உறுதி' எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல்
அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை
பொன்னேர் தாதின் புன்னையொடு கமழும்
பல்பூங் கானல் பகற்குறி வந்துநம்
மெய்களின் சிதையப் பெயர்ந்தனன்; ஆயினும் 5


குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி—
தண்தார் அகலம் வண்டிமிர்பு ஊதப்
படுமணிக் கலிமா கடைஇ
நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. 10

தெளிவுரை : தோழீ! வலிமையான அலைகளாலே மோதப்பட்ட, சருச்சரை பொருந்திய வளைந்த அடியை உடையதும், ஆராயப்பட்ட வாளின் வாய்போல விளங்கும் முள்ளமைந்த இலைகளை உடையதுமான தாழையின் கண்ணேயுள்ள, பொன்போலும் அழகிய பூந்தாதின் மணமானது, புன்னையின் மலரோடுஞ் சேர்ந்து கலந்தபடி கமழுகின்ற தன்மையுடையது, பலவாகிய பூக்கள் உடையதான கானற்சோலை. அவ்விடத்தே, பகற்குறிக்கண் வந்து நலன் நுகர்ந்து நம்முடைய மெய்யிடத்திருந்த கவினைச் சிதையச் செய்தவனாகத் தலைவன் பிரிந்து போயினான். ஆயினும், தண்ணிய தாரணிந்த மார்பிடத்தே வண்டுகள் மொய்த்துத் தேன் உண்டபடி இருக்க, ஒலிக்கும் மணிபூண்ட செருக்கிய குதிரைகளைச் செலுத்தியபடி, நெடிய நீரையுடைய நெய்தல் நிலத்தானாகிய நம் தலைவன் வரைவொடு வருகின்றதனை—

குன்றுபோலத் தோன்றுமாறு மணல்குவிந்த மேடுகளின் மேலேறி நின்று யாமும் கண்டு வருவதற்குச் செல்வோமா!

சொற்பொருள் : உரவு – வலிமை ; பொருத – மோதிய. பிணர்படு – சருச்சரை பொருந்திய. தடவு – வளைந்த. அரவுவாள் – வாளரம். பொன்னேர் தாது – பொற்றுகள் போலத் தோன்றும் மகரந்தத் துகள்கள். 'கானல்' என்றது கானற் சோலையினை. குவவு மணல் – குவிந்த மணல்மேடு. அகலம் – மார்பு. கலிமா – செருக்குடைய குதிரை. சேர்ப்பன் – நெய்தல் நிலத்தலைவன்.

விளக்கம் : 'தாழைப் பூவின் மணம், புன்னைப்பூவின் மணத்தோடு சேர்ந்து கமழும் பலவாகிய பூக்களையுடைய கானல்' என்றது, அதுவும் மணம் பெற்றுத் திகழ்ந்த அழகினை வியந்ததாம். அவ்விடத்தே வாய்த்த பகற்குறிக் கண் தலைவனும் தலைவியும் இன்புற்றனர் என்க. அவன் தலையளியால் அவளது எழில் புதுப் பொலிவு பெற்றது. எனினும், அவன் வரைவொடு வைத்துப் பிரிய, அவள் மெய்க்கவின் சிதையலாயிற்று என்றதாம். இதனைக் கூறுவாள், 'சிதையப் பெயர்ந்தனன்' என்றனள். அகலத்தே தண்தார் வண்டிமிர்பு ஊதவும், குதிரைகளின் மணியொலி முழங்கவும் வருகின்றான்; ஆதலின் வரைவொடு வருவானாகவே கொள்ளல் வேண்டும். அவ்வொலியைக் கேட்டவள், வழியிடைச் சென்று அவன் வருகின்ற செவ்வியைக் காணலாம் எனத் தலைவியை அழைக்கின்றனள்!

இறைச்சிப் பொருள் : 'தாழையும் புன்னையும் கலந்து மணம் பரப்பும் கானல்' என்றது, தலைவனும் தலைவியும் ஊரவர் வாழ்த்த முறைப்படி மணம் பூண்டு சேரி புகழ இல்வாழ்வு நடத்துவர் என்றதாம்.

236. நோயும் கைம்மிகப் பெரிதே!

பாடியவர் : நம்பி குட்டுவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகன் சிறைப்புறத்தானாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[(து-வி.) தலைமகன், தான் சொன்னாற் போன்று தன்னை வந்து வரைந்துகோடலைச் செய்யாமையினால், தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அதனைப் போக்கக் கருதிய தோழி, 'அவன் தவறாது வருவான்' என வற்புறுத்திக் கூறுகின்றாள். அப்போது, தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்றலை அறிந்த தலைவி, தோழிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு தன் துயரமிகுதியை உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யுந்
தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே;
ஒய்யெனச் சிறிதாங்கு உயரிய பையென
முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென
நிறைய நெஞ்சத் தன்னைக்கு உய்த்து, ஆண்டு 5
உரையினி வாழி தோழி!—புரையில்
நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென
வியலறை மூழ்கிய வளியென்
பசலை யாகந் தீண்டிய சிறிதே! 10

தெளிவுரை : "தோழீ! நீ, வாழ்வாயாக! என்பால் உண்டாகியதான இக்காமநோயும் அளவு கடப்பப் பெரிதாகின்றது. என் உடம்பும் தீயை உமிழ்கின்றாற் போலக் காமநோய் தாக்குதலினாலே வெப்பத்தை உடையதாய் இராநின்றது. ஆதலினாலே,

குற்றமில்லாத ஒண்ணிய நேர்மை கொண்ட என் ஒளிவளைகளை நெகிழச் செய்தோன் அவன்; அவன் குன்றத்தைச் சார்ந்த, பெருமை பொருந்திய நெடிய மலைப்பக்கங்களிலே ஊடாடியதாகத் தண்ணென்று, அகன்ற நம் குன்றத்துப் பாறையிடத்தேயும் வந்து நிரம்பியுள்ள காற்றானது, என் பசலைபடர்ந்த மார்பிடத்தே சிறிது தீண்டுதலையேனும் யான் விரும்புகின்றேன். அது குறித்து,

நீதான் விரையச் சென்று, நரகம்போலக் கொடுமை நிரம்பிய நெஞ்சத்தையுடைய நம் அன்னைக்கு, 'உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது கொண்டு சென்றால், இவள் தன் நோய் பெரிதும் நீங்கப் பெறுவாள்' என்று உரைத்து, அவள் இசைவைப் பெற்று வருவாயாக" என்பதாம்.

சொற்பொருள் : நோய் – காமநோய். கைம்மிக – அளவு கடப்ப; பிறர் அறியாவாறு மறைக்கின்ற தன்மையையும் கடந்து பெருகிய நோய் என்க. தீயுமிழ் தெறலின் – தீயை உமிழ்ந்தாற்போல வருத்துதலினால்; இது நோயின் கொடுமை எனக் கூறுக; இனி இரவுக்குறிச் சிறைப்புறமாகக் கொள்ளின் நிலவொளியைக் குறித்ததாகக் கொள்க. ஒய்யென – விரைவாக. முன்றில் – முற்றம்; இல்லத்தின் முன்பாக விளங்கும் காலியிடம். நிரையம் – நரகம். புரை – குற்றம். ஏர் – அழகு. ஒளி. அண்ணல் – பெருமையுடைய. வியல் – அகன்ற. அறை – பாறை

விளக்கம் : தன் காதலை உணராதே, தன்னை இல்வயிற் செறித்துக் காவலும் ஏற்படுத்தியதனால், 'நிரையம் போன்ற நெஞ்சத்து அன்னை' என்று இகழ்ந்தனள். அவள்தானும் தன்போற் பெண்ணாயினும், தானும் கன்னிப் பருவத்தே இத்தகைய காதல் உறவினளேனும், இப்போது தன்னைத் தடைசெய்ய முனைகின்ற கொடுமையால் மனம் வெதும்பி இவ்வாறு அன்னையைப் பழிக்கின்றனள். பெண்மையின் கற்பறத்துக்கு ஊறு விளைத்தலினாலே, 'நரகம் புகுவள்' என கசந்து கூறினாளும் ஆம். 'புரையில் நுண் ஏர் எல்வளை' என்றது, கையளவிற்கு மிகுதலும் குறைதலுமாகிய குற்றம் அற்றதும், நுண்ணிய வேலைப்பாட்டால் அழகுடையதுமான ஒளியுள்ள வளை என்றதாம். அது நெகிழ்ந்தது மேனியின் மெலிவால். அதனை நெகிழச் செய்தோன் அவன் என்பதாம்.

'அவன் மலைக்காற்றேனும் சிறிது தீண்டி என் துயரைத் தீர்க்க' என்று புலம்புகின்றவளின் துயரமிகுதியைக் கேட்டலுறும் தலைமகன், 'இனியும் வரைந்து கோடலைச் செய்யாது நீட்டிப்பின் இத்தகு அன்புடையாள் இறந்துவிடலும் கூடும்' எனக் கவலைகொண்டு, அதற்காவன விரையத் துணிதலை நினைப்பான் என்பதும் கொள்க.

இறைச்சி : கொடு முடியிலே காற்றானது அளாவிச் சூழ்தலைப் போல,என் தோள்களும் அவன் தோள்களைத் தழுவி நிற்குமே என்று நினைத்து என்று நினைத்து இரங்கியது இதுவாகும்.

237. இன்னுயிர் அன்ன காதலர்!

பாடியவர் : காரிக்கண்ணனார். திணை : பாலை. துறை : தோழி உரை மாறுபட்டது.

[(து.வி.) பிரிவுக் காலத்திலே தலைவியின் தனிமைத் துன்பத்தை நீக்குமாறு தேற்றுவதற்குச் சில சொல்ல முற்படுகின்றாள் தோழி. அதனை ஏற்காது, தலைவி ஆற்றியிருப்பதைக் கண்டதும், அவளது மனவுறுதியைத் தோழி வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நனிமிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனிமலி கண்ணும் பண்டு போலா இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை! 5 உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை போல உலகம் உவப்ப ஓதரும் வேறுபல் உருவின் ஏர்தரு மழையே! 10

தெளிவுரை : மடந்தையே! வியப்புடைய இரவலர் வரும்பொழுது, அவர்க்குக் கொடுத்தலைக் கருதினனாக, வள்ளல் ஆய் ஆண்டிரன் யானைத்திரள்களைச் சேர்த்து வைப்பான். அப்படி அவன் சேர்த்துவைத்த யானைத்திரள்களைப் போல, உலகத்து உயிர்கள் எல்லாம் உவப்படையுமாறு, சொல்லுதற்கரியவான பற்பல உருவங்களோடுங் கூடியவையாக, மழை மேகங்கள் வானில் எழுந்து ஓங்கித் தோன்றுவதனை, அதோ காண்பாயாக! இஃது அவர்தாம் வருவதாகக் குறித்த பருவம் அல்லையோ! 'இதுகாறும் மிகப்பெரிதும் பசந்தனையாய்த் தோள்களும் மெலிந்துபோக, நீர் நிரம்பிய கண்களையும் கொண்டிருந்தனை. இருப்பினும், "இவை முன்னைப் போலன்றி இவ்வாறு வேறுபட்டுப் போகுமாறு, நமக்கு இனிய உயிரைப் போன்றவரான நம் பிரிதற்கரிய காதலரும் நம்மைப் பிரிந்து சென்றவர், தாம் வருதற்குக் குறித்த காலத்தையும் நீடிக்கச் செய்தனரே!" என்று சொல்லப்படும் புலவியை உள்ளத்துக் கொண்டனையாய், அவர் வந்தவிடத்து அவரிடத்து ஊடுகின்றதனையேனும் நீ செய்யமாட்டாயோ? இஃது என்னே வியப்பு!

சொற்பொருள் : நனிமிக – மிகப் பெரிதும். சாஅய் –மெலிந்து. பனிமலி கண் – நீர் நிரம்பிய கண். பிரிவருங் காதலர் – பிரிதற்கு அருமை யுடையவரான காதலன்பை உடையவர். நீத்து – கைவிட்டு அகன்று. நீடினர் – வினை குறித்துச் சென்ற தேயத்தே காலத்தை நீட்டித்தனர்! புலவி – ஊடல். ஏர்தரல் – எழுதல்; அழகுதருதலும் ஆம்!

விளக்கம் : வியத்தற்கரிய திறத்துடன் இசையும் கூத்தும் பாட்டும் நிகழ்த்தும் புலமையாளர் ஆதலின், வியப்புடை இரவலர் என்றனர். இனி, அவர்தாம் சிறிது பொருளே பெற்றுப் போதலைக் கருதினராகவும், ஆய் அண்டிரன் அவர்க்கு யானைகளையே பரிசிலாக அளிக்கும் செயலை நினைந்து வியந்தனர் எனினும் ஆம். அண்டிரனின் இத்தகைய கொடைச் சிறப்பினை வியந்து, 'வாய்வாள் அண்டிரன் பாடின கொல்லோ, களிறு மிகவுடைய இக்கவின்பெறு காடே!' என்று பாடுவர் சான்றோர். வானத்தே எழுந்து மொய்த்த கருமுகில்களின் தோற்றத்தை இவ்வாறு களிற்றுக் கூட்டங்கட்கு ஒப்பிட்டு இன்புறுகின்றனர். 'உட்கொண்டு ஊடிற்றும் இலையே' என்றது, 'ஆற்றியிருப்பாரும் அவன் வந்த காலத்து ஊடுதல் இயல்பாக, நீதான் அதுதானும் செய்திலை!' என வியந்து கூறியதாம்.

'அன்பிலள் கொடியள்' எனப் பிற பெண்டிர் பழிப்பர்; அது குறித்தேனும் புலப்பாயாக' என்று கேட்பாள் போன்று, 'ஊடின்றுமிலையோ' என்றனள்.

238. பருவஞ் செய்த மாமழை!

பாடியவர் : கருவூர்க் கந்தரத்தனார்.
திணை : முல்லை.
துறை : தலைமகள் பருவங்கண்டு அழிந்தது.

[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றானாகிய தலைமகன், தான் மீள்வதாகக் குறித்துச் சென்ற காலத்தின் வரவுக்குப் பின்னரும், தான் வராதானாகத், தலைவி; அதுவரையிலும் தன் பிரிவுத்துயரை ஆற்றியிருந்தவள், நெஞ்சழிந்து புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.]


வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங்
கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப
வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மாலதர் நண்ணிய
பருவஞ் செய்த கருவி மாமழை 5
அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே—மான்றுடன்
உரவுரும் உரறு நீரில் பரந்த
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத் தானும்
இனிய வல்லநின் இடிநவில் குரலே! 10

தெளிவுரை : கோடையானது தாக்குதலினாலே பட்டுப் போயுள்ளகாடு; அக்காட்டினிடத்தே சிறியவாகப் பூவணிந்த கூந்தலையுடையவரான ஆயர் மகளிர் கூட்டமாகக் கூடியிருக்கின்ற அக்கூட்டத்தினைப் போல, வண்டுகள் வாய்திறந்து தேனைப்பருகுமாறு மொய்த்திருக்கும் இதழ்விரிந்த பிடவுகளை உடையதாயிருப்பது அந்திப் பொழுது. இவ்அந்திப்பொழுதிலே, யான் மிகவும் காமமயக்கங் கொண்டு வருந்துமாறு வந்து சேர்ந்தனை! கார்ப்பருவத்தைத் தோன்றச் செய்த கூட்டமான கார் மேகமே! நீதான், இவ்விடத்தே, அவரது மனநிலையையும் அறிந்து வந்திருக்கின்றாயோ? அவ்வாறு அறிந்து வருதலானது சான்றோர்க்கு ஒத்ததான செய்கையும் அல்லவே! ஒரு சேர மயங்கி நின்று இடித்து முழக்கும் தொழிலையுடைய தன்மையினாலே, காட்டிடத்துப் பரவியுள்ள பாம்புகளின் படம் மழுங்கிப் போகுமாறு செய்வாய். அஃதும் அல்லாமல், மாட்சிமைப்பட்ட, கனியாத நெஞ்சத்தவரான நம் தலைவரின் உள்ளத்தையும் கனியச் செய்வாயோ? அப்படிச் செய்யாமையினாலே, நின் இடியாற் பிறக்கும் முழக்கங்களும் எமக்கு இனிமையானவை ஆகா காண்! இவ்வாறு இவ்வாறு மேகத்தை நோக்கிப் புலம்புகிறாள் தலைவி.

சொற்பொருள் : வறம் – கோடை. கொல் – தாக்கி வருத்த. கார்ப்பருவத் தொடக்கத்தில் பிடவு மலரும் என்பதை, 'வண்டு வாய் திறப்பு விண்ட பிடவம்' என்றனர். 'பிடவுத் தளையவிழக் கார்ப்பெயல் செய்த காமரு மாலை' எனப்பிற சான்றோரும் இதனைக் கூறுவர் (நற். 256). மால் – மயக்கம். புரைவது – ஒப்பது.மான்றுடன் – மயக்கத்துடன்; இது எங்கும் இருள் கவிதலால் உண்டாவது.

விளக்கம் : அவரை வரத்தான் தந்திலை, அவர் நிலையையேனும் நீதான் அறிந்து சொல்லவல்லாயோ என்றால், அதுவுமில்லை. அவர் நெஞ்சைக் கனியப் பண்ணி உதவுவாய் என்பதும் இல்லை. என் நோயை மிகுதிப்படுத்தலே அன்றி, அது குறைதற்கான செயல் எதனையும் செய்யாமையின், நீதான் எனக்கு இனிய அல்லை என்கின்றனளும் ஆம்.

'பிறர் நோயும் தம் நோய்போற் போற்றி அறனறிதல், சான்றோர் கட்கெல்லாம் கடன் (கலி. 139)' என்பது உலகியல் ஆதலின், அதனைப் பேணாத நின் செயல் சான்றோர் செயலோடு ஒப்பாவதும் அன்று என்பதும் ஆம்.

குறித்த பருவத்து வாராது காலந்தாழ்த்தமையினாலே பாம்பினது நஞ்சுடைப் படத்தினுங் காட்டில் அவன் நெஞ்சம் கொடிதானது என்பாள், கனியா நெஞ்சத்தானும் என்கின்றனள் எனவும் கொள்க.' நோய்க்கு நஞ்சு மருந்தாமாறு போல, நோய்ப்பட்ட அவளுக்கு. அவன் நெஞ்சு மருந்தாகும் என்றதுமாம்.

நினக்குச் சால்பாவது, வினை கருதிச் சென்ற நம் காதலர் இருக்குமிடத்தும் சென்று முழக்கினையாய், 'நீர் தான். மீள்வதற்குக் குறித்த பருவம் வந்தது காண்பீர்' என்று அவர்க்கு அறிவுறுத்தலேயாகும்' என்றதுமாம்.

239. இவ்வூர் என்னாகுமோ?

பாடியவர் : குன்றியனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து.வி) களவொழுக்கத்துத் தலைமகன் ஓர்புறத்தே வந்து மறைந்திருப்பதை அறிந்த தோழி, தலைவியை விரைய வரைந்து வருதற்கு அவனைத் தூண்டக் கருதியவளாய்த், தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின் 5 ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு நெய்தல் புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி 10 முயங்கெனக் கவிழ்ந்த இவ்வூர் எற்றா வதுகொல், யாம் மற்றொன்று செயினே?

தெளிவுரை : மேலைத்திசையிலே சாய்ந்து வீழ்கின்ற ஞாயிறானது, மேலை மலைக்குப் பின்னாகச் சென்று மறையவும், இருள்மயங்கிய மாலைப்பொழுதிலே, கள்ளைக் குடித்ததனாலே மயக்கங் கொண்டவரான பரதவர்கள், பகற் போதிலே வருத்தமின்றிப் பெற்ற பெரிய மீன்களை எளிய விலைகட்கே விற்று விடுவர். ஞெண்டுகள் விளையாடியபடி யிருக்கும் புலவு நாற்றத்தையுடைய மணல்பரந்த முன்றில்களைக் கொண்டதும், காண்பார்க்கு விருப்பந்தருவதுமான சிறு குடியின் கண்ணே, செல்வதற்குரிய ஒழுங்குபட்ட வழியினிடத்தே, அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பி வைத்தாற்போலே நெய்தல் மலர்களின் புறவிதழ்களால மூடப்பெற்ற பூக்கள் கெடும்படி மிதித்தபடியே, தத்தம் இல்லங்களை நோக்கியும் அவர் செல்வர். வளப்பத்தையுடைய கரிய கழிபொருந்திய நீர்மலிந்த அத்தகைய நெய்தல் நிலத்தலைவனுக்கு, யாமும் மனமொத்தவராய் இருந்தேமாய், அவனிட்ட தொழில்களைக் கேட்டுச் செய்து வந்தேமும் இல்லை. அங்ஙனமாகவும், 'முன்னங் கையிடத்தேயுள்ள நெடிய கோற்றொழில் அமைந்த ஒளிகொண்ட வளைகள் உடையும்படியாக, அவனை வளைத்து அணைத்தனையாய்த் தழுவுவாயாக' என்று கூறிக் கலங்கியழுகின்ற இவ்வூரவர் தாம், யாம் அவனுக்கு அமைய நடக்கவல்லதான போக்கு உடன்படுதலாகிய ஒன்றையும் செய்தனமாயின், என்ன பாடுபடுவரோ? அதனை யானும் அறியேனே! என்பதாம்.

சொற்பொருள் : ஞான்ற ஞாயிறு – சாய்ந்து போகின்ற ஞாயிறானது. குடமலை – மேலைத் திசைக்கண் உள்ள மலை. மான்ற மாலை – மயக்கந்தருகின்ற மாலை. மாறி – விலைமாறி. முன்றில் – முற்றம். காமர் சிறுகுடி – காண்பவர் விரும்பும் அழகிய சிறிய குடியிருப்பு. பூத்தப – பூக்கள் அழிய. வார்கோல் எல்வளை – நெடிய கோற்றொழிலையுடைய ஒளியுள்ள வளையல்கள். வாங்கி – வளைத்து. முயங்கு – தழுவு வாயாக. கலுழ்ந்த – கலங்கிப் புலம்பிய.

விளக்கம் : இனிது பெறு பெருமீனைப் பரதவர் தம் கள்ளுண்ட மயக்கத்தாலே எளிய விலைக்கு மாறிவிட்டனர் என்று அறிக. வலிதே பெற்ற மீனாயின் அவ்வாறு விற்பாரல்லர் என்பதும் விளங்கும்.

'இல்லறம் கொண்டு தலைவற்குத் தொண்டு செய்யும் பயனைப் பெற்றேமில்லையே' என்று வருந்துவாள், 'தொழில் கேட்டன்றோ இலமே' என்றனள். அவனோடு கூட்டம் உண்மையை ஊரவர் அறிந்தனர் என்பாள், 'வாங்கி முயங்கு என இவ்வூர் கலுழ்ந்தது' என்றனள். இதனால், 'இனி இறந்து படுதலேயன்றி வேறு வழியாதும் காணோம்' என்று புலம்புவாள், அதனால் அவனுக்குப் 'பழி எய்தும்' எனவும் கவலையுறுகின்றனள்..

உள்ளுறை : 'இனிதிற் பெற்ற பெருமீனை எளிதில் மாறிக் குடித்து மயங்கினரான பரதவர், நெறியிலுள்ள நீலமலரை மிதித்தவாறு வீடு நோக்கிச் செல்வர்' என்றனள். இவ்வாறே காம மயக்கங் கொண்டானாகிய காதலனும் அரிய பொருளைத் தமரிடத்துக் கொடுத்துத் தலைவியைப் பெற்று மணந்து, ஊரார் எடுத்துரைத்த அலரினைத் தாழ மிதித்து அடக்கித் தன்னூர்க்கு அவளைக் கொண்டு செல்வானாகுக என்றதாம்.

இதனைக் கேட்டலுறும் தலைவனும், விரைவில் வரைந்து வருதலையே கருதுவானாவன் என்பதாம்.

240. கணிச்சியிற் குழித்த கூவல்!

பாடியவர் : நப்பாலத்தனார்.
திணை : பாலை.
துறை : (1) பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; (2) நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) (1) பிரிவுத் துயரின் வெம்மைக்கு ஆற்றாளாகிய தலைவி, தலைவன் கடந்து செல்லும் வழியின் வெம்மையையும் நினைத்தவளாக, அவன் வன்னெஞ்சைக் குறித்துப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது. (2) பொருளின்பால் தன் உள்ளம் பெரிதும் செல்லலைக் கண்டு, தலைவியைப் பிரியவும் மனமற்ற தன்மையையும் நினைந்து, இருபாலும் ஊசலாடிய உள்ளத்தானாகிய ஒரு தலைவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

ஐதே கம்மவிவ் வுலகுபடைத் தோனே, வையேர் வாலெயிற்று ஒண்ணுதற் குறுமகள்! கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை யாகம் துயிலிடைப் படூஉம் தன்மைய தாயினும் 5 வெயில்வெய் துற்ற பரலவல் ஒதுக்கில் கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி கமானது மெய்யோடு மெய்ப்பொருந்தக் கிடப்பது. அதனிடைச் சிறுபொழுது தழுவலை நீக்கி அவர் சற்றே ஒதுங்கிப் படுப்பார். அதற்கே பொறாமல், ஏங்குகின்ற சுடுமூச்சோடு விளங்கும், பருத்த கொங்கைகளைக் கொண்டதான என் மார்பகம்! அதுதான், அவரையின்றித் தனித்துக் கிடந்து துயில்கின் ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானை இனநிரை வௌவும் கானந் திண்ணிய மலைபோன் றிசினே! 10 தெளிவுரை : கூர்மையோடே அழகும் ஒளியும் அமைந்த பற்களையும், ஒளிகொண்ட நெற்றியையும் உடையவளான இளமகளே! கைகளாலே அணைத்தபடியே முயங்கிக் கிடப்போம். அம்முயக்றதான கொடுமையையும் பொறுக்குமோ! அதுதான் அத்தன்மைப்பட வருந்துவதாயினும், வெயிலின் வெம்மையாலே கொதிப்புற்ற பரற்கற்களையுடைய பள்ளங்களிலே, ஒருபக்கமாகக் கணிச்சியாலே குழிதோண்டிக் கிணறாக்கியுள்ள இடத்தைப், பசுநிறைமேய்க்கும் ஆயர்கள் சென்று அடைவர். அதனிடத்தே நீரைக் காணாராகி, மேலும் பள்ளந் தோண்டி, அதனிடத்தே ஊறிவரும் நீரைக் குடித்தும் ஆனிரைக்கு ஊட்டியும் விடாய் தீர்ப்பர். அத்தகைய பத்தலையும், எங்கும் நீரைக் காணாதவான யானைக்கூட்டங்கள் வரிசையாகச் சென்று கவர்ந்து கொள்ளும். கானத்தின் தன்மையும் அது விளங்கும். மலையிடத்திலுள்ள திண்ணிய மலையைப்போல நிலையான தன்மையாக ருக்கின்றது என்பர். அதுதான் எனக்கு அச்சத்தைத் தருகின்றது. நம் தலைவர் செல்லும் வழியை அப்படிக் கொடுவெம்மையோடும் படைத்த கொடியவன், தானும் அதனிடத்தே பையச்சென்று துன்புற்று நலிவானாக!

சொற்பொருள் : ஐதுஏகு–பையச் செல்லுக. கைகவர் முயக்கம்–இருவர் கைகளும் மாறிப் பிறர் உடலைத் தழுவிய படி கிடக்கின்ற முயக்கம். திருகி–மாறுபட்டு; புரண்டு படுத்து என்க. பரல்–பரற்கற்கள். அவல்–பள்ளம். கணிச்சி–குந்தாலி; பாறைப் பகுதியை உடைக்கும் வலிய இருப்பாயுதம். கூவல்–குழி. பத்தல்–அதிற்செய்த பள்ளம்; பட்டையால் முகந்து கொள்ளற்கு ஏற்றபடி தோண்டப்படுதலின் 'பத்தல்' என்றனர். பள்ளத்தே நீர் இருக்கலாம்; அஃதின்றி வறண்டது; அதன்பால் குந்தாலியால் குழித்துக் கிணறு போலத் தோண்டியிருந்தனர்; அதுவும் வறண்டது; அதன் நடுவில் மீளவும் தோண்டி, அதன்கண் எழுந்த சிறு ஊறலை ஆயர் உண்டனர்; அவர் தோண்டிய அப்பத்தல் தானும் இதுபோது யானை இனநிரைகளால் கவரப்பட்டன. அதுவும் இனி இல்லை என்பதாம்.

விளக்கம் : என்னாலே துய்த்து இன்புறுவதற்கு ஏதுவாகிய அவரது மெய்தானும், நீரற்ற அந்த நெடுவழியிலே வாடி நலனிழந்து போவதுபோலும் என்று வேதனைப்படுகின்ற தலைவியானவள், இந்த உலகத்தைப் படைத்தவன் அந்த வழியிடை மெல்லமெல்லச் சென்று தானும் அந்தத் துயரை அநுபவிப்பானாக என்று சபிக்கின்றாள். அவளது பிரிவுப் பெருந்துயரத்தின் வெம்மை இதனாலே நன்கு விளங்கும். கோவலர் இவ்வாறு பத்தல் தோண்டுவது வழக்கம் என்பதனை, 'பயநிரை சேர்ந்த பாழ்நாட்டாங்கண், நெடுகளிக் கோவலர் கூவற்றோண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்து சிறுகுழி' எனவரும் அகநானூற்றுச் செய்யுட்பகுதியாலும் அறியலாம் (அகம் 155). 'கானம்' திண்ணிய மலைபோன்றிசினே' என்பதற்கு, 'முல்லை நிலத்ததாகிய அப்பாலை தானும் மலைபோலத் திண்மைபெற்றுப் போயிற்று' எனவும், யானை இன நிரை வந்து வௌவுதலால் அது குன்றுகளையுடைய மலைப்பகுதி போலத் தோன்றலுறும்' எனவும் கொள்ளலாம்.

இறைச்சி : 'ஆனிரை உண்பிக்க வேண்டிக் கோவலர் கூவலருகே பறித்த பத்தலிலே நிரம்பியிருந்த நீரையும் யானையினம் கவர்ந்து உண்ணா நிற்கும்' என்றனள். அவ்வாறே தலைவனாலே துய்த்தற்கு உரியதான என் நலனையும் பசலையானது கவர்ந்துண்ணும் என்றனளாம்.

மெய்ப்பாடு, அழுகை; பயன், அயாவுயிர்த்தல். இனி, இரண்டாவதாகக் கூறப்பட்ட, 'நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது' என்னும் துறைக்கு ஏற்பப்பின்வருமாறு பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும்.

"நெஞ்சமே! இக்குறுமகளை முயங்கித் துய்த்துப் பெறுகின்றதான இன்பத்தினை வேண்டாவென வெறுத்து நீக்குதலாலே, இவள்தான் துயிலைப் பெறாதாளாக வருந்தித் துன்புற்று நலிவாளாயிலும், யான் செல்லுதற்குரிய கானமோ வெம்மை மிக்கதாய், மலைபோலும் பேரச்சத்தைத் தருகின்றதே! அதனைப் படைத்தவன், தானும் மெத்தென அதனிடைச் சென்று நலிவானாக" என்று தலைமகன் கூறியதாக உரைத்துக் கொள்ளல் வேண்டும்.

'யான் துய்த்தற்குரிய அவளது எழில் நலத்தினை அப்போது பசலையானது உண்டு ஒழித்துவிடும்' என்று சொன்னதாக, இறைச்சிப் பொருளும் அதற்கேற்பக் கொள்க.

இதன் பயன், தலைவன் பிரிவைக் கைவிட்டு இல்லத்திலேயே தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம்; இதனால் அவள் மனத்துயரம் அகலும் என்பதும் கொள்க.

241. எல்லை போகிய பொழுது!

பாடியவர் : மதுரைப் பெருமருதனார்.
திணை : பாலை.
துறை : தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

[(து.வி.) தலைமகனின் பிரிவினாலே துயரமுற்று வருந்தி நலனழிந்தாள் தலைவி. அவளைத் தேற்றக் கருதிய தோழி, 'நீ வலிதிற் பொறுத்திருப்பாய்; அவர் விரைய வருவார்' எனக் கூறுகின்றாள். அவளுக்குத் தலைமகள் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


உள்ளார் கொல்லோ தோழி கொடுஞ்சிறை
புள்ளடி பொறித்த வரியுடைத் தலைய
நீரழி மருங்கின் ஈரயிர் தோன்ற
வளரா வாடை உளர்புநனி தீண்டலின்
வேழ வெண்பூ விரிவன பலவுடன் 5
வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல்லுறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் 10
பல்லிதழ் உண்கண் கலுழ
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.

தெளிவுரை : தோழி! நீர் வற்றிய இடங்கள்தோறும், வளைந்த சிறையையுடையவான பறவைகளின் உள்ளங்காற் சுவடுகள் படிந்து வரிகளை மேலே கொண்டுள்ள இடங்களாகத் தோன்றும். அத்தடங்களின் மேலாகக் குளிர்ந்த நுண்மணல் படிந்து தோன்றுமாறு மெல்லென வாடைக்காற்று வீசியபடி இருக்கும். அதுதான் மிகுதியாகத் தீண்டுதலினாலே வேழக்கரும்பினது வெளிய பூக்கள் பலவும் ஒரு சேர இதழ்விரிந்து, வேந்தருக்கு வீசப்படுகின்ற கவரியைப் போலத் தோன்றியபடி, அழகிய புதல்தோறும் அழகு செய்த படி இருக்கும். மேகங்கள் கலைந்து போகின்றதான வானத்திடத்தே ஞாயிறானது மறைந்தும் வெளிப்பட்டும் மாறி மாறிக் காணப்பட்டு விழித்தும் மூடியும் இமைப்பதுபோல விளங்கும். இத்தகைய பகற்காலமானதும் கழிந்ததாய் இரவுப்பொழுதும் வந்து சேர்ந்தது. "இதன்கண், பனி பெய்தலைத் தொடங்கிய வருத்தம் மிகுகின்ற நடுயாமப் பொழுதிலே பல இதழ்களையுடைய பூவைப்போலும் மையுண்ட எம் கண்கள் நீரினைச் சொரியும். நிலைபேறில்லாத பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பினாலே நம்மைப் பிரிந்து சென்றோர் நம் காதலர். அவர்தாம் நம்மைப்பற்றி நினைக்கவே மாட்டாரோ?

சொற்பொருள் : கொடுஞ் சிறை – வளைந்த தன்மையுடைய சிறை; சிறை–இறக்கை. 'அளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை' என்பது குறுந்தொகை (92). வரி–வரிகள்; 'புள்ளடி பொறித்த வரி' என்றது, நீர் வற்றியபோது, மீன் பற்றுதற் பொருட்டுக் குருகுகள் நடந்து சென்ற சுவடு பதிந்த சேரானது, காய்ந்ததும் கோடு கோடாய்க் கோலமிட்டாற்போலத் தோன்றும் என்றதாம். தலை–இடம். ஈரயிர்–குளிர்ந்த நுண்மணல். உளர்பு–வீசியபடி. வேழம்–வேழக் கரும்பு. மழை–மேகம். பையுள்–வருத்தம். 'பொருட் பிணி' பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பு; பொருட் காதலாகிய நோய் எனினும் ஆம்.

விளக்கம் : உடனுறைந்து இன்புறுதற்குத் தலைவனும் தலைவியுமாகிய இருவரும் பெரிது விருப்புறுங்காலம் நடுக்கந்தரும் வாடைக்காலம். ஆதலினால், அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறினாள். 'வேழம்' கொறுக்கச்சி எனவும் வேழக்கரும்பு எனவும் சொல்லப்படும். நிலையில்லாத பொருளின் மேற்கொண்ட பிணிப்பாலே, நிலைபேறான இன்பத்தைக் கைவிட்டாராய் அகன்று போயினவர் அவர். இதனாலே அவர் அறநெறிப்பட ஒழுகலை மறந்தார்; நமக்கும் இனி அருள்வாரல்லர் என்று கூறி வாடி வருந்துகின்றாள் தலைவி.

மேகத்திரள்களுக்கு இடையே தோன்றியும் மறைந்தும் காணப்படுகின்ற ஞாயிற்றைப்போல, அவரும் நமக்கு அணி செய்தும் பிரிந்து நலியச்செய்தும் வருத்துகின்றவரேயல்லாமல், நிலையான இன்பத்திற்கு உரியவராக விளங்குவாரல்லர் எனக் கூறி நொந்ததாம்.

இதனைக் கேட்கின்றவன், மேலும் காலம் தாழ்க்காதானாய், அவளை மணந்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வான் என்பதாம்.

242. கார் தொடங்கின்றே!

பாடியவர் : விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மறுத்தராநின்றி தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.

[(து.வி.) வினைமுடித்து மீள்கின்ற தலைவன், தலைமகள்பாற் கொண்டுள்ள காதன்மை மேலெழ, விரையத் தேரைச் செலுத்துமாறு தன் பாகனுக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]

இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் பொன்னெனக் கொன்றை மலர மணியெனப் பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து 5 செல்க பாகநின் தெரே! உவக்காண் கழிப்பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக் காமர் நெஞ்சமொடு அகலாத தேடூஉ நின்ற இரலை ஏறே! 10

தெளிவுரை : பாகனே! இலையுதிர்ந்திருந்த பிடாமரங்கள் எல்லாம் குளிர்ந்த மலர்களைத் தருகின்ற அரும்புகளை முகிழ்த்தன. புதர்மேல் ஏறிப்படர்கின்ற முல்லைக் கொடியில் பூக்கள் மலர்ந்தன. கொன்றைகள் பொற்காசுகளைப் போன்ற பூக்களைப் பூத்தன. நீலமணியின் நிறத்தைப் போன்ற பலவாய் மலர்களை யுடையவாய்க் காயாவின் குறுகியவான கிளைகள் விளக்கம் பெற்றன. காலைப் பொழுதிலேயே மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர் நிலத்திலே போகிய இளைய பிணைமானானது, மருண்டு விழித்தலையுடைய கண்களைக் கொண்ட தன் குட்டியின் பின்னே, தன் இனமாகிய ஏனைய மான் கூட்டத்தினின்றும் நீங்கி வேறிடத்தை நோக்கி ஓடிப்போகின்றது. அப்பிணையின்மீது விருப்பமிக்க நெஞ்சத்தோடு, தானும் இனத்தினின்றும் நீங்கிச் சென்றதாய், அதனைத் தேடியபடி நிற்கின்ற ஆண்மானையும் உவ்விடத்துக் காண்பாயாக! ஆதலின், நின் தேர்தானும் மிக விரைந்து செல்வதாக!

சொற்பொருள் : பிடவம்–பிடாமரம். ஈர்மை–குளிர்ச்சி. தளவம்–முல்லை. மணி – நீலமணி. காயா – காயாமரம். கஞல – விளங்கித் தோன்ற; பூவும் தளிருமாக அழகுடன் தோன்ற. காலை –பொழுது; காலைப் பொழுதும் ஆம். வல்விரைந்து – மிக விரைந்து. கழி – உப்பங்கழியின் நீர்; களர்பட்ட நிலப்பகுதி. மடமான் – இளமான்; என்றது பிணையினை. காமர் – விருப்பம். இரலை ஏறு – ஆண்மான். பேதை – குலத்தொழில் அறியாத சிறு குட்டி.

விளக்கம் : 'இலையில் பிடவம்' என்றது, கோடையில் இலையுதிர்த்து நின்ற பிடவினது பழைய தன்மையை; அது தான் ஈர்மலர் அரும்பின என்றான், அவ்வாறே வாடியிருக்கும் தலைவியும் புதுப்பொலிவு பெறுதலை நினைக்கின்றான். புதலிவர் தளவம் பூங்கொடி அவிழ்தலைக் காண்கின்றான், அவள் தன்னைத் தழுவிப் பெறுகின்ற மகிழ்வைக் கருதுகின்றான். பொன்னென மலர்ந்த கொன்றை காண்பான் அவள் பொன்மேனியையும், காயாவின் கருநீல மலரைக் காண்பான் அவள் கூந்தலையும் எண்ணுகின்றான் என்று கொள்க.

பேதைமையால் இனத்தினின்றும் பிரிந்து சென்ற தன் சிறுகுட்டியோடு சென்ற பிணையைத் தேடி நிற்கும் இரலை ஏற்றைக் காட்டினான், தானும் புதல்வனோடு வருந்திய படியிருந்து, பிறர்போல இன்புற்றிராது ஒதுங்கி நிற்கும் தன் தலைவியை விரையச்சென்று சேர்தலை விரும்புகின்றான்.

'களர் நிலம்' என்றது, அதன் செடி கொடியற்ற தன்மையைக் காட்டுதற்கு; அதன்கண் மான்குட்டி ஓடியது பேதைமையால் என்க; இதனைக் கேட்டலுறும் பாகனும் தேரை விரையச் செலுத்துவானாவன் என்பது இதனைக் கூறியதனால் விளையும் பயன் ஆகும்.

243. அறத்தினும் பொருள் அரியது!

பாடியவர் : காமக்கணி நப்பசலையார் திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவனின் பிரிவிடையே மெலிந்த தலைவியானவள், அறமும் பொருளுமாகிய வாழ்க்கைக்கு உறுதிப் பொருள்கள் பற்றிய சிந்தனையிலே ஈடுபட்டு நோகின்றது போல அமைந்த செய்யுள் இது.]


தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய
துறுகல் அயல தூமணல் அடைகரை
அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப்
பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில்
கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கையிட்டு 5
அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக்
கையறத் துறப்போர்க் கழறுவ போல
மெய்யுற இருந்து மேவர நுவல
இன்னா தாகிய காலைப் பொருள்வயின்
பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின்
அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே! 10

தெளிவுரை : தேன் உண்டாகின்ற பக்கமலை; அதனிடத்தே தெளிவான நீர் சூழ்ந்துள்ள ஒரு வட்டக் கற்பாறை; அந்தப் பாறைக்கு அயலதாகத் தூய மணல் பரந்து கிடக்கும் அடைகரை; அதனிடத்தே, அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துள்ள நறிய மாமரங்கள் மிகுந்த சோலை; அந்தச் சோலையின்கண்ணுள்ள மரங்களின் இலைச்செறிவு கொண்ட பகுதிகள் தோறும் அழகிய கண்களையுடைய கருங்குயில்கள் தங்கியிருக்கும். அவை, 'சூதாட்டக் காயானது உருண்டு போவது போன்றதான நிலையில்லாத வாழ்க்கை இது; இதனை முன்னிட்டுப் பொருளாசையாலே நும் துணையாவாரைப் பிரிந்து போகாதிருத்தலைப் பேணுவீராக; நீர்தாம் அறிவு உடையீர்!' எனப் பிரிவுத் துயரத்தாலே செயலறும்படியாகக் கைவிட்டுப் போக நினைப்பார்க்குக் கடிந்து உரைத்து, அவர் போக்கை விலக்குவது போலக் கூவாநிற்கும். 'மெய்யொடு மெய்யானது பொருந்துமாறு தன் பெடையுடன் கூடியிருந்தபடியாக, நம் உள்ளத்தேயும் விருப்பமுண்டாகக் கூவாநிற்கும். நமக்குத் துன்பந் தருவதாகிய இக்காலத்தினும் (இளவேனிற் காலத்தினும்) பொருள் குறித்துத் தம் மனைவியரைப் பிரிதல் ஆடவர்க்கு இயல்பென்று கூறப்படுமானால், அறத்தைக் காட்டிலும் பொருள் தான் பெரிதும் அருமையுடையது போலும்!

சொற்பொருள் : தேம்படு சிலம்பு – தேன் கூடுகள் பலவற்றையுடைய பக்கமலை. தெள்ளறல் – தெளிந்த நீர். துறுகல் – வட்டக்கல். அலங்கு சினை – அசையும் கிளை. பொதும்பு –இலைச் செறிவு, பூங்கண் – அழகிய கண்; சிவந்த கண்ணும் ஆம். கவறு – சூதாடு காய்; இஃது உருண்டோடுதலின், சூதினை உருளாயம் என்று குறளினும் உரைப்பர் (குறள். 933). கையற – செயலற. மேவர – விருப்பம் உண்டாக.

விளக்கம் : தெள்ளறல் தழீஇய துறுகல் அயல் தூமணல் அடை கரையாவது, மலையிடத்துச் சுனையைச் சார்ந்த அடைகரை என்க. மழைநீர் சுனையை நோக்கி ஓடி வந்து வந்து தூயமணல் அப்பகுதியிற் செறிந்திருக்கும் என்பதாம். 'ஊடினீர் எல்லாரும் உருவிலான் தன்னாணை, கூடுமின் என்று குயில் சாற்ற' எனப் பிறரும் குயிற்குரலுக்கு இவ்வாறு பொருள் கொள்வர். 'அகறல் ஓம்புமின் அறிவுடையீர்' என்றலின், அகன்று போதலைச் செய்பவர் அறிவிலர் என்பதும் பெற வைத்தனர்.

‘மேவர நுவல' என்பது கூடியிருப்பார்க்கு அக்குரல் தான் பெரிதும் இன்பந் தருதலின், அவர் விரும்பும்படியாகக் கூவி என்றும் பொருள் கொள்ளப்படும். 'இன்னாவாகிய காலை' என்றது 'பிரிதற்கு உரியதல்லாத காலத்தினை. 'அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே' என்று ஆடவரைக் குறித்துக் கூறியது, அது பெண்டிர்க்கு என்றும் இயல்பாகாது என்பதனாலுமாம்.

பிரிவிடத்தும் அவனை நோவாமல், ஆடவரது இயல்பைக் குறித்தே மனம் வெதும்பும் தலைவியது உள்ளச் செவ்வியை எண்ணி உணர்ந்து இன்புறல் வேண்டும்.

244. மாதர் வண்டின் தீங்குரல்!

பாடியவர் : கூற்றங் குமரனார்.
திணை : குறிஞ்சி.
துறை : அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம்புக்கது.

[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்துறைந்த காலத்திலே, தலைவியின் நலங்கெடக் கண்ட தோழி, 'இனி நமராவார்க்கு உண்மை அறிவுறுத்தி வரைவு எதிர் கொள்ளுவிப்பன்' என்கின்றாள். அவளுக்குத் தலைவி தன் ஆற்றாமை தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர்மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ 5


துயர்மருங்கு அறியா அன்னைக்கு இந்நோய்
தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலிற் கொடியை தோழி
மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
செயலை அந்தளிர் அன்னவென் 10
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே.

தெளிவுரை : தோழீ! மணிகள் நிரம்பக் கிடந்து ஒளியெறிக்கின்ற நெடிதான மலைப்பக்கத்தே, அழகுண்டாக உயர்ந்து நிற்கும் அசோகினது செவ்விய தளிரைப் போன்றதாகிய என் நல்ல மேனியினது அழகானது முற்றவும் கெடும்படியாகச் செய்த, வலியிழந்த என் மாமைநிற மெய்யிற் படர்ந்துள்ள இப்பசலை நோயினை நீயும் கண்டனை. கண்டும்,

மழை பெய்தமையாலே பெரிதும் குளிர்ந்து போயுள்ள மலைச்சாரற் பகுதிகளிலே, கூதிர்க்காலத்தே பூப்பதாகிய கூதளத்தின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பியபடி இருக்கும். அப்பூக்களின்பால் மொய்க்கின்ற அழகிய வண்டுகளின் இனிதான இசைக்குரலை, மணம் வீசும் பக்கமலையிடத்தேயுள்ள அசுணமாவானது, யாழோசையென மயங்கிக் கேட்டபடியும் இருக்கும். அத்தகைய உயர்மலை நாடனுக்கு, 'இந்நோய் தீர்தற்கான வழிதான் இது' வெனச் சொல்லுதலான ஒன்றையோ, அல்லது,

'நாம் படுகின்ற துயருக்குரியதான காரணந்தான் இது'வென அறியாதாளான அன்னைக்கு. 'இந்நோய்தணியும் வழிதான் இது' என உரைத்து, அறத்தொடு நிற்றலான ஒன்றையோ, நீதான் செய்கின்றாய் அல்லை! ஆதலின் நீதான் கொடியையாவாய் காண்!

சொற்பொருள் : கூதிர் – கூதிர்காலம். கூதளம் – கூதாளி எனப்படும் கொடியினம். அலரி – அலர்ந்த பூக்கள். மாதர் –அழகிய. நயவரும் – விருப்பம் வரச் செய்யும். தீங்குரல் – இனிதான இசைக்குரல். அசுணம் – அசுணமா; புள் எனவும் கொள்வர். மணி – நீலமணி. செயலை – அசோகு. மதன் வலி. மாமெய் – மாமைக் கவின் கொண்ட மெய்.

விளக்கம் : 'மணம் நாறு சிலம்பு' என்றது, வேறு பலவாய பூக்களின் மணத்தோடுங் கூடியதாக மண்ணின் குளிர்ந்த மணமும் கலந்து மணப்பதைக் குறித்ததாம், 'செய்யாய்; ஆதலிற் கொடியை' என்றது, செய்யின் எனக்கு இனியை என எதிர்மறைப் பொருள்படக் கூறியதாகக் கொள்வதுமாம். 'உயர் மலை நாடன்' என்றது, நீ அவன்பாற் குறையைக் கூறின், விரைந்து குறைமுடிக்கும் உயர் பண்பினன் அவன் என்றதும் ஆம்.

அன்னை வெறியயர்தல் குறிகேட்டல் முதலாயின செய்தற்கண் ஈடுபட்டுக் கவலையுறல் கண்டும், அதனைத் தடுக்கு மாற்றால், 'நாடனது மார்பு செய்த இந்நோய்க்கு மருந்து அவனே' எனக் கூறி அறத்தோடு நில்லாமையை நினைவாள், அதுதானும் செய்திலை என்றனள். இதன் பயன், தோழி அறத்தோடு நிற்றலைச் செய்ய முற்படுவாள் என்பதாம்.

உள்ளுறை : கூதாளியிலே மொய்த்து இசைக்கும் வண்டின் குரலை யாழிசைபோலும் என மயங்கும் அசுணமாப்போலே, தலைவன் நலனுண்டு துறத்தலாலே வேறுபட்டுவிட்ட என் நோயை முருகு அணங்கியது போலும் என அன்னையும் பிறழ உணர்ந்தனள் என்பதாம்.

மேற்கோள் : (1). 'அறத்தோடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப' என்னும் தொல்காப்பியச் சூத்திர (203) உரைக்கண், இச்செய்யுளை எடுத்துக்காட்டி, 'இது தலைவி அறத்தொடு நிற்குமாறு' என்பர் இளம் பூரணர்.

(2) 'உயிரினும் சிறந்தன்று நாணே' என்னும் சூத்திர உரைக்கண் (113) இதனை எடுத்துக் காட்டி,இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது' என்பர் நச்சினார்க்கினியர்.

245. சுரும்பிமிர் சுடர் நுதல்!

பாடியவர் : அல்லங்கீரனார்; அள்ளங் கீரனார் எனவும் பாடம்.
திணை : நெய்தல்.
துறை : குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.
[(து-வி.) தலைமகனுக்காகக் குறைமுடிக்க இசைந்த தோழி, தலைவியிடம் வந்து, அவள் கருத்தை வயப்படுத்தக் கருதியவளாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது. சொல்லாடலின் நுட்பம் அமைந்துள்ளமை காண்க]


நகையா கின்றே தோழி தகைய
அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத்
துணிநீர்ப் பௌவந் துணையோடு ஆடி
ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் 5
தெளிதீங் கிளவி யாரை யோவென்
அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீயெனப்
பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்
தான்நம் அணங்குதல் அறியான் நம்மில்
தான்அணங் குற்றமை கூறிக் கானல் 10
சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப்
பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே.

தெளிவுரை : தோழீ! "அழகு மிகுதியான மலர்களையுடைய கழிமுள்ளியினின்றும் ஆய்ந்தெடுத்த மலர்களாலே தொடுத்த பூமாலையினை, நீலமணி போன்ற கூந்தலினிடத்தே வண்டுகள் வந்து மொய்க்கும்படியாகச் சூடிக்கொண்டனை! தெளிந்த நீரையுடையதான கடலிடத்தே தோழியரோடும் சென்று விளையாடினை! நேரிதாய் நுணுகிய இடையினையும், அகன்ற அல்குல் தடத்தையும், தெளிந்த இனிய சொல்லையும் உடையாளே! அரிதாகச் சேர்ந்திருக்கின்ற எனது இனிய உயிரைக் கவர்ந்த நீதான் யாவளோ?" என்று அவன் வினவினான். பூண்கள் மிகுதியான நெடுந்தேரிற் பூட்டிய குதிரைகளின் வாரைக் கையிலே தாங்கியபடியே நின்றான். தான் நம் மனத்தைக் கவர்ந்தானாய், நம்மை வருந்தச் செய்ததனை அறியாதவனாய், நம்மாலே தான் வருத்த முற்றமை மட்டுமே எடுத்துக் கூறினான். கானற் சோலைக் கண்ணே, வண்டுகள் மொய்த்த ஒளிகொண்ட நம் நெற்றியை நோக்கியவாறே, பெரிய கடல்நிலத் தலைவனான அவன், நம்மைத் தொழுதும் நின்றான். இதுதான் நகையுடையதாய் இராநின்றது காண்!

சொற்பொருள் : தகைய–தகுதியுடைய; தகுதியாவது கொய்து சூடுதற்கான தகைமை; அழகுற இதழ் விரிந்திருத்தலும் ஆம். முண்டகம்–கழிமுள்ளி. மணி–நீலமணி. தைஇ–ஒப்பனை செய்து. துணிநீர்–தெளிந்த நீர்; அலை மிகுதியற்றிருக்கும் கடல்நீர். 'துணை' என்றது தோழியரை ஒழுகு நுண் இடை–நேரிதாய் நுணுகிய இடை. தெளிதீம் கிளவி– தெளிந்த இனிய பேச்சு. 'அது புணர் இன்னுயிர்' என்றது, உயிரின் சிறப்புப்பற்றி; அது கழியின் மீளக் கொணர்ந்து புணர்த்தல் ஏலாமையின் இப்படிக் கூறினாள். அதனைக் கவர்தல் மிகக் கொடுமை என்பாள் 'வௌவிய நீ' என்று பழி கூறினான். அணங்குதல்–தாக்கி வருத்துதல்.

விளக்கம் : தலைவிக்கும் தலைவனுக்கும் முன்னரே ஏற்பட்டிருந்த உறவினைத் தான் அறிந்தமை புலப்படத் தான் ஏதும் அறியாதாள் போலக்கொண்டு தோழி இப்படி உரைக்கின்றாள். கானற் சோலைக்கண் அவன் தொழுது நின்றமை கூறினாள், அவன் தலைவியைக் காண விரும்பியே அவ்விடத்துக் காத்து நின்றதனைத் தான் உணர்ந்ததனைக் கூறினாள். அவன் செல்வக் குறைபாடின்மை கூறுவாள், 'தேர்ப்புரவி தாங்கி' என்றனள். அவன் காதன்மை மிகுதி கூறுவாள் 'தொழுது நின்றது' கூறினாள். அவனாலே தலைவியும் மயங்கியதைத் தான் உணர்ந்ததைக் கூறுவாள், 'தான் நம் அணங்குதல் அறியான்' என்றாள்.

பெருங்கடற் சேர்ப்பன் இவ்வாறு நம்மைக் கண்டு வினாயதும், தொழுததும் நகையாடுதற்குரிய செயலல்லவோ என்று களிப்போடு கூறுகின்றாள். இவற்றால் தலைவிக்குத் தோன்றும் மெய்ப்பாடுகளை அறிந்து அவளைத் தலைவனோடு சேர்த்தல் இதன் பயனாகும்.

246. வருதும் என்ற பருவம்!

பாடியவர் : காப்பியஞ் சேந்தனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீ இயது.
[(து-வி.) பிரிந்துறை வாழ்விலே மெலிவுற்ற தலைமகளை நோக்கி, 'அவன் இன்னே வருகுவன்' என்று வலியுறுத்திக் கூறித் தெளிவிக்க முயலுகின்ற தோழியின் கூற்றாக அமைந்த செய்யுள் இது. பிரிவுத் துயரத்தின் மிகுதியாலே பெரிதும் நொந்து நலிவும் மெலிவும் அடைந்த தலைவியின் மனம் பெரிதும் சோர்ந்து போகின்றது. அவளுக்குக் கார்காலத்து வரவைக் காட்டியபடி தோழி இவ்வாறு தேறுதல் உரைப்பதாகக் கொள்க.]


இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனைமர நொச்சி மீமிசை மாச்சினை
வினைமாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச் 5
செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்,
வரூவர்—வாழி தோழி—புறவில்
பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை யவிழ்
இன்னிசை வானம் இரங்குமவர்
'வருதும்' என்ற பருவமோ இதுவே? 10

தெளிவுரை : வாழ்வாயாக தோழீ! நாம் குறிப்பிட்ட இடங்களிலே இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக நிகழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம் பக்கத்தேயாய் அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது. மனையிடத்தே வேலியாக அமைந்துள்ள நொச்சிமரத்தின் மேலாக, உயரமாக வளர்ந்துள்ள மாமரத்துக் கிளையிலிருந்தபடியே, இனிமையுண்டாகக் கூவுதலிலே தேர்ந்த கருங்குயிலும் தன் குரலினை எடுத்துக் கூவாநிற்கும். திட்பம் கொண்ட உள்ளத்தோடே பலவான சுரங்களையும் கடந்து சென்று, பொருளைச் செய்தலைக் குறித்து நம்மை விட்டுப் பிரிந்து போனவர் நம் தலைவர். ஆயினும், அவர் தாம் குறித்துச்சென்ற காலத்தைப் பொய்ப்பதிலர்; உறுதியாக வந்து சேர்வர். காட்டினிடத்தே நிற்கும் பொன்னிறப் பூக்களைக் கொண்டவரான கொன்றை மரங்களோடு, பிடாமரங்களும் அரும்பு முகிழ்த்து மலர்தலைச் செய்கின்றன. இனிதாக முழங்குதலையுடைய மேகமும் முழங்கா நிற்கும். அவர் 'வருவேம்' எனக் குறித்த பருவமும் இதுவேயாகும். அவர் இன்னே வருவர்காண்!

சொற்பொருள் : இடூஉ ஊங்கண்–குறிப்பிட்ட இடங்கள். இனிய படூஉம்–இனிய குறிகள் தோன்றும். பாங்கில்–நம் பக்கமாக; நமக்கு ஆதரவாக. மனைமர நொச்சி–மனைக்கு வேலியாக அமைந்துள்ள நொச்சிமரம். மாச்சினை–மாமரக்கிளை. வினைமாண்–தன்வினையிலே மாண்புடைய; அது இனிமை பயப்பக் குரலெடுத்துக் கூவுதலாகிய செயல். உரம் – உள்ளத் திண்மை; அது காதலியைப் பிரியத் துணிதலும், சுரநெறிக்கண் துணிவோடு சென்று கடத்தலுமாகிய மனத்திட்பம். நீந்தி–முயற்சியோடு கடந்து சென்று. புறவு – காடு. இன்னிசை வானம் – இனிதாக முழங்கும் மேகம்; முழக்கம் இனிதாதல், இது அவர் வருவதாகக் குறித்த பருவத்தினது வரவை அறிவித்தலால்.

விளக்கம் : கட்டுக் காணுதலும், பல்லி சொல்லுக்குப் பலன் காணலும் பண்டைய வழக்கம் என்பது இச்செய்யுளால் அறியப்படும். 'மனைவயிற் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே' எனக் கலித்தொகையுள்ளும் (கலி 11) இவ்வழக்கம் கூறப்படும். செய்தற்கு உரிய பொருளைச் செய்பொருள் என்று கூறினாள். 'அவர் தவறாதே வருவர்; நீயும் அதுவரை பொறுத்திருப்பாயாக' என்று தெரிவிக்கின்றாள் தோழி. இதனைக் கேட்கும் தலைவியும் தன் துயரத்தை ஆற்றியிருப்பாளாவள் என்பது இதன் பயனாக விளங்குவதாம்.

247. எஃகுறு பஞ்சின் எழிலி!

பாடியவர் : பரணர்.
திணை : குறிஞ்சி
துறை : .... 'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.

[(து-வி.) வரைவிடை வைத்து வேந்துவினைமேற் பிரியக்கருதிய தலைவனை நெருங்கி, 'நின்னைப் பிரியின் இவள் மெலிவுற்று அழிவாள்' எனக் கூறி, 'விரைந்து வரைந்து கொள்க' எனத் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங்கோடு கழாஅ
வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி
எஃகுறு பஞ்சிற் றாகி வைகறைக்
கோடுயர் நெடுவரை ஆடும் நாட! நீ 5
நல்காய் ஆயினும் நயனில செய்யினும்
நின்வழிப் படூஉம்என் தோழி நன்னுதல்
இருந்திறை கூடிய பசலைக்கு
மருந்துபிறி தின்மைநன்கு அறிந்தனை சென்மே!

தெளிவுரை : பழைமையுற வந்த வலிமையோடும் மாறுபாடும் மிக்கெழலாலே சினங்கொண்டு, புலியைக் கொன்ற களிற்றினது சிவந்த கோட்டினைக் கழுவுமாறு. இரவிலே வீழ்கின்ற மழையைப் பொழிந்தது, இனிய இடிக்குரலையுடைய மேகம். அதுதான், பிற்றைநாளின் வைகறைப் பொழுதிலே, இருப்பு வில்லாலே அடிக்கப்பட்டு நொய்ம்மையாகிப்போன பஞ்சைப் போலவாகிப் பரந்து, உச்சியுயர்ந்த நெடிதான மலைப்பக்கத்தே இயங்கியபடியிருக்கும் நாட்டிற்கு உரியவனே! நீ இவளை வரைந்துகொண்டு இவளுக்கு அருளிச்செய்யாய் ஆயினும், நின் தலைமைக்குப் பொருந்தாத செயல்களையே செய்தாய் ஆயினும், நின் உள்ளஞ் சென்ற வழியே தான் நடக்கும் பண்பினள் என் தோழியாவாள். இவளுடைய நல்ல நெற்றியினிடத்தே நிலையாகத் தங்குதலை மேற்கொண்ட பசலை நோய்க்கு மருந்து நின்னையன்றிப் பிறிதொன்று யாதும் இல்லையாதலை நன்கு அறிந்தனையாகி, அதன்மேல் நீயும் நின் வினைமேற் செல்வாயாக!

சொற்பொருள் : தொன்றுபடு துப்பு–பழைமையுற வந்த வலிமை. முரண்–மாறுபாடு. பழைய வலிமையோடு முரணும் மிகுதியாகிச் சினமும் எழவே அதன் வன்மை அளவிடற்கரிதாயிற்று என்பதாம். செங்கோடு–சிவந்த கோடு; சிவந்தது புலியின் குருதி படிந்ததால். எஃகு–பஞ்சு கொட்டும் இரும்புவில். வைகறை–விடியற்காலம்.கோடு–உச்சி. நயனில–தகுதிக்கு மாறுபட்டன; இது அடைந்தார்க்கு அருளாமையும், அவர்க்குத் தன்னாலே வருத்தம் தோன்றச் செய்தலும். இருந்து இறைகூடிய பசலை–நிலையாகத் தங்கியிருந்து படர்ந்த பசலைநோய்; 'விருந்திரை' எனவும் பாடம்.

விளக்கம் : பெயல் நீங்கிய மேகங்கட்கு அடிக்கப்பட்டு நொய்தான பஞ்சை உவமையாகக் கூறினர். வரைவிடை வைத்துப் பிரியலுற்ற தலைமகனுக்குச் சொல்பவளாதலின் தான் தலைவிக்குத் தேறுதல் பலகூறித் தெளிவித்தமை தோன்ற, 'நிள் வழிப் படூஇம் என் தோழி' என்றனள்.

இதனால், அவன் சென்று வினைமுடித்து விரைந்து வந்து தலைவியை வரைந்து இல்லற வாழ்வில் இன்புறுத்தல் வேண்டும் என்பதாம். 'பசலைக்கு மருந்து பிறிதின்மை நன்கு அறிந்தனை சென்மே' என்றது, நின்னையன்றி இவளைக் காப்பவர் பிறர் யாருமில்லை என்றதாம். இவள் நோய் பிறரால் அறியப்பட்டுப் பழியுரைக்கு ஏதுவாக, அதனால் இவள் உயிர்தரியாளாதலும் கூடும் என்றும் சொன்னதாம்.

இதனைக் கேட்டலுறுபவன், தலைவியை வரைந்து கொள்ளுதற்கே முதற்கண் முற்பட்டவனாகத் தான் வினைமேற் செல்லுதலையும் சிலகாலம் தள்ளிப்போடுபவனாவான் என்பதாம்.

உள்ளுறை : புலியைக் கொன்ற களிற்றின் கோட்டைக் கழுவும்படி இரவில் மழைபொழிந்த மேகம், வைகறையில் வரைமீது நொய்மையுற்ற பஞ்சினைப்போல் இயங்கும் என்றது, வேற்றரசை வெல்லுதல் குறித்த போரிலே நீ பட்ட புண்களை எல்லாம், இவள்தான் தன் தழுவுதலாலே போக்கி விட, நீயும் எளியையாய் இவளோடு கூடியவனாக இல்லிலேயே இருப்பவனாவாய் என்றதாம். இரவில் பெய்த கார் மேகம் வைகறையில் விளர்த்துப் போவதைப்போல, நின்னாலே தலையளி செய்யப்பெற்றுப் பூரிப்படைந்த இவள் மேனியின் எழில் நலம், வைகறையில் நீ அகலவும், கெட்டு வெளுத்துப் போதலும் நிகழும் என்றதுமாம்.

248. மயில்போல் மருள்வேனோ?

பாடியவர் : காசிபன் கீரனார்.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.

[(து.வி.) கார்ப்பருவம் வந்தது; அவர்தாம் வந்தார் அல்லர் என்று வாடி நலனழிந்த தலைவிக்கு, 'இது உண்மையான கார்காலத்தின் தொடக்கம் அன்று' எனத் தோழி கூறி, அவளைத் தெளிவிக்க முயல்வதுபோல் அமைந்த செய்யுள் இது.]


சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர்முகங் கடுப்பத்
தண்புதல் அணிபெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர் மன்இனிப்
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் 5
அன்பின் மையிற் பண்பில பயிற்றும்
பொய்யிடி யதிர்குரல் வாய்செத்து ஆலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள் வேனோ? வாழியர், மழையே!

தெளிவுரை : மேகமே! என் காதலர் வினைகருதி என்னைப் பிரிந்து சென்ற காலத்து, 'சிறு பூக்களையுடைய முல்லையின் தேன்மணம் கமழ்கின்ற பசிய மலர் எல்லாம், புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட நல்ல யானையின் புள்ளி பொருந்திய முகம்போலத் தோன்றியவாகத், தண்மையான புதர்கள் தோறும் அவை அழகுபெறுமாறு மலர்ந்திருக்கும், மிகுதியான பெயலையுடைய கார்முகில் எழுதரும் பருவமே யான் வரும் பருவம்' என்றனர். அங்ஙனமாகவும், பெருந்துன்பத்தாலே எனது உள்ளம் இப்போது நடுங்குதலைக் காணும் பொருட்டாக, என்பால் நினக்கு அன்பு இல்லாமையாலே, பண்பினுக்கு இயல்பல்லாத நிலையிலே ஒலிக்கின்ற பொய்யான இடியது அதிரும் குரலினையும் மெய்யானதே எனக் கொண்டு ஆரவாரிக்கின்ற, இனஞ்சூழ்ந்த மயில்களினது அறிவில்லாத கூட்டத்தைப்போல, யானும் நினைக் கார்ப்பருவத்து மேகமாகக் கொண்டு மயங்குவேனோ? யான் மயங்கேன் கண்டாய்!

சொற்பொருள் : சிறுவீ–சிறியவான பூக்கள். பசுவீ–பசுமையான புதுப் பூக்கள். பொறி–புள்ளி. வரி–கோடு. புகர்–புள்ளி. அஞர்–துன்பம். பண்பில–பண்பில்லாத் தன்மையோடும் கூடியதாக. வாய்–வாய்மை. ஆலும்–ஆரவாரிக்கும். மடக்கணம்–அறிவற்ற கூட்டம்.

விளக்கம் : மழையை வாழ்த்தியது இகழ்ச்சிக் குறிப்பு. தன் தலைவன் பொய்யுரை புகலா வாய்மையன் ஆதலின், அவன் குறித்துச்சென்ற கார்ப்பருவத்தின் தோற்றத்தையே பொய்த் தோற்றம் என்று இகழ்கின்றாள் தலைவி. இதனைக் கேட்டுத் தோழி, தலைவன் உறுதி பொய்த்தான் எனக்கூற முற்பட்டவள், தலைவியின் கற்புச் செவ்வியை அறிந்து அதனைக் கூறாளாய், தலைவியின் பொறையைப் போற்றுகின்றனள் என்றும் கொள்க.

புதரிற் படர்ந்த முல்லையின் சிறுபூக்கள். யானைமுகம் போலத் தோற்றும் என்றது, அவ்வாறே நீயும் எனக்குத் துன்பத்தாலே தோன்றினை என்பதாம். வண்பெயலால் தண்புதல் அணிபெற்றாற்போல, அவர் வரவால் யானும் அழகுபெறுவேன் என்கின்றாள் தலைவி.

பொய்யிடியைக் கார்காலத்து இடியாம் மெய்யெனக் கருதி ஆரவாரிக்கும் இனமயில் மடக்கணம்போல, நின்வரவை உண்மையான காலத்தின் வரவு எனக்கொண்டு இவ்வூர்ப் பெண்டிர் பலரும் அவரைப் பழித்து ஆரவாரிப்பர் என்பதும் ஆம்.

249. அலரெழச் சென்றது தேர்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை மெலிந்தது.

[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றான் தலைவன். அதனாலே மிகச்சோர்ந்து மெலிவுற்றாள் தலைவி. அவளுடைய மனத்தெழுந்த கலக்கத்தின் காரணமாக அவள் புலம்புவதுபோல அமைந்த செய்யுள் இது.]


இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத் தன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி யன்ன விளங்கிணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தா துதிரப்
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல் 5
வரிவண் டூதலின் புலிசெத்து வெரீஇப்
பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கண்
மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி
அம்பல் மூதூர் அலரெழச் 10
சென்றது அன்றோ கொண்கன் தேரே!

தெளிவுரை : இரும்பைப்போன்று விளங்கும் கரிய கிளைகளையுடையது புன்னைமரம். அதன் பசுமையான இலைகள் நீலம்போலத் தோன்றும். அவ்இலைகளுக்கு உள்ளிடந்தோறும் வெள்ளியைப் போல வெண்ணிறம் கொண்ட அதன் பூங்கொத்துக்கள் விளங்கித் தோன்றும். அப்பூக்களிலுள்ள பொற்றுகள் போன்ற நரிய தாது மணல்மேட்டிலே உதிரும். புலியின் பொறிபோலும் புள்ளிகளைக் கொண்டதாக மணங் கமழும் நிறம்பெற்ற அம்மணல்மேடு தோன்றும். வரியமைந்த வண்டுகள் அவ்விடத்தே மொய்த்து ஊதா நிற்கும். அதனைக் காணும் விரைந்த செலவையுடைய குதிரைகள், அதுதான் புலிபோலும் என மயங்கி அச்சங் கொள்ளும். பலமுறை இழுத்து நிறுத்தவும் நிறைக்கு அடங்கி நில்லாவாய்ப் பந்து போலத் தம் கால்களால் தாவிக் குதிக்கும். அதனைக் கண்டு வளப்பமிக்க நம் சேரியின்கண் உள்ளாரெல்லாம், கல்லென்னும் ஆரவாரத்தோடு அவ்விடத்தே சென்றனர். அம்பல் கூறுவார் வாழ்கின்ற நம் மூதூரிடத்தும் அதனாலே நம்மைக் குறித்த பழிச்சொற்கள் எழுந்தன. இவ்வாறு, வந்தும் நமக்கு அருளாதபடி சென்றது அல்லவோ நமது கொண்கனின் தேர்! அவன்தான் இனி மீண்டும் இவ்வூரிடத்தே வந்து நம்மையும் வரைந்து மணந்து கொள்வானோ? யான் எவ்வாறு உயிர் வாழ்வேன்?

சொற்பொருள் : பாசிலை–பசிய இலைகள். இணர்–பூங்கொத்து. பூ நாறு–பூமணம் கமழும். குரூஉச் சுவல்–நிறம் கொண்ட மணல்மேடு. புலிசெத்து–புலிபோலும் என மயங்கி. பரி–விரைந்த செலவு. வயங்குதாள்–வலியமைந்த கால்கள். தகைவரை–நிற்கும் எல்லைக்கண். மல்லல்–வளமை. கொண்கன்–நெய்தல்நிலத் தலைவன்.

விளக்கம் : பூமணங் கமழ நிறம்பெற்று விளங்கும் மணல்மேட்டின் மேலாகப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து கிடந்ததனைப் புலிபோலும் எனக் கொண்டு அஞ்சிய குதிரைகள், கட்டுக்கு அடங்காவாய்ப் பந்துபோலத் துள்ளிக் குதித்தன என்க. இதனால் ஊரவர் வந்து கூடி ஆர்ப்பரிக்க, ஊரிடத்தே பழியும் எழலாயிற்று. இதனால் அவமானம் அடைந்தான் அவன். அவன் இனியும் இவ்வூரிடத்தே வந்து என்னையும் வரைந்து மணந்து கொள்வானோ என்று ஏங்குகின்றாள் தலைவி.

'சேரி' என்பது ஊரின் புறத்தே ஒரு சாரார் சேர்ந்து இருப்பது. அதனைக் கடந்து சென்றால் உயர்குடியினர் வாழும் மூதூர் இருக்கும். வெருவிய குதிரைகள், சேரியினுள்ளே, சேரி கல்லெனப் புகுந்து சென்று, அம்பல் மூதூர் அலர் எழுமாறு அதனுள்ளும் போயினதாகச் சென்று மறைந்தது என்பதும் கருத்தாகும்.

250. நகுகம் வாராய்!

பாடியவர் : மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார். :திணை : மருதம்.
துறை : புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற் குரைத்தது.

[(து.வி.) பரத்தை உறவிலே மகிழ்ந்தவனாகச் சில காலம் தலைவியைப் பிரிந்திருந்த தலைவன், ஒரு சமயம் தன் வீட்டின் பக்கமாக வருகின்றான். தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடும் தன் புதல்வனைக் கண்டதும் மகிழ்கின்றான். அவனை எடுத்து அணைத்தபடியே தலைவியின் நினைவெழத் தலைவிபாற் செல்கின்றான். அப்போதும் அவள் 'நீர் யாரோ?' என்று கேட்க, அதனைச் சொல்லித் தன் பாணனுடன் நகையாடுவதாக அமைந்த செய்யுள் இது.]


நகுகம் வாராய் பாண! பகுவாய்
அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யாந்தன் 5
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஒரீஇ
யாரை யோவென் றிகந்துநின் றதுவே! 10

தெளிவுரை : பாணனே! நாம் நகையாடிக் களிக்கலாம் வருவாயாக! உள்ளே பரல்கள் இடப்பெற்றதும் பிளந்தவாயினை உடையதுமான கிண்கிணி ஆரவாரிக்கத் தெருவிலே சிறுதேர் உருட்டி நடைபயின்று கொண்டிருந்தனன், இனிய மொழியினைப் பேசும் எம் புதல்வன். செவ்வாம்பலின் மலரைப்போலத் தோன்றும் சிவந்த அவன் வாயின் நீரானது ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு, யான் இல்லத்துள் அவனை எடுத்து அணைத்தபடியே சென்றேன். விருப்பம் கொண்ட என் நெஞ்சமானது என்னைத் தூண்டிச் செலுத்துதலாலே யானும் தலைவியை முயங்குதல் என்னும் விருப்பத்தோடே அவளைச் சென்றும் நெருங்கினேன். பிறையது வனப்பைக்கொண்ட குற்றமற்ற அழகிய நெற்றியையும், மணங்கமழும் கரிய கூந்தலையும் கொண்டாளான என் காதலியானவள், என் வருகையைப்பற்றி வேறாகக் கருதிக் கொண்டாள். அஞ்சி அகலுகின்ற மான்பிணையினைப்போல என்னைவிட்டு ஒதுங்கிச் சென்று நின்றபடி, 'என் அருகே நெருங்கி வருவதற்கு நீதான் யாவனோ?' என்ற படியே வினவலையும் செய்தனள். அதனை எண்ணி யாம் நகையாடி மகிழலாம், வருவாயாக!

சொற்பொருள் : பகுவாய் பிளப்புண்ட மூட்டுவாய்; பெரியவாயும் ஆம்; இதனைத் தவளைவாய்க் கிண்கிணி என அதன் மூட்டுவாய் அமைப்பையொட்டிக் கூறுதலும் உண்டு. அரிஉள்ளிடு பரல்கள். தேர் நடை பயிற்றல்–சிறுதேர் உருட்டிய படி நடை பயிலுதல். தேமொழி–இனிமையான மழலைப் பேச்சு. பூநாறு செவ்வாய்–செவ்வாம்பலைப் போலத் தோன்றும் சிவந்த வாய். துரப்ப–செலுத்த. வேறு உணர்ந்து–என்னை வேற்றானைப் போலக் கருதி; இப்படிக் கருதியது ஊடற் சினத்தால் என்க. வெரூஉம்–அஞ்சும்; அஞ்சுவது பகை விலங்குகளைக் கண்டவிடத்து. இகந்து–கைகடந்து.

விளக்கம் : "தலைவன் தன்னை விரும்பி வந்தான் அல்லன்; தெருவிற் போவோன் தன் புதல்வனைக் கண்டதும் பாசத்தால் ஈர்க்கப் பெற்று, அவனைத் தூக்கியபடி உள்ளே வந்தவன், வந்தவிடத்துத் தன்னைக் கண்டதும் ஆசை மீதூர நெருங்குகின்றனன்" என்பதனை அறிந்த தலைவி, இவ்வாறு கடிந்து அவனைவிட்டு ஒதுங்கி நிற்கின்றாள். தங்கள் உறவின் பேறாகிய புதல்வனையும் நினையாளாய், 'நீ யாரையோ?' என்று சொன்னாள். இதுதான் தலைவனுக்கு நகைப்பைத் தருகின்றது. அதனைத் தன் பாணனோடும் சொல்லி மகிழ்கின்றான் அவன் இதனால், பாணனும் நகைகொள்ளத் தலைவியும் தன் சினந்தணிந்து தலைவனை ஏற்று இன்புறுத்துவாளாவது பயனாகும்.

மேற்கோள் : 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரத்தின் (தொல். பொருள்.) 'அழியல் அஞ்சல் ஆயிரு பொருளினும் தானவட் பிழைத்த பருவத்தானும்' என்றதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் இளம்பூரணனார். இச்சூத்திரத்தின், 'ஏனைவாயில் எதிரொடு தொகைஇ' என்னும் பகுதிக்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி,' இஃது ஏனை வாயிலாகிய பாணனுக்கு உரைத்தது' என்பர் நச்சினார்க்கினியர்.

251. நீடினை விளைமோ தினையே!

பாடியவர் : மதுரைப் பெருமருதன் இளநாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.

[(து.வி.) தினையை நோக்கிக் கூறுவதுபோல அமைந்தது இச்செய்யுள். புனங்காவல் கொண்டிருக்கும் காலத்தே வந்து, களவொழுக்கத்திலே ஈடுபட்ட தலைவனின் உள்ளத்திலே, தலைவியை விரைந்து வந்து வரைந்து மணந்து கொள்வதை வற்புறுத்த நினைக்கின்றாள் தோழி, அவன் வந்து, செவ்விநோக்கி ஒரு சார் ஒதுங்கி நிற்பதையும் அறிந்தவள், இப்படித் தினையை நோக்கிக் கூறுகின்றாள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.]


நெடுநீர் அருவிய கடும்பாட் டாங்கண்
பிணிமுத லறைய பெருங்கல் வாழைக்
கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும்
நன்மலை நாடனை நயவாய் யாம்அவன்
அளிபே ரன்பின் இன்குரல் ஒப்பி 5
நின்புறங் காத்தலும் காண்போய் நீயென்
தளிரேர் மேனித் தொல்கவின் அழியப்
பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து
தொடங்குநிலைப் பறவை உடங்குகுரல் கவரும்
தோடிடங் கோடாய், கிளர்ந்து 10
நீடினை விளைமோ வாழிய தினையே!

தெளிவுரை : தினைப் பயிரே! நெடிதான நீர்மையையுடைய அருவிகளின் பேரொலியானது எழுந்தபடியேயிருக்கின்ற அவ்விடத்தே, பிணிப்புண்ட அடியையுடைய பெரிதான மலைவாழையினது, கொழுவிய பருத்த இனிய கனிகளை, மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைக்குரிய மலைநாடன், என் தலைவன்! அவனை நீயும் விரும்புவாயாக! யாம், அவனது மிகுதியான பேரன்பின் திறத்தாலேயே, இனிய குரல் எடுத்துப் பாடினமாய்க், கதிர்களைக் கொய்யவரும் புள்ளினங்களை எல்லாம் ஒப்பினமாய், நின்னைப் பாதுகாத்திருப்பேம்! இதனையும் நீ கண்டிருக்கின்றனை! மாவின் தளிரனைய என் மேனியினது பழைய கவின் அழிதலாலே, பலியுண்ணும் கடவுட்கு வழிபாடு செய்வாராய், முருகைக் குறித்துத் தமர் வெறியாடலையும் இனி மேற்கொள்ளுவர். அவ்வாறு அவர் என்னைக் குறித்து வெறி அயர்தலை மேற்கொள்ளும் ஆரவாரமிகுந்த அக்காலத்து, யானும் இல்லின்கண் செறிப்பு உறுவேன். ஆதலின், கிள்ளை முதலாய பறவையினம் எல்லாம் ஒருசேரச் சேர்ந்துவந்து, நின் முற்றிய கதிர்களைக் கவர்ந்து போகும். ஆதலினாலே, தோடுபொதிந்த நின் கதிர்களைத் தலைசாய்க் காயாய், நிமிர்ந்து நின்று, நெடுநாட் கழித்துக் கதிரீன்று நீயும் விளைவாயாக! தினையே, நீயும் வாழ்க!

சொற்பொருள் : கடும்பாட்டு–கடுமையான வெருட்டும் பாட்டு. பிணிமுதல் அரைய–பிணிப்புண்ட அடிப்பகுதியையுடைய; இது கன்றுகள் பல்கிப் பிணிப்புண்டிருத்தலையும், காட்டுக் கொடிகளாலே பிணிப்புண்டிருத்தலையும் உணர்த்தும். நயத்தல்–விரும்பல். அளிபேர் அன்பு–தலையளி செய்தலாய பேரன்பு; இரக்கம்கொண்டு செய்த பேரன்பும் ஆம். புறங்காத்தல்–பாதுகாத்தல். தளிர் – மாந்தளிர். பலிபெறு கடவுள்–பலியேற்று உண்ணும் கடவுள்; முருகு. கலி–ஆரவாரம். தொடங்குநிலை–தொடங்கும் பொழுதிலே. கிளர்ந்து–நிமிர்ந்து நின்று.

விளக்கம் : 'களவுப் புணர்ச்சியினாலே என் பழைய மேனிநிறம் மாறுபட்டத்தறிந்த அன்னையும் தமரும், முருகு அணங்கிற்றுப் போலும் என்று கருதினர்; என்னைக் குறித்து வெறியயர்தலையும் மேற்கொள்வர். அக்காலத்து யானும் இற்செறிப்பு உறுதலை அடைவேன். ஆதலின், நின் கதிர்களைப் பறவையினம் கவர்ந்து போகும். ஆகவே, நீயும் கதிர் முற்றி விளைதலைச் சற்றுக் காலம் நீட்டிப்பாயாக' என்கின்றாள். இதனைக் கேட்கின்ற தலைவன், அவளைப் பிரிந்து வாழற்கியலாத தன் காதன் மிகுதியாலே தானும் உளஞ்செலுத்தப் பட்டானாய், அவளை மணந்து கோடற்கு உரிய செயல்களை நாடுபவன் ஆவன் என்பதாம்.

'தினை விளையுங் காலம் மணவினைக்கு உரிய காலமாதலின், அதனைத் தலைவனும் நினையாது நீட்டித்தவனாக இருத்தலின், 'தினையே நீயும் நின் கதிர்முற்றி விளைதலைச் சற்று அதுவரை நீட்டிப்பாயாக' என்றனளும் ஆம்.இன்றேல், அவனைப் பெறாத யாம் நலிவெய்தி அழிவெய்தலும் நேரும் என்றதும் ஆம். அவன்தான் காலத்தை மறந்தானாயினான்; ஆதலினாலே, நீ கதிர்முற்றுங் காலத்தையேனும் நீட்டிப்பாயாக என்பது தலைவியின் துயரத்தை நன்கு காட்டும்.

உள்ளுறை : அருவியொலி நீங்காதிருக்கும் இடத்தருகேயுள்ள வாழையின் கனியை, அவ்வொலிக்கு அஞ்சாதே சென்று மந்தி கவர்ந்து உண்ணும் அஃதேபோல, வெறியயர்தலிலே தமர் ஈடுபட்டு ஆரவாரித்திருக்கும் காலத்துத் தலைவி தலைவன்பால் வந்து களவிற் சேர்ந்து இன்புறலும் வாய்க்கும் என்றதாம். இதுதான் எளிதாகாமையின் வரைந்து கோடலே செயற்குரியது என்று குறிப்பாக உரைத்ததும் ஆம்.


252. புனைசுவர்ப் பாவை!

பாடியவர் : அம்மெய்யன் நாகனார்.
திணை : பாலை.
துறை : ‘பொருள் வயிற் பிரியும்’ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

[(து.வி.) ‘தலைவன் பொருள்தேடி வருதலைக் கருதினனாகப் பிரிவான் போலும்’ என, அவனது செயற்பாடுகளிலே கவலையடைந்தாள் தலைவி. அதனைக் கண்டனள் தோழி. ‘இவளது குணநலன்கள் யாவையுமே அவரைத் தடுத்து நிறுத்த வல்லமையற்றன; இனி ஆற்றியிருத்தலே செய்யற்பாலதாகும்’ எனத் தெளிவுற்றனள். அதனைத் தலைவிக்கும் அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


உலவை ஓமை ஒல்குநிலை யொடுங்கிச்
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட் டத்தம்
திறம்புரி கொள் கையொடு இறந்துசெயின் அல்லது
அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த 5
வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப்
பாவை யன்ன பழிதீர் காட்சி
ஐதேய்ந் தகன்ற வல்குல் மைகூர்ந்து!
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்
முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் 10
நன்னாப் புரையுஞ் சீரடிப்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே!

தெளிவுரை : சுவரினிடத்தே அழகிதாக எழுதப் பெற்ற பாவையினைப் போன்ற, குற்றத்தின் தீர்ந்த காட்சியைக் கொண்டவள்; மெல்லிதாகப் பொருந்தி அகன்ற அல்குல் தடத்தினை உடையவள்; மை எழுதப் பெற்று மலர் பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளைப் பொருந்தியுள்ள குளிர்ச்சியமைந்த கண்களைக் கொண்டவள்; முயலைப் பிடிப்பது கருதி எழுந்த, விரைந்த செலவைக் கொண்டதும், சினமுடையதுமான நாயினது நல்ல நாவைப் போல விளங்கும் சிறிதான அடிகளைக் கொண்டவள்; திரண்ட கூந்தலையும், புனைந்த இழையையும் உடையாளான தலைவி! இவளுடைய குணங்கள்— கிளைகளைக்கொண்ட ஓமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிடத்தே ஒடுங்கிக் கிடந்தபடி, 'சிள்வீடு' என்னும் வண்டுகள் ஒலி செய்தபடி இருக்கின்ற, சேய்மையிலுள்ள நாட்டிற்குச் செல்லும் வழிகளை இன்னபடியாகக் கடந்து செல்வேமென்னும் கோட்பாட்டோடு கடந்து சென்று பொருள் செய்தலை அல்லாது, வீட்டிடத்தே சோம்பியிருந்தோர்க்கு அரிய பொருளின் சேர்க்கையானது இல்லையென்று, இதுவரையிலும் ஒருப்பட்டு எழாத அவர் நெஞ்சமானது, இதுகாலை உடன்பட்டுப் பொருள் செய்தலைப் பற்றியே கருதலினால், மேற்கொண்ட வினையிடத்தே குறுக்கிட்டு அவரைத் தடுத்தலைச் செய்தில போலும்! ஆதலினாலே, இனி ஆற்றியிருத்தலே யல்லாது, யாம் செய்யத் தகுந்ததுதான் யாதுமில்லை!

சொற்பொருள் : ஓமை–ஒருவகைக் காட்டு மரம். ஒல்கு நிலை–இடுக்குப் பட்டுள்ள இடங்கள். 'சிள்வீடு' என்பது ஒருவகை ஒலி வண்டு. கறங்கும்–பெரிதாக ஒலிக்கும். திறம்–செய்தற்கான கூறுபாடுகள். சுவர்ப்பாவை–சுவரிடத்து எழுதப்பெற்ற பாவை; 'காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்ப் பாவை' என்று அகநானூற்றுள்ளும் கூறப்பெறும் (அகம்.369) 'என்றும் மாறாதிருக்கும் அழ'கென்பதனை இவ்வாறு குறித்தனர். முடுகு விசை–முடுகிய விரைவு. 'நாயின் நாக்குப் பெண்களின் அடிக்கு உவமையாதலை, 'வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி' என்பதனாலும் (பொருநராற்றுப்படை) அறியலாம்.

விளக்கம் : இவளுடைய அழகும் குணனும் அவன் செலவை மாற்ற இயலாவாயினமையின், 'இல்லிருந்தோர்க்கு அரும்பொருட் கூட்டம் இல்லை' என்னும் உலகியலறம் அவன் உள்ளத்தே முகிழ்த்து வலுப்பெற்றது. இனி, ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதாம்!

உள்ளுறை : ஓமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிள் இடுக்குகளிலே ஒடுங்கிக் கிடந்து சிள்வீடுகள் கறங்கும்' என்றனர். அவ்வாறே யாமும் பொலிவழிந்த மனைக்கண்ணே ஒடுங்கிக் கிடந்து புலம்பினமாய்த் தனிமைத் துயரத்தைக் கழித்து ஆற்றியிருத்தலே இனிச்செய்தற்குரிய அறமாகும் என்றதாம். ஓமை இல்லத்துக்கும், பட்டுப்போன கிளை இடுக்குகள் இல்லத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கும், சிள்வீடு தலைவிக்கும், அதன் கறங்கல் தலைவியின் பிரிவாற்றாதே புலம்பும் புலம்பலுக்கும் பொருத்தமாவன!

253. கவின் எய்திய காப்பினள் !

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

[(து.வி.) தலைவி இல்லிடத்தேயே செறிக்கப் பெற்றனள்; இனிக் களவுறவும் வாய்ப்பது அரிது! ஆதலின் நீதான் இவளை வரைந்துவந்து மணந்து கொள்ளலே இனிச்செய்தற்குரியது' என்று, தலைமகனிடம் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து
எனவ கேளாய் நினையினி நீநனி
உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் 5
பேரிசை உருமொடு மாறி முற்றிய
பல்குடைக் கள்ளின் வண்டுமகிழ்ப் பாரி
பலவுறு குன்றம் போலப்
பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே!

தெளிவுரை : ஒளி செய்கின்ற அணிகலனை அணிந்த இளமகள் நின் தலைவி. அவள் பெரிய முழக்கத்தோடேகூடிய இடியோசையோடு மழைமேகங்கள் மிகுதியாகச் சூழ்ந்ததும், பலவாகிய பனங்குடையிலே இட்டு உண்ணும் கள்ளாகிய வளவிய களிப்பையுடையதும், பலா மரங்கள் நிறைந்ததுமான, பாரியது பறம்புமலையினைப் கண்டார் வியக்கின்ற பேரழகினையும் எய்தினள். அதனாலே. இல்வயின் செறிக்கப் பெற்றனளாய் அரிய காவலை உடையாளும் ஆயினாள். அதனாலே, இனி நின்னோடும் களவுக்குறி சேர்ந்து இன்புறுதலைத் தள்னுள்ளத்தே மிகுதியாக நினைப்பினும், அதுதான் வாயாமை கருதி நடுங்குவாளாயினள். நீயுந்தான்,

புள்ளினம் தத்தம் துணையோடுங் கூடினவாய்த் தத்தம் கூடுகளிடத்தே சென்றடைந்து கூடியிருந்தாலும், கணவனும் மனைவியுமாகக் கூடியிருப்போரைக் கண்டாலும், படுக்கையுற்றுக் கிடக்கின்ற யானையைப் போலச் சுடுமூச்சினை உடையை ஆயினை. மிகுதியான நினைவிலே கலங்கிய வருத்தத்துடனே பெரிதும் உள்ளம் அழிந்தனையாய், என் சொற்களைக் கேளாயுமாயினை. இனியேனும் விரைந்து அவளை வரைந்துகொண்டு வாழ்தலுக்காவனவாய முயற்சிகளை விரையச் செய்தலை நினைவாயாக!

சொற்பொருள் : பதி – கூட்டிடம்; தங்குமிடம். பள்ளி யானை – படுக்கையிலே கிடந்த யானை. கழிபட வருந்திய –மிகுதிப்பட வருத்தமுற்ற. எவ்வம்–துன்பம்; அது காமமிகுதியாலே உண்டாயது. பெரிதழிந்து – பெரிதும் உளமழிந்து. உள்ளினும் –நினைப்பினும்; நினைத்தலாவது, தலைவனைக் களவுக் குறியிடஞ் சென்று சேர்தலை. பனிக்கும்–நடுங்கும். இசை – முழக்கம். மாரி – மழை மேகங்கள். முற்றிய – இருண்டு சூழ்ந்த. கவின்–அழகு.

விளக்கம் : 'உள்ளினும் பனிக்கும்' என்றது, இரவுக்குறி நேர்தல் ஒருகால் வாயாதாகும் எனின், அதன் பொருட்டு நீ வரும் வழியின் ஏதங் கருதியும், நினக்குத் தமராலே ஏற்படக்கூடிய துயரம் கருதியும் நடுங்குவாளாயினள் என்றதாம். களவு முட்டுப்பட்ட விடத்துக் கூடியிருப்பாரையும், கூடியிருக்கும் புள்ளினத்தையும் காணும்போதெல்லாம் தலைவன் பெரிதும் உளமழிந்து சோர்தலேயன்றி, வரைந்து வந்து மணத்தலைப் பற்றி யாதும் நினைத்திலன் என்பதாம்.

பறம்புமலையிலே வாழ்ந்த பாரிவள்ளல் வருவார்க்குக் கள்ளினை மிகுதியாகத் தந்து களிப்பான் என்பதனை, 'ஒருசார் அருவி யார்ப்ப வாக்கவுக்க தேக்கட் டேறல், கல்லலைத் தொழுகு மன்னே' எனக் கபிலர் புறநானூற்றிலும் கூறுவர் (புறம். 115)

மூவேந்தராலும் கொள்ளற்கு அரிதான பெருங்காப்புடன் திகழ்ந்தது பாரியின் பறம்பு. தலைவியையும் அருங்காப்பில் இட்டிருந்த நிலைமைக்கு அந்தப் பறம்புக் காப்பின் வன்மையை உவமை கூறினர்.

'எனவ கேளாய்' என்றது, நின் செயலிழந்த தன்மையாலே, அவள் தான் உயிரழிதலும் கூடும் என்றதாம்.

'பள்ளி யானையின் வெய்ய உயிரினை' என்றது, அதுதான் கோம்பிக் கிடத்தலைப் போல, நீயும் நின் ஆண்மையும் அறப்பண்பும் மறந்தாயாய், வருந்துதல் செயலாகக் மட்டுமே கொள்வாயாயினை என்பதாம்.

254. சிறுகுடிச் சேர்ந்தனை சென்மோ!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி படைத்து மொழிந்தது.

[(து.வி.) தலைமகன், இற்செறிப்புற்ற தலைமகளைத் தலைவன் அடைந்து இன்புறுவதற்கு இயலானாய் வருந்துகின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சிலவற்றைப் புனைந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும்
குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்
துனியில் நன்மொழி இனிய கூறியும்
சொல்லெதிர் பெறாஅய் ஆகி மெல்லச்
செலீஇய செல்லும் ஒலியிரும் பரப்ப! 5
உமணர் தந்த உப்புநொடை நெல்லின்
அயினி மாஇன்று அருந்த நீலக்
கணம்நாறு பெருந்தொடை புரளும் மார்பில்
துணையிலை தமியை சேக்குவை அல்லை
நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி 10
வானம் வேண்டா உழவினெம்
கானலம் சிறுகுடிச் சேர்ந்தனை செலினே!

தெளிவுரை : பகற்பொழுது எம்முடன் கூடியிருந்து வண்டல் மனையினைப் புனைந்து உதவினை; கரை மேலாக வந்து மோதுகின்ற அலைகளை உதைத்து விளையாடலையும் செய்தனை; குன்றுபோல உயர்ந்திருக்கும் வெண்மையான மணல் மேட்டிடத்தே கொடியரும்பின் பூக்களைக் கொய்தும் தந்தனை; வருத்தம் இல்லாதபடி நல்ல மொழிகளுள் இனிமையாயினவற்றையே எம்மிடத்துக் கூறினை. ஆனால், நீ கூறிய சொற்களுக்கு எதிர்மாற்றம் எதனையும் பெறாதவனாகி, மெல்ல நின்னூர்க்குச் செல்லுதலையும் மேற்கொண்டனை. ஒலிக்கின்ற பெரிய கடற்பரப்பின் தலைவனே! நேராக வகுக்கப்பெற்ற இடம் பொருந்திய சிறிய பாத்திகளுள் கடல்நீரைப் பாய்ச்சி உப்பினை விளைவிக்கும் மழையை வேண்டாத வேளாண்மையினை உடைய எமது கடற்கரைச் சோலை சூழ்ந்த சிறு குடியினிடத்தே வந்து சேர்ந்தாயாய், எம் இல்லிடத்தே தங்கி, இன்றைய இராப் பொழுதையும் கழித்துப் போவாயாக!

அங்ஙனம் தங்கிச் செல்வாயாயின் உப்பு வணிகராலே உப்பை விலைமாறிக் கொண்டுவரப் பெற்ற நெல்லினாலே சமைக்கப்பெற்ற அரிசிக் காணத்தை நின் குதிரைகள் இன்று உண்ணுதலைச் செய்யவும், நீதான், இவ்விடத்தே, நீலமலர்க்கூட்டம் நறிய மணத்தைக் கமழுகின்றதான பெரிய மாலையானது புகழுகின்ற மார்பினையாகி, அம்மார் பிடத்தே அணைத்து இன்புறுதற்கான நின் துணைவியும் இல்லாதே தனியனாகத் தங்குவாயும் அல்லை காண்! அதனால் தங்கிச் செல்வாயாக பெருமானே!་

சொற்பொருள் : வண்டல் – மணற்பாங்கிலே சிற்றிலை இழைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு. தைஇ–புனைந்து; சிற்றில் புனைந்து எனவும், சிற்றில்லில் வைத்து விளையாடுதற்கு ஏற்ற பஞ்சாய்ப் பாவையைப் புனைந்து எனவும் கொள்ளுக. வருதிரை–கரையை நோக்கி வருகின்ற அலைகள். உதைத்தல்–உதைத்து. விளையாடல்; அன்றிச் சிற்றிலைச் சிதைக்க வரும் அலைகளை உதைத்து அதனைக் காத்தற்கு முயலலும் ஆம். துனி–வெறுப்பு. ஒலிஇரும் பரப்பு–ஒலியோடு விளங்கும் கடற்கரைப் பரப்பு. அயினி – உணவு. மா–தேர்க் குதிரைகள். தொடை–தொடுக்கப்பெற்ற பெரிய மாலை. சேக்குதல் – தங்குதல். நேர்கண் சிறுதடி – நேர் நேராக விளங்கும் இடப்பரப்பாக மறிக்கப்பட்டுள்ள சிறுசிறு உப்புப் பாத்திகள். பிற பயிர் விளைத்தலைப்போல உப்பு விளைத்தலுக்கு மழையின் தேவை வேண்டாவாதலின், 'வானம் வேண்டா உழவு' என்றனர். 'வானம் வேண்டா வளனில் வாழ்க்கை' என அகநானூற்றிலும் இது கூறப்பெறுதலைக் காண்க (அகம். 186).

விளக்கம் : நீதான் எமக்கு இனியன பலவும் செய்தனையாய், எம்மால் விரும்பப்படுகின்றவனும் ஆகி, நின் கருத்தையும் எமக்கு புலப்படுத்தினை! நின் இரப்புக்கு யாமும் இசையுங்கால் அதனாற் பழிபல வந்தெய்தும். ஆதலின் பலரும் உறங்கும் இரவு வேளையில், எம் விருந்தினனாகி, எம் இல்லத்தே வந்து தங்கிச் செல்வாயாக என்கின்றனள், விரைந்து மணந்தாலன்றி அவ்வாறு தலைவியின் இல்லத்தே தங்குதல் தலைவனின் உயர்வுக்கு இயலாமையின், அதனை மறுத்து வரைவு வேட்டனள் ஆயிற்று. இதனைக் கேட்டலுறும் தலைவனின் உள்ளத்தே தலைவியை விரைந்து சென்று மணத்தலே செயற்கு உரியதென்னும் உறுதிப்பாடு எழும் என்பது முடிபாகும்.

255. இன்றவர் வாராராயின் நன்று!

பாடியவர் : ஆலம்பேரி சாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறுபார்த் துற்றது.

[(து.வி.) தன்னைத் தலைவன் வரைந்து மணந்து கொண்டு சென்று, தன்னுடனே கூடி இல்வாழ்க்கை நடத்துதலைப் பெரிதும் விரும்புகின்றாள் தலைவி. அதனைத் தலைவனுக்குச் சொல்ல விரும்புகின்றவள், அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாளேபோல, அவன் கடந்து வரும் வழியின் கொடுமைக்குத் தான் அஞ்சுவதாகக் கூறுகின்றாள். இவ்வாறு தலைவி சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே
உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார்
வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை
கன்முகைச் சிலம்பிற் குழூஉ மன்னோ 5
மென்தோள் நெகிழ்ந்துநாம் வருந்தினும், இன்றவர்
வாரா ராயினோ நன்றுமன் தில்ல
உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிப்
பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி அரவுத்தேர்ந் துழல 10
உருமுச்சிவந் தெறியும் ஓங்குவரை யாறே!

தெளிவுரை : பேயினங்கள் காற்றோடும் கலந்தவையாய் இயங்குகின்றன; ஊரவர் அனைவரும் செயலொழிந்து உறங்கியிருக்கின்றனர்; கேட்போருக்கு அச்சத்தைத் தருதலையுடைய குறிஞ்சிப் பண்ணைப் பாடியபடியே, காவல் மேற்கொண்டிருக்கும் கானவர்களும் துயில்வாரல்லர். வலிமிகுந்த களிற்றினோடும் போரிட்டதான வாள்போலுங் கோடுகளைக் கொண்ட வேங்கைப் புலியானது, மலையிடத்தேயுள்ள கல்முழைஞ்சினுட் கிடந்ததாய் முழக்கமிடுகின்றது! ஐயகோ! உயர்ந்த மலைப் பக்கத்தே விளக்கமோடே மின்னலைச் செய்தபடியே காற்றும் மழையுமாகக் கலந்து பெய்த இரவுப்பொழுது கழிந்துபோன நடுயாமத்திலே, இடிமுழக்கத்திற்கு அஞ்சியபோதும் தான் இழந்துவிட்ட மணியைத் தேடியபடி பாம்பினம் வருந்தியிருக்க, அவற்றை மேலும் அச்சுறுத்துவதுபோல இடிகள் மிகவும் முழங்கி அதிருகின்ற தன்மையது, உயர்ந்த மலைப்பக்கத்து வழியும் ஆகும். மென்மையுடைய நம் தோள்கள் தளர்வுற்றுப் போக நாம் வருத்தமுற நேரினும், இன்றிரவுப் போதில் அவர் இவற்றைக் கடந்து இங்கு வாராதிருத்தலே மிகவும் நல்லதாகும்!

சொற்பொருள் : கழுது–பேய். கால்–காற்று. கிளர–எழுந்து வீசாநிற்ப. ஊர்மடிதல்–ஊரவர் செயலவிந்து உறங்கிக் கிடத்தல். குறிஞ்சி–குறிஞ்சிப்பண். உருகெழு மரபின் குறிஞ்சி' என்றது, கானவர் முருகயர்தற்கும் வேட்டம்போவதற்கும் இயக்கும் பண் ஆதலினால். குறிஞ்சி பாடுதல்–குறிஞ்சிப் பண்ணிலே பாட்டுப் பாடுதல். கடி–காவல். நகர்–பெருமனை. ‘கானவர்' என்றது, மனைக் காவலரை. 'முகை' என்றது மலைச்சரிவிலுள்ள பாறையிடுக்குகளை 'தோள் நெகிழ்தல்' அவரை நாம் அடையப் பெறாமையால். பெயல்–மழை. கால்–காற்று. பெயல் கால் மயங்கிய–காற்றோடு கலந்து பெருமழையும் பெய்ய. 'பொழுது கழி பானாள்' என்றது, இரவின் நடுயாமப் பொழுதினை. திருமணி –அழகியமணி. உருமு–இடிக்குரல். ஓங்குவரை யாறு–உயர்ந்த வரைப்பக்கத்தே அமைந்த வழி.

விளக்கம் : "யாமத்துவரின் பேயணங்கும் என அஞ்சுவேம், ஊரவர் துயின்று ஊரரவம் ஓய்ந்ததாகலின் அவன் வரவைக் காவலர் எளிதிற் காண்பரெனக் கலங்குவேம், அன்றி அவரும் துயிலாராதலின் அவரால் அவனுக்கு ஏதமுறுமோவென நடுங்குவேம், வழியிடையே களிறுக்குத் தோற்ற வேங்கையாலும் மணி தேடி உழலும் அரவாலும் துன்புறலும் நேருமோவெனவும் கலங்குவேம், இடியும் மழையும் காற்றுங் கூடிய இந்நள்ளிரவில் உயர்வரையிடத்து வழியும் தெளிவாகத் தோன்றாதே எனவும் திகைப்பேம், ஆதலின் இன்று அவர் வாராதிருத்தலே நல்லது. அவர் நினைவாலே வருந்தி எம் தோள்கள் நலியினும் நலியட்டும்" என்று மனநொந்து கூறுகின்றாள் தலைவி.

இதனால், அவன் தமக்கு இன்றியமையாதவன் என்பதும், அவனுக்கு ஏதமெனில் தாம் உயிர்வாழாத் தன்மையேம் எனவும் உணர்த்தி, இந்நிலையினை ஒழித்தற்கு அவன் தன்னை விரைய மணந்துகொள்ளலே நன்மை தருவதாகும் என்பதும் புலப்படுத்தினாள். இதன் பயன் வரைவு வேட்டல் ஆகும். மேற்கோள் : 'இரவுக்குறி வரலால் தலைவி வருந்துவள் என்றது' என இச்செய்யுளை, 'நாற்றமும் தோற்றமும்' (தொல். பொருள் 114) என்னும் சூத்திரத்து, 'ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்' என்னும் பகுதியின் உரையிடத்தே ஆசிரியர் நச்சினார்கினியர் காட்டுவர்.

256. கார்ப்பெயல் செய்த காமர்மாலை!

பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாலை.
துறை : 'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது.

[(து-வி.) தலைவன் பொருள் தேடிவருதலைக் கருதினான்; தன்னைப் பிரிந்து போதலையும் எண்ணினான் எனக் கலங்கியழிந்தனள் தலைவி. அவளுக்கு, அவன், தான் போகப் போவதில்லை என தெளிவிப்பதுபோல அமைந்த செய்யுள் இது.]


நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிப்
பல்குறப் பெருநலத் தமர்த்த கண்ணை!
காடே, நிழல்கவின் இழந்த அழல்கவிர் மரத்த
புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே;
இந்நிலை தவிர்ந்தனம் செலவே; வைந்நுதிக் 5
களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக்
கார்ப்பெயல் செய்த காமர் மாலை
மடப்பிணை தழீஇய மாவெருத் திரலை
காழ்கொள் வேலத் தாழ்கிளை பயந்த
கண்கவர் வரிநிழல் வதியும் 10
தண்படு கானமும் தவிர்ந்தனஞ் செலவே!

தெளிவுரை : நீதான். புகழ்மைந்த, குற்றந்தீர்ந்த சிற்றடிகளை உடையை! பல்கிய பெரிதான நலங்களமைந்த அமர்த்த கண்களையும் உடையை! காடோ, நிழலாலே உண்டாகின்ற அழகினை இழந்து போனதும், வேனிலது வெம்மையாலே கரிந்துபோய்க் கிடப்பதுமான மரங்களை உடையது. மாவும் பிறவும் வழங்குதலற்றுத் தனிமை நிலை பெற்றதாய்த் தன் பொலிவழிந்து போயுமிருக்கின்றது! இந்நிலையைக் கருதினமாதலின், நின்னையும் உடன் கொண்டு போதற்கு இயலாமையினால், யாமும், எம் செலவினைக் கோடைக்காலத்தே கைவிட்டனம்.

கூர்மையான நுனியையுடைய களாவின் அரும்புகள் ஒருங்கே மலர்ந்து மணங்கமழும்; பிடவினது அரும்புகள் கட்டவிழ்ந்து இதழ்விரிந்து மலர்ந்திருக்கும்; இங்ஙனமாகப் கார்காலமும் தனக்கு உரியதான பெயலைச் செய்தது. இனிதான இக்காலத்தின் மாலைப்பொழுதிலே, இளைய பிணையினைத் தழுவியின்புற்ற கரிய பிடரினைக் கொண்ட கலைமானானது, வயிரமேறிய வேலமரத்தினது தாழ்ந்து கிடக்கும் கிளைகள் பயந்த, காண்பார் கண்களைக் கவர்கின்ற வரிப்பட்ட நிழலிடத்தே சென்று தங்கியிருக்கும் குளிர்ச்சி பொருந்திய காட்டிடத்தே, நின்னைக் கூடியிருப்பதற்குரியதான இக்கார்காலத்துச் செல்வதனையும் யாம் கைவிட்டனம். எனவே, நின்னைப் பிரிவேனேன நினைந்து நீயும் நலிவது வேண்டாதது காண்!

சொற்பொருள் : அமர்த்தல்–மதர்த்தல். அழல்–கோடையின் வெப்பம். கவர்தல்–சுட்டெரித்தல். புலம்பு–தனிமை; அது மாவும் பிறவும் வழங்குதல் அற்றுப்போன தன்மை. நலம்–காடுதரு பொருள்களாலும் பசுமையாலும் விளங்கிய பொலிவு. களவு–களாமரம். பிடவு–பிடாமரம். எருத்து–பிடரி. இரலை–கலைமான். காழ்–வயிரம். தண்படுகானம்–குளிர்ச்சிப்பட்ட காடு.

விளக்கம் : கோடைகாலத்தே நின் சிற்றடிகள் காட்டின் வெம்மையைத் தாங்காவெனக் கருதியும், நின் கண்களின் அழகெலாம் கெடுமெனக் கருதியும், யாம் செலவைக் கைவிட்டனம். இக்கார்காலத்தேயோ மானினம் கூடிக் கலத்தலைக் கண்டு, யாமும் நின்னைப் பிரிந்து போதற்கு விரும்பாதே, நின்னோடும் இருத்தலையே விரும்பினமாதலின் செலவைக் கைவிட்டனம் என்கின்றான்.

இதன் பயனாகத் தலைவியும், தன் துயரத்தை விட்டாளாய்த் தலைவனோடு கூடிக்கலந்து இன்புறுவள் என்பதாம்.

'பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை' எனக் கண்களை வியந்தது, அவள் கண்கலங்கி நீர் சொரிய நின்றது கண்டு, அவளைத் தேற்றுவானாகக் கூறியதாகும். 'பாடல் சான்ற பழிதபு சீறடி' என அடியை வியந்தது, அவள் தெளியாளாக அடிதொட்டுச் சூளுரைப்பான் சொல்வதாகும்.

'மடப்பிணை தழீஇய மாவெருத்திரலை' என்றது, அவ்வாறே தானும் தழுவியிருத்தலையே நினைப்பதன்றிப் பிரிந்து போதலை நினையாதான் என்று கார்காலத்தைக் காட்டிக் கூறுகின்றானும் ஆம்.

257. இயங்குநர் மடிந்த சிறுநெறி!

பாடியவர் : வண்ணக்கன் சொருமருங் குமரனார்; வண்ணக்கன் சேரிக்குமரங் குமரனார் எனவும் கொள்வர்.
திணை : குறிஞ்சி,
துறை : தோழி, தலைமகனது ஏதஞ்சொல்லி வரைவு

கடாயது.

[(து-வி.) இரவுக் குறியினை விரும்பி வருவானாகிய தலைமகனைத் தோழி நெருங்கி இவ்வாறு உரைக்கின்றனள். வரும் வழிக்கண் ஏதம் மிகவும் உண்டாதலின் யாம் அஞ்சுவேம் எனக் கூறுவதன் மூலம், இரவுக்குறி மறுத்து வரைந்து வருதலை வேண்டுகின்றனள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.]


விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ
மழையெழுந் திறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழையமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு
இலங்குவெள் ளருவி வியன்மலைக் கவாஅன்
அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் 5
பொன்மருள் நறுவீ கன்மிசைத் தா அம்
நன்மலை நாட! நயந்தனை அருளாய்!
இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக்
கடுமா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே. 10

தெளிவுரை : இடிகளின் ஓயாத முழக்கத்தோடே மழை மிகுந்ததாக எங்கணும் பெய்தலைத் தொடங்கியது; மேகங்கள் திரண்டு சூழ்ந்து கொண்டதனாலே, மலைப்பக்கங்கள் குளிர்ச்சிமிகுந்த ஆயின ; மூங்கில்கள் செறிவாக வளர்ந்து நெடிதாகவும் ஓங்கியுள்ள வானளாவும் மலையுச்சியிலுள்ள விளங்கும் வெள்ளிய அருவியானது, அகன்ற மலைப்பக்கங்களிலே வீழ்கின்றது. அவ்விடத்தே, அரும்புகள் இதழ்விரிந்தவாய் மலர்ந்திருக்கின்றதும், கரிய அடிமரத்தை உடையதுமான வேங்கையினது, பொன்னைப்போலத் தோற்றும் நறியவான பூக்கள் பாறை மேலாக உதிர்ந்து பரவியபடியிருக்கின்ற, நல்ல மலைநாடனே! வழிப்போவார் யாருமில்லாதபடி விளங்கும், ஒடுங்கிய, நீர் பெருகி நிற்கின்ற தன்மையது நீ வரும் வழியாகும். அவ்வழியிடையே கடிய விலங்குகளான புலி முதலானவை வழங்குதலை அறிந்துவைத்தும், நீதான் இரவின் நடுயாமப் பொழுதிலேயே வாராநின்றனை! அதனைக் கருதி யானும் நோவா நின்றேன். எம்பால் விருப்புடையையாகி, இனி அவ்வாறு வருதலை நீக்கினையாய் எமக்கு அருள்தலைச் செய்வாயாக, பெருமானே!

சொற்பொருள் : விளிவில் – இடையீடில்லாதபடி. அரவம் – இடி முழக்கம். தளி – மழை. உறைஇ – பெய்து மழை எழுந்து – மேகங்கள் வானத்தே எழுந்து. இறுத்த – தங்கிய, நளிர் – குளிர்ச்சி. சிலம்பு – பக்கமலை. கழை – மூங்கில். அமல்பு – செறிந்து. வயம் – நீர்ப் பெருக்காகிய வளம். சிறுநெறி – ஒடுங்கிய வழி. கடுமா – புலி போன்ற கொடிய விலங்குகள்.

விளக்கம் : 'வழியிடையே நினக்கு யாதானும் துன்பம் உண்டாகுமோ?' என எண்ணியாம் மிகுதுயர்ப்பட்டுக் கலங்குவேம். ஆதலின், இரவு வருதலைக் கைவிடுக என்றனள். வேங்கைப் பூ கன்மிசைத் தாவும் என்று சொன்னது, அதுதான் மணங்கோடலுக்கு உரித்தான காலமென்பதனை நினைப்பித்ததாம். 'இயங்குநர் மடிந்த' என்றது வழக்கமாகப் போதலை மேற்கொள்வாரும் அச்சமுடையவராய்க் கைவிட்டதனாலே, யாருமற்றதாக விளங்கிய நெறி என்றதாம்.

உள்ளுறை : வேங்கையின் பொன்போன்ற நறிய மலர்கள் தம்மைக் கொய்து சூடுவாரை அற்றவாய்க் கற்பாறை மேல் உதிர்ந்து கிடப்பது போல, நீதான் அருகிருந்து நுகர்ந்து இன்புறுத்தாதலினாலே இவளுடைய நலனும் பயனற்றுக் கொன்னே அழிந்து போதலைச் செய்யும் என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், விரைய வந்து வரைதலுக்கு மனத்தே உறுதி கொள்வான் என்பது இக்கூற்றின் பயனாகும்.

258. அன்னை செறித்தனள்!

படியவர் : நக்கீரர்.
திணை : நெய்தல்.
துறை : தோழி செறிப்பு அறிவுறீஇயது.

[(து.வி.) பகற்குறி வந்து ஒழுகுவானாகிய தலைவனிடம் வந்து, தலைவியின் தோழி, 'தலைவி இற்செறிக்கப்பட்டாள்' என்பதைச் சொல்லி, இனி வரைந்து கொண்டாலன்றி அவளை அடைதல் இயலாது என உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


பல்பூங் கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியநகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 5
கொக்குகிர் நிமிரல் மாந்தி, எற்பட
அகலங் காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத் தன்னவிவள் 10
நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே.

தெளிவுரை : கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோரின் கால்கள் வெம்புமாறு, கீழைத்திசை மலையிடத்தே தோன்றி எழுகின்ற ஞாயிறும் தோன்றிப் பகற்பொழுதைச் செய்தது. அத்தகைய பகற்பொழுதிலே செல்வ வளத்தையுடைய நம்முடைய பெரிய மனையினிடத்தே விருந்தினர்கள் வந்துள்ளனர். அவர்களை ஓம்புதற்குப் பொன் தொடியினை அணிந்தவரான மகளிர் சமைத்து நிவேதித்துப் புறங்கடையிலே கொக்கின் உகிர்போன்ற வெண்சோற்றைப் போட்டனர். அச்சோற்றைத் தின்றுவிட்டுப், பொழுது மறையும் மாலை வேளையிலே, அகன்ற அங்காடித் தெருவிலேயுள்ள அசைந்தேகும் நிழலிடத்தே குவிக்கப்பெற்றுள்ள பசிய இறாமீனைக் கவர்ந்து, பசுங்கண்களையுடைய காக்கையானது உண்ணும். அதனையும் உண்ட பின்னர்க், கடற்கரையிலே, அலையாலே அசைந்து கொண்டிருக்கின்ற கலத்தினது கூம்பினிடத்தே சென்று அக்காக்கையானது தங்கும். அத்தகைய மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்றவளான இவளது, அழகும் ஒளியும் பொருந்திய, நெருங்க அணிந்த வளைகள் கழன்று ஓடுவதனை அன்னையும் கண்டனள். கண்டவள், இவளையும் இவ்விடத்தே காவற்படுத்தினள்; பலவாகிய பூக்களையுடைய கானற் சோலையிடத்தே நீதான் செய்த பகற்குறியிடத்தே, யானும் தனியாகவே வந்து, நினக்கு அதனையும் கூறினேன். இனி, யானும் எம் இல்லுக்குச் செல்வேன். நீதான் இனி இவளை விரைந்து வந்து வரைந்து கொள்ளலைக் கருதுவாயாக!

சொற்பொருள் : பல்பூங்கானல் – பலவாகிய பூக்களையுடைய கானற் சோலை. மரீஇ – சென்றடைந்து. கொண்கன் – நெய்தல் நிலத்துத் தலைவன். புறங்கடை – வீட்டின் பின்புறம். நிமிரல் – சோறு. எற்பட – கதிர் சாய. பச்சிறா – இறாமீன். தூங்கல் – அசைதல். வங்கம் – மரக்கலம். சேக்கும் – தங்கும். நெங்கு ஏர் எல்வளை – அழகும் ஒளியும் உடையவாக, நெருங்க அணிந்த வளைகள்.

விளக்கம் : நின்னைக் கண்டு மகிழாமையாலே பெரிதும் துன்பம் உறுபவள் தலைவி எள்பாள், அவள் உடல் நலிதலினாலே மெலிவு அடைந்தனளாகத் தன் நெருங்கவணிந்த ஒளிவளைகள் சுழன்று வீழ மெலிந்தனள் என்றாள். அதனைத் தெய்வம் அணங்கிற்று எனத்தாய் இற்செறித்தனள். அவள் வாடாமற்படிக்கு இனி நீதான் அவளை வரைந்து வந்து மணந்து கொள்வாயாக என்கின்றனள். உணவு படைக்கு முன் சிறிது சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுதல் மரபு. மருங்கூர்ப்பட்டினம் கீழைக் கடற்கரைப் பகுதியிலுள்ள பாண்டியர்க்குரிய ஓர் பட்டினம். அதன் வனப்பினை அவளது வனப்புக்கு உவமையாக உரைத்தனள்.

உள்ளுறை : மகளிரிட்ட பலிச்சோற்றை உண்டபின், அங்காடியிற் குவித்துக் கிடக்கும் இறாமீனையும் கவர்ந்து உண்ட காக்கையானது, வங்கத்துக் கூம்பிற் சென்று தங்கும் மருங்கூர் என்றனள். இது, பாங்கற் கூட்டத்தாற் பகற்குறி பெற்றும், பாங்கியிற் கூட்டத்தால் இரவுக்குறி பெற்றும் இவள் நலனைத் துய்த்து இன்புற்ற நீயும், இவளை மணந்து வாழக் கருதாயாய், நின் ஊர்க்கண்ணே சென்று இனிதே இருப்பாயாயினை என்று கூறியதாம். இதனை உணரும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடற்கு விரைபவன் ஆவான் என்பதாம்!

259 என்ன செய்வோமோ?

பாடியவர் : கொற்றங் கொற்றனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது.

[(து.வி.) தலைவனின் மனத்தைத் தலைவியை மணந்து கூடி வாழ்தலிலே செலுத்த விரும்புகின்றாள் தோழி. அதனை அவனுக்கு உணர்த்த நினைப்பவள், பகற்குறியிடத்தே, அவன் வந்து ஒரு சார் ஒதுங்கிச் செவ்வி பார்த்து நிற்பதறிந்தவள், தலைவிக்குச் சொல்வாளேபோல அவனுங்கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகின்றனள். இங்ஙனம் அமைந்த செய்யுள் இது].


யாங்குச்செய் வாங்கொல் தோழீ! பொன்வி
வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரல்
பெருங்கல் நாடனொடு இரும்புனத் தல்கிச்
செவ்வாய்ப் பைங்கிளி யோப்பி அவ்வாய்ப்
பெருவரை யடுக்கத் தருவி யாடிச் 5
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்
பெரிதமர்ந் தியைந்த கேண்மை சிறுநனி
அரிய போலக் காண்பேன் விரிதிரைக்
கடல்பெயர்ந் தனைய வாகிப்
புலர்பதங் கொண்டன ஏனற் குரலே? 10

தெளிவுரை : தோழீ! தினைக் கதிர்கள் எல்லாமும் விரிந்த அலையையுடைய கடல் நீரெல்லாம் வற்றி நிறம் மாறினாற்போலத் தாமும் காயும் பருவத்தை அடைந்தன கண்டாய்! இனி, நமர் அவற்றைக் கொய்வாராதலின், நம்மையும் இவண் வரவிடாராய் இல்லின் கண்ணேயே செறிப்பதும் நிகழும். பொன்போலப் பூக்களைக் கொண்ட வேங்கை மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கின்ற, தேன்மணங் கமழுகின்ற மலைச்சாரல் இது. இதனிடத்தே பெரிய மலைநாடனோடே கரிய தினைப்புனத்திலே தங்கியிருந்து, சிவந்த வாயையுடைய பசுமை நிறங்கொண்ட "கிளிகளை ஒப்பியும், அவ்விடத்தேயுள்ள பெரிய மலைப்பக்கத்தேயுள்ள அருவியிலே நீராடியும், சாரலிடத்தே பெற்ற சந்தனத் தேய்வையை வண்டு மொய்க்கும்படியாகப் பூசியும், மிகவும் விருப்பமுடனே செய்துகொண்ட பொருந்திய நட்புறவானது, இன்னுஞ் சிறிது நாளிலே வாய்த்தற்கு மிகவும் அரிதாகித் தேய்ந்து இல்லாதே போகும்போலத் தோன்றக் காண்கின்றேன்! இனி, நாமும் என்ன செய்ய மாட்டுவேமோ!

சொற்பொருள் : தேம்கமழ்சாரல் – புதுப்பூக்களின் மிகுதியினாலே தேனின் நறுமணம் கமழ்ந்தபடி இருக்கின்ற மலைச்சாரல். பெருங்கல் நாடன் – பெரிய மலை நாட்டினன். இரும் புனம் – கரிய தினைப்புனம்; பெரிய தினைப்புனமும் ஆம். அல்கி–தங்கி, ஆரம்–சந்தனம்; ஆரம் நீவி என்றலின் சந்தனத் தேய்வையைக் குறித்தது. அமர்ந்து – விரும்பி. இயைந்த கேண்மை – கூடிய நட்புறவு, கடல் பெயர்தல் – கடல் நீர் வற்றிப்போதல்.

விளக்கம் : இனி முன்போல அவனைக் அவனைக் காண்பதும், கூடியிருந்து இன்புறுவதும் வாய்த்தல் அரிதாகும் என்றனள்; அது நீங்கியவழி யாமும் இறந்துபடலும் கூடும் என்பதும் குறிப்பாகப் புலப்படுத்துவாள், "யாங்குச் செய்வாங் கொல்" என்றனள்.

கடல்நீர் வற்றிவிட, அவ்விடம் மெல்ல மெல்லக் காய்ந்து நிறம் மாறுபட்டாற்போலத் தினைக்கதிர்கள் நீர் வற்றியவையாய்க் காய்தலை அடைந்து வருகின்றன என்கின்றனள். காற்றிலே அசைந்தாடும் பசுந்தினைக் கதிர்களின் தோற்றத்திற்கு விரிதிரைக் கடலின் தோற்றத்தையும், அக்கதிர்கள் காய்ந்தவழித் தோன்றும் நிலைக்கு நீர்வற்றிக் காய்ந்த கடலின் தோற்றத்தையும் கொள்ளுக.

260 மறந்து அமைகலன்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.

[(து.வி.) பரத்தை உறவுகொண்டு தலைவியைப் பிரிந்து சென்றவன், மீண்டுவந்து அவளை விருப்போடு தழுவுகின்றான். அவள் சினம் தணிந்திலள் எனினும், அவனைத் தடுக்கவும் செய்யாதவளாக, அவன் குற்றத்தைச் சுட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது]


கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத்
தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது
குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி முனையெழத் 5
தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலிபுனல் வாயில் இருப்பை அன்னவென்
ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த
முகையவிழ் கோதை வாட்டிய
பகைவன் மன்யான் மறந்தமை கலனே! 10

தெளிவுரை : தலைவனே! கருந்தாளுடைய எருமையானது கழுநீர் மலரை மேய்ந்து உண்ணும்; பழனங்களிலே மலர்ந்துள்ள தாமரையின் குளிர்ச்சியான பூக்களையும் தின்னும்; பின் அதனையும் வெறுத்ததாகி, படையணியிலே சேர்ந்த மறவரைப்போலச் செருக்கோடு நடந்துசென்று, பழனங்கட்கு அயலதாகக் குன்றுபோலச் சேர்ந்துள்ள வெண்மனற் குன்றிடத்தே கிடந்து உறங்கும். இத்தகைய தன்மைகொண்ட ஊருக்கு உரியவனே !

நீதான், இதுபோது என்பால் மிகவும் விருப்பமுடையவனே போல என்னைப் பலகாலும் தழுவுகின்றனை! பகைவர் முனைத்து எழுதலாலே உண்டாகிய போரிடத்தே, அப்பகைவரை அழித்து வெற்றி கொண்ட செவ்வேலை ஏந்திய மாவீரன் 'விரா அன்' என்பவன். மிக்க நீர் நிலை பொருந்தியதும், அவ்விராஅனுக்கு உரியதுமான இருப்பையூரைப் போன்றது என் எழில் நலம். தழைத்த பலவாகிய எனது கூந்தலிடத்தே அழகு உண்டாகுமாறு சூடிப் புனைந்த அரும்பு மலர்ந்த புதுப்பூவிலே தொடுக்கப்பெற்ற மாலையானது வாடும்படியாகப் பிரிந்து போன, பகைவன் அல்லையோ, நீ! அந்த நினது கொடுமையை மறந்து யானும் நினக்கு இசைந்திருப்பவள் அல்லேன். ஆதலின் என்னைவிட்டு அகன்று போவாயாக!

சொற்பொருள் : கழுநீர்–செங்கழுநீர். பழனம்–வயல். பனிமலர்–குளிர்ச்சியான புதுமலர். தண்டு–படையணி. மள்ளர்–வீரர். இயலி–நடையிட்டுச் சென்று. வெய்யை–விருப்பமுடையை. முனை–பகைவர் பகைத்தெழுந்த போர் முனை. தெவ்வர்–பகைவர். வயவன்–வீரன். இவன் இருப்பையூருக்கு உரியவனாகிய 'விரா அன்; இருப்பை–இருப்பையூர். முகையவிழ் கோதை–அரும்பாலே தொடுக்கப்பெற்று, மொட்டு மலர்ந்தபடியிருக்கும் தலைமாலை.

விளக்கம் : 'உண்மையாகவே நீதான் என்னை விரும்பி வந்தவன் அல்லன்' என்பாள், 'வெய்யை போல' என்றனள். 'கோதை வாட்டிய பகைவன்' என்றது, அதனைச் சூடியதன் பயனாகிய அவனது தழுவலைப் பெறாதே வாடச் செய்த வருத்தம் தோன்றக் கூறியதாம். 'மறந்து அமைகலன்' என்றாள், அதனை யான் மறவேன் ஆதலின், நின் பொய்யானதாகிய இவ்வன்புத் தழுவலைக் கைவிடுக என்றனள். அவன், தன் குற்றத்தை உணர்ந்து பணிந்து வேண்ட, அவளும் தன் ஊடல் தீர்வாள் என்பது இயல்பாகும்.

உள்ளுறை : செங்கழுநீரை யுண்ட எருமையானது, பின் தாமரை மலரை உண்டு, அதனையும் வெறுத்துச் செருக்கு நடை நடந்து சென்று, வெண்மணற் குன்றிலே சென்று கிடந்து துயிலும் என்றனள். இவ்வாறு தலைவியை நுகர்ந்தவன், காதற் பரத்தையை நாடிச் சென்று நுகர்ந்த பின், அவளையும் வெறுத்து, செருக்கோடு சென்று சேரிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்தனன் என்று கூறியது இது

வெகுளி தோன்றக் கூறினாளாயினும், அவன் வேண்டத்தன் ஊடல் தீர்பவள் ஆவள் என்பதே இதன் பயனாகும்.

261. அருளிலர் வாழி தோழி!

பாடியவர் : சேந்தண் பூதனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது (1) தலைமகள் இயற்பட மொழிந்தூஉம் ஆம்.

[(து-வி.) தலைவன் வந்து ஒரு சிறைப்புறமாக நிற்பதறிந்து அவன் மனதை வரைந்து வருதலிலே செலுத்தக் கருதிய தோழி, தலைவிக்குச் சொல்வது போல அமைந்த செய்யுள் இது. (2) தலைவி தன்னைத் தலைவன் வரைந்து கொள்ள முற்படாததனை நினைத்து வருந்தத், தோழி தலைவனை அது குறித்துப் பழித்துக் கூறுகின்றாள். அவளுக்குத் தன் கற்புத்தன்மை புலப்படத் தலைவி கூறுவதாக அமைந்ததும் இச்செய்யுள் ஆகலாம்.]


அருளிலர் வாழி தோழி? மின்னுவசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ்சுடர் கரந்த கடுஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகித்
தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் 5
களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம்
வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும்
சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை
எருவை நறும்பூ நீடிய
பெருவரைச் சிறுநெறி வருத லானே, 10

தெளிவுரை : தோழி, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! நம் காதலர் நம்மாட்டு அருளில்லாதவரே ஆயினார்! மின்னல் பிளந்தபடியே இருளை நிறைத்து மேகங்கள் பரந்துள்ள வானத்திடத்தே, இடிகளும் முழக்கமிட்டபடி அதிர்கின்றன. வெம்மையான ஞாயிற்றை வெளியே தோன்றாதபடியாக மறைத்துக் கொண்டு நிறைந்த சூலையுடையவாயின கார்மேகங்கள்! அம்மேகங்கள் நெடியவும் பெரியவுமான குன்றுகளிடத்தே குறுகிய பல படலங்களாக இயங்குவனவாயின. இடையீடில்லாத பெரும் பெயலையும் அவை பெய்யத் தலைப்பட்டன. இத்தகையதான இரவின் நடுயாமத்தே, களிற்று யானையைப் பற்றிச் சுற்றிக் கொண்ட பெருஞ் சினத்தையுடைய மலைப்பாம்பானது, வெளிறே இல்லாதபடி முற்றவும் வயிரமேறிய மரத்தினையும் தன்னுடலாற் பிணித்து மிகவும் பற்றிப் புரட்டா நிற்கும். சந்தனமரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள இனிய மணம் கமழுகின்ற மலைப்பிளவினிடத்தே கொறுக்கச்சியின் நறிய பூக்கள் நீடி மலர்ந்துள்ள அத்தகைய பெரிய மலையிடத்துச் சிறுநெறியினைக் கடந்தும், அவர் வருதலை உடையர்! ஆதலானே, அவர் நம்பால் அருளிலர் கண்டாய்!

சொற்பொருள் : வசிபு–பிளந்து எழுந்து. இருள் தூங்கு விசும்பு–இருளடர்ந்து கருத்திருக்கும் வானம். ஏறு–இடியேறு. வெஞ்சுடர்–வெம்மையைச் செய்யும் சுடர். கமஞ்சூல்–நிறை சூல். நெடும் பெரும் குன்றம்–நெடிய பெரிய குன்றம். குறும் பல மறுகி–குறுகிய பலவாகப் படர்ந்து. தாவில் பெரும் பெயல்–குற்றமற்ற பெரும் பெயல். இடைவிடாத பெரு மழை. மாசுணம்–பாம்பு; களிறை அகப்படுத்திய பெருமலைப் பாம்பு. வெளிறில் காழ்மரம் –வெளிறேயின்றி முற்றவும் வயிரம் பாய்ந்த பெருமரம்; இதனைச் சந்தன மரமாகவும் கொள்ளலாம். போகிய–உயர்ந்து வளர்ந்த. எருவை–கொறுக்கச்சி.

விளக்கம் : அவர், தாம் வருகின்ற வழியிடையே அவருக்கு யாதாயினும் ஏதம் உண்டாதலை நினைந்து யாம் மிகவும் வருத்தமுறும்படி செய்பவராயினதால், அவர்க்கு நம்மீது அருள் இல்லை; இதனை விடுத்து, அவர் நம்மை வரைந்து வந்து மணந்து கொண்டு பிரியாத இன்பந்தருதலன்றோ அருண்மையாகும் என்று சொல்லி வரைவு கடாயதாகக் கொள்க.

அவர்தாம் வரைந்து கொள்ளாதே, யாம் பெரிதும் கலக்கமடையுமாறு இரவு நேரத்தே இவ்வழியைக் கடந்து வருதலால், நம்மீது அருளில்லாதவர் ஆயினார். ஆயினும், நாம் இறந்துபோதலைக் கருதினவராக நம் துயரைத் தீர்க்கும் கருத்தோடு வருதலால், அவர் எத்தகைய ஏதமுமற்றவராகி நெடிது வாழ்வாராக என்று கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்தி உரைகொள்க.

இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவிமாட்டுத் தானும் ஆராத காதலை உடையோனாதலினாலே, அவளை விரைந்து மணந்து கூடி வாழ்தலிலே மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம். இதுவே, இப்படிச் சொல்வதன் பயனும் ஆகும்.

262. தோள் அரும்பிய சுணங்கு!

பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்.
திணை : பாலை.
துறை : தலைமகள் ஆற்றாக் குறிப்பறிந்து பிரிவிடை விலக்கியது.

[(து.வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தன்னைப் பிரிந்து போதலைத் தலைவன் உளங்கொண்டான் என்பதனைக் குறிப்பாலே அறிந்து, தலைவி பெரிதும் கவலையால் நலிவடைகின்றனள். அவளது நலிவைக் கண்டு மனங்கலங்கியவன், தன் நெஞ்சொடுங் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர்
ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர
உறைமயக் குற்ற ஊர்துஞ்சு யாமத்து
நடுங்குபிணி நலிய நல்லெழில் சாஅய்த்
துனிகூர் மனத்தள் முனிபட ருழக்கும 5
பணைத்தோள் அரும்பிய சுணங்கின் கணைக்கால்
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப்
பிரிவல்நெஞ் சென்னும் ஆயின்
அரிதுமன் றம்ம இன்மைய திளிவே! 10

தெளிவுரை : தண்ணிய புனத்திடத்தே வளர்ந்துள்ள கருங்காக்கணத்தின் கண்ணைப் போன்ற கருமையான மலர்கள், வாடைக் காற்று வீசுதலாலே, கூத்தாட்டயருகின்ற மயிலினது பீலியைப் போல அசைந்தாடியபடியிருக்கும். மழைத்தூவலும் இடைவிடாதே தூவிக்கொண்டிருக்க விளங்கும், ஊர் முழுவதும் துயில் கொண்டிருக்கின்ற இரவின் நடுயாமப் பொழுதும் வரும். அப்பொழுதிலே நடுக்கத்தைத் தருகின்ற காமநோயானது தன்னை நலிவடையச் செய்ததாலே தான் நல்ல அழகெல்லாம் குன்றிப்போக, எப்பொருளையும் வெறுத்துவிட்ட மனத்தினளாசுத் தன்னையே முனிந்து ஒறுக்கின்ற காமநோயினாலே இவளும் வாடுவாள். ஆயினும், இவள் தான் பருத்த தோள்களும் அரும்பிய தேமலும், திரட்சியமைந்த கால்களும், குவளை மலர்களின் மணம் நாறுகின்ற கூந்தலும் இனிய சொற்களும் உடையவளாயும் உள்ளனள். இவளை விட்டுப் பிரிந்து, செய்வினைபற்றிய முயற்சிகளிலேயே உள்ளமானது என்னை இழுத்தலாலே, என் நெஞ்சுதானும் 'பிரிவே சிறந்தது' என்று உறுதி கொள்ளுமாயின், அதற்குக் காரணமாகிய வறுமையாலே வந்தெய்துகின்ற இனிவரவானது, அப்பிரிவினுங்காட்டிற் பொறுத்தற்கு அரியதாகும்! இதுதான் என்னவோ?

சொற்பொருள் : 'கருவிளை' என்றது கருங்காக்கணத்தினை. அதன் மலரின் வண்ணமும் அமைவும் மகளிர் கருங் கண்களுக்கு உவமை கூறப்பெற்றது. காற்றாலே அசைந்தாடும் அது, ஆடுகின்ற மயிலினது பீலிபோலத் தோன்றும் என்பது சிறந்த உவமையாகும். செடியின் பசுமையை மயிற்பீலியோடும், அதன் பூக்களைப் பீலியின் கண்களோடும் பொருத்திக் கண்டு இன்புறுக. சாய்தல்–குன்றுதல். துனி–வருத்தம். படர்–படரும் காமநோய். குவளை நாறும் கூந்தல்–குவள மலரைச் சூடியதனாலே, அதன் மணங்கமழுகின்ற கூந்தல்.

விளக்கம் : 'ஊர்துஞ்சு யாமத்து' இவள் துயரத்தை அருகிருந்து தேற்றித் தெளிவிப்பவரும் இலராக, இவள் தனியேயிருந்து தன்னையே வெறுக்கும் பெருந்துன்பத்தை அடைவாளோ என்று கலங்குகின்றான். 'பணைத்தோள்' என்பது முதலாகிய அவளது உருவத்தெழிலைக் கூறியது, இவளை முயங்காது பார்த்தே இருப்பினும், அதுவே இனிதாகும் என்று வியந்ததாம், 'தேமொழி' என்பது, பார்த்து இன்புறாத அளவினும் அவள் பேசக் கேட்பினும் அதுவே இன்பமாகும் என்றதாம். இன்பந்தரும் இவையிற்றை இழந்தேமாய், இவளையும் ஏங்கி நலிந்து நலங்கெடுமாறு கைவிட்டுப், பிரிந்து போவதற்கும் நெஞ்சம் தூண்டுவதாயின் வறுமையாலே வருகின்ற இளிவரவுதான் எத்துணைப் பொறுத்தற்கு அரிது, என்று அதனை நினைத்துச் சோர்கின்றான்.

இதன் பயன், அவன் தன் செலவைக் கைவிட்டவனாக இல்லத்தே தங்கி விடுபவனாவன் என்பதாம்.

இன்பமும் பொருளுமாகிய இரு பெருந் தேவைகளுக்கு நடுவே சிக்கி ஊசலாடுகின்ற இளமைப் பருவத்தினரின் உள்ளத்தை ஓவியப்படுத்திக் காட்டும் சிறந்த செய்யுள் இது.

263. பிறைவனப்பு இழந்த நுதல்!

பாடியவர் : இளவெயினனார்.
திணை : நெய்தல்.
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.

[(து.வி.) தலைமகனானவன் ஒருசிறைப் புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி, அவனுக்குத் தலைவியை விரைய வந்து மணந்துகொள்ளல் வேண்டுமென்று அறிவுறுத்தக் கருதினவளாக, அவன் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


பிறைவனப் பிழந்த நுதலும் யாழநின்
இறைவரை நில்லா வளையும் மறையாது
ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு
உரையவற் குரையா மாயினும் இரைவேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது 5
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு
முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக்
கரப்பவுங் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த தோழி! உண்கண் நீரே. 10

தெளிவுரை : தோழீ! பிறையைப்போன்ற தன் வனப்பை எல்லாம் இழந்துவிட்ட நினது நெற்றியையும், தங்குதற்கு உரியதான இடத்திலேயே நில்லாதபடி கழன்றோடும் நின் வளைகளையும், மறைத்தேனும் கூறாதே எதிராக வந்தே ஊரவர் அலர்தூற்றும் பழியுரைகளையும், நமக்குள்ள நாணத்தாலே மறைத்தேமாய், நாமும் அவருக்கு நம் துயரைப்பற்றி ஒரு சொல்லேனும் சொல்லேமாயினேம். எனினும்,

பசியது மிகுதியாலே இரைதேடி வருதற்குச் செல்லுதலைத் தான் விரும்பியபோதும், தலைச்சூலாலே உண்டாகிய இயங்கமாட்டாத தன் வருத்தத்தினாலே, கானற் கழிக்குத்தான் செல்லாது, கழனிக் கண்ணேயே தங்கியிருந்து விட்டது வளைந்த வாயையுடைய நாரையின் பேடை ஒன்று; அதற்கு, உடல் வளைந்த நாரைச் சேவலானது, கடலிடத்து மீனைப் பற்றிக் கொண்டுபோய் அன்போடுங் கொடுக்கும்; அத்தகைய மென்னிலமான கடற்கரைத் தலைவனைக் கண்டதும், பலகால் நாம் ஒளித்துக்கொள்ள முயலவும், அதற்கு உட்படாதே கைகடந்து, நின் மையுண்ட கண்களிலிருந்து வெளிப்படுகின்ற கண்ணீரே நம் வேட்கை நோயை எடுத்துச் சொல்வதாயிற்றே! இனி, யாமும் யாதுதான் செய்வோமோ?

சொற்பொருள் : இறை–முன்கை, கௌவை–பழிச்சொல். கடுஞ்சூல்–தலைச்சூல். கானல்–கழிக்கானல். கொடுவாய்–வளைந்த வாய். முடமுதிர் நாரை–உடல்வளைந்த நாரைச் சேவல். கைம்மிகல் –அளவு கடந்து வெளிப்படல்.

விளக்கம் : தலைமகள் தானுறு துயரைத் தானே தலைமகனுக்கு எடுத்துச் சொல்வது என்பது பெண்மை இயல்பு ஆகாமையின், அதனைக் காப்பதற்கு முயன்றனர் என்றனள். 'தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல், எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை' என்பது களவியல் விதியாகும் (தொல். களவு. 27). ஆயின், அவனைக் கண்டதும் பெருகிவழியும் கண்ணீர், அவனுக்கு அவளது நோயின் மிகுதியைக் காட்டும் என்பதாம்.

தன்னாட்டுப் பறவையும், தன் பேடைக்கு நலிவு தீர்த்தற்கு விரையச் செயல்படுகின்ற அன்புடைமையைக் காண்பவன், தானும் அதனை மேற்கொள்ளாததனை எண்ணி வெட்கமுற்று, விரையச் செயற்பட முனைவன் என்பதாம்.

தலைவியின் வனப்பிழந்த நெற்றி முதலாயினவற்றைத் தலைவன் கண்டறிந்தானல்லையோ எனின், அவனது ஆர்வத்து மிகுதியும், தலைவியது வேட்கை மிகுதியும் அவற்றைக் கண்டும் உணரவிடாது செய்தன வென்று கொள்ளுக.

உள்ளுறை : வயலிலே தங்கிய பேடைக்கு நாரைப் போத்து கடல்மீனைக் கொண்டுவந்து தந்து உதவுதல் போலத், தலைவியை இல்லத்தே கொண்டுவைத்துத் தானும் பொருளைத் தேடிவந்து அவளுடனே கூடி இன்பமான இல்வாழ்க்கையினை நடத்துதல் வேண்டும் என்பதாம்.

264. ஐதுவிரித்த அணிகிளர் கலாவம்!

பாடியவர் : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்.
திணை : பாலை.
துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது (1); உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதும் ஆம் (2).

[(து.வி.) உடன் போக்கிலே தலைவியோடு செல்லும் தலைவன்; அவளது வருத்தங்கண்டு, அவளைத் தேற்றி, விரையச் செல்லுமாறு நயமுடன் கூறி வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது (1); அவன் தன் ஊர் அணிமைக் கண் வந்தது எனக் காட்டி அவளை விரைவுபடுத்தியதும் ஆம் (2).]


பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு
வான்தளி பொழிந்த காண்பின் காலை
அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும்
மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின்
வீபெய் கூந்தல் வீசுவளி உளர 5
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே!
வேய்பயி லிரும்பிற் கோவலர் யாத்த
ஆபூண் தெண்மணி இயம்பும்
உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் லூரே!

தெளிவுரை : மடந்தையே! பொழுதும் ஒளிகுறைவுற்றதாய் மறையத் தொடங்குகின்றது. மூங்கில் செறிந்துள்ள குறுங்காட்டுப் புறங்களிலே, கோவலர்கள் பசுக்களுக்குக் கட்டியுள்ள அழகிய தெளிவான ஓசைகொண்ட மணிகளும் ஒலிக்கத் தொடங்கின. அவ்விடத்தே காண்பாயாக! எம் சிறிய நல்ல ஊரும் அதோ தோன்றுகின்றது. பாம்பு அச்சமுற்றுத் தனது புற்று வளையிடத்தே சென்று பதுங்குமாறு முழக்கமிட்டபடி, வலமாக மேலெழுந்து வானமும் மழையைப் பொழிந்தது; அதனாலே நிலப்பரப்பு எங்கணும் காண்பதற்கு இனிதான செடி கொடிகளாலே பசுமை பெற்றுத் தோன்றும் கார்ப்பருவமும் வந்தது; அக்கார்ப் பருவத்திலே, அழகு விளங்குகின்ற தன் தோகையைப் பைய விரித்தபடியே ஆடலைத் தொடங்கும், நீலமணியைப் போல விளங்கும் கழுத்தைக்கொண்ட மயிலைப்போல, நினது பூச்சூட்டப் பெற்றிருக்கின்ற கூந்தலானது வீசுகின்ற காற்றாலே அசைந்தாட, முற்பட நீயும் செல்வாயாக!

சொற்பொருள் : அளை–பாம்புப் புற்றாகிய வளை. செறிய– பதுங்கிக்கொள்ள. வலனேர்பு–வலமாக மேலெழுந்து. தளி–மழை. காண்பு இன் காலை–காட்சிக்கு இனிதான பொழுது; இது கார்ப்பருவம். அணிகிளர் கலாவம்–அழகு சுடரிடுகின்ற தோகை. ஐது விரித்து – பைய விரித்து; வியக்கும்படி விரித்தும் ஆம். மணி– நீலமணி. உளர–அசைந்தாட பொழுது எல்லின்று–ஞாயிறும் ஒளிகுன்றப் பொழுதும் சாய்ந்தது. இரும்பு–குறுங்காடு, தெண்மணி – தெளிவான ஓசையுடைய மணி. சிறுநல் ஊர்–சிறிய நல்ல ஊர்.

விளக்கம் : தலைவிக்கு மயிலையும் விரிந்து ஆடும் அவள் கூந்தலுக்குத் தோகையையும் உவமித்தனர். 'கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும்' என ஐங்குறு நூற்றும் (ஐங். 300), விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்கலாவ மஞ்ஞையின் காண்வர இயலி' எனப் புறநானூற்றும் (புறம். 133) வருதல் காண்க.

தன்னூர் மிகமிக அணிமைக் கண்ணேயே உளது என்பான் ஆபூணும் மணியின் ஒலியைக் ஒலியைக் கேட்குமாறு உரைத்தான். விரைந்து செல்வாயாக எனச் சொல்வான் கூந்தல் வளியுளர ஏகுதி என்கின்றான். அப்படி ஏகுகின்ற காட்சியைக் கண்டு தானும் இன்புறுதலைக் கூறுவான், அவளது எழிலை வியந்தானாக, 'அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல–ஏகுதி' என்கின்றான்.

இதனைக் கேட்ட அவளும், தன் அயாவொழிந்தாளாக, மனத்தே ஊக்கமும், தன் காதலனது ஊரைச் சென்றடையும் விருப்பமும் மேலெழ, விரைந்து நடத்தலைச் செய்வாள் என்பது இப்படிச் சொல்வதன் பயனாகும். கார்ப்பருவம் கூறியது உடனுறைந்து மகிழ்தற்கு உரிய பருவம் அதுவாதலால். ஊர் அணிமைத்தாதலின் அச்சமின்றிச் செல்லலாம் என்பதுமாம்.

265. கலாவத்தன்ன ஒலிமென் கூந்தல்!

பாடியவர் : பரணர்.
திணை : குறிஞ்சி.
துறை : பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.

[(து-வி.) தலைவியைத் தோழியின் ஒத்துழைப்போடு அடைதலை விரும்பினான் தலைவன். அவள், அவன் நிலைகண்டு, 'இவன் யாதோவொரு குறையுடையவன் போலும்!' என உய்த்து உணருவதற்கு முன்பே, தலைவனின் ஏக்கம் மிகுதியாகிறது. அவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
அள்ள லாடிய புள்ளி வரிக்கலை
வீளை யம்பின் வில்லோர் பெருமகன்
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத் தன்ன வார மார்பின் 5
சிறுகோற் சென்னி ஆரேற் றன்ன
மாரி வண்மகிழ் ஓரி கொல்லிக்
கலிமயிற் கலாவத் தன்ன விவள்
ஒலிமென் கூந்தல் நம்வயி னானே.

தெளிவுரை : காய்ந்துபோன புல்லை மேய்ந்ததனாலே உதிர்ந்த முதிர்ந்த கொம்பினை உடையதும், புள்ளியையும் வரியையும் உடையதுமான கலைமானானது, சேற்றிலே கிடந்து புரண்டு தன் வெம்மையைத் தீர்த்துக்கொள்ளும். அத்தகைய, ஒலியோடு செலுத்தப்படும் அம்பினைக் கொண்டவரான வில்வீரர்களின் தலைவனும், பொலிவு பொருந்திய தன் தோளிலே கவசம் பூட்டியிருப்போனுமாகிய மிஞிலி என்பவன், பேணிக் காத்துவரும் பாரம் என்னும் மலைநாட்டூரைப் போன்றதும்,

ஆத்திமாலை சூடிய மார்பினனான சோழன், தன் கையிற் சிறிதான செங்கோலைக் கொண்டபடி சிற்றரசரை வரவேற்கும், 'ஆரேற்று' என்னும் அருளைப் போன்றதும்,

மாரிபோல வழங்கும் கொடை மிகுதியும் கள்ளுணவு முடைய ஓரி என்பானின் கொல்லி மலையிடத்துள்ள செருக்கிய மயிலைப் போன்றதுமான,

அழகினையுடையவள் இவள் ஆவாள். இவளது தழைத்த மென்கூந்தலானது நமக்கே உரியவாகும் அல்லவோ!

சொற்பொருள் : இறுகுபுல்–காய்ந்துபோன கரட்டுப்புல்; தரை ஈரமற்று இறுகிப் போகப் புல்லும் கரடுபட்டுப் போயிற்று என்க. அதனை மேய்தலாலே கோடு தரையிற் பட்டுப்பட்டுத் தெரித்து வீழ்தலின் 'அறுகோட்டு' என்றனர். முற்றல்–முதிர்ச்சி; கலையின் கோடு முதிர்ச்சியடைந்ததும் கழன்று வீழும்! அதுபோது உண்டாகும் நோவைத் தீர்த்துக்கொள்ள, அது சேற்றிலே ஆடியது என்று கொள்க. அதுவும் அச்சமின்றி வாழும் சிறப்புடையது மிஞிலி காக்கும் பாரம்!

'சிறுகோல்' என்றது செங்கோலினை; அது செங்கோன்மையின் அடையாளமாகச் சோழன் கையிலே திகழ்வது. 'ஆரேற்று' என்றது, சோழன் தனக்கு உட்பட்ட தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலை சூடிப்போற்றும் ஒருவகை விழாக் கோலம்.

கலிமயில் – செருக்கிய மயில்.

விளக்கம் : நோயுற்றுத் தன் கழன்ற கோட்டைவிட்டு எஞ்சிய பகுதியைச் சேற்றிலாட்டியபடி இருக்கும் கலைமானுக்குத் துன்பஞ் செய்யாது ஏகும் வீளை அம்பின் வில்லோர் என்று, அவரது அருளுடைமையைக் கூறினர்.

தனக்கு உட்பட்டாரையும் வரவேற்றுப் போற்றி, அவர்க்கும் தனக்கு ஒப்ப ஆத்திசூடி மகிழும் சோழனின் சிறந்த அருளுந் தன்மையையும் கூறினர்.

மாரிபோல வழங்கும் வண்மையும், மகிழ்வூட்டும் கள்வளமும் கொண்ட கொல்லிமலையிலே செருக்கித் திரியும் மயிலின் எழிலையும் கூறினர்.

இதனால், தலைவியது குடிச்சிறப்பும், அருள்தல் உள்ளமும் காட்டி, அவள் தனக்கே உரியவள் என்பதும் கூறுகின்றான் தலைவன்!

போற்றப்பட்டோர் : கொண்கான நாட்டு நன்னனின் படைத்தலைவருள் ஒருவனாகிய மிஞிலி என்பவன்; 'சென்னி' என்பான் கரிகாலனின் தந்தையாகிய இளஞ்சேட் சென்னி; ஓரி கொல்லி மலைக்குத் தலைவன்.

'கூந்தல் நம்வயினானே' என்றது, அது தன் ஒருவனாலேயே தீண்டற்கு உரியதென்னும் உரிமை பற்றியாம்! கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே' என வரும் குறுந்தொகையும் இதனை விளக்கும் (குறுந். 225). கணவரை இழந்த மகளிர் கூந்தலை மழித்து விடுவது இயல்பான பண்டைய மரபு. இதனைக் 'கொய்ம் மழித்தலையொடு கைம்மையுற' எனவரும் புறப்பாட்டடியாலும் அறியலாம் (புறம். 261).

266. குறுங்காற் குரவின் குவியிணர்!

பாடியவர் : கச்சிப்பேட்டு இளந்தச்சனார்.
திணை : முல்லை.
துறை : தலைமகனைச் செலவுடன் பட்டது (1); கடிநகர் வரைப்பிற் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் த தோழி 'நும்மாலே யாயிற்று' என்று சொல்லியதூம் ஆம் (2).

[(து-வி.) தலைமகன் வினைவயிற் பிரியக் கருதியதறிந்த தோழி, அவனை நெருங்கி, தாம் அவனது செலவுக்கு உடன்பட்டு ஆற்றியிருப்பதாகக் கூறி, அவனைக் கவலையற்றுச் சென்று வருமாறு உறுதிமொழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது (1); தலைமகன், வரைவிடைப் பிரிந்து சென்றவன், தலைவியை மணம்வேட்டுச் சான்றோருடன் அவள் இல்லத்துக்கு வந்தபோது, தோழி, 'இத்திருமணமானது நுமது முயற்சியாலேயே நடந்தது' என அவனைப் பாராட்டுவாளாக மகிழ்ந்து கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]


கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த
குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலு லாங்கண் சீறூ ரேமே
அதுவே சாலுவ காமம் அன்றியும் 5
எம்விட் டகறிர் ஆயின் கொன்னொன்று.
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே!

தெளிவுரை : ஐயனே! நீவிர் வாழ்வீராக! புன்செய்க் காட்டிடத்தே வாழ்பவர் ஆப் பயன் கொள்வாரான கோவலர். அவருக்குரித்தான குறுகிய புனங்களுக்கு அயலாகக் குறுகிய அடிமரத்தையுடைய குராமரங்கள் குவிந்த கொத்தாகிய வெண்பூக்களைப் பூத்திருக்கும். ஆடுகளை மேய்ப்போனாகிய இடையன் அவற்றைத் தன் தலையிலே சூடிக் கொள்வான். அவ்விடத்தாகிய அகன்ற உள்ளிடங்கொண்ட மனைகளையுடைய சிற்றூரிடத்தே வாழ்ந்திருப்பவர் யாம். அங்ஙனம் வாழ்வதொன்றுமே எம் விருப்பத்திற்குப் பொருந்துவதாயிருக்கும். அல்லாமலும், எம்மை இவ்விடத்தேயே தனித்து இருக்குமாறு நீர்தாம் பிரியக் கருதுவீராயின், நுமக்கு ஒன்றைச் சொல்லுகேன். ஆயமும் தாயருமாகிய எம் பிறந்தகத்துச் சூழலினின்றும் வேறுபடுத்தி எம்மைக் கொணர்ந்து, நுமது இல்லத்தின் கண்ணே இருக்கச் செய்த பொழுதிலே, யாமும் வருந்தியவிடத்து, பெருங்குடியிலே நிலவும் அந்நிலைமைகள் எக்காலத்தும் பெருமை குன்றுவனவாகும் அல்லவோ!

சொற்பொருள் : கொல்லை – புன்செய்ப் பகுதியாகிய தோட்டக்கால்கள். கோவலர் – பசுநிரை மேய்ப்போர். குறும் புனம்–குறுகிய அளவுள்ள தினைப்புனம். குறுங்கால்–குறுகிய அடிமரத்தையுடைய. குரவு–குராமரம். ஆடுடை இடை மகன்–ஆடுகளை மேய்க்கின்றவனாகிய இடைக்குலத்தான். அகலுள்–அகன்ற மனைப்பகுதி. சீறூர்–சிற்றூர். வேறுபட்டு–தாயரும் ஆயருமாகிய பிறந்தகச் சூழலின்று வரைந்து கொண்டு, தன் மனையகத்தே வேறுபட்ட சூழ்நிலையிலே இருக்கச் செய்த நிலை. இரியின்–வருந்தின்.

விளக்கம் : குரவு நெடுமரமன்று; குறுமரவகை சார்ந்தது என்பதனால் 'குறுங்கால் குரவு'என்றனர். ஆடுடை இடையன் என்றது, ஆடுகளை உடைய இடையன் என்றும், களித்து ஆடுகின்ற ஆட்டத்தை உடையவனாகிய இடையன் என்றும் பொருள் தரும். 'சிற்றூரே மாதலின்' என்று கூறியது, யாம் ஒருவர்க்கொருவர் உதவுகின்ற கலந்துறை வாழ்விலே கூடியிருப்பவராவேம் என்றதாம். சிற்றூருள் ஒருவர்க்கு வரும் இன்பதுன்பங்களை அனைவருமே கலந்து மகிழ்ந்தும் வருந்தியும் ஏற்பது இயல்பு.

இரண்டாவது கூறிய துறைக்கு ஏற்பப் பொருள் கொள்ளுங் காலத்தே:—

வரைவிடை வைத்துப் 'பிரிந்தபோது, யாம் எம் சிற்றூரின் கண்ணுள்ள எம் பெற்றோர் இல்லின் கண்ணே இருந்தேமாய் ஆற்றியிருந்தனம். நீர்தாம் நும் முயற்சியாலே இதுபோது மணவினைக்கு முயன்று வந்துள்ளீர். அனைத்தும் நும்மாலே ஆயிற்று. நும்மை மணந்து நும் இல்லம் புகுந்து இல்லறம் ஏற்கும் தலைவி, நும் பேரில்லத்தின் கண்ணும் நும்குடிப்பெருமைக்குக் குறை ஏற்படாவண்ணம் நடந்து கொள்வாள் என்னும் கருத்துப்படப் பொருளைக் கூட்டி உரைத்துக் கொள்க.

267. வந்துநின்ற வயமான் தோன்றல்!

பாடியவர் : கபிலர்.
திணை : நெய்தல்.
துறை : தோழி, காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப் புறமாகச் சொல்லியது (1); வரைவு கடாயதுமாம் (2)

[(து.வி.) களவுறவாலே தலைவியின் மேனியிடத்தே தோன்றிய மாற்றங்களைக் கண்ட தாய், அவளைத் தெய்வம் அணங்கிற்று எனக் கருதினள். அவளை இல்லத்தில் காவலிட்டுச் சிறையும் வைத்துப் பேணினள். அவ்வமயம் தலைவியது காமநோய் மிகுதலைக் கண்டு வருந்தின தோழி, ஒருநாள், தலைவன் ஒருசார் வந்து நிற்பதைக் கண்டவள், அவன் கேட்டு உணருமாறு, அவனைக் காணாதாள் போன்று, தனக்குள் சொல்லிக் கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது. (1); இவ்வாறு சொல்லி வரைவு கடாயதும் ஆகும்.(2)]


நொச்சி மாவரும் பன்ன கண்ண
எக்கர் ஞெண்டி னிருங்கிளைத் தொழுதி
இலங்கெயிற் றேஎர் இன்னகை மகளிர்
உணங்குதினை துழவும் கைபோல் ஞாழல்
மணங்கமழ் நறுவீ வரிக்குந் துறைவன் 5
தன்னொடு புணர்ந்த வின்னமர் கானல்
தனியே வருதல் நனிபுலம் புடைத்தென
வாரேல் மன்யான் வந்தனென் தெய்ய
சிறுநா வொண்மணித் தெள்ளிசை கடுப்ப
இனமீன் ஆர்கை யீண்டுபுள் ளொலிக்குரல் 10
இவைமகன் என்ன வளவை
வயமான் தோன்றல் வந்துநின் றனனே!

தெளிவுரை : நொச்சியது கரிய அரும்பினைப் போன்ற கண்களையுடையன ஞெண்டுகள். மணலிடத்தேயிருக்கும் அத்தகைய ஞெண்டினது பெரிதான சுற்றத்தோடுங்கூடிய கூட்டமானது, ஞாழலின் மணங்கமழும் உதிர்ந்த மலர்களைத் தம் கால்களாலே வரிவரியாக வரித்துக் கோலஞ் செய்தபடி யிருக்கும். அதுதான், விளங்குகின்ற பற்கள் ஒளிசெய்கின்ற அழகிய இனிய நகையினையுடைய, குன்றத்து மகளிர்கள் காயவைத்திருக்கும் தினையைத் தம் கை விரல்களாலே துழாவி விடுவதனைப் போன்றும் தோற்றும். அத்தகைய துறைக்கு உரியவன் தலைவன்! அவனோடு தலைவியைக் கூட்டுவித்த, விருப்பத்தையுடைய கானற் சோலையிடத்தே, தலைவியில்லாதே, யான் மட்டும் தனியே வருதல் மிகவும் வருத்தம் உடையதென்று கருதிய யானும், அவ்விடத்திற்குப் பெரும்பாலும் வாராதிருந்தேன். ஆயின், ஒருநாள் அவ்விடத்துக்கு யானும் வந்தேன். அவ்வேளையிலே, சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியினது தெளிந்த ஓசையைப் போல ஓசை எழுப்பியபடியே, மீனினத்தைத் தின்னுகின்றதற்கு வந்து கூடுகின்ற புட்களின் ஒலிக்குரலைக் கேட்டேன். கேட்டவள், 'இவ்வோசை நம் தலைமகனது தேரிற் கட்டியுள்ள மணியோசையினைப் போன்றது' என்று சொல்லுவதற்கு நினைந்த அளவிலேயே, வலிமிக்க குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தியபடியே அவனும் வந்து நின்றனன். ஆனால், இனி அவர்கள் கூட்டந்தான் இவ்விடத்தே நேர்தல் வாயாது!

சொற்பொருள் : மா அரும்பு – கருமையான பூவரும்பு. எக்கர் – மணல்மேடு. இருங்கிளைத் தொழுதி – பெரிய சுற்றமாகிய கூட்டம். துழவும் – துழாவி விடும்; இது தினை நிரலே போலக் காயும் பொருட்டாக மகளிர் செய்யும் வினை. ஞாழல் – சுரபுன்னை. வரிக்கும் – கோடிட்டுச் செல்லும். அமர் கானல் – விருப்பமுடைய கானற் சோலை; விருப்பம் உடையதானது அதன்கண் தலைவனும் தலைவியும் களவிற் கூடி இன்புற்றிருந்த காரணத்தால். நனி புலம்பு – மிகுதியான வருத்தம்; இது பழைய களிப்பையும் தற்காலத்துப் பிரிவையும் நினைதலால் உண்டாவது. வயமான் – வலிய குதிரைகள்.

விளக்கம் : புள்ளொலி கேட்டதனை மணியொலி என மயங்கினாள் என்றாலும், அவன் தேர் வந்ததும் உண்மையாதலின், இது படைத்துக் கூறியதெனக் கொள்க. அல்லது, அவன் தேர்வரவால் கலைந்து மேலெழுந்த புட்குரல் எனவும் கருதுக.

இற்செறிப்பாலும் காப்பு மிகுதியாலும் களவுக்கூட்டம் இனிமேல் வாயாது; தலைவியின் காமநோய் பெருகுதலால் அவள் இறந்து படுதலும் நிகழக் கூடும்; எனவே இனி விரைந்து அவளை வரைந்து மணந்து கொள்ளலே செயத்தக்கது என்று தலைவன் துணிவானாவது இதன் பயனாகும்.

இறைச்சி : ஞாழலின் உதிர்ந்த பூவை ஞெண்டு துழவும் என்றது, தலைவனைப் பிரிந்து வருந்தி வாடியவளாக இற்செறிக்கப் பெற்றிருப்பாளான தலைவியை, ஏதிலாட்டியர் பழிச்சொற்கள் பலவுங்கூறி வருத்தா நிற்பர் என்றதாம். காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்தே கூறினமையால், இவ்வாறு கூறுதலும் அறத்தொடு பொருந்துவ தென்க.

268. காதல் செய்தலும் காதலம் !

பாடியவர் : வெறிபாடிய காமக்கண்ணியார்; காமக்காணியார் எனவும் பாடம்.
திணை : குறிஞ்சி.
துறை: தலைமகட்குச் சொல்லியது (1), தலைமகன் வந்து ஒழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம் (2).

[(து.வி.) தலைவன் சிறைப்புறமாகத், தலைமகட்கு உரைப்பாள் போலத் தோழி தலைமகன் கேட்டுணருமாறு சொல்லியதாக அமைந்த செய்யுள் இது (1); தலைவன் களவிற்கூடிப் பிரியுங்காலச் சிறுபிரிவிலும் தலைவிக்கு உண்டான வேறுபாடுகளைக் காணும் தோழி, 'நீதான் இப்படி யாயினை' என அவளுக்கு உரைப்பாள் போலத், தலைவன்பால் வரைவு வேட்கையை உண்டாக்கியதாகவும் கொள்ளப்படும்.]


சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க
மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக்
கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ
ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த
நாறுகொள் பிரசம் ஊறுநா டற்குக் 5
காதல் செய்தலுங் காதலம் அன்மை
யாதனிற் கொல்லோ?—தோழி!—வினவுகம்
பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே.

தெளிவுரை : தோழீ முற்றத்திலே புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கினாலே மெய்ம்மை தேர்ந்து கூறுவோனாகிய வேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்னை ஏற்பாடு செய்தனள். அச்சம் பொருந்திய அகன்ற இடத்தேயுள்ள சுனைக்கண்ணே நீர் நிறையும்படியாக, மேகமானது பெரும் பெயலைச் செய்வதற்குத் தலைப்பட்ட மிகவும் நெடிதான குன்றத்திடத்தே, கரிய கரம்புகளையுடைய குறிஞ்சியது வன்மையில்லாத வெண்மையான பூக்களிலே, வேட்டுவரது இல்லங்களிலே ஓவியத்துக் கண்டாற்போலக் கட்டப் பெற்றுள்ள, மணங்கமழும் தேன் அடைக்கு வேண்டியவளவு தேன் ஊறிக்கொண்டிருக்கின்ற நாடன், நம் தலைவன்! அவனுக்கு யாம் பலபடியாகக் காதல் செய்து ஒழுகியபோதும், அவனாலே அந்த அளவுக்கு யாமும் காதலிக்கப்படாமை தான் எந்தக் காரணத்தாலோ? இதனை யாமும் வேலனிடம் வினவுவோம்; வருக, தோழி!

சொற்பொருள் : சூர் – அச்சம். நனந்தலை – அகன்ற இடம். மால்பெயல் – பெரும் பெயல். மன்னெடுங் – மிகவும் நடுமையான. மதனில் – வலிமையிலவாகிய; மென்மை மிகுந்த. வான்பூ – வெண்மையான பூ. ஓவு – ஓவியம். இழைத்த – கட்டியுள்ள; தேனீக்கள் இல்லச் சார்பிலே கட்டியுள்ள தேனடையானது ஓவியந் தீட்டினாற்போல இல்லத்தை அழகு செய்தபடி இருந்தது என்பதாம். பிரசம் – தேன். கடிகொள்ளல் – விளக்கங் கொள்ளல்.

விளக்கம் : தலைமகன் வரைந்து கொண்டு வருதலை நினையாது களவினையே நாடியவனாதலைக் கண்டு, அவனுக்குத் தலைவியின் நோயை அன்னை அறிந்தனள் என்பதனையும், இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனையும், அவள் அவனின்றி வாழாள் என்பதனையும் குறிப்பாக உணர்த்தக் கருதுகின்ற தோழி இவ்வாறு உரைக்கின்றனள். இதனைக் கேட்டலுருவானாகிய தலைமகன், தலைவிபாற் பெருங்காதலன் தானுமாதலின், தலைவியை மணந்து கொள்ளுதலை நினைந்து செயற்பட முற்படுவானாவன் என்பது இதன் பயனாகும். 'காதல் செய்தலும் காதலம் அன்மை' என்றது, அவன் இன்ப மாத்திரையே தம்மை விரும்புகிறவனாயினான் என்று வருந்துவதாகும்.

உள்ளுறை : குறிஞ்சிப் பூவின் தேனானது இல்லத்தே இழைத்திருக்கும் தேனடையிலே ஊறும் என்றது, சோலைக் கண்ணே தலைவனால் தலையளி செய்யப் பெற்ற நினைவுகளாலே, இல்லத்துச் செறிப்புண்டிருக்கும் தலைவியும் இறந்துபடாளாய் உயிரோடிருப்பாள் என்பதாம்.

269. பாலார் துவர்வாய்ப் புதல்வன்!

பாடியவர் : எயினந்தை மகனார் இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : தோழி வாயின் மறுத்தது (1); செலவழுங் குவித்ததூஉம் ஆம் (2).

[(து.வி.) பரத்தையிற் பிரிந்து வந்தானாகிய தலைமகன் விடுத்த தூதர்கள் சென்று தோழியை வாயில் வேண்ட, அவள் தலைவனது செயலைக் கடிந்து அதற்கு மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் (1); பிரியக் கருதிய தலைமகனுக்குத் தலைவியின் நிலைமையை அவன் வாயிலர் கேட்பக் கூறிப் பிரிவைக் கைவிடத் தூண்டும் வகையில் அமைந்த செய்யுள் எனினும் பொருந்தும் (2).]


குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப்
பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன்
மாலைக் கட்கின் மார்பூர்பு இழிய
அவ்வெயி றொழுகிய செவ்வாய் மாண்நகைச்
செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி 5
திருமுகத் தலமருங் கண்இனைந் தல்கலும்
பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார்
சிறுபல் குன்றம் இரப்போர்
அறிவார் யாரவர் முன்னி யவ்வே.

தெளிவுரை : குரும்பை போன்ற மணியைக் கொண்ட பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும், பால் உண்ணுகின்ற சிவந்த வாயினையும், மற்றும் பலவான பசும்பொன் கலன்களையும் உடையவன் நம் புதல்வன். அவன், மாலை விளங்குவதும், கண்ணுக்கு இனிதானதுமாகிய தலைவனின் மார்பினிடத்தே ஏறியும் இறங்கியுமாக விளையாட்டு அயர்வான். அதனைக் கண்டு மகிழ்ந்த அவனது அழகிய எயிறுகள் நிரல்பட அமைந்த சிவந்த வாயிடத்தே மாட்சிமைப்பட்ட நகையும் தோன்றும்! குற்றமில்லாத கோட்பாட்டை உடையவளான உயிர்போல விரும்பப்பட்ட காதலியானவள், அதனைக் கண்டு பொறாது, தன் திருமுகத்திலே உலவும் கண்கள் கலங்கியவளாவாள். நாள்தோறும் பெருமரத்தைச் சுற்றித் தழுவிப் படர்ந்திருக்கும் வள்ளிக்கொடியைப் போல, நம்மையும் மேலே செல்லவிடாது பிணித்துக் கொள்வாள் என்று அவர் தாம் கருதிற்றிலர். சிறிய பலவாகிய குன்றங்களைக் கடந்து செல்வாரும் ஆயினர். அவர் உள்ளத்தே நினைபவற்றை அறியவல்லார் தாம் யார்? அறிந்தோரைப்போல நீவிரும் வந்து வாயில் வேண்டுவதுதான் எதற்காகவோ?

சொற்பொருள் : குரும்பை மணிப்பூண்–குரும்பைபோலச் செய்த மணிகள் கோத்த அரையிற் கட்டும் கிண்கிணி. கட்கின் மார்பு–காண்டற்கு இனிமை தருவதாகிய மார்பு. ஊர்பு இழிதல்–ஏறியும் இறங்கியும் விளையாட்டயர்தல். மாண் நகை–மாட்சி கொண்ட சிரிப்பு ; இது புதல்வனின் விளையாட்டைக் கண்ட இன்பத்தால் தோன்றியது. வள்ளி–வள்ளிக்கொடி. இறப்போர்–கடந்து செல்வோர்.

விளக்கம் : காதலனது மார்பிலே ஊர்ந்து விளையாடும் புதல்வனின் விளையாட்டுச் செயலைக் கண்ட தலைவி, அவன் மார்பினைக் கிண்கிணி ஊறுபடுத்தும் எனக் கலங்கியவளாய்த், தலைவனைப் பெருமரவள்ளியிற் பிணித்துக் கொண்டனள் என்க.

அவரது அத்தகைய காதற்பெருக்கையும், புதல்வனது அத்தகைய இனிய விளையாட்டையுமே மறந்து பிரிந்து சென்றவர், இனி யாதுதான் செய்தற்குத் துணியார்? அவர் பேச்சை யாமும் இனி ஒருபோதும் நம்புதற்கில்லோம் என்பதாம்.

காதலனது முயக்கத்து நினைவினாலேயே அவன் பிரிவை மறந்து யாமும் ஆற்றியிருப்போம் என்று வாயில் மறுத்ததும் ஆம்.

தலைவனாலே விரும்பப்பட்ட பரத்தையர் அவன் குடிக்கு விளக்கஞ் செய்யும் புதல்வரைப் பெற்றுத்தரும் உரிமை இல்லாதவர் என்பதைக் குறிப்பாகக் கூறித் தமது கற்பற உயர் மாண்பினை வாயிலர்க்கு உரைத்ததும் ஆம்.

இதனால், தலைவியின் காதற்பெருக்கையும் மறந்து பரத்தையர் உறவினை நாடிச்சென்ற தளர்ச்சியுடையவன் தலைவன் எள்பதும், அவனது அச்செயலால் தலைவி பெரிதும் வெகுளி உடையவளாயினாள் என்பதும் விளங்கும். இத்தகு உரிமையும் துணிவும் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழகத்துத் தலைவியர் என்பதும் அறிதல் வேண்டும்.

புதல்வன் தலைவனது மார்பணியைச் சிதைக்க, அதுகண்டு தலைவி மனம் வருந்துவாள் என்பது அவளது காதற் பாசத்தினால் ஆகும்.

270. கூந்தல் முரற்சியிற் கொடிதே!

பாடியவர் : பரணர்.
திணை : நெய்தல்.
துறை : தோழி வாயில் நேர்கின்றாள், தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது, உடனிலைக் கிளவி வகையால்.

[(து.வி.) தலைமகனின் பரத்தைமை உறவாலே தலைவிக்கு அவன்பால் வருத்தமிகுதி உண்டாயிருந்தது. அவன் மனைக்கு மீண்டு வந்தபோது, அவள் அவனை ஏற்க உடன்படாள் ஆயினாள். அதனையறிந்த தோழி, அவர்களுக்குள் சந்து செய்விப்பாளாக, அவனைக் குறைகூறுவாள் போலத், தலைவியின் மனமும் அவனுக்கு இரங்குமாறு, அவளும் உடனின்றபோது கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத்
தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து
இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி
உருள்பொறி போல எம்முனை வருந்தல்
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாய் 5
பெருந்தோள் செல்வத்து இவளினும் எல்லா
ஏற்பெரி தளித்தனை நீயே பொற்புடை
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே 10
மறப்பன் மாதோநின் விறல்தகை மையே.

தெளிவுரை : பெருத்த தூற்றினை உடையதான தாழையிடத்தே அமைந்த தன் கூட்டினிடத்தே இருக்கவியலாதாகியது ஒரு வண்டு, குளிர்ந்த நறுமணமானது மிகுதியாகக் கமழ்தலை உடையவும், வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தை உடையவுமான மலர்களைச் சூடியுள்ள, இருளைப்போலும் கருமையான மகளிரது கூந்தலை நோக்கி அது சென்றது. அவ்விடத்தேயுள்ள பூக்களிலுள்ள மிகுதியான மகரந்தத் துகள்களினுள்ளே ஆடியதனாலே மயக்கமுற்று, நிலத்தே அது உருண்டும் விழுவதாயிற்று. அதனைப் போல, எம்முன்பாக வந்து நீயும் வருந்துதல்தான் நினக்கு அழகாயிருக்கின்றது. இதுவல்லாது, இவளை நின்பால் அன்பினாலே பிணித்துக் கொள்ளுதலுக்காவன எதனையும் நீதான் தெளியமாட்டாய். பெருத்த தோள்களாகிய செல்வத்தையுடைய இவளைக் காட்டினும், ஏடா, நீதான் எதனிடத்தே பெரிதும் அன்பு காட்டுகின்றனையோ? இதுதான்—

அழகுடைய விரிந்த பிடரி மயிராற் பொலிவுற்றவும், விரைந்த செலவைக் கொண்டவுமான நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பலரையும் தோற்று ஓடச் செய்தவனும், அதனைச் செய்து முடித்த வெற்றி வேலினை ஏந்தியவனுமான நன்னன் என்பான், அவ்வரசரது உரிமைமகளிர் கூந்தலைக் கொய்து முறுக்கிய கயிற்றாலே, அவர்களின் போர் யானைகளைப் பிணித்துக் கொணர்ந்த கொடுஞ் செயலினும் காட்டில் கொடிதானதாகும். ஆதலாலே, நினது வலிமையான தகுதிப்பாட்டினையும் யானும் மறந்துவிடுவேன், காண்பாயாக!

சொற்பொருள் : தடந்தாள் – பெரியதான தூறு; தூறு என்றது அடிமரத்தை. குடம்பை – கூடு. நோன்றல் – பொறுத்தல்; நோனா – பொறுக்க மாட்டாமை. முனை – முன்பாக; 'ஐ'சாரியை. பொறி – வண்டு. பொங்கு துகள் – பொங்கும் மகரந்தத் துகள்; துகள் பொங்குதல் வண்டு கிண்டுதலால். தேற்றா – தெளியாத. பெருந்தோள் செல்வம் – பெருத்த தோள்களாகிய செல்வம்; மகளிர்க்குத் தோள்கள் பெருத்திருப்பது பேரழகு தருவதாகலின் அதனைச் செல்வம் என்றனர். அளித்தல் – அன்பு செய்தல். பொற்பு – அழகு உளை – பிடரிமயிர். பரி – குதிரையின் விரைந்த செலவுக்குப் பெயர். நன்மான் – நல்ல சாதிக் குதிரைகள். வேந்தர் – அரசர்; இவர் பகையரசராகிய பிண்டன் முதலியோர். முரற்சி – முறுக்கிய தன்மை விறல் – வலிமை.

விளக்கம் : 'மணத்தாலே சிறந்த தாழையின்பால் அமைந்த தன் இருப்பிடத்தை வெறுத்துச் சென்ற வண்டானது, பிற பூக்களாலே அழகுபெற்ற மகளிரது கூந்தலிடத்தே சென்று மொய்த்து, அவ்விடத்தே பொங்கிய துகளிலேயும் ஆடியபடி மயங்கித் தரையிலே வீழ்ந்தாற்போல, நீதானும் நின் மனைக்குரிய சிறந்தவளாகிய இவளை வெறுத்துச் சென்று, பகட்டுக் கவர்ச்சியினராகிய பரத்தையரிடத்தே கூடிக் களித்தனையாய் மயங்கி, அந்த அடையாளங்கள் நின் மேனியிடத்தேயும் தோன்றும்படியாக, எம்முன்னேயும் வந்து தாழ்ந்து நிற்பாய் ஆயினை' என்கின்றாள் தோழி. வண்டு தலைவனுக்கும், தாழைக் குடம்பை தலைவிக்கும், வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல் பரத்தையருக்கும், உருண்டு வீழ்ந்த தரை தோழிக்கும் உவமையாகக் கொள்க.

தாழையின் பூவை மகளிர் தம் சடையிலே சேர்த்து முடித்துக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும்போது, அந்தச் சடையினது தோற்றம் கூடுபோலத் தோன்றும்; ஆதலின் அதனைச் சூடியிருந்த தலைவியின் கூந்தற்சிறப்பைத் தாழைக் குடம்பை என்றனர். 'வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல்' என்றது, வண்டினங்களைத் தன் நறுநாற்றத்தால் தன்பால் ஈர்க்கும் மலர்களைச் சூடிய இருள்போலும் கூந்தல் என்க. இதனால், தலைவன் தன் குற்றத்தை உணர்ந்து நாணத், தன் முன்னே தலைவனைப் பழித்தலைப் பொறாதவளான தலைவியும், தோழியைக் கடிந்து, அவனை ஏற்றுக்கொள்வதற்கு முற்படுவாள் என்க.

271. தாவின்று கழிக கூற்றே!

பாடியவர் : ........
திணை : பாலை.
துறை : மனை மருண்டு சொல்லியது.

[(து.வி.) தன் மகள், தான் விரும்பிய காதலனுடனே, தன் வீட்டினின்றும் நீங்கிச் சென்றுவிட்டனளாக, அதனால் எழுந்த பழியுரைகளைக் கேட்டுப் பொறுக்கவியலாதவளாயினாள் அவள் தாய். அவள், தன் மனையிடத்தே இருக்க முடியாதபடி மனம் மயங்கியவளாகப் புலம்பிக் கூறுவது போன்று அமைந்த செய்யுள் இது.]


இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தா தெருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனையொடு எம்மிவண் ஒழியச்
செல்பெருங் காளை பொய்ம்மருண்டு சேய்நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் 5
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த
குவளை யுண்கண் என்மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிய பொய்த லாயம்
மாலைவிரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு 10
மாயிருந் தாழி கவிப்பத்
தாவின்று கழிகளற் கொள்ளாக் கூற்றே.

தெளிவுரை : கரிய எருமையினது அணித்தாக ஈனப்பெற்ற பெரிய செவியையுடைய கன்றானது, பசிய பூந்தாதுகள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவினிடத்தே, தங்கப் பெற்ற துயிலை மேற்கொண்டு உறங்கா நிற்கும், செழுமையும் தண்மையும் கொண்டது இம்மனையாகும். இதனோடு, எம்மையும் இங்கே தனித்திருக்கவிட்டு, எம்மகளும், தன்னோடு வருகின்ற பெரிய காளையாவானின் பொய்ச்சொற்களாலே மயங்கியவளாக, நெடுந்தூரத்தேயுள்ள அவன் நாட்டை நோக்கியும் செல்வாளாயினள். சுவையான காய்களையுடைய நெல்லி மரங்கள் செறிவுற்றுப் போவாரை மேற்போகாதபடி தடுக்கின்ற நெல்லிமரச் சோலையினுள்ளே, தரையிலே வீழ்ந்து கிடந்த கடைதிரண்ட காய்களை ஒருசேரத்தின்று, வறண்ட சுனையிடத்தேயுள்ள மிகச்சிறிதளவான நீரையும் குடித்தவளாக, அவளும் போவாளோ! குவளை மலரைப் போலத் தோன்றும் மையுண்ட கண்களை உடையவளான அத்தகைய எம்மகள் தான்—

சிவந்த பனங்குருத்தை வெட்டிப் பதப்படுமாறு பனியிற் போடுதலாகிய மாலைப்பொழுதின் பின்னே, நிலவு விரிகின்றதான இரவுப்பொழுதிலே, அவளைத் தேடிப் பின்சென்றவர் அவளை மீட்டுக் கொணர, அவள் மனைக்கு மீண்டுவருகின்ற அந்தத் தோற்றுவாடிய நிலையைக் காணற்கும், என்னை விதி விதித்துவிட்டதே! அதற்கு முன்பேயே என்னைப் பெரிய தாழியிலேயிட்டுக் கவிக்கும்படியாக, என் உயிரைக் கொண்டு போகாத கூற்றமானது, தானும் தன் வலியழிந்ததாய்த், தன்னையே தாழியிலிட்டுப் புதைக்கும்படியாக இறந்து ஒழியக் கடவதாகுக!

சொற்பொருள் : வைகுதுயில் – தங்கப் பெற்ற உறக்கம். செழுந்தண் மனை – செழுமையும், மரச்செறிவால் தண்மையுங் கொண்டதான மனை. பெருங்காளை – பெரிய காளை; பெரிய என்றது எள்ளற் குறிப்பு. பொய் மருண்டு – பொய்யுரைகளாலே மயங்கி; பொய் என்றது அவன் தன் மகட்குச் சொல்லிய உறுதிமொழிகளை; அது வாயாமற்படி அவளைத் தன் வீட்டார் மீட்டுக் கொணர்வர் என்பதனால் இப்படிக் கூறினள். போக்கரும் பொங்கர் – போக்கைத் தடுக்கும் சோலை; போதற்கு அரிதாயது, நெல்லிக் காய்கள் காலை உறுத்தலாலும் தன்னத் தூண்டுதலாலும் வீசுனை – வறண்ட சுனை. புறங்காண்டல் – எண்ணம் நிறைவேறாமல் தோல்வியுற்று மீண்டதைக் காணுதல்; இதனால், அவள் கருத்தும் வாயாது, குடிக்குப் பழியும் வந்தடைதலின், அதனைக் காணாமுன், தான் உயிரைவிட்டுவிட விரும்புகின்றாள் தாய். தாழி கவிப்ப – தாழியாற் கவித்து மூட; இது இறந்தபின் உடலைப் புதைக்கும் பண்டைய தமிழ் மரபு. தாவின்று – வலியழிந்து.

விளக்கம் : பனையின் குருத்தோலையை வெட்டி விரித்துப் பனியிற் பதப்படுமாறு வைத்தல் இன்றும் காணும் வழக்கம் ஆகும். தன் மகளின் நல்ல வாழ்விலே ஆர்வங் கொண்ட தாயது மனம், இவ்வாறு அவள் செய்த பழிக்குரிய செயலாலே நொந்து நலிவுற்று வெதும்புகின்றது. 'தமர் அவளை மீட்டு வருவர்' என்பது, அவள் கொண்ட நம்பிக்கை. அதற்குள் தன் உயிரையே விட்டுவிட நினைக்கின்றாள் அவள்.

இறைச்சி : 'எருமைக் கன்றும் பூந்தாதிலே கிடந்து துயில் கொள்ளும்' என்றது, அத்தகைய வளமனை வாழ்வையும் விரும்பாது, தன் காதலனின் மார்பே பாயலாகத் துயிலக் கருதி, அவனுடன் போகிய தன் மகளது காதற் பெருக்கை வியந்து கூறியதாகும். அதனை வாழ்த்தி உள்ளம் மகிழ்வதும் ஆகும். இதனால், அவள் தமரின் கண்ணிற் படாதபடி, தன் காதலனுடன் அவனூர்க்கே நலமாகச் சென்று சேர்ந்து, அவனையே மணந்து, இன்பமான இல்வாழ்விலே திளைப்பதையே அந்த அன்னை விரும்புகின்றாள் என்பதும், அவளைத் தமர் மீட்டுக் கொணர்தலை அவள் விரும்பவில்லை என்பதும் விளங்கும்.

272. அலர்வாய் அம்பல் மூதூர் !

பாடியவர் : முக்கல் ஆசான் நல்வெள்ளையார். திணை : நெய்தல். துறை : (1) வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; (2) தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி.) மணந்து கொள்வதிலே மனஞ் செலுத்தாமல், களவு உறவினையே தலைவன் விரும்பினவனாக நெடுங்காலம் வந்து ஒழுகி வருகின்றான். அவனை விரைய மணந்து கொள்வதற்குத் தூண்டும் வகையால், அவன் கேட்டு உணருமாறு தலைமகள் தோழிக்குச் சொல்லுவாள் போலச் சொன்னதாகவோ (1), அல்லது தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொன்னதாகவோ (2) அமைந்த செய்யுள் இது.]


கடலம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடிகொய் தழித்த
பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக்
கடுஞ்சூல் வதிந்த காமர் மேடைக்கு
இருஞ்சேற் றயிரை தேரிய தெண்கழிப் 5
பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன்
நல்கா மையின் நசைபழு தாகப்
பெருங்கை யற்றவென் சிறுமை யலர்வாய்
அம்பன் மூதூர் அலர்தந்து
நோயா கின்றது நோயினும் பெரிதே! 10

தெளிவுரை : நோன்பு மேற்கொண்டவரான மகளிர்கள் கொடிகளைக் கொய்து அழித்து இடம்செய்துள்ள நெருங்கிய அடும்பின் கொடிகளைக் கொண்டதான் வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே, நிரம்பிய சூலுடனே சென்று தங்கியிருந்தது, கடற்காக்கைப்பேடை ஒன்று. தன்னாலே விரும்பப்படுகின்ற அந்தத் தன் பேடைக்கு உணவாகக் கரிய சேற்றினிடத்தே உள்ளதான அயிரைமீனைத் தேர்ந்தெடுத்துக் கொணர விரும்பியது, கடலியங்கு நீர்க்காக்கையுள் சிவந்த வாயினதான அதன் சேவல். அதுதான் அதன்பொருட்டாகத் தெளிந்த நீரையுடைய கழியிடத்தேயுள்ள பூக்களையுடைய ஆழமான இடத்தினைச் சென்று துழாவியபடி இருக்கும். இத்தன்மைத்தான கடற்றுறைக்கு உரியவன் நம் தலைவன். அவன் நமக்குத் தலையளி செய்யாமையினாலே நாம் அவனோடுங் கூடியிருந்து இல்லறம் பேணுவோம் என்னும் நம்முடைய விருப்பமும் பழுதாகி விட்டது. அதனாலே பெரிதும் செயலிழந்து போயின என் காமநோயாகிய சிறுமைப் பாடானது பழிகூறுதலே இயல்பாகவுடைய அலருரைக்கும் பெண்டிர் வாழும் எம்மூதூரிடத்தே அலரையும் கொண்டு தந்தது. அதுதான், அவரைப் பிரிதலாலுண்டாகிய நோயினுங் காட்டில் பெரிதும் நோய் செய்வதாகின்றது, தோழி!

சொற்பொருள் : கடலம்காக்கை–கடலைச் சார்ந்து வாழ்வதாகிய கடற் காக்கை. படிவமகளிர்–நோன்பு மேற்கொண்ட மகளிர்; பொம்மல்–செறிவு. சிறை–பக்கம். கடுஞ்சூல்–நிறைசூல்; முதற்சூலும் ஆம். வதிந்த–தங்கிய; தங்குதல் தன்னாற் பறந்து சென்று இரைதேட வியலாத தளர்ச்சி மிகுதியினால். தெண்கழி– மேலே தெளிந்த நீரைக் கொண்ட கழிப்பகுதி. பூவுடைக்குட்டம்–நீர்ப்பூக்களை உடையதான ஆழமான இடம். துழவும்–துழாவித்தேடும். நசை–விருப்பம்; இஃது இல்லுறை மனைவியாக அமைந்து அறம் பேணும் வாழ்க்கையிலே கொண்ட விருப்பம். பெருங்கையற்ற–பெரிதும் செயலழிந்த. சிறுமை–களவுறவால் மேனியின் வண்ணம் மாறிச் சிறுமையுற்ற தன்மை.

விளக்கம் : 'படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறை' என்றதனால், அந்நாளைய மகளிர் கடல் தெய்வத்தை வேட்டு நோன்பு பூண்டு, அதனைக் கழிக்கும் நாளிலே பொங்கலிட்டுப் பூசனை செய்வதற்கு வசதியாகச் செய்யப்பெற்ற வெண்மணல் மேட்டின் ஒரு பக்கம் என்றும் கொள்க. மணந்து இல்லறமாற்றும் பெருமையை விரும்பியவள், அதுதான் நேராமையின் நொந்து வாடி நலிவுற்று, அதனால் ஊரவர் பழிதூற்றச் சிறுமையும் எய்தினள் என்பதாம். இதனைக் கேட்டலும் தலைவன், அதுதான் தன்னாலே உண்டாயது என்பது உணர்ந்தானாய், விரைவில் அவளை மணக்கக் கருதுவான் என்பதுமாம். காக்கைப் பேடைக்குச் சேவல் அன்போடு செய்யும் அது தானும், அவர் நம் மாட்டுச் செய்யக் கருதிலரே என்று நினைந்து நொந்ததுமாம்.

உள்ளுறை : காக்கைச் சேவலானது கடுஞ்சூலோடு வதிந்த தன் பேடைக்கு அயிரை மீனைத் தேடும் என்றது அவ்வாறே தலைவனும் பொருளீட்டி வந்து பெற்றோருக்கு அளித்துத், தன்னை மணந்து இன்புறுத்தல் வேண்டும் என்றதாம்.

கடுஞ்சூலோடு வெண்மணல் ஒருசிறை வதியும் பேடைக்கு அங்குள்ள அடும்பு பயன்படாமை போலத், தான் பிறந்த இல்லிடத்தே வாழும் தலைவிக்கு, அங்குள்ள வளன் எல்லாம் பயன் தருவதின்று; தலைவனின் தலையளியே இன்பந்தருவது, பயன்தருவது என்றதுமாம்.

'படிவமகளிர்' என்றது தாமும் அவ்வாறே நோன்பு பூண்டு தெய்வத்தைத் தம் காதலனோடு கடிமணம் புணர்க்குமாறு செய்கவென வேட்டதனைக் குறிப்பால் உணர்த்தியதுமாம். அன்றிப் பிரிவுத் துயரால் வருந்தி உண்ணாமையும் ஒப்பனைசெய்யாமையும் மேற்கொண்டதனால், 'படிவமகளிர்' போலத் தோன்றியதனாலும் ஆம்.

273. எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரம் !

பாடியவர் : மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகனது வரவுணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள் வேலனைக் கூவி வெறியயரும்' என்பதுபடச் சொல்லியது.

[(து-வி.) இப்படிக் கூறுவதனாலே தலைவன் தெளிவு அடைந்தவனாகத் தலைமகளை விரைவிலே மணந்து கொண்டு இல்லறமாற்றுதலைப் பற்றிய முடிபினைக் கொள்பவனாவான் என்று கொள்க.]


இஃதெவன் கொல்லோ தோழி, மெய்பரந்து
எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையில் தான்வருத் துறீஇ நம்வயின்
அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென
வேல னுரைக்கும் என்ப வாகலின் 5
வண்ண மிகுத்த அண்ணல் யானை
நீர்கொள் நெடுஞ்சுனை யமைந்துவார்ந் துறைந்தென்
கண்போல் நீலம் தண்கமழ் சிறக்குங்
குன்ற நாடனை உள்ளுதொறும்
நெஞ்சுநடுக் குறூஉம் அவன் பண்புதரு படரே. 10

தெளிவுரை : தோழி! நின்னது மெய்யனைத்துமே பரந்ததாகித் துன்பத்தை உறுவித்த நம்முடைய வருத்தத்தை நம் அன்னையும் கண்டனள். நம்பாலுள்ள விருப்பத்தினாலே தானும் வருத்தமுற்றவளாகினள். நம்பால் நிகழ்ந்ததனை ஏதும் அறியாதாளாக, முருகவேளுக்கு வெறியினையும் எடுத்தனள். அதன்கண் வெறியாடும் வேலனும், 'முருகுதான் நின்னை அணங்கிற்று' என்று கூறுவான் என்பர். ஆதலினாலே,

வண்ணத்தாலே அழகு மிகுதியாகப் பெற்ற பெரிய யானையானது, நீர் முகந்து கொள்ளுகின்ற நெடுஞ்சுனையின் கண்ணே அமைந்து நெடிதாகத் தங்கியிருக்கின்ற அவ்விடத்தே, என்கண்போல மலர்கின்ற நீலமலர்கள், தண்ணியவாய், மிகுதியாக மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றது மாகிய குன்றத்துக்குரிய நாடனாகிய நம் தலைவனை எண்ணுந்தோறும், அவன் பண்பு தருகின்ற வருத்தமானது, எனது நெஞ்சத்தையே நடுக்கமுறச் செய்யும் தன்மையாகிறதே! இதுதான் எவ்வாறு இனி முடியுமோ தோழி?

சொற்பொருள் : மெய் பரந்து–மெய்யினிடத்தே பரவி. எவ்வம்–துன்பம். வெம்மை–விருப்பம். அறியாது–உண்மை அறியாது. நம்வயின் அறியாது–நம்மிடத்தே வினவி உண்மை அறியாது எனலும் ஆம். அயர்ந்த–வெறியயர்ந்த. அயர்ந்த அன்னை–வருந்தித் தளர்ந்த அன்னையும் ஆம். வெறி–வெறியாட்டு. வண்ணம்–நிறம். இது முகத்தில் தோன்றும் புள்ளிகளால் உண்டாவது. அண்ணல்–தலைமைப்பாடு. பெரிய பண்பு–சால்பு; இது முன்பு செய்த தலையளியை நினைந்து கூறியது.

விளக்கம் : அவன் நமக்குச் செய்த தலையளி எல்லாம் இதுபோது எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரமாகவே விளைந்தது என்றனள். இஃது அவன் வரைந்து கொண்டு இல்லறம் இயற்றுங் கருத்திலனாகக் களவு உறவிலேயே நீடித்த விருப்பினனாக விளங்கியமையை நினைந்து வருந்திக் கூறியதாகும். 'வெம்மையில் தான் வருத்துறீஇ' என்றது, அன்னை நம் துயரத்தைக் கண்டதும் நம்பாலுள்ள அன்பினாலே வருத்தமடைந்தனள். அவன் அன்பிலனாதலின் அதனைக் குறித்து ஏதும் கருதிற்றிலன் என்றதாம். 'அயர்ந்த அன்னை' இது எதனால் உற்றதென அறியாளாக மயங்கித் தளர்ந்த அன்னை என்றதாம். 'வெறியென வேலன் உரைக்கும் என்ப' என்றது, 'முருகே அணங்கிற்று; வெறியாடி முருகை வழிபடுக' என்பான் வேலன் என்று சொல்லுவார்கள் என்றது, பிறர் உரைப்பதைக் கேட்டுக் கூறியதாம்.

'அமைந்து வார்ந்து உறைந்து என் கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும்' என, நீலத்தின் செறிவை உரைத்ததாகவும் கொள்ளலாம். பண்பு படர் தருவதன்று எனினும், அதுதான் இதுபோது படர்தருகின்றதே; இதுதான் இனி என்னவாக முடியுமோ என்பதுமாம்.

'யானை நீர் கொள்ளும் தண்சுனையிடத்து நீலம் தண்கமழ் சிறக்கும் என்றது, தலைவன் தலைவியைக் கொள்ளக்கருதித் தலைவியின் மனையிடத்து வேட்டுவருங் காலத்தே, அவளது இல்லத்தாரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதாம்.

'என்னவாகுமோ?' என்று கவலையுற்றது, தலைவியின் களவுக் காதல் உறவினைக் கருதியாகும்.

உள்ளுறை : நீர் உண்ணும் அண்ணல் யானை தலைவனாகவும், அது உண்ணும் சுனை தலைவியது குடியாகவும், நீர் தலைவியாகவும், நீலம் தண்கமழ் சிறத்தல் அவளைப் பெற்ற பெற்றோரும் பிறரும் மகிழ்தலாகவும் உள்ளுறை பொருள் கொள்க.

274. வருதியோ பொம்மல் ஓதி!

பாடியவர் : காவன்முல்லைப் பூதனார்.
திணை : பாலை.
துறை : தோழி, 'பருவம் மாறுபட்டது' என்றது.

[(து.வி.) தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற காலத்திலே, 'அவன் கோடையது வெம்மையால் வழியிடையேது துன்பம் அடைதலும் கூடும்' என்று எண்ணி வருந்துகின்றாள். அவளது வருத்தத்தைப் போக்கக் கருதிய தோழி, 'அவ்விடத்து மழைக்காலம் ஆயிற்றுக் காண்' என்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


‘நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப்
படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின் ஒண்பழந் தாஅம்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் 5
எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி’எனக்
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும்புலி வழங்கும் சோலை
பெருங்கல் வைப்பின் சுரன்இறந் தோரே.

தெளிவுரை : தம்முள்ளே மாறுபட்டவான பெரிய புலிகள் திரிந்து கொண்டிருக்கும் சோலைகளை உடையதான பெரிய மலைநாட்டைச் சார்ந்த நிலமாகிய சுரத்தைக் கடந்து செல்பவர் நம் காதலர். அவருக்கு ஏதம் ஏதும் உளதாமோ என நீயும் வருந்துவாய். ஆயின்,

நெடிய வானத்திடத்தே மேகங்கள் மின்னலிட்டுச் சிறு சிறு துளிகளையும் பெய்யத் தொடங்கிப் பெருமழையாகவும் பொழிந்ததாகிய, பிளப்புக்களையுடைய குன்றத்திடத்தே வாழ்கின்ற உழையாகிய பெண்மானின் அழகிய உடலானது தீண்டுதலாலே, இழையணிந்தாளாகிய பெண் ஒருத்தியது பொன்னாற் செய்யப்பெற்ற காசினைப் போன்றவாகிய ஒள்ளிய பழங்கள் உதிருகின்ற, குமிழ மரங்கள் நிரம்பியிருக்கும் குறுகிய பல வழிகளைக் கொண்டதான சுரநெறியிலே, அடர்ந்த கூந்தலை உடையாளே! நீயும் எம்மோடும் வருகின்றாயோ? என்று அவர் சொல்லிய சொற்களையும் உடையர்காண்! ஆதலின், அங்கு அவர் வேனிலால் வெம்மையுறுவதும் இலரென்று தெளிவாயாக.

சொற்பொருள் : நெடுவான் – நெடிய வானம். வான்–மேகமும் ஆம். குறுந்துளி – குறுகிய சிறு துளி. படுமழை –பெருமழை. பகுவாய்க் குன்றம் – பிளப்புக்களைக் கொண்ட குன்றம். உழைமான் அம் பிணை – உழையாகிய மானின் அழகிய பிணை. பிணை – பெண் மான். இழை மகள் – கலனணிந்த இளமகள். பொன் செய் காசு – பொற்காசு என்றும் வழங்குவர். குமிழ்–குமிழ மரம். தலைமயங்கல்–நிரம்பிச் செறிவோடிருத்தல்; பிற மரங்களோடு கலந்திருத்தலும் ஆம். குறும்பல் அத்தம் – குறுகலான பலவாகிய வழிகள். பொம்மல் ஓதி – அடர்ந்த கூந்தல்; அதனை உடையாளான தலைமகளைக் குறித்தது. வேறுபட்டு – மாறுபட்டு; இரும்புலி – பெரிய புலிகள்.

விளக்கம் : தலைவன் செல்லும் வழியிடையிலே அவன் துன்புறுதல் கூடும் எனக் கவலையுற்ற தலைவிக்கு, அவன் பிரிந்த காலத்துச் சொன்ன சொற்களை நினைவுபடுத்தி, இவ்வாறு தேறுதல் உரைக்கின்றாள் தோழி. 'எம்மொடு' வருதியோ?' என அவன் அழைத்ததை நினைவுபடுத்தியது, அதுகாலை 'அதுதான் மகளிர்க்கு மரபன்று' எனக் கூறி மறுத்துத் தான் ஆற்றியிருப்பதாகக் கூறிய தலைவியின் சொற்களை நினைவுபடுத்துதற்கும் ஆம். இவ்வாறு கணவனோடு மகளிர் உடன்செல்லலையும் கோவலனோடு சென்ற கண்ணகி கதையால் அறியலாம். இனிச் 'செல்லற்கும் எளிது பொருளும் எளிதாகக் கிடைப்பது, எனவே நீயும் உடன் வருகின்றாயோ?' என்று அவன் அழைத்ததாகவும் கொள்ளலாம்.

இறைச்சி : 'மான்பிணை சென்று தீண்டலும் மரத்திற் பழுத்துக் கனிந்திருந்த குமிழின் பழங்கள் பொற்காசு போல உதிரும்' என்றது. அவ்வாறே தலைவன் சென்று பொருளினை ஈட்டத் தொடங்கியதும், பொருளும் விரைவில் கிடைக்கும் என்க. அப்படி வந்து கைகூடுவதாகலின், அவன் அதனோடும் விரைவிலே மீண்டு வருவான் எனவும் கூறித் தலைவியைத் தேற்றுகின்றனளாகக் கொள்க.

275. பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன்!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : சிறைப்புறமாகத் தலைமகனது வரவு உணர்ந்து வற்புறுப்ப, வன்முறை எதிர்மொழிந்தது.

[(து.வி.) : தலைவன் வந்து செவ்வி நோக்கியபடி ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். அதனை அறிந்த தோழி பிரிவுத் துயராலே வாடியிருக்கும் தலைவியைத் தேற்றுவாளாக, 'அவன் விரைவிலே வருவான்' என்று வலியுறுத்தி கூறுகின்றாள். அவளுக்குத் தன்னுடைய கற்புத்திண்மையும் வருத்தமும் புலப்படத் தலைவி பதிலிருப்பதாக அமைந்த செய்யுள் இது.]


செந்நெல் அரிநர் கூர்வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தெனப் பூவே
படையொடுங் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா மென்மெலத்
தெறுகதிர் இன்துயில் பசுவாய் திறக்கும் 5
பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பற்கு
யான்நினைந் திரங்கேன் ஆகநோய் இகந்து
அறனி லாளன் புகழ்வென்
பெறினும் வல்லேன்மன் தோழி யானே!

தெளிவுரை : தோழீ! முற்றிய செந்நெற் கதிரை அரிபவரது கூரிய வாளாலே அறுக்கப்பட்ட நெய்தலானது, அதனைக் காணாதவரான அவரது நெற்கதிர்க் கட்டுக்களோடுஞ் சேர்ந்து, களத்திற்கும் போய்ச் சேரும். தன்னை அறுத்த வாட்படையோடும், தன்னை எப்புறமும் அழுத்தியபடி யிருக்கும் கதிர்களோடும் நேர்ந்த துயராலே கலங்கிய அந்நெய்தலானது, சூட்டோடு கிடக்கும் தனக்குற்ற துயரத்தையும் அறியாதாகி, இனிய துயிலைப் போக்கியபடி வெம்மையாலே தாக்கும் கதிர்களைக் கொண்ட கதிரவனின் வரவைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றதுமாகித், தன் பசிய இதழ்களைத் திறந்தபடி பூத்தலையும் செய்யும். அத்தகு பேதைமை வாய்ந்த நெய்தலைக் கொண்ட கடற்கரை நாட்டவன் நம் தலைவன். அவனுக்காக, அவன் என்னைப் பிரிவுத் துயராலே நலியச் செய்த கொடுமையை நினைந்தும், அதனாலே நமக்குற்ற பழியைக் கருதியும், யான் ஏதும் வருந்தமாட்டேன். என் நெஞ்சத்து நோயின் கொடுமையையும் கடந்து, அறனிலாளனாகிய அவன் என்பால் வந்து, என்னைப் புகழ்தற்கு எத்தகைய துயரத்தைப் பெரினும், அதனைத் தாங்கியிருக்கவும் யான் வல்லமை உடையேன். ஆதலின், நீதான் கவலையடைதல் வேண்டாம் காண்!

கருத்து : 'பிரிவை அவன் வரும்வரை பொறுத்திருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : செந்நெல் – நெல்வகையுள் ஒன்று, சிவப்பான அரிசி கொண்டது. படை – அரிவாள். மயங்கிய– வருத்தமுற்றுக் கலங்கிய. படுக்கை – பாயல்; அது நெற்சூடு. விழுமம் – துன்பம். தெறுகதிர் – வாட்டும் வெம்மை கொண்ட கதிர். பேதைத் தன்மை; இது கதிரவன் வரவு கண்டதும் துயரை மறந்து பசுவாய் திறந்து மலர்தல். அறனிலாளன் – அறநெறியைக் காக்கும் பண்பற்றவன்; தலைவனைக் குறித்தது; தன்னால் காதலிக்கப்பட்டாளை முறைப்படி மணந்து இல்வாழ்வாகிய அறத்தைப் பேணுதலை மறந்தவன் என்பதனால் இப்படிக் கூறினாள்; இதனால், தான் மணத்தை விரும்புவதையும் உணர்த்தினாள். என் பெறினும்-எவ்வகைத் துயரத்தை அடையப் பெறினும்; துயரமாவன, பிரிவால் நேர்ந்ததும், அன்னை அறிதலால் விளையும் அச்சமும், அலருரைகளால் உண்டாகும் பழியும் போல்வன.

விளக்கம் : 'பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன்' என்றது, நெய்தற்கு உறும் துயரத்தை அறியாதே போயின தலைவன் என்றதாம். இதனால், தானுற்ற துயரத்தை அவனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தினாள். நெய்தல் படையொடுங் கதிரொடும் மயங்கினாற் போலத், தானும் தலைவனின் காதன்மையோடும், தன் குடும்பப் பாங்கோடும் உழன்று மயங்கிய நிலையையும் உணர்த்துகின்றாள். கதிரவன் தெறுகதிர் வரவு கண்டதும், நெய்தல், தான் துயரை மறந்து பூவை மலரச் செய்து களிப்பதுபோலத், தானும் அவன் வரைந்து வருதலோடும், தன் துயரையும் மறந்து களிப்பவளாவள் என்பதுமாம். இதனால், பெண்மையின் திண்மையான தன்மையைத் தோழிக்கு உணர்த்தினாள். நெய்தல் வைகறைப் போதில் மலர்வது. ஆகவே, இரவெல்லாம் துயருற்ற தலைவியும் வைகறைப் போதில் இல்லத்தார் தன் நிலையைக் காணாமற்படிக்குத் தன் துயரை மறைத்து முக மலர்ச்சியோடும் புறத்தே தோன்றுவாள் என்பதாம்.

உள்ளுறை : நெய்தல், தான் பல துயருற்ற போதும், கதிரவன் தோன்றவும் மலர்ந்தாற்போல, பிரிவுத் துயராலே வாடியிருக்கும் தலைவியும், தலைவன் வரைவொடுவரின், அனைத்தும் மறந்தவளாக உவகை கொள்வாள் என்பதாம்.

இதனைக் கேட்டலுறும் தலைவன், தலைவியை முறையாக மணந்துகொண்டு, பிரியாது வாழும் இல்லற வாழ்விலே மனஞ் செலுத்துவான் என்பது இதன் பயனாகும்.

276. கட்சி சேக்கும் கான மஞ்ஞை!

பாடியவர் : தொல் கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.

[(து.வி.) பகற்குறிக் கண்ணே தலைவியைக் கூடி இன்புற்றுத் தன் ஊர்க்குச் செல்லும் தலைமகன்பால். அவனைத் தன் இல்லிலே வந்து விருந்துண்டு போக அழைப்பாள் போல, விரைவிலே பலரறி மணத்தைத் தோழி அறிவுதுத்துவதாக அமைந்த செய்யுள் இது.]


கோடு துவையாக் கோள்வாய் நாயொடு
காடுதேர் நசைஇய வயமான் வேட்கும்
வயவர் மகளிர் என்றி யாயின்
குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில் 5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல்லகத் ததுவெம் மூரே செல்லாது
சேர்ந்தனை சென்மதி நீயே பெருமலை
வாங்கமை பழுனிய நறவுண்டு
வேங்கை முன்றிற் குரவையும் கண்டே! 10

தெளிவுரை : கொம்புகளை ஊதியபடி, கொள்ளுதலிலே வல்ல வாயையுடைய நாயோடும் சென்று, காட்டின்கண்ணே இரை தேடியபடி இருக்கும் விருப்பத்தையுடைய வலிய விலங்கினையே தாம் கொள்ளுதலை விரும்பும், வேட்டுவ வீரரின் மகளிர் என்று எம்மைச் சொல்வாயாயின், யாம் அவரல்லேம்! யாம் குறவர் மகளிரேம். குன்றிடத்தே வாழ்கின்ற கொடிச்சியரேம். தினை காவலன் கட்டிய நெடிய கால்களையுடைய பரணிடத்திலே, காட்டு மயில்கள் தமக்கு வேண்டும் ஒதுக்கிடயாகக் கருதித் தங்கியிருக்கும் மலையின் கண்ணது எம் ஊர். நீர்தான் இப்போதே திரும்பிச் செல்லாது எம்மூர்க்கண் தங்கியிருந்துவிட்டுச் செல்வீராக. பெரிய மலையிடத்தே தோன்றி வளைந்த மூங்கிற் குப்பிகளிலே நிரப்பி முற்றவைத்துள்ள நறவினை உண்டுவிட்டு, வேங்கை மரம் நிற்கும் முற்றத்திலே யாமாடும் குரவைக் கூத்தையும் கண்டுவிட்டுப் போவீராக!

சொற்பொருளும் விளக்கமும் : கோடு – கொம்பு. துவையா – ஊதியபடி. கோள் வாய் – கொள்ளுதல் வல்ல வாய். வேட்டை நாய்கள் பிற விலங்குகளைத் தம் வாயாற் பற்றிக் கொள்ளும் தன்மையன என்பதனால், 'கோள் வாய் நாய்' என்றனர். தேர்தல் – ஆராய்தல்; இது தமக்கேற்ற இரையாதெனவும், எங்குள்ளது எனவும் சுற்றித் தேடித்திரிதல். வயமான் – வலிய விலங்கு. இது புலி முதலியவற்றைக் குறிப்பது. வேட்கும் – வேட்டையாட விரும்பும். வயவர் – வலிமையாளர்; வேட்டுவர். கொடிச்சி – குறக்குலப் பெண்ணின் பெயர். சேணோன் – இதணத்து உள்ளோன்; இதணம் என்பது புனங்காவலுக்குக் கட்டியுள்ள உயரமான பரண்; இதன் மேலிருந்தபடி குறவன் இரவிலே புனத்தைக் காத்திருப்பான் என்பதாம். கழுது – பரண். கட்சி – ஒதுக்கிடம். சேக்கும் – தங்கும். செல்லாது – நின் ஊருக்குப் போகாது. வாங்குதல் – வளைதல். பழுனிய நறவு – முதிர வைத்த கள். முன்றில் – முற்றம்.

"ஒவ்வொரு சமயம் வந்து இவளைத் தழுவிச் செல்கின்றாய். எனினும் இவளோ நின் சிறுசிறு பிரிவையும் பொறுக்கலாற்றாது நலிகின்றாள். எனவே இன்றிரவுக்கு எம்மூரிடத்தே தங்கிச் செல்வாயாக" என்கின்றாள் தோழி. அதனால் இடையூறு உண்டாகாது எனவும், தன்னவர் விருந்தினர்ப்பேணும் மரபினர் எனவும் கூறுவாள், 'நறவுண்டு; குரவையுங் கண்டு செல்வாயாக' என்கின்றனள்.

இவ்வாறு தலைவன் வந்து, தலைவியின் பெற்றோர் உபசரிக்கத் தலைவியின் வீட்டில் இரவில் தங்குவது என்பது தலைவியை வரைந்து கொண்டன்றி இயலாது ஆதலின், களவுக்குறி மறுத்து வரைவு கேட்டனளும் ஆம்.

'யாம் வயவர் மகளிர் அல்லேம் குறவர் மகளிரேம்' என்றது, எம்மவர் நீ வரைந்துவரின் அதனை ஏற்றுக்கொள்ளும் தன்மையர் என்றதாம். 'குறவர் மகளிரேம்' என்றதுடன், 'குன்று கெழு கொடிச்சியேம்' எனவும் கூறியது, அதனை மேலும் வலியுறுத்துவதற்காம்.

277. அறிவும் கரிதோ அறனிலோய் !

பாடியவர் : தும்பிசேர் கீரனார்; தும்பிசொகினனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : பட்டபின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாகிய தலைமகள், தும்பிக்குச் சொல்லியது.

[(து.வி.) தலைமகன் தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து போயிருக்கின்றான். அவன் நினைவால் அவள் வருந்துகின்றாள். அவன் குறித்தகாலமும் கழிந்தது. அதனால் அவள் துயரமும் பெரிதாயிற்று. அவ்வேளையிலே தம்முட் கூடியிருந்த தும்பிகளை நோக்கி, அவள் தன் நெஞ்சழிந்த நிலைமையைக் கூறுவாள்போல் அமைந்த செய்யுள் இது.]


கொடியை வாழி தும்பி இந்நோய்
படுகதி லம்ம யான்நினக் குரைத்தென
மெய்யே கடுமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய்! நினக்கே?
மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை 5
நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறுபடு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ, அன்பிலர் 10
வெம்மலை யருஞ்சுரம் இறந்தோர்க்கு
என்நிலை உரையாய் சென்றவண் வரவே!

தெளிவுரை : தும்பியே! என்னளவிலே நீதான் சொடியை! ஆயினும், நீதான் இன்புற்று வாழ்வாயாக! யானோ, இப்பிரிவுத்துயரென்னும் நோயின் காரணமாக செத்தொழிவேனாகுக! யான் நின்னை நம்பி என் நிலையை நினக்கு உரைத்ததனாலேதான் இந்நிலை எனக்கு ஏற்பட்டது. நின் உடலோ கருமையானது; அன்றியும் அதனைப்போலவே நின் அறிவும் செவ்விதாகக் கருமையானது தானோ! எம்மனையைப் பொருந்தக் காத்திருக்கும் மாட்சிமைப்படப் பெரிதாக அமைக்கப்பட்ட வேலியிடத்துள்ள, நுண்ணிய முட்களையுடைய மரங்களின் மீது பீர்க்குப் படர்ந்துள்ளது. பூந்தாதோடும் பூத்துள்ளதும் குலைகட்டியதுமான அப்பீர்க்கின் பூக்களிலே ஊதித் தேனைப் பருகினை! அதற்கு வேறுபட்டதாக நறுமணம் இல்லாமையினாற் போலும், என்பாற் படர்ந்துள்ள பசலையிடத்தும் வந்து ஊதினாயல்லை. நின் சிறிய குறிய பேட்டினுக்கு அன்புடையையாய் விரைவுடனே ஓடிப்போய் அதன் நெஞ்சம் நெகிழுமாறு அதற்குத் தலையளி செய்ததன் பயனோ இஃதெல்லாம்! என் காதலரோ என்பால் அன்பில்லாதவராயினார். என்னைப் பிரிவினால் இவ்வாறு வருந்தவிட்டு, வெம்மை கொண்ட மலையிடத்துள்ள கடத்தற்கரிய சுரநெறியையும் கடந்து சென்றுள்ளார். அவண் சென்று, இவ்விடத்தே என்பால் அவரும் வருமாறு, என் துயர நிலையை, அவருக்கு நீதான் உரைக்க மாட்டாயோ!

கருத்து : நீதான் உரைக்க மாட்டாயாதலின், இனிச்சாவு ஒன்றே எனக்கு எஞ்சியது என்பதாம்.

சொற்பொருள் : கொடியை – கொடுமை உடையை; கொடுமையாவது துன்புற்றார்க்கு நெஞ்சம் இரங்காத வன்கண்மை. படுக – செத்து ஒழிவேனாகுக. 'தில், அம்ம' அசைகள். செவ்வன் அறிவு – செவ்வையாக இருத்தற்கு உரியதான அறிவு; அதுதான் கரிதோ என்றது, அதுதான் செவ்வையினின்று மாறுபட்டதனால். அறன் – நீதி; இது நொந்தார்க்கு இயன்றதை உதவும் பண்பு. உற– பொருந்த. கிடக்கை – வீட்டைச் சூழ அமைந்து கிடப்பது; இது முள்மரத்தால் அமைந்த வேலி. தாறு–குலை. நாற்றம் – மணம்; பசலை நிறத்தால் பீர்க்கம் பூவை ஒத்திருப்பினும், மணம் இல்லாததனால் அதன்பால் மொய்த்தால் தேன் கிடையாது என அறிந்து தும்பி ஒதுங்கிற்றென்க. நெஞ்சு நெகிழ் செய்தல் – நெஞ்சம் நெகிழுமாறு தலையளி செய்தல். வெம்மலை – கோடையின் கடுமையால் வெம்மைப்பட்ட மலை. இறந்தோர் – கடந்தோர்.

விளக்கம் : 'நின்பால் உரைத்தும் பயனில்லை' என்பாள் நின்னிடம் உரைத்ததன் பயனோ இவ்வாறு யான் மேலும் துயருற்றது என்று நோகின்றனள். நெஞ்சம் கரியார்க்கு ஒன்றை உரைப்பின் அதுதான் மாறான பயனைத் தருமென்பது உலக வழக்கு. அதனை நினைந்து, இவ்வாறு கூறினளும் ஆம். 'தாறு' என்றது பீர்க்கின் காய்க் குலைகளை. 'ஓடி நெஞ்சு நெகிழ் செய்தல்' என்றது, அப்பெட்டையைப் பின்னே தொடர்ந்து பறந்து சென்று, அதன் ஊடலைத் தீர்க்கும் சிறப்பை. மனைப்புறம் காக்கும் என்றது மனையின் புறத்தே அமைந்து அதனைக் காத்தல். 'மாண் பெரும் கிடக்கை' என்றது, புறத்தார் கடந்து புக இயலாத உயரமும் செறிவும் அமையக் கிடக்கும் வேலியை.

278. கோடுதோறும் நெய்கனி பசுங்காய்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.

[(து.வி.) வரைபொருள் குறித்துப் பிரிந்து சென்றோனாகிய தலைவன், குறித்த காலத்து வந்தானில்லை. அதனாலே தன் நெஞ்சத் துயரம் மிகுந்தாளாய் மெலிந்து வாடினாள் தலைவி. அதுகாலை அவன் பலரும் அறியுமாறு வருதலைக் கண்ட தோழி, அவன் வரைவொடு வருதலை உணர்ந்து, தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


படுகாழ் நாறிய பராரைப் புன்னை
ஆடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழப்
பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய்கனி பசுங்காய் தூங்குந் துறைவனை 5
இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல்
கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே.

தெளிவுரை : தானே வித்து வீழ்ந்து முளைத்த பருத்த அடியை உடையதான புன்னையது, அடுத்ததாக வளர்ந்துள்ள மரலின் பழம்போலும் அரும்புகள், வாய்திறந்த வாய் இதழ் விரிந்தன. அங்ஙனம் மலர்ந்த, பொன்போல விளங்கும் மகரந்தமிக்க பலவாகிய அம்மலர்களிடத்தே, சூடுவோர் கொய்ததுபோக எஞ்சியுள்ள மலர்கள், கிளைகள் தோறும் நெய்கனியும் பசுங்காய்களாக முதிர்ந்து தூங்கும். இத்தகைய துறைக்கு உரியவனான நம் தலைவனை, நினக்கு உரிய கணவனாதலையும், இப்பொழுது யான் அறிந்து கொண்டேன். கடற்கழியின் சேற்றிடத்தே வந்தமையால் சேறுபடிந்த திரண்ட கால்களைக் கொண்ட கோவேறு கழுதையின் குளம்பின் எப்புறமும் சிவந்த இறா மீன்கள் உள்ளொடுங்கப் பட்டவாய் அழிந்தன. மற்று, அவன்றன் கோதையிடத்தும், அணிந்த உடை முதலிய யாவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய நுண்மணல் சென்று படிந்துள்ளது!

கருத்து : 'இதனால், அவன் நின்னை மணந்து கொள்வதனாலே, நீயும் இனி இன்புற்றிருப்பாயாக' என்று வாழ்த்தியதாம்.

சொற்பொருள் : படுகாழ் – தானே வீழும் வித்து; யாரும் போடாதது என்பது கருத்து. நாறுதல் – முளைத்து வளர்தல். பராரை – பருத்த அடிமரம். அடுமரல், புன்னையை அடுத்து வளர்ந்துள்ள மரல். 'மரல்' கள்ளி வகையுள் ஒன்று. மொக்குள் –மொட்டு; பூவரும்பு சூடுநர் – பூச்சூடுவாரான மகளிர். நெய் – எண்ணெய். பசுங்காய் – பசிய காய்கள்; வெண்முகை இதழ் விரிந்து பொன்னிறத் தாதோடு விளங்கி இப்போது பசுங்காயாயும் ஆயிற்று என்க, கொண்கன் – கணவன். கழி – உப்பங்கழி. ஊதை – ஊதற்காற்று.

விளக்கம் : அவன் விரைந்து வருகின்றான் என்பதும், பலரறிய வருகின்றான் என்பதும் தோன்ற இறா அத்திரியின் குழம்பில் ஒடுங்கினதும், கோதை முதலாயவற்றுள் ஊதை மணல் ஓடுங்கினதும் கூறினளாம். இதனால், அவன் பகற் போதிலேயே பலரறிய வந்தனன் என்பதும், அதுதான் வரைவொடு வந்தது என்பதும் உணர்த்தினாள்.

279. அதர்உழந்து அசையினன் கொல்லோ!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : மகட்போக்கிய தாய் சொல்லியது.
[(து.வி.) தலைவனோடு தலைவியும் உடன்போக்கிற் சென்று விட்டனள். அவள் செயல் அறனொடு பட்டதென்றே கருதினாலும், அவளைத் திடுமெனப் பிரிந்ததனாலே, தாயின் மனம் பெரிதும் வேதனைப்படாமலும் இல்லை; அந்த மன வேதனையைக் காட்டுவதாக அமைந்த செய்யுள் இது.]


வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத்
தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ
வைகுபனி யுழந்த வாவல் சினைதொறும்
நெய்தோய் திரியில் தண்சிதர் உறைப்ப
நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு 5
பொருத யானைப் புண்தாள் ஏய்ப்பப்
பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை
வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம் 10
பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே!

தெளிவுரை : வேம்பினது ஒளியையுடைய பழத்தைத் தின்னுதலையும் வெறுத்தது; இருப்பையின் இனிய பால்வற்றிய சுவையான பழத்தையும் தின்ன விரும்பியது; அதனாலே, வைகிய பனியிலேயும் சென்று வருந்தியது, வௌவால். அவ்வாறு நாடிச் சென்ற அதன்மேல், மரக்கிளைகள் தோறுமிருந்து வீழ்ந்த பனித்துளிகள், நெய் தோய்த்த திரியினின்றும் வீழும் சுடரைப் போலத் தண்ணிய துளிகளாக வீழ்ந்தபடியே இருக்கும். அத்தகு விடியற்காலையிலேயே சுரத்திடையே சென்று வருந்தியவள் அவள்! வாள்போலும் கோட்டையுடைய புலியேற்றையோடு யானையும் போரிட்டது; அதனால் யானையின் கால்கள் பெரிதும் புண்பட்டன. புண்பட்ட அவ்யானையது தாள் போலச் சிதையுமாறு, பசிமிகுந்த பிடியானையானது ஓமையின் அடிமரத்தை உதைத்துச் சிதைத்தது. சிதைந்த ஓமையின் சிவந்த அந்த அடிமரமானது, வெயில் எழுந்து காய்கின்ற பொழுது விட்டுவிட்டு ஒளிசெய்தபடியேயிருக்கும். அத்தன்மையுடைய பாலையின் அருஞ்சுரமாகிய வழியிலே—

தலைவனை அவள் மணமுடிக்கும் காலத்துக் கழிக்க வேண்டிய, சிலம்பைக் குறித்த சிலம்புகழி விழாவின் சிறப்பினை யானும் கண்டு மகிழாதே, பிறர்கண்டு மகிழுமாறு அவன் பின்னாகப் போயினாள் அவள்! அழகிய கலனணிந்த என் அந்த மகளின் அடிகள்தாம் அச்சுரத்திடையே சென்று இதுகாலை எவ்வாறு வருந்துகின்றனவோ!

சொற்பொருள் : வாவல்–வௌவால். சிதர்–சிறுதுளிகள். சுரம்–சுரநெறி. அத்தம்–பாலை ஓமை–ஒரு வகை மரம். செல்வம்–செல்வம்போலப் போற்றும் விழாச் சிறப்பு.

இறைச்சி: 1 . 'வேம்பின் பழத்தைத் தின்பதை வெறுத்து இருப்பைப் பழத்தை விரும்பிய வௌவாலானது, வெய்ய பனியானது உறைப்ப இருக்கும்' என்றனள். இது பிறந்தகத்துச் செல்வத்தைத் துய்ப்பதை வெறுத்துத் தலைவனின் செல்வத்தைத் துய்ப்பதை நாடிச்சென்ற தலைமகள் அவ்வில்லத்தாரோடும் எவ்வாறு மனமொத்து இருப்பாளோ என்று தாய் கலங்கியதைக் குறித்ததாம்.

2. 'பசியுற்ற பிடியாலே உண்ணற் பொருட்டு உதைக்கப்பட்டுப் பொழிந்த ஓமையின் அடிமரமானது, வெயிலில் ஒளி செய்யும்' என்றனள். இது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட என்நிலைதான் பொழுது விடிந்ததும், பலராலும் அறியப்பட்டுத் தூற்றப்படும் என்று வருந்தியதாம்.

விளக்கம் : 'வேம்பின் ஒண்பழம்' எனவும், இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன்' எனவும் வேறுபாடு குறித்த நயம் காண்க. அருகிருக்கும் முன்னதை வெறுத்துத் தொலைவிலுள்ள பின்னதை நாடிக் காலை வேளையிலே சென்று துயரத்தையும் அடையும் வாவல் என்றனர். இது, தலைவி இல்லத்தை விட்டகன்று அவனுடனே சென்றதான பேதைமையை நினைந்து கூறியதாகும். 'வைகுபனி யுழந்த வாவல்' என்றது, அவளும் புலர் காலையிலே அகன்று சென்றனள் எனக் குறிப்பதாகும். இரவிலே பிடியால் உதைத்துச் சிதைக்கப்பெற்ற ஓமையின் செவ்வரை, பொழுது புலர்ந்ததும் வெயில்பட்ட காலையிலே இமைக்கும் என்றது, அவள் இருந்த நிலைமைக்கு நல்ல உவமையாகும்.

புலியேற்றை யானையொடும் பொருதிப் புண்படுத்தியதைக் கூறியது, வழியும் ஏதமுடைத்து என்றதாம். இலையும் தழையும் அற்றுப்போகவே மரத்தைச் சிதைத்து உண்ணலாயிற்று என்றது, வழியின் கொடிய வெம்மையைக் குறித்ததாம்.

'சிலம்பு கழி நோன்பு' மணத்துக்கு முன் செய்யப்படும் ஒரு விழா! இதனைக் 'கன்னிமை கழித்தல்' என்பர். அது செய்யாததற்கு முன்பே அவள் அவனுடன் சென்றதற்குத் தாய் வருந்துகின்றனள். 'பிறருண' என்றது இவ்விழாவைத் தலைவன் இல்லத்தார் கண்டு களிப்பர் போலும் என்று, அந்த நினைவாற் கூறியதாம்.

280. நன்மனை நன்விருந்து அயரும் !

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : (1) வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது. (2) தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) (1) பரத்தையின் உறவினாலே தலைவியை மறந்தானாகிப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன்; அவன் மீண்டும் தலைவியைக் கூடுதலை விரும்பியவனாகத் தோழியைத் தூது விடுக்கின்றான். அவள், தலைவியிடம் சென்று, தலைவனை மீண்டும் ஏற்குமாறு சொல்ல, அவள், தன் மனநிலையை விளக்குவதாக அமைந்த சுவையான செய்யுள் இது. (2) தலைமகனைப் புலந்துவிடாது தலைவி ஏற்றுக் கொள்ள, அவள் நிலையைத் தோழி புகழ்ந்து கூற, அவளுக்குத் தலைவி சொல்லியதும் இது.]


கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின்
கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல்
தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழும்
தண்துறை யூரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி!—புலவேன் 5
பழன யாமைப் பாசறைப் புறத்துக்
கழனி காவலர் சுடுநந்து உடைக்கும்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னவென்
நன்மனை நனிவிருந் தயரும்
கைதூ வின்மையின் எய்தா மாறே! 10

தெளிவுரை : 'தோழீ! கொக்கு அமர்ந்ததனாலே, கிளை அசைவுற்று மாங்கனியும் விழ்ந்தது. வீழ்ந்த இனிய அம்மாங்கனியானது, கொக்கினது குவிந்த நிலைபோலத் தோற்றும் அரும்புகளையுடைய ஆம்பல்மிகுந்த, ஆழமிகுந்த நீரினுள்ளே துடுமென்னும் ஒலியோடே வீழும். அத்தகைய தண்ணிய நீர்த்துறைகளைக் கொண்டவன் நம் ஊரன். அதன்தான், அயலாம் தன்மையுடைய பொருந்தாத பரத்தமையினையும் உடையவன் என்பதைக் கண்டிருந்தும், நீதான் அவன்பால் ஊடல்கொள்ளாய் என்கின்றனை!

வயலாமையது பசிய கற்போன்ற முதுகிலே, அவ்வயலைக் காவல் செய்யும் மள்ளர்கள், தாம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்பார்கள். அத்தன்மையுடைய பழமை முதிர்ந்த வேளிர்களது குன்றூரைப் போன்றது என் மனை. அந்த என் நல்ல மனையினிடத்தே, மிகுதியான விருந்தினர்களை நாளும் உபசரித்தலாலே கையொழியாமையினாலே, யான் அவனைப் பல நாளாகச் சந்திக்கப் பெற்றிலேன். அதனாற்றான், அவன்பாற் புலவாதுள்ளேன்,காண்பாயாக! 'அவனைப்பற்றிய பிற எவையுமே எனக்குத் தோன்றிற்றில்லை' என்கின்றாள் அவள்.

சொற்பொருள் : கொக்கின் கூம்பு–கொக்கு தலையை உடலுள் ஒடுக்கியபடி யிருக்கும் நிலை. முகை–அரும்பு. பாசறை–பசிய கற்போன்ற மேற்புறம். கை தூவல்–கை யொழிதல். பழனம்–வயல். காவலர்–காவல் செய்வோர்.

விளக்கம் : கொக்காலே வீழ்ந்த மாங்கனியானது கொக்கின் ஒடுங்கிய நிலைபோன்ற அரும்புகளைக் கொண்ட ஆம்பல்கள் நிரம்பிய ஆழ்குட்டத்து நீரில் 'துடும்' என்ற ஓசையுடன் விழும் என்றது, மருதத்தின் நீர்வளமிக்க தன்மையை நன்கு காட்டுவதாகும்.

இரண்டாவது துறைக்கேற்ப உரை கொள்வதாயின், "ஊரன் வேறுபட்டவனாக நடந்ததனை நினைத்து அவனிடத்து ஊடாதே கொள்' என்றனை; அவன் என்பால் வருவதே அரிதாதலால், ஊடினால் முற்றவும் வெறுக்குமோ என்று கருதி யான் அஞ்சுவேன்" என்று தலைவி சொன்னதாகக் கொள்க.

உள்ளுறை : 'கொக்காலே உதிர்ந்த மாம்பழமானது, ஆம்பற் பொய்கையிலே துடுமென வீழும் என்றது, பரத்தையாலே வெறுத்து ஒதுக்கப்பட்ட தலைமகன், நின்னை வாயிலாகக் கொண்டு, இவ்விடத்துக்கு வந்தனன் போலும் என்றதாம்.

இறைச்சி : 'வயல் காப்பவர், சிறப்பில்லாத நத்தையைச் சுட்டு, ஆமையின் புறஓட்டிலே தட்டியுடைத்துத் தின்பர்' என்றது, தலைவனும் சிறப்பில்லாத பரத்தையின் நலனை விரும்பியவனாய், அவளைத் தன் பாணனின் உதவியாலே பெற்று மகிழும் இயல்பினனாவான் என்றதாம்.

ஒப்புமை : 'கொக்கின் அன்ன கூம்புமுகைக் கணைக்கால் ஆம்பல் (நற் 230)' எனப் பிறரும் உரைப்பர்.

மேற்கோள் : 'அவனறிவாற்ற அறியுமாகலின்" என்னும் சூத்திரத்து,'வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ' என்பதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது, 'தலைவனோடு புலவாமை நினக்கு இயல்போ?' என்ற தோழிக்கு, விருந்தால் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலேன்; அல்லது புலவேனோ?' என்றவாறு, என நயமும் உரைப்பர் நச்சினார்க்கினியர்–(தொல்.பொருள்.147).

281. அன்பிலர் தோழி நம் காதலர் !

பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றியார்.
திணை : பாலை.
துறை : (1) வன்பொறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.(2) ஆற்றாள் எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.

[(து-வி) (1) பிரிந்தவன், தான் வருவதாகக் குறித்த காலத்தும் வராததனாலே பெரிதும் ஆற்றாளாயினாள் தலைவி. அவளை, 'இன்னும் சற்றுப் பொறுத்திரு' என்று தோழி வற்புறுத்துகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (2)' தலைமகள் இனியும் பொறுத்திருக்க ஆற்றாள்' எனக் கவலையுற்ற தோழி, தலைமகட்கு உரைத்ததாகவும் கொள்ளப்படும்.]


மாசில் மரத்த பலியுண் காக்கை
வளிபொரு நெடுஞ்சினை களியொடு தூங்கி
வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி அம்பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப
மழையமைந் துற்ற மாலிருள் நடுநாள்
தாம்நம் உழைய ராகவும் நாம்நம்
பனிக்கடு மையின் நனிபெரிது அழுங்கித்
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் தோழிநங் காத லோரே! 10

தெளிவுரை : தோழீ! மாசற்ற மரத்திலே அமர்ந்தபடியே மக்களிடும் பலியை உண்ணும் காக்கையானது, காற்று மோதுகின்ற நெடிய கிளையிலே தன் மேல் வீழ்கின்ற மழைத்துளியுடனேயே அசைந்துகொண்டு, பலிக்குக் காத்திருக்கும், வெல்லுகின்ற போர்வலிமையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற, நல்ல பலவகையான மிகுந்த பலிக்கொடையோடும் சொரியப்படுகின்ற, சொல்லிலடங்காத சோற்றுத் திரளைகளுடனே அழகிய பலவான ஊனும் கலந்து இடப்படுகின்ற பெருஞ்சோற்றைத் தான் நினைத்தபடியேயும் அது இருக்கும். மழை பொருந்திய பெய்தலைக் கொண்ட மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்திலே, அவர்தாம் நம் அருகேயிருந்தா ராகவும், நாம் நமக்கு உண்டாகிய மெய்க்குளிரின் கடுமையாலே மிகப்பெரிதும் வருந்தினமாய்த் தூங்காதிருந்தனம்! அதனை அறிந்தும், நமக்குத் தலையளி செய்து நம்மைக்காக் காதவரான நம் காதலர் தான் நம்பால் அன்பேயில்லாதவர் காண்! அதனால், யானும் அவர் பிரிவுக்குச் சற்றும் வருந்துவேன் அல்லேன்!

சொற்பொருள் : மாசு–குற்றம்; பலியுண்ணும் காக்கை குற்றமற்ற மரத்திலேயே இருக்கும் என்பது மரபு. மழையாற் கழுவப்பெற்று மாசு தீர்ந்த மரமும் ஆகும். பலியுண் காக்கை–மக்கள் தெய்வங்களைக் குறித்து இடும் பலிச்சோற்றை யுண்ணும் காக்கை. களியொடு–களிப்போடு. தூங்கி–அசைந்தாடியபடி. 'கழாஅர்'–சோழர்க்குரிய கடற்றுறைப் பட்டினம். சொன்றி–சோறு; சோற்றுத் திரளை. விடக்கு–ஊன். மால் இருள்–மயக்கத்தையுடைய இருள். உழையர்–அருகிருப்பவர். பனி–குளிர். அழுங்கி–வருத்தமுற்று; நலிந்து.

விளக்கம் : மழையில் நனைந்து மரக்கிளையில் அசைக்கும் காற்றோடு தானும் ஆடியடியே இருக்கும் காக்கையானது, 'கழாஅர்' நகரிற் கொள்ளும் பெரும்பலியை நினைத்தபடி இருக்கும் என்றனர். இதனால், தெய்வங்களுக்கு நிணச்சோற்றுத் திரளைகளைப் பலியாக இடும் மரபும், அதனைக் காக்கை உண்ணத் தெய்வம் ஏற்றதாகக் கருதும் நம்பிக்கையும் பண்டைநாளில் இருந்தனவென்பது அறியப்படும். அருகிருந்த காலத்திலேயே நம் துயரைக் களையாத அவர் பிரிவை நினைத்து யானும் நெஞ்சழிவதிலேன் என்னும் தலைவியின் பேச்சிலே, அவளது ஏக்கமிகுதி நன்கு வெளிப்படக் காணலாம். அவள் காதன்மையின் மிகுதியும் புலப்படும்.

'முயங்கு தொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்கும்' மார்பின் முயக்கம் என்பர் இதனை–(பொருநர். 183-4.) அதனைப் பெறுதலையன்றி அவனை வெறுத்தலை அவள் எதனாலும் எக்காலத்தும் நினையாள் என்பதாம்.

இறைச்சி : பலியுண் காக்கையானது மழையிலே நனைந்து குளிரிலே வருந்தி நலிந்திருக்கும் காலத்தினும், கழாஅர் நகரிலே கிடைக்கும் விடக்குடைப் பெரும் பலியைக் கருதியிருக்கும் என்றனள். இது. 'என்றேனும் அவர் வந்து நம்மைத் தலையளி செய்வர் என்னும் நம்பிக்கை ஒன்றாலேயே யானும் உயிர் வாழ்கின்றேன்' என்றதாம்.

282. நாடுகெழு வெற்பனின் தொடர்பு !

பாடியவர் : நல்லூர்ச் சிறுமேதாவியார்; நன்பாலூர்ச் சிறுமேதாவியார் எனவும் கொள்வர்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

[(து.வி.)] களவொழுக்கத்தேயே ஒழுகிவரும் தலைவனைத் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்கு விரைதற்குத் தூண்டக் கருதினாள் தோழி. அவன் ஒருநாள் வந்து குறியிடத்து ஒரு பக்கத்தே செவ்வி நோக்கி நிற்பதறிந்தவள், தலைவிக்குக் கூறுவாள் போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்லிய பாங்கில் அமைந்த செய்யுள் இது.]


தோடமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழக்
கோடேந் தல்குல் அவ்வரி வாட
நன்னுதல் சாய படர்மலி அருநோய்
காதலன் தந்தமை அறியா துணர்த்த
அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் 5
கிளவியில் தணியின் நன்றுமன் சாரல்
அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை
ஆடுமழை மங்குலின் மறைக்கும்
நாடுகெழு வெற்பனொடு அமைந்தநம் தொடர்பே!

தெளிவுரை : தோழி! தொகுதியாக அமைந்த, செறித்தலைக் கொண்டவான இலங்குகின்ற வளைகளும் நெகிழ்ந்தன; பக்கம் உயர்ந்த அல்குலினது அழகிய இரேகைகளும் வாட்டமுற்றன: நல்ல நெற்றியிடத்தே பசலையும் பாய்ந்தது; பிரிவுத் துயரம் மிகுந்த நீக்குதற்கரிய காம நோயானது, நம் காதலனாலே இந்நிலையிலே நமக்குத் தரப்பட்டது. இதனை அறியாத அன்னையானவள், 'தெய்வக் குற்றம்' எனக் கருதிப் படிமத்தானுக்கு இதனை அறிவித்தனள். வெறிக்களத்தே, முன்னிடப்பெற்ற கழங்கினாலே ஆராய்ந்தான் அறிவு வாய்ந்த வேலனும். அவன் சொன்னாற் போல, இதுதான் முருகனைப் பராவுதலாலே தணியுமாயின், அதுவும் நன்றுதான்! இம்மலைசாரலினிடத்தே அகிற்கட்டையைச் சுடுகின்ற கானவன், ஆங்குள்ள சருகில் முதற்கண் நெருப்பை மூட்டுதலினாலே எழுகின்ற புகையானது வானத்தையே மறைக்கும். இத்தன்மைப்பட்ட நாடு விளங்கிய வெற்பனோடு அமைந்த நம் தொடர்புதான், இனிக்கழிந்தே விட்டது போலும்!

சொற்பொருள் : தோடு–தொகுதி. செறிப்பு–செறிந்திருக்குமாறு அமைத்தல்! இலங்குதல்–விளங்குதல். கோடு–பக்கம். அவ்வரி–அழகிய இரேகைகள். படர்–காம நோயாகிய துன்பம்; பற்றிப் படர்தலால் 'படர்' என்றனர்: அருநோய்–தீர்த்தற்கரிய நோய். முதுவாய்–அறிவு வாய்ந்த முதுமை வாய்ந்த. வேலன்–வெறியாடுவோன். உவல்–சருகு. ஆடு மழை மங்குல்–இயங்கும் மழை மேகம்.

விளக்கம் : களவுக் காலத்து இடை இடையே உண்டாகும் சிறுபிரிவாலேயே தலைவி பெரிதும் நலிவெய்துகின்றனள்; அதனைத் தெய்வக் குற்றமோவெனத் தாய் கருதினள்; வெறியாடலுக்கு ஏற்பாடும் செய்தனள்; இனி இற்செறிப்பும் நிகழும்; எனவே, விரைய மணந்து கொள்வதற்குத் தலைவன் முயலவேண்டும் என்பதாம். கானவன் அகிற்கட்டையைச் சுடுதல் தினைக் கொல்லையை விரிவு படுத்தக் கருதியாகும்.

இவர்களது பேச்சைக் கேட்கும் தலைவன், அவளை மணந்து கொள்வதற்கான விரைந்த முயற்சிகளைச் செய்தலிலே விருப்பங் கொள்ளுகின்றவன் ஆவான் என்பதாம்.

இறைச்சி : 'கானவன் சுடுபுகையானது மேகம்போலத் தோன்றி மறைக்கும்' என்றனர். இது, களவின்பமே சிறந்ததெனக் காட்டி நம்முடைய தொடர்ந்த ஒழுக்கம் நம் காதலனையும் மயக்கா நிற்கும் என்பதாம்.

283. இன்னை ஆகுதல் தகுமோ ?

பாடியவர் : மதுரை மருதனிள நாகனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) கடிநகர் புக்க தோழி பிற்றைஞான்று வேறுபடாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) (1) பகற்குறியிடத்தே வந்த தலைமகனை எதிரே கண்டாளான தோழி, 'இவளை வரைந்து வந்து மணந்து கொள்வதற்கு முயல்வாயாக' என்று உள்ளுறையால் உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.

(2) தலைவியை மணந்து கொண்டு தலைவன் இல்லற வாழ்விலே திளைத்து வருகின்ற காலத்தில், தோழி தலைவன்பாற் சென்று அவனைப் பாராட்டிக் கூறியதாக அமைந்த செய்யுளும் இது.]


ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற
கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல்
அகல்வரிச் சிறுமனை அணியுந் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய
இன்னை யாகுதல் தகுமோ? ஓங்குதிரை 5
முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே.

தெளிவுரை : ஒளியுடைய நெற்றியைக் கொண்டவரான பெண்கள், அகன்ற கழியிடத்தே யிருந்தும் பறித்துவந்த, மகளிரது கண்ணை நேராக ஒத்தலையுடையதும், மணம் கமழ்கின்றதுமான நறிய நெய்தல் மலர்கள், அகன்ற, கையாலே அமைத்துக் கோலஞ் செய்த சிற்றில்லை அழகுபடுத்தியிருக்கும் துறைகளையுடைய தலைவனே! உயர்ந்து வரும் அலைகளைக் கொண்ட கடலின் மேலாகப், பலரும் போற்றித் தொழுமாறு தோன்றுதலைச் செய்து, யாவரும் இன்பமடையும்படியாக விளங்கும் ஞாயிற்றினுங் காட்டில், வாய்மை விளங்கிய நினது பேச்சையே விரும்பிய எம்மனோர்க்கு, அறிவுடையோரால் ஆய்ந்து கண்ட பழைய அழகெல்லாம் தொலையும்படியாக, நீதான் இத்தன்மையனாகுதல், நினக்குத் தகுதியாகுமோ? ஆதலின், நீதான் நன்குக் கருதினையாய் ஒரு முடிவையும் செய்வாயாக!

சொற்பொருள் : ஓங்குகழி–அகன்றகழி. குறுதல்–கொய்தல். நேர்ஒத்தல்–மிக்க ஒப்புடையதாதல். அகல்வரிச் சிறுமனை–அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறு வீடு. வல்லோர்–அறிவிலே வல்லவர்; அறிஞர். தொல்கவின்–பழையதான அழகு. முந்நீர்–கடல். ஏம்–இன்பம். சுடர்–கதிரவன்.

விளக்கம் : ஞாயிற்றை உவமை கூறியது, பகற்குறிக்கண்ணே அவனும் தவறாது வந்து தோன்றுதலினாலே. அவளை வரைந்து எய்தாயாய் இங்ஙனம் ஒழுகி வந்ததனாலே அவள் தான் பெரிதும் நலனழிந்தாள்; நின் பேச்சை நம்பினோரை வருந்தவிடுதல் தான் நினக்கு முறையாகுமோ' என்கின்றாள்.

'தயங்குதிரைப் பெருங்கடல் உலகு தொழத்தோன்றி' 'வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்'—(அகம் 263) என வாய்மைக்குக் கதிரைப் பிற சான்றோரும் காட்டுவர்.

உள்ளுறை : 'மகளிர் கொய்து கொணர்ந்த நீலமலர்கள் சிறுமனையை அழகு செய்யும்' என்றது, இவளை மணந்து கொண்டனையாய் உடன்கொண்டு சென்று, நினது இல்லத்தையும் இவளால் அணிபெறச் செய்வாயாக' என்று கூறியதாம்.

இரண்டாவது துறை : தலைவனே! இவளை இங்ஙனம் வரைந்து கொள்ளாது தன் பழைய கவினழியச் செய்து நலிவித்ததுதான் நினக்குத் தகுதி தானோ?" என்றதாகக் கொள்க.

உள்ளுறை : 'சிறுமனையை மகளிர் கழியிடைக் கொய்து வந்த நெய்தல் மலரே அழகு செய்தலைப் போல, நின் இல்லத்தை இவள்தான் அழகுசெய்தற்கு உரியவள்' என்றதாகக் கொள்க.

குறிப்பு : இச்செய்யுளில் எட்டு அடிகளேயுள்ளன. 'சிறுமை' எனக் கூறிய ஒன்பது அடியினுங் காட்டில் ஓரடி குறைவாகவே உள்ளது. செய்யுளின் அமைப்பு முதலிலுள்ள ஒன்றிரண்டு அடிகள் காணாமற் போயிருக்கலாமோ என்று உணர்த்துகின்றது.

'ஒண்ணுதல் மகளிர்' என்றது அவர்தாம் கவலையாற் பற்றப்படாத குமரிப்பருவத்தினர் என்றற்காம். 'வல்லோர்’ என்றது, அழகுபற்றிய சாத்திர நுட்பமறிந்த அறிஞர் என்றதுமாம்.

284. உள்ளம் பிணிக் கொண்டோள் !

பாடியவர் : தேய்புரிப் பழங்கயிற்றினார்.
திணை : பாலை.
துறை : பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

[(து.வி.) பொருள் தேடி வரக்கருதிப் பிரிந்து சென்றானாகிய தலைவன், அதுதான் செய்து முடியாத நிலையிலேயும், மனம் தன் தலைவிபாற் செல்ல ஆற்றானாகிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


புறந்தாழ்வு இருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கஞ் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல் 5
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல 10
வீவது கொல்என் வருந்திய உடம்பே?

தெளிவுரை : 'புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும். நெய்தற்போதின் நிறத்தைப்பெறும் கரிய இமைபொருந்திய மையுண்ட கண்களையும் உடையவள் அவள்! அத்தகையாளான, என் உள்ளத்தைத் பிணித்துக் கொண்டவள் இடத்தேயே யாமும் இனிச் செல்வேம். அவள் கொண்டிருக்கும் பிரிவுத் துயரத்தையும் தீர்ப்பேம்' என்று, எம் நெஞ்சமானது எமக்குச் சொல்லும். "செய்யக் கருதியதான வினையை முற்றவும் முடித்தலைச் செய்யாது, இடையிலே அதற்கு ஊறு செய்தலானது, அவ்வினையாலே விளையும் பயனை அடையாமையோடு, இகழ்ச்சியையும் நமக்குக் கொடுக்கும்." என்று எழும் உறுதிப்பாட்டை ஆராய்கையினாலே, என் அறிவோ, 'சிறு பொழுதளவுக்கும் நீதான் விரையாதிருப்பாயாக' என்று எனக்குச் சொல்லும். அவ்டத்தே, விளங்கிய, தலையிலே ஏந்தியுள்ள கொம்பினையுடைய களிறுகள் ஒன்றோடொன்று தமக்குள் மாறுபட்டுப் பற்றியிழுக்கத் தேய்ந்த புரியையுடைய பழைய கயிற்றைப் போல, என் வருந்திய உடம்புதானும் இருபாலும் இழுக்கப் பெற்று இற்று வீழத்தான்வேண்டுமோ?

சொற்பொருள் : 'போது' என்றது நெய்தற் போதினை. ஈரிதழ் – குளிர்ச்சி பொருந்திய இமைகள். செல்லல் – துன்பம். எவ்வம் – இடையூறு. எய்யாமை – அறியாமை; அடையாமை. இளிவு – இகழ்ச்சி. மாறு பற்றிய – இருபாலும் பற்றி இழுத்த.

விளக்கம் : உள்ளம் அவளிடத்தேயே பிணிப்புக் கொண்டமையாலே, அவளிடத்து மீண்டு போதலையே கருதிற்று. அறிவு, அங்ஙனமாகப் பிணிப்பு உறாமையினாலே, ஆராய்ச்சியின்மேற் சென்றது என்று பொருள் கொள்ளல் வேண்டும். மகளிர்பால் காமுற்று மயங்கினார்க்கு அறிவுத் தெளிவும் ஆராய்ச்சியுமே முற்றத் தெளிவாகத் தோன்றா என்பதும் இதனால் உணரப்படும்.

'தேய் புரிப் பழங்கயிறு' மிகச் சிறந்த உவமை. இதனால், இதனைப் பாடியவரும் இப்பெயரே பெற்றனர். 'வருந்திய உடம்பு வீவது கொல்லோ!' என்பதன்கண் வெளிப்படும் மனவேதனையை உணர்க. உள்ளம் அறிவு இரண்டும் மாறுபட்ட களிறுகட்கும், உடம்பு தேய்புரிப் பழங்கயிற்றுக்கும் நல்ல உவமைகள்.

மேற்கோள் : 'நோயும் இன்பமும் இருவகை நிலையில்' என்னும் சூத்திர உரையுள் இதனை மேற்கோள் காட்டி, 'இஃது உணர்வு உடையதுபோல் இளிவரல் பற்றிக் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர். 'ஞாயிறு திங்கள் அறிவே நாணே' என்னும் சூத்திர உரையுள், இச்செய்யுளின் 'உறுதி தூக்கத் தூங்கி யறிவே, சிறு நனி விரையல்' என்னும் அடிகளை இளம்பூரணரும் எடுத்துக் காட்டுவர்.

285. எறிபுனத்துப் பகல் வருவான்!

பாடியவர் : மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்; மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனார் எனவும் கொள்வர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்க அம்பலும் அலருமாயிற்று என்று கூறியது.

[(து.வி.) தலைவன் வந்து, செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்த தோழி, தலைவிக்குச் சொல்வாள் போல, 'அவர்கள் உறவைக் குறித்த அம்பலும் அலரும் மிகுதியாயிற்று' என உரைத்து, அவை தீர்தற்பொருட்டு அவளை அவன் விரைய வந்து வரைந்து கொள்ளல் வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.]


அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்
இரவின் வருத லன்றியும் உரவுக்கணை
வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு
வளைவாய் ஞமலி ஒருங்குபுடை யாட 5
வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட
நடுகாற் குரம்பைத் தன்குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி! என்றும்,
அயலோர் அம்பலின் அகலான் 10
பகலின் வரூஉம், எறிபுனத் தானே!

தெளிவுரை : பாம்புகள் இரைதேடித் திரிந்தபடியிருக்கும், மிக்க இருள்பரந்த நள்ளிரவாகிய இரவுக்காலத்திலே வருதல் அல்லாமலும், வலிய கணைகளையும் வன்மை பொருந்திய கைகளையும் கொண்ட கானவன்,வெவ்விய வில்லை வளைத்து, நெஞ்சிடத்தே செலுத்தி வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஏற்றையோடு, வளைந்த வாயையுடைய நாய்கள் ஒருபக்கத்தே கூடிக் குரைத்தபடியே வந்து கொண்டிருக்க, வேட்டையாடி வெற்றியோடு வந்ததனாலே உவகை கொண்டோனான கானவன், காட்டகத்தேயுள்ள கால்களை நட்டுக் கட்டிய குச்சுவீடுகளைக் கொண்ட தன் ஊர்க்குச் செல்வான். அத்தகைய குன்ற நாடனின் உறவுதான், தோழீ! நமக்கும் நலம் தருவதாகுக! நீயும் வாழ்க! அவன் தான், அயலோர் உரைக்கும் அம்பலைக் கேட்டும் நம்மை விட்டு அகலாதவன் ஆதலோடு, பகற்போதிலும் குறியிடத்துக்கு காடு எறித்துச் செய்யப்பட்ட தினைப்புனத்துக்கு, வருதலைத் தவிர்தலும் இலனாவன் கண்டாய்!

சொற்பொருள் : நடுநாள் – நள்ளிரவுப் போது. உரவு–வலிமை; கணையின் வலிமையாவது அது செவ்விதாக வடிக்கப்படல். வன்கை – வலிமையான கை; அம்பு செலுத்துதற்கான வலிமையைக் குறித்தது. முளவுமான் – முள்ளம்பன்றி. வளைவாய் ஞமலி – வளைந்த வாயினதான ஞமலி; 'மனைவாய் ஞமலி' எனவும் பாடம்; மனையிடத்தேயுள்ள நாய் என்று கொள்க. காட்ட – காட்டகத்ததான. நடுகாற் குரம்பை – கால் நட்டு வேய்ந்த குடிசை; சுவர் எழுப்பாதது என்க. எறிபுனம் – காட்டை யெறித்துச் செய்த புனம். வலம்படுத்தல் – வலப்புறமாக வீழச் செய்தல்.

விளக்கம் : 'அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்' என்றது, அதனால் ஏதமுறுமோவெனத் தாம் அஞ்சியதைக் கூறி, இரவுக்குறி மறுத்தலாம். வேட்டுவனின் வல்லாண்மை கூறுவார், அவன் முள்ளம்பன்றியின் ஏற்றை வேட்டையாடியதைக் கூறினார்; இது அவர் காட்டில் திரிதலின் அவராலும் ஏதம் உண்டாகுமெனத் தாம் அஞ்சியது கூறிப்பகற்குறியும் மறுத்தலாம்.

'எறிபுனம்' என்றது, தினை கொய்து அழித்த புனம் என்றதுமாம். ஆகவே, பகற்குறியும் வாயாமை கூறி விலக்கியதாம். இதனால், பகற்குறியும் இரவுக்குறியும் விலக்கியவளாக வரைவு வேட்டனள் ஆயிற்று.

உள்ளுறை : வேட்டுவனாலே புண்பட்டு வீழ்ந்த முள்ளம் பன்றியின் ஏற்றை, மனைநாய்கள் சுற்றிச் சூழ்ந்து நின்று குரைத்தாற்போல், தலைவனின் அருளாமையாலே நெஞ்சம் புண்பட்ட தலைவியைச் சேரியிடத்து அலவற் பெண்டிர்கள் குழுமியவராக நின்று அலருரைப்பாராவர் என்றதாம். வேட்டுவன் தலைவனுக்கும், புண்பட்ட முள்ளம் பன்றி தலைவிக்கும், நாய்கள் அலவற் பெண்டிர்க்கும் உவமையாகப் பொருந்துவன கண்டு இன்புறுக.

286. அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி !

பாடியவர் : துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளை தோழி வற்புறுத்தது.
[(து.வி.) அவன் ஒரு வணிகர் பெருமகன். அவன் பொருள் தேடுதல் குறித்துப் பிரிந்தான். பிரிவுப் பெருநோயால் அவன் மனைவி வாடித் தன் நலனழிந்தாள். அது கண்டு, அவளுடைய தோழி அவளைத் தேற்றுவாளாகக் கூறுவது இச்செய்யுள்.]


ஊசல் ஒண்குழை உடைவியத் தன்ன
அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி
கல்லென வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற செலீஇயரென் உயிரெனப்
புனையிழை நெநிழ விம்மி நொந்துநொந் 5
தினைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின்
நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய
நின்தோள் அணிபெற வரற்கும்
அன்றோ தோழியவர் சென்ற திறமே!

தெளிவுரை : ஆய்ந்து புனைந்த அணிகளை உடையாய்! தோழீ! "மலையிடத்தேயுள்ள குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலரானது ஊசலைப்போல் அசைந்தாடும் மகளிரது ஒள்ளிய குண்டலம் போலத் தோன்றும். காற்று வீசும்போது, கல்லென்னும் ஒலியோடு அவை உதிர்ந்து உடைமரங்கள் மிக்க நெறியிடத்துக் கோலமுஞ் செய்யும். அத்தகைய பொலிவிழந்த குன்றத்திடத்தேயும் நம் காதலர் சென்றனர். ஆதலினாலே, என் உயிரும் இனிப் போய் ஒழிவதாக' என்று மிகக் கூறுகின்றனை. நீதான், நின்னைப் புனைந்திருக்கும் அணிகள் கழன்று வீழும்படியாக விம்மி அழுதலையும் செய்கின்றனை. மிகவும் மனம் நொந்தனையாய் வருந்துதலையும் செய்கின்றனை. சிறிது பொறுத்திருப்பாயாக. நினைந்து பார்ப்போமாயின், 'தம்மை நட்புக்கொண்டாரது ஆக்கத்தினை விரும்பியும், தம்மைச் சேர்ந்த நின் தோள்கள் அழகுபெறுமாறு கலன்களைக் கொணர்ந்து தருதற்குமாக அன்றோ, அவர் தான் நின்னைப் பிரிந்து சென்றதன் தன்மை உளதாகும்!"

சொற்பொருள் : ஒண் குழை – ஒளியுள்ள குண்டலம்; இதுதான் அசைந்தாடும் இயல்பினது ஆதலின், 'ஊசல் ஒண் குழை' என்றனர். உடை – உடைமரம் வியம் – வழி. குமிழ மலர் அசைந்தாடும் காதணிபோல விளங்கும் என்பது காணக் கூடியது. கல்லென – ஆரவாரத்தோடு. வரித்தல் – கோலஞ் செய்தல்; இது கற்பாறையிடத்தே மலர்கள் உதிர்தலால் உண்டாகும் தோற்றம். இனைதல் – ஏங்கிப் புலம் புதல். நட்டோர் – நட்புச்செய்த காதலர். ஆக்கம் – மேம்பாடு – வளம்; இது இல்லறம் செழுமையாக நடக்க வேண்டுவதற்குப் பொருளின்மிகுதி இன்றியமையாமை சுட்டியது. 'ஒட்டிய தோள்' என்றது, தழுவிப் பிரியாதிருக்கும் தோள் என, அவர்கள் காதலன்பை வியந்ததாம்.

விளக்கம் : காதில் அணிந்துள்ள குழையின் அசைவை ஊசலின் அசைவுக்குப் பிறரும் ஒப்பிட்டுள்ளனர். 'பூங்குழை யூசற் பொறைசால் காதின்' என்பது பொருநராற்றுப்படை (30). 'இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்' என்று நற்றிணை 274ஆவது செய்யுளுள்ளும் கூறப்படும். இதனைக் கருதி 'ஊசல் ஒண்குழைக் காசு வாய்த்தன்ன' எனப் பாடங் கொள்வாரும் உளர்.

மேற்கோள் : 'நட்டோராக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணிபெறவாதற்கும் அன்றோ தோழி அவர் சென்றதிறமே' என்பதனை, 'மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய' என்னும் சூத்திர உரையிற் காட்டி, 'அணியென்பது பூணினை' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 28 உரை).

287. கொடுங்கழிப் பாசடை நெய்தல் !

பரடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : காப்பு மிகுதிக்கண் ஆற்குளாகிய தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவியின் களவு உறவை ஐயுற்றதனால் அவளை இல்லிற் சிறையிட்டுக் காத்து வந்தனர். அவள் நெஞ்சம் அதனாற் பெரிதும் நோகின்றது. அதனைத் தன் தோழிக்குக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.]


விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப்
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த
நல்லெயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப்
பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன் 5
நாம முதலை நடுங்குபகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகா தாகி யவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும்
தேர்மணித் தெள்ளிசை கொல்லென 10
ஊர்மடி கங்குலும் துயில்மறந் ததுவே!

தெளிவுரை : வானத்தைச் சென்று தடவுமாறுபோல உயரமாக அமைந்த கோட்டைப் புறமதிலை வெம்மையாக முற்றுகை இட்டனன். பசிய கண்களைக் கொண்ட யானைப் படையை உடைய பகைவேந்தனும் மதிற்புறத்தேயே தங்கினன். அதுகாலையும், 'வலியமைந்த எயிலைப் பகைவர் கைப்பற்றாதபடி காத்துநிற்கும் நல்ல மதில்காவல் உடையாரான வீரரை யாம் பெற்றிருக்கின்றேம்' என்று செறுக்கிக் கூறுவான், பெரிய தகைமையாளனாகிய மறவர் குடித்தலைவன். அவனைப் போலவே யானும் துணிவோடிருந்தேன்.

வளைந்த கழியிடத்துப் பசிய இலைகளையுடைய நெய்தல்கள் மிகுந்திருக்கும், குளிர்ந்த கடற்கரைப் பகுதியாளனாகியவன் நம் தலைவன். அவன், அச்சத்தைச் செய்கின்ற முதலைகளாகிய நடுக்கந்தரும் பகையினுக்கும் அஞ்சமாட்டான். நம்பாலுள்ள காதலின் மிகுதியாலே நம்மைத் தேடியும் வந்தான். அப்படி அவன் வந்தபொழுது, கெடாத வன்கண்மை உடையதான என் நெஞ்சமும் கலங்கிற்று. நள்ளென்னும் இரவுப்போதிலே துயில் கலைந்து ஆரவாரிக்கும் புள்ளொலியைக் கேட்கும் போதெல்லாம், அதுதான் தலைவனின் தேரிற் கட்டியுள்ள மணிகளின் தெளிந்த ஓசை போலும் என மயங்கிற்று. ஊராரெல்லாம் உறங்கியிருக்கும் இந்த இரவுப்போதிலும் என் கண்கள் துயில்கொள்ளலை மறந்துவிட்டன, காண்பாயாக!

கருத்து : 'இற்சிறை பெறினும் அவன்தான் விரைந்து வந்து நம்மை மணந்து காப்பான் என்றிருந்தேன்; அதுவும் இதுபோது இல்லாதாயிற்று' என்பதாம்.

சொற்பொருள் : புரிசை–கோட்டைப் புறமதில். வெம்ப முற்றி – வெம்மை தோன்ற முற்றி; இது முற்றியதன் கடுமையை உள்ளிருப்பார் உணரும் வகையில் முற்றியதாம். எயில் உடையோர் – எயில் காத்தலில் வன்மையுடையோரான படை மறவர். பெருந்தகை மறவன் – பெருந்தகையாளனாகிய மறவன்; பெருந்தகை இங்குப் பேராண்மை சுட்டியது. நாமம் – அச்சம். பெருமை – மிகுதி. அருகுதல் – கெடுதல்.

விளக்கம் : தான் காவலுட் பட்டமையை முற்றுகைப் பட்டிருந்த ஒரு கோட்டைக்கு உள்ளிருக்கும் தலைவனின் நிலையோடு உவமித்தாள். அவன்போல யானும் தலைவனின் ஆண்மையை நம்பினேன்; அவனோ விரைந்து வாராதானாய் நம்மை மறந்தனன்; நாம் புள்ளொலி கேட்கும்போதெல்லாம் அவன் தேர்மணி ஒலிபோலும் என்று மயங்கிமயங்கி இரவுத்துயிலும் இல்லாதேம் ஆயினேம் என்பதாம். புறத்தே பகைப்படை முற்றியிருப்பவும், அகமதிலோன் 'யான் எயிலுடையோரை உடையேன்' எனக் கவலையின்றித் திரிவதுபோல, தலைவி இற்செறிக்கப்பட்டுக் கடுங்காவலுட்பட்டிருக்கவும், நெறியின்கண் முதலைகள் இருப்பவும், தலைவன் தான் தலைவியின் கற்புமாண்பையும் காதலீடுபாட்டையும் கருதிய செருக்கினால், இரவுக்குறீயின்கண் வந்து ஒழுகுதலையே மேற்கொள்ளும் தன்மையனயினான் என்று நொந்ததும் ஆம். இதனைக் கேட்கும் தோழி தலைவியது நிலையைத் தலைவனுக்கு உணர்த்த, அவனும் தெளிவுபெற்று வரைந்துகொள்ளலிலே விரைவான் என்பது இதன் பயனாம்.

288. நன்னுதல் பரந்த பசலை !

பாடியவர் : குளம்பனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய் வெறியறிவுறீஇ வரைவு கடாயது.

[(து.வி.) தலைவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந்தாள் தோழி. தலைவி தலைவன் உறவினிடையே இடைப்பட்ட பிரிவினாலே தலைவிபால் பசலை தோன்றுகின்றது; அஃதறிந்த நற்றாய் முருகு அணங்கியதென வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கின்றாள்; இதனைத் தலைமகட்கு உரைப்பாள் போலத் தலைமகனும் கேட்டுத் தலைவியை விரைய மணந்து கொள்ளலைக் கருதுமாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


அருவி யார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இளவெயி லுணீஇய வோங்குகிளைப்
பீலி மஞ்ஞை பெடையோ டாடுங்
குன்ற நாடன் பிரிவிற் சென்று
நன்னுதல் பரந்த பசலைகண் டன்னை 5
செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கேட்கு மாயின், வெற்பில்
ஏனற் செந்தினைப் பாவார் கொழுங்குரல்
சிறுகிளி கடிகஞ் சென்றும்இந்
நெடுவேள் அணங்கிற் றென்னுங்கொ லதுவே? 10

தெளிவுரை : அருவிகள் ஆரவாரித்தபடியே வீழ்ந்து கொண்டிருப்பதும், அணங்குகளை உடையதுமான நெடிய கொடுமுடியின் பக்கத்திலேயுள்ள உயரமான மரக்கிளைகளிலே, பீலியையுடைய ஆண்மயிலானது தன் பெடையோடுங் கூடி ஏறியமர்ந்ததாய் இளவெயில் காய்ந்தபடியே ஆடிக்கொண்டிருக்கும் மலைநாடன், நம் தலைவன் ஆவான். அவன் நின்னைப் பிரிதலினாலே முன்னை அழகெல்லாம் கழிந்து போய், நல்ல நெற்றியிடத்தேயும் நினக்குப் பசலை படர்ந்தது. அதனைக் கண்டனள் அன்னை. செம்மையும் முதுமையும் கொண்டவரான பெண்டிரோடும் முறத்திலே நெல்லைப் பரப்பிக் கட்டு வைத்தனளாகக் குறிகேட்பாளாயின் யாம் என் செய்வோம்? வெற்பிடத்துள்ள ஏனலாகிய செந்தினையின்பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்து போகும் கிளிகளை வெருட்டுவேமாகச் சென்றிருந்தும், இந்த நெடிய முருகவேள் தான் அணங்கியதென்றால், அக்குறியிடத்தும் முருகு நிற்குமோ?

கருத்து : அன்னை அறிந்தனளாதலின், இனி இற்கெறிப்பே நிகழும். ஆகவே, விரைய வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பதாம்.

சொற்பொருள் : அணங்கு – தெய்வம்; அச்சமும் ஆம்; அச்சம் மரச்செறிவால் உண்டாவது. ஞாங்கர் – பக்கம். பீலிமஞ்ஞை – மயிலின் ஆண். பெடை – அதன் பெட்டை. செம்முது பெண்டிர் – ஊரிடத்தேயுள்ள முதுபெண்டிர். கட்டு–கட்டுவைத்துக் குறி காணல். தலைமகளை முன்நிறுத்தி முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து நந்நான்காக எண்ணிக் காணல். எச்சம் ஒன்று இரண்டு மூன்றாயின் முருகு அணங்கிற்று என்று கொள்வது மரபு. நான்கு சரியாயின் வேறு நோய் என்பர். முருகு அணங்கியது எனக் காணின் வெறியயர்தற்கு வேலனை அழைத்து ஏற்பாடு செய்வர். பாலார் – பால் நிரம்பிய. நெடுவேள் – முருகவேள்.

உள்ளுறை : மயில் பெடையொடுஞ் சென்று விளையாடியிருக்கும் என்றது, தலைமகனும் தலைமகளை மணந்து கொண்டு சென்று இன்புறுதல் வேண்டும் என விரும்பியதாம்.

விளக்கம் : களவுறவால் தலைவியின் மேனியழகு மாறுபடக் கண்ட அன்னை, அது முருகணங்கியதால் ஏற்பட்டதெனக் கலங்கிக் கட்டுவிச்சியரை அழைத்துக் கட்டுக் காண்பாளாயினள் எனவும், அதன்கண் அணங்கிற்றென்பதுபடநிற்பின் வெறியாட்டயரவும் முற்படுவள் எனவும், அதன்கண் வேலன் வந்து 'நெடுவேள் அணங்கிற்று என்பானோ?' எனவும் படைத்துக் கூறுவதன்மூலம், இனிக் களவுறவைக் கைவிட்டு வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவாயாக என்று குறிப்பாகக் கூறுகின்றாள் தோழி என்று கொள்க.

ஒப்பு : வரையுச்சிகள் அணங்குடையவை என்பதனை, 'அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் கணங்கொள் அருவி' (அகம். 22) என்பதும் கூறும்.

289. அருளிலேன் அம்ம அளியேன் !

பாடியவர் : மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்.
திணை : முல்லை.
துறை : பிரிவிடைப் பருவங் கண்டு சொல்லியது.

[(து.வி.) வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தும் தலைவன் மீண்டுவரக் காணாது வருத்தமிகுதியால் நலியும் தலைவி, தோழியிடத்தே மனம் நொந்து தன்நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


அம்ம வாழி தோழி! காதலர்
நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய
சொற்புடை பெயர்தலோ விலரே வானம்
நளிகடல் முகந்து செறிதக இருளிக்
கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் 5
கார்செய் தென்னுழை யதுவே யாயிடைக்
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெருமர வேரடிப் போல
அருளிலே னம்ம அளியேன் யானே!

தெளிவுரை : தோழீ! யான் கூறுகின்ற இதனையும் கேட்பாயாக; "இந்நிலமானது தானிருக்கும் நிலையிலிருந்து ஒருபக்கமாகச் சாய்ந்து பெயர்ந்தாலும், நம் காதலர் தாம் சொல்லிய சொற்கள் தம்மிற் சாய்ந்து பெயர்தல் என்பது இல்லாதவராவர். மேகம் பெருங் கடலுக்குச் சென்று, நீரை முகந்து, வானகமெங்கணும் செறிவு பொருந்த இருளைச் செய்து, மிக்க பெயலையும் பொழிந்து, கடுமையான இடிக்குரலையும் முழக்கிக்கொண்டு, கார்காலத்தைச் செய்தபடி, என்னைத் துன்புறுத்துதற்கு எதிரே தோன்றா நின்றது. அவ்விடத்தே, புன்செய்க் காட்டுக் கொல்லைகளிலே நிரைமேய்க்கும் கோவலர்கள், இரவுப் போதிலே எரிகொளுத்தி வைத்துள்ள பெருமரத்தினது வேரடிக்கட்டையைப் போலக் காமநோயும் உள்ளேயே கனிந்து பெருகிக் கனலாகின்றது. அவர் அருளும் இல்லாதேன்; யான் அளிக்கத்தக்கேன்! என் நிலையைக் காண்பாயாக!

சொற்பொருள் : புடை பெயர்தல் – குடை சாய்தல்; நிலைகெடல். நளிகடல் – பெருங்கடல். செறிதக – செறிவு பொருந்த. உழை – பக்கம்; கொல்லை – புன்செய்த் தோட்டக் கால்கள். கோவலர் – பசுநிரை மேய்ப்போர்; எல்லி – இரவுக்குத் துணையாகக் கொளுத்திய நெருப்பு. வேரடி – வேராகிய அடிக்கட்டை; இது நின்று நெடுநேரத்துக்கு எரியுமாதலின் இதைப் பயன்படுத்துவர்.

விளக்கம் : கொல்லையிற் கோவலர் கொளுத்திய எரிதணலானது இராப்பொழுது முற்றவும் கனிந்து எரியுமாறு போலத், தன் உள்ளத்துக் காமநோயும் இரவு முற்றவும் கனிந்து தன்னை அணுவணுவாக எரித்தபடி யிருக்கும் என்றனள். தன்னைப் பெருமரவேருக்கு ஒப்பிட்டது, தன் குடிப்பெருமை கருதியும், தானுற்ற நோயை உள்ளத்தளவானே அடக்கிக்காக்க முயன்றும், அது கைகடந்து மிகுதலை நினைந்தும் ஆம்.

'நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய சொற் புடை பெயர்வதோ இலரே' என்றது, தலைவனின் வாய்மை பிறழா மாண்பை உணர்த்தியதாம். அதனை நினைப்பித்து அவனை வரைவுக்கு விரைவுபடுத்தியதும் ஆம்.

290. புதுமலர் ஊதும் வண்டு !

பாடியவர் : மருதனிளநாகனார்.
திணை : மருதம்.
துறை : (1) பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச்சொல்லியது; (2) பரத்தையிற் பிரிய வாயிலாய்ப் புக்க பாணன் கேட்பத் தோழி சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) பரத்தை தலைவியின் ஊடலைத் தணிக்க நினைக்கின்றாள். விறலியிடம் கூறுவாள் போலத் தலைவனின் இயல்பை உரைத்து, அவனைத் தலைவியும் ஏற்றுக் கொள்ளத் தூண்டுவதுபோல் அமைந்த செய்யுள் இது. (1). பரத்தைமை கொண்டிருந்த தலைவன், தன் தலைவியை மீளவும் நாடிவர விரும்பினனாய்ப் பாணனை முதற்கண் வாயிலாக அனுப்புகின்றான். அவன் கேட்கத் தலைவியின் தோழி தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுளும் இது.]


வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முதுபகடு ஆரும் ஊரன்
தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல்
கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே 5
நீயே பெருநலத் தகையே அவனே
நெடுநீப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டென மொழிப மகனென் னாரே.

தெளிவுரை : முள்ளைப் போன்றவான பற்களை உடையாய்! வயலிடத்தேயுள்ள வெள்ளிய ஆம்பற் பூவானது களத்துக் கதிர்ச்சூட்டிடத்தே மலர்ந்திருக்கும். அண்மையிற் கன்றீன்ற பசுவானது அப்பூக்களைத் தின்னும். அது தின்ற தன் பின்னுள்ள எஞ்சியதை ஓய்ந்த நடையையுடைய பகடு மிகுதியாகத் தின்னும். அத்தகைய ஊருடையான் தலைவன். அவன் தொடர்பினை நீயும் விரும்பினையானால் என் சொற்களையும் நின் மனத்திற் கொள்வாயாக! நீயோதான் பெருநலங்கொண்ட தகுதிப்பாட்டினை உடையவள். அவனோவென்றால், நெடிய நீரையுடைய பொய்கையிடத்தே நடு நாளிலே சென்றடைந்தானாய்த், தண்ணிதாக மணம் கமழ்கின்ற புதுப்பூக்களை ஊதித் தேனுண்ணுகின்ற வண்டாவான் என்றே அவனையறிந்தோர் சொல்வார்கள். அல்லாமல், அவனை ஆண்மகன் என்று எவரும் கூறார். ஆதலின், அவனைப் புலத்தலாற் பயன் யாது கொல்லோ?

கருத்து : 'அவனியல்பு பரத்தைமை விரும்பலே என்று கொண்டு அதற்காக அவன்பால் ஊடாதே என்பதாம்.

சொற்பொருள் : ஆம்பல்–நீர்வளமிகுதியைக் காட்டுவது. சூடு–நெற்சூடு; கதிர்க்கட்டுகள் அடுக்கி வைக்கும்போது சூடு மிகவுண்டாவதானால் 'சூடு' என்றனர். புதுப்பூ–அன்று மலர்ந்த பூ. மிச்சில்–எஞ்சிய பூக்கள். ஓய்விடுநடை–காலோய்ந்து விட்டுவிட்டு நடக்கும் நடை; இது முதிய பகட்டின் நடை. ஓய்தல் தளர்வால் உண்டாவது. முள் எயிறு – முட்போலும் கூர் எயிறு. நலத்தகை – நலமாம் தகைமை; நலம் அழகும் எழிலும்,

விளக்கம் : நள்ளிரவிலே சேரிபுகுந்து புதுப்புதுப் பரத்தையரை நாடித் திரிபவன் என்பதனால், நடுயாமத்தே மலரும் ஆம்பற் பூவையுண்ணும் வண்டென்று கூறினள்.

உள்ளுறை : புனிற்றா தின்று சுழித்த மிச்சிலை முதுபகடானது சென்று மிகுதியாகத் தின்றாற்போல, நின்னால் இளமைச் செவ்வியெல்லாம் உண்டு கழிக்கப் பெற்றானாகிய தலைவனைப் பிற பெண்டிரும் நுகர்வாராயினர்; அதுதான் நினக்கு ஏதும் இழுக்கம் தருவதன்று என்பதாம்.

இரண்டாவது துறைக்கு ஏற்பக் கொள்வதாயின், 'முள் எயிற்றோய்! நீதான் தலைவனது தொடர்பை விரும்பினையானால், என் சொல்லை ஏற்றுக் கொள்ளலும் வேண்டா. நீதான் மிக்கழகு உடையவளாயிருந்தும் நின்னைப் பிரியாது உடனிருந்து வாழும் ஆண்மகன் அவன் அல்லன்; புதுப்புது மலரை நாடிச்சென்று நுகர்ந்து கழிக்கும் வண்டுபோல் பவன் அவன் என்பர் உலகோர். இதனை நீயும் கருதுவாயாக' என்பதாம்.

'சூடுதரு புதுப்பூ' என்பதனைச் சூடுதற்காகக் கொய்யப்படும் புதுப்பூ எனினும் பொருந்தும். இதனைக் கொய்து சூடுவது மரபு. அவர் சூடியபின் கழித்துப் போட்ட மிச்சிலைப் புனிற்றாவும் ஓய்பகடும் பின்னர்த் தின்பவாயின என்க.

மேற்கோள் : 'தாய்போற் கழறித் தழீஇக் கோடல்' என்னும் சூத்திரவுரையில் இப்பாட்டை இளம்பூரணனார் காட்டுவர். 'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்' என்பதன் உரையில் இச்செய்யுளைக் காட்டி, இதனுள், "நீ இளமைச் செவ்வி எல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற்போலப், பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று' எனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ, அவள் அவனோடு கட்டில்வரை எய்தியிருக்கின்றாள் என்று ஊரார் கூறுகின்ற சொல்லை, என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது எனவும், அவனை வண்டு என்பதன்றி மகன் என்னார் ஆதலின், அவன் கடப்பாட்டாண்மை அது என்றும் கூறினாள்' என்றும், 'என் சொற் கொள்ளன் மாதோ' என்பதற்கு, 'என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ, விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். (தொல். பொருள். 171,151)

291. அழிந்த இவள் நலனே !

பாடியவர் : கபிலர்.
திணை : நெய்தல்.
துறை : வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது.

[(து.வி.) பரத்தையிற் பிரிந்து மீண்டுவரக் கருதும் தலைவனின் ஏவலனாகிய பாணனிடத்துத் தலைவியும் அவனை ஏற்கும் குறிப்பினளாதலை நுட்பமாகப் புலப்படுத்துகின்றாள் தோழி.]


நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்று அள்ளல்
நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு
குப்பை வெண்மணல் ஏறி அரைசர்
ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்
தண்பெரும் பௌவநீர்த் துறைவற்கு நீயும் 5
கண்டாங்கு உரையாய், கொண்மோ, பாண!
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
எல்லித் தரீஇய இனநிரைப்
பல்லான் கிழவரின் அழிந்தவிவள் நலனே ?

தெளிவுரை : பாணனே! நீரானது வற்றிப் போனதனாலே தன்னுடைய தன்மை மாறுபட்டதான், செறிவு கொண்ட அள்ளற் சேற்றிடத்தேயுள்ள, நெய்ப்பசை கொண்ட கொழுத்த மீன்களைப் பற்றித்தின்ன நினைத்தன நாரையினம். குவிந்து கிடக்கும் மணல் மேட்டிலே ஏறியிருந்தபடி, அரசரின் ஒள்ளிய காலாட்படைத் தொகுதியின் தோற்றம்போல அவை தோன்றும். அத்தகைய குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைக்குரியவன் தலைவன். அவனுக்கு நீதான் கண்டது கண்டபடியே சென்று சொல்வாயாக. மிகப் பெரியவனாகிய முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி, தன் காரிக்குதிரையைச் செலுத்திச் சென்று, இராப்பொழுதிலே கொண்டுதந்த பகையரசரின் ஆநிரைகளுக்கு உரியோரான, பலவாகிய பசுக்கூட்டங்களுக்கும் உரியவரின் செல்வமெல்லாம், அந்த இரவுக்குள்ளாகவே அழிந்து போயினாற் போலவே, இவளுடைய நலனும் அவனைப் பிரிந்ததனாலே முற்றவும் அழிந்து போயினதனையும் காண்பாயாக! இதுதான் அவர் குணமாமோ?

கருத்து : 'அவன் செயலாலே இவளடைந்த நலக்கேட்டை நீதான் கண்டது கண்டபடியே சென்று அவன்பாற் சொல்லுக' என்பதாம்.

சொற்பொருள் : நீர் பெயர்ந்து – நீர் வற்றிப் போய். மாறிய – தன் தன்மை மாறுபட்டுப் போகிய. செறிசேற்று அள்ளல்–செறிவான சேற்றைக்கொண்ட அள்ளல். அள்ளல்–சேற்றுப்பகுதி. நெய்த்தலைக் கொழு மீன் – கொழுப்புத் சத்துடைய கொழுத்த மீன். இனக்குருகு – குருகினம். முள்ளூர்–முள்ளூர்க் கானம்; மலையமானுக்கு உரியது. 'மா' என்றது, அவனது காரிக் குதிரையை.

உள்ளுறை : மீனருந்துஞ் செவ்விநோக்கிக் குருகினம் வரிசையாக மணல்மேட்டில் இருத்தலைப்போலத் தலைமகனிடமிருந்து பெறுதற்கான பொருட்பயனை எதிர்பார்த்து விறலி முதலாயினவரோடு பாணனும் கூடியிருக்கின்றான் என்றதாம். குருகினம் படையணிபோலத் தோற்றினும் படையாகாமைபோல, விறலி முதலாயினவரும் தலைவனுக்குத் துணையாவார்போலக் காட்டினும், உண்மையில் உறுதுணையாகும் பண்பினராகார் என்பதாம்.

விளக்கம் : 'செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம்' (குறுந். 312) என்பது, முள்ளூர்க்குரியவன் மலையமானாதலை உணர்த்தும். பல்லான் கிழவராயிருந்தாரும் மலையமானின் செயலால் அந்தப் பொழுதிலேயே அனைத்துமிழந்து வறியராயினார். அதுபோலவே, இவளும் அவன் செயலால் தன் அழகனைத்தையும் இழந்தாளாயினாள். இவளது நிலையைக் கண்டது கண்டபடியே அவனுக்கும் கூறுக என்பதாம்.

292. யாணர் வைப்பின் கானம் !

பாடியவர் : நல்வேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக்குறி மறுத்தது.
[(து.வி.) இரவுக்குறி வந்து ஒழுகுதலிலேயே மனஞ் செலுத்தியவனாக இருக்கும் தலைவனிடத்தே, தலைவியை மணம் செய்து கொள்ளும் எண்ணத்தைத் தூண்டக் கருதுகின்றாளான தோழி, இவ்வாறு சொல்லுகின்றாள்.]


நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறுபொரக் கரைந்த கயவாய்க் குண்டுகரை 5
ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும்
கருங்கற் கான்யாற் றருஞ்சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மைகூர் பனியே!

தெளிவுரை : ஐயனே! நெடிய கணுக்கள் கொண்ட சந்தன மரத்தின் அசையும் கிளைகளிலே, பசுமை நிறம் அமைந்த இலையைக் கொண்ட நறுங்கொடியினதான தமாலம் சுற்றிப் படர்ந்திருக்கும். அத்தமாலத்தினை, காட்டிடத்தே இனிய தேன்எடுக்கும் குறவர்கள் வளைத்து அறுத்துக் கொண்டு போவர். அப்படிப் போகின்ற புது வருவாய் மிகுந்த இடத்தையுடைய கானம் என்றும் கருதமாட்டாய்! களிறுகள் தம்முட் பொருதலாலே இடிந்து கரைந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழமான பள்ளங்களிலே, ஒளிவிளங்கும் வெள்ளைப் பளிங்குக் கற்களோடு செம்பொன்னும் கிடந்து மின்னிக் கொண்டிருக்கும் கருங்கற்களிடையே ஓடும் காட்டாற்றது அருஞ்சுழியிடந் தோறும் முதலைகள் இயங்கியபடியிருக்கும் இவற்றையும் கருதாயாய், இரவு நேரத்திலே நீயும் வருவாய். இருள் நிரம்பிய பனிக்காலத்து இரவிலே நீ இப்படி வருவதைத் தொடரின், யானும் உயிர் வாழ்ந்திரேன்!

கருத்து : 'நினக்கு. ஊறு நேருமோவென்னும் கவலையே என்னைக் கொன்று விடும்' என்றதாம்.

சொற்பொருள் : ஆரம்–சந்தனம். வலத்தல்–சுற்றிப்படர்தல் கேழ்–நிறம். தமாலம்–தமாலக்கொடி; இது நறுமணமுடையது என்பதும் இதனால் அறியப்படும். பரியும்–பற்றி இழுக்கும். கயவாய் – பெரிய வாய். வான்பளிங்கு – வெண்பளிங்கு. கராம்–முதலை. 'நெடுந்தண் ஆரம்' எனவும் பாடம்.

இறைச்சி : தேனைக் கொள்பவர் சந்தன மரத்துப் படர்ந்த தமாலக் கொடியை அறுப்பர் என்றது, அவ்வாறே தலைவியின் நலனை நாடிவரும் நீயும் அவளைப் படர்ந்து வருத்தும் கவலையை ஒழிப்பாயாக என்பதாம்.

விளக்கம் : இன்று இவண் வந்து சேர்ந்த நீதான் இனித்திரும்புதல் வேண்டா என்பதாம். அதுதான் இயலாமையின் அவன் மணத்தினை விரைந்து செய்து கொள்ளுதற்கு நினைவான் என்பதுமாம். களிறு பொரக் கரைந்த கரையினைக் கொண்ட பள்ளங்களில் வெண்பளிங்கும் செம் பொன்னும் காணப்பெறும் என்றது, அவ்வாறே எதிர்பாராத நின்னது வருகையாலே தலைவியும் இன்பத்தை அடைந்தனள் என்பதாம். பொழுதும் களிறும் ஆற்றுச்சுழியும் அதனிடைக் கராமும் மைகூர் பனியும் கடந்து வருதலால், அவனுக்கு யாதாகுமோ என்னும் கவலையால் அவள் துயருற்றனள் என்க.

293. இடுபலி நுவலும் மன்றம் !

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : 1. தாய் மனை மருண்டு சொல்லியது; 2. அவரிடத்தாரைக் கண்டு சொல்லி யதூஉம் ஆம்.

[(து.வி.)1. தன் மகள் உடன் போக்கிலே தன் காதலனுடனே சென்று விட்டதனாலே பெரிதும் வறிதாகிப்போன மனைக்கண்ணிருந்து புலம்பும் தாயின் புலம்பலாக அமைந்தது இது. 2. தாய் தலைவனின் ஊராரைச் சார்ந்து, தன் துயர் தோன்றச் சொல்லியதாகவும் இது கொள்ளப்படும்.]


மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்
பலிக்கள் ஆர்கைப் பார்முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப்
பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் 5
பெருவிதுப் புறுக மாதோ எம்மில்
பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளிஇக்
கொண்டுடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே!

தெளிவுரை : பாரகத்தேயுள்ள முதுகுடியைச் சார்ந்த வன் குயவன். அவன் நீலமணிபோலத் தோன்றும் நொச்சிப் பூவின் மாலையைச் சூடிக் கொள்வான்; பலியிடப் பெற்ற கள்ளினையும் குடித்துக்கொள்வான்; அதன்பின், தெய்வத்துக்கு இடுதற்குரிய பலியைப்பற்றியும் ஊராருக்கு எடுத்துச் சொல்லியபடி இருப்பான். அகன்ற இடத்தையுடைய அத்தகைய ஊர்மன்றத்திலே தெய்வத்துக்கு விழாவெடுத்தலையும் மேற்கொண்ட பழமைச் சிறப்புடைய மூதூரிடத்தே, பூப்போலும் கண்களைக் கொண்டவரான அவளது தோழிப் பெண்டிரைக் காணும்போதெல்லாம்—

எம் இல்லத்துக் குமரியான பொலிவுபெற்ற கூந்தலை உடையாளைத் தன் பொய்ம்மொழிகளாலே மயக்கித் தன் வயப்படுத்திக் கொண்டு, அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தன்னூர்க்குப் போவதற்கு ஒருப்படுத்திய வன்கண்மையினனாகிய காளையாவானைப் பெற்ற தாயும்,

என்னைப் போலவே தன் மகளைப் பிரிந்து பெரிதும் மனநடுக்கத்தை அடைவாளாக!

கருத்து : 'என் வருத்தம் அவன் தாய்க்கும் வருக' என்றதாம்

சொற்பொருள் : மணி–நீலமணி. குரல்–பூங்கொத்து பலிக்கள்–பலிப்பொருளாகியகள். ஆர்கை–உண்கை. ஆயம்–ஆயமகளிர். இடுபலி நுவலல்–தெய்வத்துக்கு இன்னின்ன பலியை இடுதற்கு வருகவென்று ஊராரைக் கூவியழைத்தல். விழவு–கொற்றவைக்கு எடுக்கும் விழா. விதுப்புறல்–மன நடுக்கம் கொள்ளல்.

விளக்கம் : 'மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி' என்றது, நொச்சியின் பூங்கொத்துக்களைச் சூடிக்கொள்ளும் மரபினை உணர்த்தும். 'குயவன்' காளி கோயிற் பூசாரி; அவன் பாலைநில மறவர்க்கு அவரிடும் பலியைப்பற்றி ஊர்மன்றத்திலே நின்று குரலெடுத்து உரைப்பான் என்பது மரபு; விழவுத் தலைக்கொண்ட பழவிறன் மூதூர்–பழமையும் வெற்றிச் செருக்கும் கொண்ட மூதூர்; விழவினை மேற்கொண்ட மூதூர் என்க. 'காளையை ஈன்றதாயும் எம்போல் பெருவிதுப்புறுக' என்றது, அவளும் தன் மகளைப் பிரிந்து இப்படி என்போலத் துன்பமடைக என்றதாம். 'வன்கண் காளை' என்றது, இல்லத்தாரின் மனவேதனை நினையாது, தன் இன்பமே குறியாகக் கொண்டு தலைவியை அழைத்துச் சென்ற கொடுஞ்செயலைப் பற்றிக் கூறியதாம்.

தன் அன்பு மகளைப் பிரிந்ததன் வருத்தம் மேலிடப் பெரிதும் மனம் நொந்தவளான தாய், தன் மகளது மடமை பற்றியோ, அன்றி அவளது காதற் செறிவுபற்றியோ அன்றி அவளைத் தன்னோடும் அழைத்துச் சென்ற காளையாவானின் காதலீடுபாடுபற்றியோ நினைப்பிற் கொண்டிலள். அவனது வன்கண்மையை நினைந்து, அத்தகு வன்கண்மை உடையவனாக அவனை வளர்த்துவிட்ட அவன் தாயானவள், தானும் தன் மகளைப்பிரிந்து தன்னைப்போலவே பெரிதும் வருந்த வேண்டும் என்றே புலம்புகின்றாள். பெண்மையின் மனவியல்பை நுட்பமாகக் காட்டும் சிறந்த செய்யுள் இதுவாகும். வெகுளியிலே தாய் கொள்ளும் மெய்ப்பாடும் அதனை ஆற்றும்வகையாலே அவள் புலம்பும் புலம்பலும் நுட்பமாக இயல்பாக அமைந்துள்ளன.

294. நோயும் இன்பமும் ஆகின்று !

பாடியவர் : புதுக்கயத்து வண்ணக்கன். கம்பூர்கிழான்.
திணை : குறிஞ்சி.
துறை : மணமகனை உட்புக்க தோழி தலைமகளது கவின்கண்டு சொல்லியது.

[(து.வி.) தலைவியைத் தன்னுடனே அழைத்துப் போய் மணந்து கொண்டு, தலைவன் இல்வாழ்க்கை நடத்துவதனைக் கண்டு, தோழி வியந்து கூறியது.]


தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய்பயின்று
எருவை நீடிய பெருவரை அகந்தொறும்
தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக் 5
கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழுஞ் சாரல்
விலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே

தெளிவுரை : தோழீ! பெரிய மலையிடத்து உட்பகுதி தோறும் மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருப்பதோடு கொருக்கச்சியும் முளைத்துப் பரவியிருக்கும். அவ்விடத்தே தொன்றுதொட்டே வருகின்ற பகையாகிய புலியோடும் மாறுபாடு மிகுதியினாலே சினஞ்சிறந்தது களிறு ஒன்று. அப்புலியைத் தன் கோட்டாலே குத்தியும் கொன்றது. அதனாலே, குருதிக்கறை படிந்த அதன் கொம்பைப் போலச் சிவந்த புறத்தையுடைய கொழுவிய காந்தள் முகையினது அரும்பும் அவிழ்ந்தது. அதனால் அம்மலைப்பக்க மெல்லாம் மணங்கமழ்வதாயிற்று. அத்தகையமலைச்சாரலைக் கொண்ட, குறுக்கிட்டுக் கிடக்கும், விளங்கும் மலைநாட்டிற்கு உரியவன் தலைவன்! அவன் அகன்ற மார்பானது தீயையும் காற்றையும் ஆகாயமானது ஒருங்கே பெற்றாற்போலத் துன்பமாகவும் இன்பமாகவும் அதுதானே ஆயிற்றுக்காண். இது பொய்யன்று என்றும் நீதான் அறிவாயாக!

கருத்து : தீயாக வருத்தித் துயர் தந்த அவன் மார்பே, இதுபோது மென்காற்றாகி இன்பமும் தருவதாயிற்று என்பதாம்.

சொற்பொருள் : வளி–காற்று. நோய்–பிரிவாலுண்டாகும் காமநோய். இன்பம்–அணைத்து மகிழ்தலால் அடையும் இன்பம். மாயம் – பொய்ம்மை. எருவை – கொருக்கச்சி. தொன்று உறை துப்பு–பழைமையாக உண்டான பகைமை. முரண்–மாறுபாடு. செப்புடை–சிவந்த புறப் பகுதி. 'காந்தள்' என்றது செங்காந்தளை. இலங்குதல்–விளங்குதல்.

உள்ளுரை :காந்தள் சிலம்பிடமெங்கும் கமழும் என்றது, தலைவனது அன்பு கலந்த இல்வாழ்க்கையின் செவ்வி அவனூரினராலும் தலைவியின் ஊரினராலும் உவந்து பாராட்டப்பெறும் சிறப்பினது என்பதாம்.

விளக்கம் : அவன் பரந்த மார்பை விசும்புக்கும், பிரிவுப் பெருநோயை தீக்கும், உடனுறைந்து தரும் இன்பத்தை வளிக்கும் பொருத்திக் காண்க. வெம்மையை ஆற்றும் வளி என்று கொள்க. 'மாயம்' என்றது இல்லாத ஒன்றை உள்ளது போலத் தோன்றக் காண்டல். காந்தள் முகையானது புலியைக் கொன்ற குருதிக்கறை படிந்த யானைக் கோடு போலத் தோற்றுமாயினும், அதுதான் எத்தகைய வன்கண்மையும் இல்லாததாய், சிலம்புடன் நறுமணம் கமழும் நற்செயலையே செய்தலைப்போலத், தலைவனும் கொடியவனே போலப் பிரிவுப் பெருநோயால் வருத்தமுறச் செய்யினும், அதனைப் போக்கி, மென்காற்றென வந்து அணைத்து இன்பம் செய்வானாக அமைந்தனன் என்பதாம். தலைவியை எண்ணி வருந்திய தோழியானவள் அவள் நடத்திய இல்வாழ்க்கைச் செவ்வியைக் கண்டு மகிழ்ந்து கூறுகின்றாள் என்றும் கொள்க. தோழிக்குத் தலைவி கூறுவதாகவும் உரைக்கலாம்.

295. முதிர்ந்து முடிவேம் யாமே!

பாடியவர் : ஔவையார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. (1) சிறைப் புறமும் ஆம்.

[(து.வி.) (1) தோழி தலைமகனை நெருங்கி, 'நம் உறவை அறிந்தனள் அன்னையாதலின், தலைவியை இற்சிறை வைக்கவும் எண்ணினள்' என்று கூறுகின்றாள். ஆகவே, இனிக்களவுறவு வாயாது; வரைந்துவந்து இவளை மணந்து கொள்ளுதற்கு விரைவாயாக என்று குறிப்பாகப் புலப்படுத்துகின்றனள். (2) தலைவன் சிறைப்புறத்தானாக, அவன் கேட்குமாறு தோழி கூறியதும் இதுவாகும்.]


முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின்
புறனழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும்அஃ தறிந்தனள்
அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறுபல் நாட்டிற் கால்தர வந்த 5
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே!

தெளிவுரை : பசுமை கெட்டுப் போன மலைப்பக்கத்திலே காய்ந்து கிடக்கும் வள்ளிக் கொடியைப் போலத், தன் புறவழகெல்லாம் அழிவுற்றதாகிப் போயின. தழைந்து தாழ்ந்த கருங்கூந்தலை உடையவரான ஆயமகளிரும், மனம் அழுங்கா நின்றனர். எம் தாயும் தலைவியின் களவொழுக்கமாகிய அதனை அறிந்து விட்டனள். அதனாலே, தலைவியை இல்வயிற் செறித்தனளாகி, அரிய காப்பையும் ஏற்படுத்தினள். ஆதலினாலே,

வேறாகிய பலப்பல நாடுகளின்றும் காற்றுச் செலுத்துதலாலே வந்தடைந்த, பலவான செய்வினைச் சிறப்புடைய நாவாய்கள் காணப்படும், எம் தந்தையது பெரிதான கடல் துறையினிடத்தே வைக்கப் பெற்றுள்ள, உண்டாற் செருக்கை மிகுவிக்கும் கள்ளின் சாடியைப் போன்றதான எம்முடைய இளமையது நலமெல்லாம், இல்லத்திடத்தேயேயாகிக் கெட்டு ஒழியும்படியாக யாமும் எம்மனையகத்தே செல்லா நிற்போம்! அவ்விடத்திருந்தபடியே அவனைப் பெறாதே முதுமையடைந்தும் முடிவை எய்துவோம்! இதனை எமக்கு நேர்வித்த நீதான் நெடிது வாழ்வாயாக!

கருத்து : எம்பால் அன்புடையையாயின், நீதான் மணத்தோடு விரைய வந்தனையாய் அவள் நலிவைப் போக்குவாயாக என்றதாம்.

சொற்பொருள் : முரிந்த சிலம்பு–கோடை வெம்மையாலே பசுமை நலன் கெட்டழிந்து போய்க் காணப்படும் மலைப்பகுதி. எரிந்த – காய்ந்து பட்ட. புறன் – மேற்புறம். ஒலிதல்–தழைத்தல். தாழ்தல்–தொங்குதல். அழுங்குதல்–பெரிதும் வருந்திச் சோர்தல். கடி–காவல். கடி அயர்தல்–காவலைச் செய்தல். கால்–காற்று. பலவினை நாவாய்–பலவான செய்வினைத் திறன் பெற்ற நாவாய்; பல நாட்டின ஆதலின் அவை பல வினைத்திறன் உடையவாயின. தோன்றும்–வந்து சேர்ந்து காணப்படும். கலி–செருக்கு. மடை–மடுத்தல்–உண்டல். இள நலம்–இளமை நலம்–இளமையும் நலமும் என்றும் கொள்ளலாம். சேறும்–சென்றடைவேம். முதிர்கம்–முதிர்ந்து போவேம்.

விளக்கம் : வளமை செறிந்த சிலம்பினிடத்தே பசுமை தோன்றத் திகழ்ந்த வள்ளிக்கொடி தானும், மழைவளத்தைப் பெறாமையினாலே காய்ந்து போயினாற் போல், தலைவியின் துயர்கண்டு அழுங்கிய ஆயமகளிரது ஒலிவரும் தாழிருங் கூந்தலும் எண்ணெய்யிட்டுப் பேணப் பெறாமையிலே அழகழிந்தது என்று கொள்க. சாடியைத் தலைவிக்கும், அதன்பாலுள்ள கள்ளைத் தலைவியது அழகுக்கும் உவமையாகக் கொள்க. சாடி கண்டாரை இன்புறுத்துவது, தன்னை நாடி வரச் செய்வது, கள் உண்டாரைச் செருக்குறச் செய்து களிப்பது.

'முதிர்கம் யாமே' என்பது சிந்தனைக்கு உரியது. வேற்று வரைவுக்கும் கற்பிற் சிறந்தாளாகிய தலைவி இசையமாட்டாள்; களவிலும் நின்னை அடையாள்; நீதானும் அவளை மணத்தலைக் கருதமாட்டாய்; ஆகவே, அவள் வருந்தினளாக இளமையும் அழகும் வறிதே கழிய முதிர்ந்து சாவையே அடைவாள்; அவளுக்கு அணுக்கராகிய யாமும் அவள் பயின்ற துயரைப் பொறேமாய் அந்நிலையே எய்துவேம்; இத்துணைக்கும் காரணமாகிய நீ தான் நெடிது வாழ்வாயாக என்கின்றனள். தோழி கூற்றாக அமைந்த இச்சொற்களிலே பெருமிதப் பண்பும், வரைவுகடாதலும், ஒருங்கிணைந்து மிளிர்கின்றன!

வேறு பல் நாட்டிற் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை என்பது, பழந்தமிழ் நாட்டு வாணிக வளத்தை உணர்த்துவதாம். மகளிரது இளமை நலத்தைக் கட்சாடிக்கு உவமித்த நயத்தைச் சிந்தித்து உணர்ந்து களிக்க வேண்டும்.

296. படர் உழந்து ஒழிதும் !

பாடியவர் : குதிரைத் தறியனார்; குதிரைத் துறையனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவன் கார்காலத்தேயும் வினைப்பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குக் கருதியதனைத் தோழி வாயிலாகக் கேட்ட தலைவியானவள், அவளுக்குத்தன் நிலையைத் தெளிவிக்கக் கூறியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


என்னா வதுகொல் தோழி? மன்னர்
வினைவல் யானைப் புகர்முகத் தணிந்த
பொன்செய் ஓடை புனைநலம் கடுப்பப்
புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்
ஏகல் மீமிசை மேதக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்பநாம் வருந்துபடர் உழந்தே!

தெளிவுரை : தோழீ! மன்னர்கட் குரியவான போர் வினையிலே வல்லமையுடைய யானையானது, புள்ளிகொண்ட முகத்திலே யணிந்துள்ள, பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தின் புனைதல் சிறந்த அழகைப்போல, புழல் அமைந்த காய்களைக் கொண்ட கொன்றைமரத்தின் கிளைகளிலே கொடிகொடியாகத் தூங்கும் சரக்கொன்றையின் பூங்கொத்துக்கள், பெருமலையின் மிக உயர்ந்த பக்கத்தே, மேன்மைப்பட மலரா நிற்கும்!

'காதலித்தாரைப் பிரிந்திருப்பவர்கள், பிரிவுத் துயரத்தாலே தனித்திருந்து வருந்துவதற்கு உரியதான கார்காலத்திலேயும், வினைசெய்தலையே நினைந்திருக்கும் உள்ளத்தோடு, நம் காதலர் விரைந்து செல்வார்' என்பார்கள். நாம் அவரைப் பிரிந்தேமாய்ப், பிரிவைப் பொறுத்தபடி, நம்மை வருத்துகின்ற துயரத்தையும் தாங்கினமாய், இவ்விடத்தே இருந்தொழிதல் வேண்டும் என்றும் கூறுவர். இனி, எல்லாம் ஏதாய் முடியுமோ?

கருத்து : 'அவரே நம் துயரத்தை எண்ணாதவராயின், இனி யாம் எதனைப்பற்றி உயிர்வாழ்வதோ?' என்பதாம்.

சொற்பொருள் : வினை வல் யானை–போர்வினைப்பாட்டை அறிந்து அம்முறைப்படி செய்தலிலே வல்ல யானை. புகர்–புள்ளி. ஓடை – நெற்றிப்பட்டம். புழல் – புழை. புழற்காய்க் கொன்றை–உள்ளே புழையையுடைய கொன்றைக் காய். ஏகல் – உயரமான பாறை. மேதக – சிறப்பாக. 'அரும் பெறற் காலை' என்றது கார்காலத்தை. வினையே நினைந்த – வினை செயல் ஒன்றை மட்டுமே நினைந்த. துனைதல் – விரைதல். வருந்துபடர் –வருந்துதற்குக் காரணமான துன்பம்.

விளக்கம் : 'யானையின் முகத்திலேயுள்ள பொற்பட்டத்தைப் போலப் பாறைமேல் விழுந்து கிடக்கும் கொன்றை மலர்கள் தோன்றும்' என்றனர். யானை முகம் உயர்ந்த பாறைக்கும், பொற்பட்டம் பொன்னிறக் கொன்றைப் பூக்களுக்கும் உவமை. 'புனைநலம்' என்றது. பொற்பட்டம் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கியதனைக் குறித்தற்கு. கொன்றை சரம்சரமாகக் கட்டித் தொங்கவிட்டாற்போலப் பூத்திருத்தலின், 'கோடணி கொடி இணர்’ என்றனர். பிரிந்தோர் இரங்குவதற்குரியது 'கார் காலம்' என்பது தெளிவு. 'வினையே நினைந்த உள்ளம்' என்றதனால், தம்மை மறந்த உள்ளம் என்பதும் சொன்னது ஆயிற்று; ஆகவே, இனி எம் உயிர் என்னாகுமோ என்னும் ஏக்கமும் புலப்படும். 'துனைஇ' என்றது, அதுதான் விரையாதாயின் ஒரு சிறிது நம் நினைவும் எழக்கூடும்; அதற்கும் ஏதுவின்றி, அதுதான் விரைந்து செலுத்துவதாயிற்று; இனி என்னாகுவமோ? என்று வருந்துகின்றனள் என்பதற்காம்.

பயன் : தலைவியது இப்பேச்சைத் தோழி தலைவனுக்கு உணர்த்த, அவனும், தலைவியின் பிரிவாற்றாமைத் துயரைக் கருதினவனாகத் தான் பிரிந்து போவதனைக் கைவிடுவான் என்பதாம்.

297. அன்னை கூவினள்!

பாடியவர் : மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது; (2) தோழி தலைமகளை அறத்தொடு நிலை வலிப்பித்ததூஉம் ஆம்.

[(து-வி) (1) தலைவன், செவ்விநோக்கிச் சிறைப்புறமாக ஒதுங்கி நிற்பதைக் கண்டாள் தோழி. தலைமகளிடம் சொல் பவள் போலத் தலைவனும் கேட்டுக், களவு வெளியாயின உணர்ந்து, தலைவியை விரைய மணக்கும் முடிவுக்கு வருமாறு குறிப்பாகக் கூறுகின்றாள். (2) தலைமகளை அறத்தொடு நிற்பாயாக என்று வற்புறுத்தி அதன்கண் நிலை பெறுத்தியதும் ஆம்.]


பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப
நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய்;
பன்மாண் சேக்கைப் பகைகொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
அவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை; 5
நின்னுள் தோன்றும் குறிப்புநனி பெரிதே;
சிதர்நனை முணைஇய சிதர்கால் வாரணம்
முதிர்கறி யாப்பில் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல்லகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை; 10
ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே !

தெளிவுரை : தோழீ! பொன்னாலே செய்யப்பெற்ற கிண்ணத்திலே வைக்கப்பட்ட பாலானது, நின்னால் உண்ணப் படாதேயே கீழே வைக்கப்பட்டிருப்பதனைக் காணாய்! நின் மேனியது ஒளியும் மிகுந்து வேறாகத் தோன்றுகின்றது! நின் சிவந்த அடிகளால் நடந்து ஒதுங்கிப் போனாயும் அல்லை! பலவாறாகவும் மாண்புகொண்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு, கள்ளுண்டவர் அடையும் மயங்கிய பார்வைக்கு நின்பால் இடமில்லையாகவும், நீயும் மயக்கம் அடைந்தவளேபோலத் தோன்றுகின்றனை! நாம் இவ்வாறு இருப்பதன் காரணம் எதனாலே என்று எண்ணியும் பார்த்தாயில்லை; ஆதலினாலே, நின் உள்ளத்தே தோன்றும் குறிப்பானது மிகவும் பெரிதாயுள்ளது!

வண்டுகள் மொய்க்கும் மலரும் பருவத்தையுடைய பூக்களை வெறுத்ததான, சிதர்ந்த இறகுடன் கூடிய கால்களையுடைய கோழியானது, முதிர்ந்த மிளகுக்கொடிகள் பின்னிக் கிடக்கும் இடத்திலே சென்று உறங்கியபடி யிருக்கும் மலை நாடனானவன், மெல்ல வந்தானாகி, நின் நல்ல உள்ளத்தேயும் இடம் பெற்றதனைப்பற்றி ஐயமுற்றவளாக, அன்னையும் மயக்கமடைவள். இப்போது, அவள் ஐயம் இல்லாதேயே, கடுங்குரல் எடுத்து நின்னை அழைக்கின்றனள்; காண்பாயாக!

கருத்து : நின்னுடைய மயக்கத்தால் களவுறவை அன்னையும் அறிவாள் என்றதாம். தலைவியால் சிறு பிரிவையும் மறக்க முடியாமையின், விரைவில் அவளை மணந்து, பிரியாதுறையும் இல்லறவாழ்வினை அமைப்பதே தலைவனின் விரைந்த செயலாக வேண்டும் என்பதுமாம்.

சொற்பொருள் : வள்ளம் – கிண்ணம்; வட்டமாகக் குழிந்திருப்பது; இதேபோலக் குழிந்துள்ள சிறு தோணியும் 'வள்ளம்' எனப்படும். கிழக்கிருத்தல் – கீழே வைத்திருத்தல். ஏறிய – மிகுந்த. மகிழ்தல் – கள்ளால் உளவாகும் மயக்கம். சிதர் –வண்டு. சிதர்கால்–மென்கால். கறி – மிளகுக்கொடி. யாப்பு–கட்டியதுபோலப் பின்னிக் கிடத்தல். நல்லகம் – நல்ல உள்ளம்; அது முன்னைய நிலை; இப்போது அதுவே நின் மயக்கத்திற்கும் காரணமாயிற்று என்பது குறிப்பு. மையல் – மயக்கம்; எதனாலோ மகள் இவ்வாறாயினாள் என்னும் பெருங் கவலையால் உண்டாவது. ஐயம் – இவள்தான் களவுறவு பெற்றாளோ என்று நினைத்தல்.

விளக்கம் : பாலும் உண்ணப்படாதே கீழே யுள்ளது என்றது, உணவையும் வெறுத்ததனால் உடல் மெலிவுற்றனள் என்றற்காம். சேவடி ஒதுங்காய் என்றது நடத்தற்கும் வன்மையற்றுப் போயினை என்பதாம்; மெலிவாலும், களவை மறக்க இயலாது பெருகிய பிரிவுத் துயராலும் இஃது ஆகும். 'குறிப்பு நனி பெரிது' என்றது, களவு வெளிப்படின் அறத்தொடு நிற்றலுக்கும், தலைவனோடு உடன் போதற்கும் துணிந்துள்ள மனவுறுதியின் குறிப்பினை. அன்னை மையல் உறுகுவள் என்றது, அவள் வெகுளாளாயினும், நின் நலனையே கருதுபவளாதலின், துயரத்தால் உண்மை காணமாட்டாதே மயங்குவாள் என்பதாம். கூவினள் – கூப்பீட்டைச் செய்கின்றனள்; இது அன்னை இவர்கள் இடத்திற்குத் தொலைவாயிருப்பதைக் குறிப்பதும் ஆகும். ஐயம் இல்லாதேயும் கடுங்கூவினளான அன்னை, ஐயமுற்றனளாயின் இற்செறிப்பே நிகழும்; அப்போது களவுறவும் வாயாது; இவளும் இறந்துபடுபவள் என்பதாம்.

உள்ளுறை : நனையை வெறுத்த கோழியானது கறிக்கொடியது யாப்பிலே துஞ்சும் என்றனள். இது மலரன்ன மெல்லியலாளான தலைவியை வெறுத்தானாகத், தலைவன் தன்னூர்க்கண்ணே சென்று ஒடுங்கினான் என்று குறிப்பிட்டுக் கூறியதாகும்.

பயன் : தலைவியைத் தலைவன் மணக்கும் முயற்சியிலே விரைபவன் ஆவான் என்பதாம்.

298. நமக்குப் பொருந்துமோ?

பாடியவர் : விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்.
திணை : பாலை.
துறை : தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி, ஆற்றாதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லித், தலைமகன் செலவழுங்கியது.

[(து-வி) 'பொருள் தேடி வருக' என்றாள் தோழி. மனமும் பொருள்பாற் செல்லுகின்றது. தலைமகன், தலைவிபாற் செல்லும் தன் நெஞ்சினை நினைக்கின்றான். அவளைப் பிரியவும் துணியமுடியாமல், பொருள் ஆசையையும் விடமுடியாமல் மனம் கலங்கி, முடிவில், பொருள்தேடப் போதலைப் தள்ளி வைக்கின்றான். அவன் மனக்கலக்கமாக அமைந்த செய்யுள் இது.]


வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச்
செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர்
மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட
எருமைச் சேவல் கிளைவயிறு பெயரும்
அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு நனந்தலைப் 5
பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள்
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம்
பற்றாய்—வாழிஎம் நெஞ்சே—நற்றார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வாண்முகை 10
இரும்போது கமழுங் கூந்தல்
பெருமலை தழீஇயும் நோக் கியையுமோ மற்றே!

தெளிவுரை : எம் நெஞ்சமே! புதிதாக வருகின்ற மக்கள், வழியூடே வருகின்ற தன்மையை நோக்கியபடியே காத்திருப்பவர், ஆறலைப்போராகிய கள்வர்கள். அவரைக் குறிவைத்துச் சிவந்த கணையை அம்பிலே தொடுத்து எய்பவரும் அவர். சினந்த பார்வையினரான அவரது, வாய்மடித்துப் போர்த்த தண்ணுமையின் முழங்கும் குரலைக் கேட்டதும், பருந்தின் சேவலானது அச்சங்கொண்டு, தன் கூட்டம் வாழும் அவ்விடத்தை நோக்கிப் பறந்து செல்லும். கடத்தற்கரியதும், கவருபட்டதுமான அச்சந் தரும் அகன்ற அவ்விடத்தேயுள்ள பெரிய பலவாகிய குன்றுகளைக் கடந்து போவதுபற்றியும் ஒருபால் நினைப்பாய். அடுத்து, இவளுடைய கரும்பெழுதிய பணைத்த தோள்களையும் எண்ணி நோக்குவாய்! ஒருபாலும் மனம்பற்றாமல் மயங்குகின்றாய்! நல்ல வேப்பந்தாரினை அணிந்தோனான பொற்றேர்ச்செழியனின் கூடல் நகரத்திலே, பண்டுயாம் ஒருதலையாகத் துணிந்து பொருள்தேடி வருவதாகத் தோழிபாற் சொல்லிய அருமையான சொற்கள்தாம் என்னே! வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணங் கமழும் கூந்தலை உடையவள் என் காதலி! இவளைப் பார்த்தபின்னர், பெருமலைகளைக் கடந்து பொருள் தேடிவரச் செல்லுவதுதான் நம் காதலுறவுக்குப் பொருத்தமாகுமோ?

கருத்து : இவளைப் பிரிதல் ஆற்றேம்; ஆதலின், பொருளை நாடிச் செல்லுதலைச் சிறிதுகாலம் மறந்திருப்பாய் என்பதாம்.

சொற்பொருள் : வம்பமாக்கள் – வெளியூராரான புதியர்கள். வருதிறம் – வருகின்ற தன்மை. செங்கணை – சிவந்த கணை; சிவப்பு முன்னர்ப் பிறர் உடலிற் பாய்ந்து பெற்ற குருதிக்கறை. 'மடிவாய்' என்றது, மடித்து வைத்துக் கட்டப்பெற்ற தோலையுடையது என்று பொருள் தரும். எருவை - பருந்து வகையுள் ஒன்று. அது கிளைவயிற் பெயர்தல், தண்ணுமை ஒலியால் அச்சங்கொண்டு என்க. நனந்தலை – அகன்ற இடம். கரும்பு – தோளில் எழுதும் ஒப்பனை. பணைத்தோள் – பருத்த தோள். ஒருதிறம் – ஒரு பக்கம். 'கூடல்' என்றது மதுரையை. 'ஆங்கண்' – அவ்விடத்தே. வாண்மை – வெண்மை. இரும் போது – பெரிய மலர்கள்.

விளக்கம் : 'வம்பமாக்கள்' என்றது, வழியின் கொடுமையறியாது வந்த புதியவர் என்பதற்கு. 'செங்கணை தொடுத்த' என்றது, மறைந்து நின்று அம்பு தொடுப்பவர் என்பதையும், 'செயிர் நோக்கு' எதிர்வரினும் அஞ்சாது சினந்து நோக்கும் கொடியவர் என்பதையும் காட்டும். பொருளே கருத்தினராதலின், அருள்நோக்கு இன்றிச் செயிர் நோக்கே கொண்டவர் என்று கொள்க. பிணத்தை நாடி வானிற் பறக்கும் எருவைச் சேவலும் அஞ்சித் தன் கிளையிடம் செல்லும் என்றது, அவரது கொடிய போரைக் குறித்துச் சொன்னதாம். 'பெருமலை தழீஇய நோக்கு இயையுமோ?' என்பது, மனத்திற்குச் சொல்லும் முடிபு.

இறைச்சிப் பொருள் : எருவைச் சேவலானது தண்ணுமையின் ஒலிக்கு அஞ்சித் தன் சுற்றத்திடம் நோக்கிப் பெயர்ந்து போகும் என்றது, யாம் பொருள் தேடி வருதலைக் குறித்துச் சென்றாலும், இவள் பிரிவாற்படும் வேதனையை எண்ணி, இடை வழியில், மீண்டு வருதலையே நினைப்போம்போலும் என்றதாம்.

பயன் : இந்த எண்ணத்தின் பயனாவது, அவன் தான் போகக் கருதிய செலவைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பான் என்பதாம்.

299. வில்லெறி பஞ்சி!

பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து-வி.) தலைமகன் சிறைப்புறத்தான் என்பதனை அறிந்தனள் தோழி. அவன், தலைவியை விரைவிலே மணம் புரிந்து இல்லற வாழ்வைத் தொடங்குதல் வேண்டும் என்று கருதுகின்றாள். அவன் பாலும் அந்த நினைவை எழச்செய்தற்கு நினைப்பவள், தலைவியிடம் சொல்வாள்போல, அவனும் கேட்டுத் தெளியுமாறு இவ்வாறு கூறுகின்றனள்.]


உருகெழு யானை உடைகொண் டன்ன
ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர்
தயங்கிருங் கோடை தாக்கலின் நுண்தாது
வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அலர்காண் 5
நாமிலம் ஆகுதல் அறிதும் மன்னோ.
வில்லெறி பஞ்சி போல மல்குதிரை
வளிபொரு வயங்குபிசிர் பொங்கும்
நளிகடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

தெளிவுரை : அச்சத்தைச் செய்கின்ற யானையானது, நல்ல உடையை அணிந்து கொண்டாற்போல, நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதர்கள் தோன்றும். அவை, கடுமையான மேல்காற்று மோதுதலினாலே, நுண்மையான பூந்தாதுகளை உதிர்க்கும். விளங்கும் இழையணிந்த மகளிரது வளையல்களைப்போல அவை உதிரும். வில்லால் எறியப்படும் பஞ்சி சிதறுதலைப்போல, அடுத்தடுத்து வரும் அலைகளைக் காற்றுப் பொருதி அலைத்தலால் சிதறும் நீர்த்திவலைகள் பொங்கி எழுகின்ற பெரிய கடல்நிலத் தலைவனோடு கூடி மகிழ்வதற்கு முன்பே, அத்தகைய அழகிய நம் சீறூர்க்கண்ணே, நாம் தனிமையுற்று வருந்தியவிடத்தில், நாம் அலர் கூறப்படுதலை இல்லாதவராய் இருந்ததனையும், நன்கு அறிவோம் அல்லமோ?

கருத்து : அவரைப் பிரிந்து இனியும் ஆற்றியிருக்க நம்மால் இயலுமோ? என்பதாம்.

சொற்பொருள் : உருகெழு யானை – அச்சம் விளைக்கும் யானை. உடைகொண்டு – முதுகில் ஆடை போர்த்துக்கொண்டு, பிணி – பிணிப்பு; கட்டு. இருங்கோடை – கடுமையான மேல் காற்று. நுண்தாது – தாழைப் பூவின் மகரந்தம். வயங்கிழை – ஒளி விளங்கும் ஆபரணங்கள். தாழைப் பூவின் அடிப்பகுதி மகளிர் அணியும் வளைபோல்வதாகலின், வளையின் தாஅம் என்றனர்.

விளக்கம் : சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டுணரக் கூறுகின்றனளாதலின், அவனுக்கு ஊரலரையும் தம் பிரிவாற்றாமையும் இவ்வாறு உரைக்கின்றனள் என்று கொள்க. காற்று மோதுதலாலே உதிரும் தாழைப் பூந்தாது, மகளிர் வளைகழன்று வீழ்வதுபோலும் என்றது, தலைவனின் பிரிவால் தலைவியும் உடல் மெலிவுற்று வருந்துகின்றவளாயினள் என்று உணர்த்துவதாம். காற்று மோதுதலாலே அலைகள் உடைந்து பிசிர் பிசிராகச் சிதறுதலைப்போல, வேட்கை நோய் வருத்துதலாலே உண்டான உடல் மாறுபாடு பற்றிய அலரும் எழுந்து ஊர் முழுதும் பரவிவிட்டது என்பதாம். 'சேர்ப்பன்' – கடல் நிலத் தலைவன்.

300. முன்கடை நிறீஇச் சென்றனன்!

பாடியவர் : பரணர்.

திணை : மருதம்.
துறை : (1) வாயில் மறுத்தது; (2) வரைவு கடாயதூஉம் ஆம் (மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.)

[(து-வி) (1) பரத்தைபாற் சென்றிருந்த தலைவனின் தூதனாக வந்த பாணனிடம், காமக் கிழத்தியின் தோழியான விறலி, தன் தலைவி, தலைவனை ஏற்க விரும்பிலள் என்று உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது; (2) வரைந்து வருதலில் மனஞ் செலுத்தாமல், களவிலேயே ஒழுகிவரும் தலைவனிடம், தலைவியை மணப்பது கருதினனாக, அயலான் ஒருவன் விரும்பி வந்து போயினன் என்று, தோழி கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]


சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்
மடத்தகை ஆயம் கைதொழு தாஅங்கு
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்
சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் 5
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே!
நீயும், தேரொடு வந்து போதல் செல்லாது
நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின்
இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் 10
பிச்சைசூழ் பெருங்களிறு போல வெம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!

தெளிவுரை : நெய் வடித்தாற் போலப் பிசிரடங்கிய நரம்புகளை இழுத்துக் கட்டியுள்ள யாழையுடைய, பெரிய சுற்றத்தைக்கொண்ட பாணர்களின் தலைவனே! விளங்குகின்ற தொடியணிந்தவளான அரசகுமாரியானவள் சினந்தாளாக, அவ்விடத்திலே அதற்கு எதிராக மடப்பத்தையுடைய தோழியர் கூட்டமானது, அச்சினத்தைத் தணிவிக்கும் பொருட்டாகக் கைதொழுது வணங்கினாற்போல, மிகுதியான காற்று மோதுதலாலே ஆம்பல் வளைந்து தாமரை மலரிடத்திலே சாய்ந்து வணங்கியபடியிருக்கும், தண்ணிய துறையையுடைய ஊருக்குரியவன் தலைவன்! அவன், சிறு வளையினையுடைய இவளுக்கு விலையாவது இதுவேயெனப், பெருந்தேரை ஒப்பனை செய்து, எமது முற்றத்தின்கண்ணே நிறுத்திச் சென்றுள்ளனன் கண்டாய்! அவனுடைய தேரினிலே வந்த நீயும், அவன் பின்னாகவே போதலைச் செய்யாமல், போர்க்களத்திலே பெரும் புண்பட்டவனாகிய அழகினைக் கொண்ட தழும்பன் என்பானின் ஊணூரிடத்தேயுள்ள, பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல, எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் ஓலையைத் தொட்டபடியே நிற்கின்றனையே! இதுதான் எதற்காகவோ?

கருத்து : நின் கருத்தினை யாம் ஏற்கமாட்டோம்; நீ நிற்பதாற் பயனின்று என்பதாம்.

சொற்பொருள் : சுடர்த் தொடி – ஒளி சுடரும் தொடி. கோமகள் – கோமானின் மகள். மடத்தகை ஆயம் – மடப்பத் தகைமை கொண்டவரான ஆயமகளிர். சிறுவளை விலை – அவளையடைதற்கான வரை பொருள். முன்கடை – முற்றம். துய் –பிசிர். பெரும்புண் – பெரிய போர்ப்புண்; 'பெரும்பூண்' என்றும் பாடம். 'ஊணூர்' தழும்பனின் கோநகர்.

உள்ளுறை பொருள் : காற்று மோதுதலாலே ஆம்பல் தாமரையைத் தாழும் என்றது, தலைவனின் ஏவுதலாலே நீயும் இங்கு வந்து எம்மிடத்தே இறைஞ்சி நிற்பாயாயினை என்றதாம்.

பயன் : தலைவனை ஏற்காது மறுத்து உரைத்தல்,

இரண்டாம் துறையின் தெளிவுரை : ஊரன் ஒருவன் இவளைப் பொன் அணிதலை விரும்பினன். இச்சிறுவளை உடையாளுக்கு விலை இதுவென்று தனது தேரினையும் அலங்கரித்துப் பொருளோடு எம் முற்றத்தே நிறுத்தித், தன் முதியோரையும் சான்றோரையும் அழைத்துவரப் போயுள்ளனன். நீயும் அவ்வாறே வந்து பரிசப்பொருளைத் தந்து மணந்து செல்வதற்கு முற்படாமல், தழும்பனது ஊணூரிடத்தே களிறு நிற்பதுபோல, அட்டிற்சாலைக் கூரையைத் தொட்டபடியே இரவெல்லாம் நிற்கின்றனை; யாது பயன்? இப்படியே நிற்பாயாக என்றதாம். இதன் பயன். தலைவனின் உள்ளம் மணந்து கோடலிற் செல்லும் என்பதாம்.

301. யாய் மறப்பறியா மடந்தை!

பாடியவர் : பாண்டியன் மாறன் வழுதி.
திணை : சேட்படுத்துப் பிரிவின்கண், 'இயற்கையில் தங்குவதோர் ஆற்றாமையினாள்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்த எண்ணுகின்றாள் தோழி. அவள் மனம் தலைவியின் தாய் அவள்மேல் செலுத்தும் பெரிதான அன்பையும் நினைக்கின்றது. அவள் தன்னுள்ளே சொல்லிக் கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது. எனினும், இதனைக் கேட்கும் தலைவனும், தலைவியின் அருமையை அறிந்து, அவளை விரைவில் மணந்து இல்லறவாழ்வில் இனிது வாழ்வதுபற்றிய நினைப்பினனாவான் என்பதும் ஆம்.]


நீள்மலைக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை
மலர்பிணைத் தன்ன மாவிதழ் மழைக்கண்
மயிலோ ரன்ன சாயல் செந்தார்க்
கிளியோ ரன்ன கிளவி பணைத்தோள் 5
பாவை யன்ன வனப்பினள் இவளெனக்
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய்மறப் பறியா மடந்தை
தேறைப் பறியாக் கமழ்கூந் தலளே.

தெளிவுரை : "நெடுமலைத் தொடரிடையே முளைத்த பெருத்த தண்டுடைய குறிஞ்சியது, அற்றை நாட்காலையில் பூத்திருக்கும் புதுமலரைப் போன்ற மேனியள்; பெருஞ்சுனையிடத்துக் குவளைமலர்களுள், இரண்டை ஒருங்கு பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களை உடையவள்; மயிலோ என்னுமாறு பொருந்திய சாயலை உடையவள்; சிவந்த கழுத்தாரத்தைக் கொண்ட கிளியோ என்னுமாறு பேசும் மழலைப் பேச்சினள்; பணைத்த தோளினள்; கொல்லிப் பாவை போலும் வனப்பினள்—இவளாகிய என் மகள்" என்று, விருப்பமுடைய நெஞ்சத்தோடு பலபடப் பாராட்டியபடி, தாயால் சிறிதுபொழுதுக்கும் மறந்திருத்தலை அறியாத மடந்தையான தலைவியானவள், நெய்மணம் மறந்தறியாத, மணம் கமழும் கூந்தலையும் உடையவள் ஆவாளே!

கருத்து : 'தாய் அறியாமல் அவளை நின்னுடன் ஒன்று படுத்துவது இயலாத செயல்' என்பதாம்.

சொற்பொருள் : கலித்தல் – முளைத்தெழுதல். நீள்மலை – நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடக்கும் மலைத் தொடர். கிளவி – பேச்சு. பணைத்தோள் – பணைத்ததோள்; பணைத்தல் – பெருத்தல். பாவை – கொல்லிப் பாவை.

விளக்கம் : குறிஞ்சி – குறிஞ்சிச் செடி; இது பன்னீராண்டிற்கு ஒரு முறை முளைத்துப் பூப்பது; மென்மை சிறந்தது; பாண்டி நாட்டுக் கோடைமலைப் பகுதியில் மிகுதி; இதனை அறிந்து பாண்டியன் மாறன் வழுதி எடுத்துக் காட்டியுள்ளது சிறப்பாகும். இதன் தண்டு கருமையானது; இதனைக் 'கருங்கோல் குறிஞ்சிப் பூ' எனவரும் குறுந்தொகை (செய்.3)யாலும் அறியலாம். குவளையின் இணைமலர்களைக் கண்களுக்கு உவமை கூறுவதை 'மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்' என வருவதனாலும் அறியலாம் (நற். 252).

விளக்கம் : இவள், "வீட்டின் புறம்போந்து இரவுக்குறியில் நின்னால் தழுவுவதற்கு இனி வாய்த்தல் அரிது; எனவே, மணந்து கூடியின்புறலே இனிச் செயத்தக்கது" என்பதாம். 'தேமறப் பறியாக் கமழ்கூந்தலளே' என்றது, நின்னால் சூட்டப்பெறும் நறுமலர்களின் மணம் அதனை வேறுபடுத்தினும் அன்னை அறிவாள் என்பதாம். 'காமர் நெஞ்சமொடு' என்றது, எப்போதும் அன்பு பாராட்டுவாளான தாய், தன் மகளின் மணப்பருவப் புதுப்பொலிவு கண்டு, மேலும் அவள்பால் விருப்பம் கூடியவளாயினாள் என்பதாம்.

கழறிய பாங்கற்குத் தலைவன் தலைவியது மேம்பாடு கூறியதாகவும் இதனைக் கொள்ளலாம். பாண்டியன் கோடைப் பகுதியிலே கண்டு காதலித்த ஒரு கன்னியின் வனப்பைப் பாராட்டிக் கூறியது எனவும் கருதலாம். மேனி, கண், சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல் என உவமித்த சிறப்பு, அவன் அவளைப் பகற்குறியிற் பெற்றுக் கூடியவன் என்பதையும் புலப்படுத்துவதாம்.

302. சுடர்வீக் கொன்றை!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : பாலை.
துறை : பருவங் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.
[(து-வி.) முன்னர்ப் பிரிந்து சென்ற பொழுதிலே, 'தான் கார்காலத்து மீண்டு வருவதாகத் தலைவன் கூறிச் சென்றிருந்தான். அந்தக் கார்காலத்தின் வரவு வரைக்கும் அவன் பிரிவைப் பொறுத்திருந்தாள் தலைவி. கார்காலம் வந்ததும், அவள் வேதனையும் மிகுந்தது. அவள் நலிவு மிகுதியைக் கண்ட தோழி, அவளைத் தேற்றுவாளாகச் சில கூறவும், அவள் தன் மிகுதியான வருத்தத்தைத் தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


இழையணி மகளிரின் விழைதகப் பூத்த
நிடுசுரி இணர சுடர்வீக் கொன்றைக்
காடுகவின் பூத்த வாயினும் நன்றும்
வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
நறைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ 5
தாஅம் தேரலர் கொல்லோ சேய்நாட்டுக்
களிறுஉதைத் தாடிய கவிழ்கண் ணிடுநீறு
வெளிறில் காழ வேலம் நீடிய
பழங்கண் முதுநெறி மறைக்கும்
வழங்கரும் கானம் இறந்திசி னோரே ! 10

தெளிவுரை : தொலைவான நாட்டிடத்துள்ளதும், களிறு காலால் உதைத்து ஆடுதலினாலே மேலெழுந்த புழுதியானது செல்பவரின் கவிழ்ந்த கண்களிலும் விழுந்து மறைப்பதாயிருப்பதும், உட்புழையின்றி வயிரம் பாய்ந்த வேலமரங்கள் உயரமாக வளர்ந்திருப்பதும், பாழ்பட்டதுமான பழைய நெறியினையும் அப்புழுதி மூடிமறைப்பதுமான, செல்வதற்கரிய காட்டு வழியினும், பொருளார்வத்தினால் நம்மைப் பிரிந்து சென்றுள்ளவர் நம் காதலர். அவர் தாம்—

பொன்னிழை யணிந்த மகளிர்போல விருப்பந்தருமாறு பூத்துள்ள, நீண்டு சுரிந்த கொத்துக்களிலே விளங்கும் பூக்களைக் கொண்ட கொன்றையானது, காடெல்லாம் அழகு பெறுமாறு பூத்திருக்கின்றதாயினும், அதனையும், நன்மைப் பொருட்டாக வருகின்ற மழைக்கு எதிரேற்று விளங்கும் நீலமணியின் நிறத்தையுடைய பெரிய புதரிடத்தே வீழ்கின்றதனாலே, வெண்ணிறம் தோற்றுமாறு செய்த நல்ல கொத்துக்களையுடைய தெறுழமலர்கள் வீழ்வதனையும் காண்பவர், இதுதான் கார்காலம் என்று தெளிய மாட்டாரோ?

கருத்து : 'கார்காலம் வந்ததென அறிந்தும், அவர் மனம் பொருளைவிட்டு நம்மிடத்தே வருதலிற் சென்றதில்லையே' என்பதாம்.

சொற்பொருள் : சுரி – சுரிதலுடைய. எதிரிய – எதிரேற்ற. நரை நிறம் – வெண்ணிறம். தெறுழ் – ஒருவகைக் காட்டுமரம். வெளிறு – புட்புழை. காழ் – வயிரம். பழங்கண் – வருத்தம். முதுநெறி – பழைதான நெறி; பலகாலும் பலரும் சென்று திரும்பும் பழையதான வழி.

விளக்கம் : வருத்தந்தரும் கொடிய பாலையையும் பொருளார்வத்தால் கடந்து சென்றவரான நம் காதலர், இதுகாலை வழியும் கவின்பெற்றுக் கடத்தற்கு இனிதான போதும், நம்மை நிலையாமையால் அல்லவோ சொல்லிச் சென்றபடி திரும்பி வந்திலர் என்று நோகின்றனள். தெறுழம் பூக்கள் உதிர்தலால் கரிய புதர் வெண்ணிறம் பெற்று அழகிதாகத் தோன்றுமாறு போல, அவர் வந்து தலையளி செய்தனராயின், தானும் துயர் நீங்கி அழகுபெறுவதையும் நுட்பமாகக் கூறுகின்றனள்.

303. எறி சுறவின் கடு முரண்!

பாடியவர் : மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிச் சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : 1. வேட்கை தாங்க கில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; 2. சிறைப் புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.

[(து-வி.) 1. தான் கொண்ட காமவேட்கை தாங்க முடியாதவளான தலைமகள் தோழிக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது; 2. தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி, அவன்பால் தலைவியை விரைய வரைந்து வருதலைப் பற்றிய நினைவை எழச்செய்யக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.]


ஒலியவிந் தடங்கி யாமம் நள்ளெனக்
கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே
தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்
துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும் 5
துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல்—வாழி தோழி—தெண்கடல்
வன்கைப் பரதவர் இட்ட செங்கோல்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிக் 10
கடுமுரண் எறிசுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே!

தெளிவுரை : தோழீ! நீதான் நீடு வாழ்க! தெளிந்த நீருடைய கடலிடத்தே, வலிய கையினரான பரதவர்கள், நேரான கோலையும் வளைந்த முடிகளையும் கொண்ட அழகிய வலைகளை வீசுவர்; அவ்வலை கிழியுமாறு அதனை அறுத்துக் கொண்டு வெளியே சென்று, கடுமையான முரண்பாட்டால், எதிர்ப்பட்டதை எல்லாம் தாக்கியிருந்தது சுறாமீன் ஒன்று; அத்தகைய சுறாமீன் திரிந்தபடியிருக்கும், ஆழ்ந்த நீர்த்துறைக்கு உரியவன் நம் சேர்ப்பன். அவனும், நம் நெஞ்சகத்தான் ஆகவே உள்ளனன். ஆயினும்—

"ஊரும் ஒலி அவிந்ததாய் அடங்கிற்று. யாமமும் நள்ளென்னும் ஒலியுடையதாயிற்று. நள்ளிரவுப் பொழுதும் வந்தது. ஓசை மிகுந்த நம் பாக்கத்தேயுள்ளவர் யாவரும் அயர்ந்து உறங்குவாராயினர். நம் மன்றத்துப் பெண்ணை, மிகப் பழங்காலத்திலிருந்தே கடவுள் தங்கியிருந்து வாழும் பருத்த அடியை உடையது. அதன் வளைந்த மடலிடத்தே, அன்றில்களின் கூடு உள்ளது. தன் துணையோடும் கூடி வாழுகின்ற அன்றிலானது அக்கூட்டிலிருந்தபடியே வேட்கைக் குரலை எழுப்புவதையும் தொடர்ந்து கேட்கின்றேம்.

அதனைக் கேட்கும்போதெல்லாம், கண் உறக்கம் அற்றவளாய், பிரிவுத் துயரமானது தன்னைப் பெரிதும் வருந்துதலினாலே மெலிந்து, நம்மையே நினைந்து, நல்ல நெற்றியை உடையவளான நம் காதலியும் வருந்துவாள்" என்று—

அவன் நினைப்பதுதான் உண்மையாகுமோ?

கருத்து : நம்மை நினைத்திலர்; ஆதலினாலேதான் இதுகாறும் வந்திற்றிலர் என்பதாம்.

சொற்பொருள் : தொன்றுறை கடவுள் – பழங்காலந்தொட்டு வந்து தங்கி வெளிப்பட்டு அடியவர்க்கு அருளும் கடவுள்; இன்றும் நெல்லை மாவட்டப் பகுதிகளில் இவ்வாறு பனையின் அடிமரத்தில் கடவுளை நிறுத்தி மக்கள் வழிபடுகின்றனர். 'தொன்முது கடவுள்' எனவும் பாடம். வாங்கு மடல் – வளைந்த மடல். உயவுக் குரல் – வேட்கைக் குரல். துணை பிரிந்த பறவை தன் துணையைச் சேர்தலை விரும்பிக் கூவியழைக்கும் துயரக்குரல். வன்கை – வலிய கை. கொடுமுடி – வளைந்த முடி. நெடுநீர் – ஆழமான நீர்; நெடுகிலும் பரந்துள்ள கடலும் ஆம்.

உள்ளுறை : அவர் சொல்லாகிய வலைப்பட்டது என் மனம்; அவர்தான் நம்மை மறக்கவும், இப்போது அதுதான் அதனைக் கடந்து வெளிப்பட்டு அவரை நோவதாயிற்று, இதனைக் 'கொடுமுடி யவ்வலை பரியப் போகிக் கடுமுரண் சுறாவழங்கும்' என்பதனாற் பெற வைத்தனர்.

விளக்கம் : "நாம் அவர் பிரிவாலே வருந்தி நலிவோம் என்று நினைத்தனராயின், அவர்தாம் இதற்குள் வந்து, நம் துயரைப் போக்கியிருப்பார் அல்லரே" எனப் புலம்புகின்றாள். 'துணையோடன்றித் தனித்து வாழ்தல் இல்லாத இயல்பினது' அன்றில். ஆதலின், 'துணைபுணர் அன்றில்' என்றனள். தன் காதலனினும் அதன் துணை சிறந்தது; சிறுபொழுதும் பிரிந்திருக்காத இயல்பினது என்று எண்ணி வருந்தியதாம்.

மேற்கோள் : 'மறைந்தவற் காண்டல்' என்னும் பொருளதிகாரச் சூத்திரத்து (111), 'காமஞ் சிறப்பினும்' என்பதற்கு, இச்செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

304. அவன் மார்பு!

பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது.

[(து-வி.) தலைவன், தலைவியை வரைந்து மணந்து கொள்வதற்கு நெடுநாளாயின்போதும் முயன்றிலன்; களவின்பத்தையே விரும்பி நாடியவனாக, நெடுங்காலம் வந்தும் துய்த்தும் பிரிந்து போவானாயினன்; அவன் வரும் வழியின் ஏதம் முதலியவை குறித்துத் தலைவி வருந்தினள். அத்தலைமகளைத் தோழி பலவாறாகத் தேற்றி வந்தனள்; எனினும், துயர நெஞ்சம் பொறுக்கலாற்றாத தலைவி, தன் துயரத்தின் நிலையை இவ்வாறு தோழிக்கு உரைக்கின்றனள்.]


வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச்
சாரல் வரைய கிளையுடன் குழீஇ
வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும்
நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன்
புணரிற் புணருமார் எழிலே பிரியின் 5
மணியிடை பொன்னின் மாமை சாயவென்
அணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனால்


அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே! 10

தெளிவுரை : தோழீ! நீண்ட மெல்லிய தினையின் மணமுள்ள கதிர்களைக் கிளிகள் நிறையத் தின்னும். தின்று விட்டு, மலைச் சாரலிலுள்ள பாறைப் பக்கத்தேயுள்ள தன் சுற்றத்தோடும் சென்று கூடியவாய்க், காற்றாலே ஒலியெழுப்புகின்ற கொம்பு வாத்தியத்தைப் போல், அவை ஒன்றை யொன்று கூவி அழைத்தபடியிருக்கும். நெருங்கிய பக்கமலைகளையுடைய, அத்தகைய நல்ல மலைநாட்டவன் நம் தலைவன்!

அவன் வந்து என்னைக் கூடினான் ஆயின், என்பால் நல்ல அழகும் உண்டாயிருக்கும். அவன் என்னைவிட்டுப் பிரிந்தானாயின், நீலமணியின் இடைப்பட்ட பொன்னைப்போல என் மேனியின் மாந்தளிர் நிறமானது அழிந்துபோகப் பசலையும் தோன்றி, என் அழகையும் நலத்தையும் கெடுக்கா நிற்கும். ஆதலினாலே, தண்ணிதாக மணம் கமழும் நறிய தாரினைக் கொண்ட வல்லமையாளனான நம் தலைவனின் மார்பானது, இசையறி விலங்காகிய அசுணமாவைக் கொல்பவரது கையைப் போலவே, இன்பமும் துன்பமும் ஒருசேரப் பெரிதும் மிகுதியாக விளைவித்தலை உடைத்தாயிருப்பது காண்!

கருத்து : "அவனே இன்பமும் துன்பமும் தருபவனாயின் என் செய்வது?" என்பதாம்.

சொற்பொருள் : வாரல் மென் தினைப் புலவுக்குரல் – நெடுமையும் மணமும் கொண்ட தினையின் மென்மையான கதிர்கள்; 'மென்மை' என்றது கதிர் முற்றாதிருக்கும் பாலேற்ற காய்ப்பருவ நிலையைக் குறித்தது; அதுதான் சில நாட்களில் முற்றுதலும், அதன்பின் தான் கிளிகடிதற்கு வாராதே இச்செறிப்புறுதலும் நிகழும் என்பதும் குறிப்பாற் கூறியதாம். கிளை – சுற்றம். வயிர் – ஊதுகொம்பு. விளிபயிற்றல் – ஒன்றையொன்று கூப்பிட்டுக் குரல் பயிற்றல். மணி – நீலமணி. மாமை – மாந்தளிரின் செம்மை நிறம்; கருஞ்சிவப்பான வண்ணம். அசுணம் – அசுணமா என்னும் இசையறி விலங்கு; இதனைப் பற்ற நினைப்பவர், இன்னிசையை இசைத்து, அது அதில் மயங்கித் தம்மருகே வந்தவுடன், கடும் இசையான பறையினைக் கொட்ட, அது அதனால் உயிர்துறக்க, அதனைக் கொள்வர் என்று சொல்லப்படும். அசுணத்திற்கு இன்பம் நல்கித் தொடர்ந்து உயிரையும் வாங்கும் இசைப்பாரின் கைபோன்றது தலைவனின் கொடிய மார்பு என்றதால், அவனைப் பிரியின், தான் படும் வேதனைப் பெருக்கத்தையும் உரைத்தனளாம். விறலோன் – வெற்றியாளன்; வல்லமையாளன்; 'காதலியை வதைக்கும் விறலோன்' என்று, மனம் வெதும்பிக் கூறியதும் ஆகும்.

உள்ளுறை : கிளி 'தினைக்கதிரைக் கிளையோடும் தின்று விட்டுச் சென்று, கூடி விளிபயிற்றும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவியைக் களவிற்கூடிய தலைவனும், தன் சுற்றத்தார்க்குச் சொல்லி, சான்றோர் குழுவினருடன் வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதாம்.

விளக்கம் : மணியிடை யிடப்பெற்ற பொன்னானது, நீலமணியின் ஒளியால் தன் இயல்பான நிறத்தில் நீலவண்ணங் கலப்புற்றுத் தோன்றுமாறுபோலத் தலைவியின் மேனியும் பசலையால் நிறங்கெட்டுத் தோன்றிற்று என்பதாம். மாமை மேனி நிறத்திற்கும்; அணிநலம் மெய்ப் பொலிவுக்கும் சுட்டப்பட்டன.

மேற்கோள் : 'அவனறிவாற்ற அறியும் ஆதலின்' என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தின், (சூ. 147) 'இன்பமும் இடும்பையுமாகிய விடத்தும்' என்பதற்கு, இச்செய்யுளை நக்கினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

305. நோயாகின்றோம் மகளே!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : (1) நற்றாய் தோழிக்குச் சொல்லியது; (2) மனை மருட்சியும் ஆம்.

[(து.வி.) (1) தன் மகள், அவள் காதலனுடன் உடன் போக்கில் வீட்டையகன்று சென்று விட்டதனாலே, தாயின் மனத்துயரம் அளவிறந்து பெரிதாகின்றது. அவள் தலைவியின் தோழியிடத்தே தன் அவலத்தைச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) பெற்ற தாய், தன் மனையிடத்தேயிருந்து மருண்டு சொல்லியதாகவும் கொள்ளப்படும்.]


வரியணி பந்தும் வாடிய வயலையும்
மயிலடி யன்ன மாக்குரல் நொச்சியும்


கடியுடை வியன்நகர்க் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்தலையும் தெறுவர
நோயா கின்றேம் மகளை! நின் தோழி 5
எரிசினந் தணிந்த இலையில் அம்சினை
வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி
உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கிலை வென்வேல் விடலையை
விலங்குமலை ஆரிடை நலியுங்கொல் எனவே! 10

தெளிவுரை : மகளே! வரிந்து வரிந்து கட்டப்பெற்ற அழகுடன் தோன்றும் பந்தும், வாடிக் கிடக்கும் வயலைக் கொடியும், மயிலது காலடிபோன்ற கரிய பூங்கொத்தையுடைய நொச்சியும், காவலையுடைய நம் அகன்ற மாளிகையிடத்தே கண்ணுக்கு அழகாகவே தோன்றுகின்றன. அவற்றோடு, அவளையில்லாதே தனியாகச் சென்று கண்ட குளிர்சோலையும், என்னைப் பெரிதும் வருத்தா நிற்கும். நின் தோழியானவள், கதிரவனின் எரிக்கும் சினமானது தணிந்திருக்கும் மாலைப்பொழுதிலே, இலைகளற்ற அழகிய மரக்கிளையில் அமர்ந்தபடியே, வரிகள் பொருந்திய முதுகுப்புறத்தையுடைய புறாக்கள், வருத்த மிகுதியாலே கூவுகின்ற தெளிந்த கூப்பீட்டொலியையும் கேட்பாள். கேட்டதும், "வெப்ப மிகுந்த பொழுதின்கண்ணே போரிடப் புகுந்தாற் போன்ற கண்களையுடையவளாக, இலங்கிய இலைவடிவான வெற்றிவேலை ஏந்தியபடியே தன்னோடும் உடன் வருகின்ற இளையோனாகிய தன் காதலனை உறுத்து நோக்கி, மலை குறுக்கிட்ட கடத்தற்கரியதான வழியிடையே அவனைத் துன்புறுத்துவாளோ?" என்றே, எனக்கு மிகவும் வருத்தம் உண்டாகின்றது காண்!

கருத்து : "அவள்தான் அவனோடு இனிதாக வழியைக் கடந்து சென்று மணம்பெற்று நீடு வாழ்வாளாக" என்பதாம்.

சொற்பொருள் : வரியணி பந்து – வரிந்து வரிந்து கட்டிய அழகிய பந்து; இது அவள் தோழியருடன் பந்து ஆடியிருக்கும் காட்சி நினைவைத் தாய்க்கு உண்டாக்கும். வயலை – வயலைக் கொடி; இது வாடிக்கிடப்பது அதற்கு நீர்விடும் தலைவி அகன்று போயினாள் என்பதை நினைப்பூட்டும். மாக்குரல் நொச்சி –கரியபூங் கொத்துக்களையுடைய நொச்சி; இது கருநொச்சி; இதன் நிழலிலே அவள் சிற்றில் இழைத்து விளையாடியிருந்ததை இது நினைவுபடுத்தும். தண்தலை – குளிர்ந்தவிடமான சோலைப் பகுதி; இது அவள் தோழியரோடு கூடியாடிச் சோலை விளையாட்டயர்தலை நினைவுபடுத்தும். 'தமியேன் கண்ட கண் தலைத்தலை தெறுவர' எனவும் பாடபேதம் கொள்வர். தன் மகள் பழகிய இடங்களைப் பார்க்கப் பார்க்கத்தாயின் மனத்தே அவளது பிரிவின் நினைவு மேலெழுதலால், அவள் கொண்ட வருத்தம் மிகுதியாகின்றது. எரிசினம் – எரித்தலாகிய சினம்; சினம் என்றது அனைத்தையும் வெங்கதிர்களால் வாட்டிவருத்தலால். புலம்பு – தனிமைத் துயரம். 'புலம்பு கொள் தெள்விளி' என்றது 'புறவுப் பேடும் தன் துணையைக் காணாதாய்ப் புலம்பியழைக்கும் கூப்பீட்டுக் குரல்' என்றதாம். அக்குரலைக் கேட்பவள் ஆணின் பிரிந்துபோகும் கொடுங்குணத்தைக் கருதினளாகத் தன்னுடன் வருவானையும் ஐயுற்றுச் சினந்து நோக்குவாளோ என்றதாம். அது நேராதிருக்குமாக என்று நினைக்கிறது தாய்மை நெஞ்சம்.

விளக்கம் : நொச்சி மனைக்கண் வேலியிடத்தே வைத்து வளர்ப்பது; அதன் இலைகள் மயிலடிபோலத் தோன்றும் என்பது 'மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி' எனவரும் நற்றிணையாலும் (115) அறியப்படும். இது ஐவிரல் நொச்சி எனப்படும். இதன் நீழலிலிருந்து பெண்கள் சிற்றில் இழைத்து விளையாடுதலை, 'கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த, வண்டலும் காண்டிரோ கண்ணுடையீரே' (அகம். 275) என்பதனால் அறியலாம். மனையிடத்தே மகளைக் காணாது மருண்டு வருந்தும் தாய், அவள் ஒத்த பருவத்து உடன் தோழியிடம் சொல்லிப் புலம்புகிறாள். 'நலியுங் கொல்' என்றது, 'அத்தகு வெம்மை வழியில் தன்னை அழைத்து வந்த கொடுமையாலே புண்பட்டு அவனை வருத்துவாளோ!' என்று கருதிக் கூறியதாம். அவனோடு சென்றவள், அவன் மனம் உவக்க நடந்து, அவனை மணந்து, இனிது இல்லறமாற்றி வாழ்தல் வேண்டும் என்றும், அவர்களுக்குள் மனவேறுபாடு ஏதும் ஏற்படலாகாது என்றும் கவலையடைகின்றது பெற்ற தாயின் தாய்மை நெஞ்சம்!

மேற்கோள் : 'தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி' என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தின் (சூ. 36), 'தோழி தேஎத்தும்' என்னும் பகுதிக்கு, இதனை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, 'இது தோழியை வெகுண்டு கூறுவது' என்று உரைப்பர்.

306. எக்காலத்தே வருமோ?

பாடியவர் : உரோடகத்துக் கந்தரத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) புனமடிவு உரைத்துச் செறிப்பறிவுறுத்தியது; (2) சிறைப்புறமும் ஆம்.

[(து-வி.) (1) "தினை கொய்வதற்குத் தொடங்கினர்; ஆதலின் இனிக் களவு உறவும் வாய்த்தலரிது; தலைவியும் இற்செறிக்கப் படுவாள்" என்று கூறுவதன்மூலம், அவளை அவன் விரைந்து வரைந்துவந்து மணந்துகொள்ளல் வேண்டுமென வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியது என்பதும் ஆம்; அப்போதும் வரைவுவேட்டுக் கூறியதாகவே கருதுதல் வேண்டும்.]


தந்தை வித்திய மென்தினை பைபயச்
சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ
குளிர்படு கையள் கொடிச்சி செல்கென
நல்ல வினிய கூறி மெல்லக்
கொயல்தொடங் கினரே கானவர் கொடுங்குரல் 5
குலவுப்பொறை யிறுத்த கோல்தலை இருவி
விழவொழி வியன்களங் கடுப்பத் தெறுவரப்
பைதல் ஒருநிலை காண வைகல்
யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல்
செறிதோட் டெல்வளைக் குறுமகள் 10
சிறுபுனத் தல்கிய பெரும்புற நிலையே!

தெளிவுரை : நின் தந்தை விதைத்த மெல்லிய தினைப் பயிரைக் காக்கும் பொருட்டாகப் பையச் சென்றனையாய், தினைக் கதிர்களைக் கவரவரும் கிளிகளை ஒப்புதலாகிய அச்செயல்தான், இனியும் எவ்வாறு வாய்க்குமோ? 'குளிர்' என்னும் கிளிகடி கருவியை ஏந்திய கையினளாகத் தோன்றும் கொடிச்சியே! 'இனி நீயும் நின் மனைக்குப் போவாயாக' என்று, நல்ல இனிய சொற்களைக் கானவரும் கூறினர். அவர், மெல்லத் தினையையும் கொய்தலைத் தொடங்கினர். புனமும், வளைந்த கதிர்களாகிய சுமையைத் தாங்கிய திரண்ட தலையையுடைய தினைத்தாள்கள் தனித்து நிற்பதாயிற்று. அதுதான் விழா நிகழ்ந்து கழிந்த, அகன்ற விழாக்களத்தைப் போலப் பொலி விழந்தும் தோன்றும், வருத்தம் பொருந்திய அக்காட்சியைக் காண்பதற்கு அமைந்த காலையில், தீவிய சொல்லும் செறிந்த தொடியும் விளங்குகின்ற வளையும் கொண்ட இளையோளாகிய தலைமகள், சிறிய தினைப் புனத்தேயுள்ள பரணிடத்தே நின்று, காவல் காத்திருக்கும் நிலைமையைக் காணும் பொருட்டாகத் தலைவன் வருதல் தான் இனி எவ்வாறு பொருந்துமோ?

கருத்து : 'இனிக் களவுறவு வாயாது; கடிமணமே செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : குளிர் – குளிர் என்னும் கிளிகடி கருவி; தென்னை அல்லது பனை மட்டையில் செய்வது இது. கொடிச்சி –குறவர் மகள்; கொடி போன்றவள். கொடுங்குரல் – வளைந்த தினைக்கதிர்; கொழுங்குரல் எனவும் பாடம். பொறை – சுமை, கோல்தலை – கோலின் தலைப்பகுதி; தண்டின் மேற்புறம். கடுப்ப–போல. தெறுவர–பொலிவழிந்து வருத்தமுண்டாக்க, தோன்றும் எனவும் பாடம். தீஞ்சொல் – இனிக்கும் பேச்சு. 'செறிதோட்டு', செறிதொடி என்றும் பாடம். எல்வளை–ஒளியுள்ள வளைகள். குறு மகள் – இளமகள். சிறுபுனம் – சிறிதான தினைப்புனம். புறநிலை – புறம் காக்கும் காவல் நிலை. பைதல் – துன்பம்.

விளக்கம் : புனத்தே தினைக்கதிர் கொய்யப் பெற்றது. ஆதலின், இனிப் பகற்குறி வாயாது என்பதும், 'கொடிச்சி செல்க' என்றதால் இனி இற்செறிப்பு நிகழ்தல் உறுதி என்பதும் உணர்த்தி, இனி இவளை வரைந்து மணந்தன்றி அடைதல் வாயாதுகாண்; அதன்பால் மனஞ்செலுத்துக என்றனள். தினை கொய்யப் பெற்ற புனமானது விழவொழி வியன்களம் போலத் தோன்றித் துன்பந்தரும் என்றது, அதன் முன்னைச் செழுமையையும், அதனிடத்தே அவளும் அவனுமாகக் கூடி மகிழ்ந்த இன்ப நினைவுகளையும் நினைவில் எழச் செய்து, அது தான் இனி வாயாமையினையும் உணர்த்தி, மனத்தை வருத்தும் என்றதாம்.

'தந்தை வித்திய' என்றது, புனங் கொய்தலைத் தள்ளிப் போடுவதும் போடாததும் தந்தையின் உரிமையன்றி மகளுரிமை அன்றென்பதற்காகலாம். பொலிவழிந்துபோய் புனத்தைப் போலவே, நின்னை அடையமுடியாத பிரிவுப் பெருநோயினாலே தலைவியும் பொலிவிழந்து வாடி வருந்துவள்; அவளைக் காத்தற்குரிய கடமையை ஆதலின், இனியும் களவையே நாடாது கடிமணம் பெற்றுப் பிரியாது வாழ்வதனைக் கருதுக என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

307. அவன் துயர் காண்போம்!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

[(து-வி.) தலைமகன் குறித்தபடி, குறித்த காலத்தில் வராததால், தலைவியின் பிரிவுத் துயரம் கரைகடந்து பெரிதாகின்றது. 'அவன் சொற்பிழையானாய் வருவான்' என்று வற்புறுத்திக் கூறுகின்றாள் தோழி. அவள், அதனை மிகவும் நயமாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
பெயர்பட வியங்கிய இளையரும் ஒலிப்பர்
கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த
திதலை யல்குல் நலம்பா ராட்டிய
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் 5
இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மாவரை மறைகம் வம்மதி பானாள்
பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன்
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே! 10

தெளிவுரை : தோழீ! விருப்பந்தரும் செலவைக்கொண்ட குதிரை பூட்டிய, நெடிய தேரினது மணியும் அதோ ஒலிக்கின்றது. பெயர்ந்துபட நடக்கின்ற ஏவல் இளைஞரும் அதோ ஆரவாரிக்கின்றனர். கடலாட்டு விழாவினை முன்னிட்டுப் பெரிய அணிகளாலே பொலிவுற்றிருக்கின்ற, திதலை படர்ந்த நின் அல்குலது நலத்தைப் பாராட்டுதலின் பொருட்டாக, நீண்ட மணல்பரந்த நெய்தல்நிலத் தலைவனும் இன்னே வருவான் கண்டாய்! அவன் இதுகாறும் வாராதானாகக் காலந்தாழ்த்து நம்மையும் வருத்தியவனாதலின்—

இந்நடுயாமத்தே—மலர் விரிந்த கானற் சோலைக் கண்ணேயுள்ள நாம், அவனைக் களவிலே சேர்கின்ற குறியிடத்திற்கு அவனும் வந்து, மெல்லிய பூங்கொத்துக்களையுடைய நறும் பொழிலினிடத்தே நம்மைக் காணாதவனாகி, அவன் படுகின்ற அல்லல் மிகுந்த அரிய அவலத்தையும்—

நம் மனையருகே வளைந்து படர்ந்துள்ள குடமுழாப்போலும் அடியையுடைய புன்னையினது, கரிய அடிமரத்தின் பின்னாக மறைந்திருந்து, நாமும் சிறிதுபோது காணலாம்—வருவாயாக!

கருத்து : 'அவன் தவறாதே வருவான்' என்று, தலைவியின் துயரத்தை மாற்ற முயல்கின்றாள் தோழி என்பதாம்.

சொற்பொருள் : கவர்பரி – விருப்பந்தரும் செலவுடைய குதிரை; 'கவர்வு விருப்பாகும்' என்பது தொல்காப்பியம். நெடுந்தேர் – நெடிதான தேர்; இது தலைவனது குடிப் பெருமை சுட்டியதாகும். பெயர்பட – பெயர்ந்து போவதற்கு. இளையர் – ஏவலிளைஞர்; அன்றித் தேரின் வரவைக் கண்டு வழிவிட்டு ஒதுங்கிப்போகும் பரதவர் இளையர் என்றும் கருதலாம். கடலாடு விழாவிடை – கடலாட்டுப் பூணும் விழாவினிடத்தே; 'கடலாடு வியலிடை' எனவும் பாடம்; வியலிடை – அகன்ற கடற்றுறையிடம். பேரணி – பெரிதான அழகு செய்யும் அணிவகைகள்; சிறப்பான அலங்காரங்கள். திதலை–தேமற் புள்ளிகள். வார்மணல் – நெடிதாகப் பரந்துகிடக்கும் கடற்கரை மணற்ப