நல்ல தோழிதான்/பரிபூரண ஆனந்தர்

விக்கிமூலம் இலிருந்து


பரிபூரண ஆனந்தர்




பெயரும் குண இயல்புகளும் அதிசயமாக ஒத்துப் போகிற அபூர்வப் பிறவிகளில் பரிபூரணானந்தம் என்பவரும் ஒருவராவார்.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நம்ம பிள்ளையாண்டான் இப்படி இப்படி நடந்து கொள்வான் என்பதை முன்கூட்டியே 'தீர்க்க தரிசனம்' ஆக உணர்ந்து, பையனுக்கு அந்தப் பெயரை குடும்பத்தின் பெரியவர்கள் இட்டார்களா? அல்லது, நமக்கு இந்தப் பெயர் இருப்பதால் நாம் பூரணமாக எதையும் செய்ய வேண்டும், எதிலும் பரிபூரணம் காண்பதே நமது வாழ்க்கை தர்மமாக இருக்கவேண்டும் என்று பையனே தீர்மானித்து, அப்படி ஒரு கொள்கையைக் கைக் கொண்டு வளர்ந்தானா? இது தீர்மானிக்க முடியாத ஒரு விஷயம்.

எப்படியோ, சின்ன வயசிலிருந்தே, 'செய்வன திருந்தச் செய்' என்பது மட்டுமல்ல; எதையும் முழுமையாக பெர்பெக்ட் ஆகச் செய்ய வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தான் அவன்.

பரிபூரணானந்தன் என்று இலக்கணப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது என்று அவன் பரிபூரண ஆனந்தன் என்றே எழுதியும் சொல்லியும் வந்தான். அவரவர் பெயரைச் சுருக்கி வைத்துக் கொள்வது ஒரு நாகரிகமாக- ஸ்டைலாக. பாஷன் ஆகக் கருதப்பட்டு வந்த காலத்திலும் சூழ்நிலையிலும் வசித்துக்  கொண்டிருந்த போதிலும், அவன் பி. ஆனந்தன் என்றோ, பி. ஏ. தன் என்றோ தன்னுடைய பெயரைச் சுருக்கிக் கொள்ள ஆசைப் பட்டானில்லை.

ஆனாலும், மற்றவர்கள் அவனை அவரவர் இஷ்டம் போலவும் சவுகரியம் போலவும் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். 'பரி' என்று அழைத்தார்கள் பலர். "பூரணம் என்றார்கள் சிலர். 'ஆனந்த்' என்றும், 'ஆனந்தன்' என்றும், 'ஆனந்தா' என்றும் கூப்பிட்டார்கள் அநேகர். ஒருவன் மட்டும் பரிபூரண ஆனந்தன் என்று வாய் நிறைய உச்சரிப்பது வழக்கம். அவனையே தன் அருமை நண்பனாக மதித்தான் ஆனந்தன்.

படிக்கிற காலத்திலேயே, அவன் அனைத்துக் காரியங்களையும் முழுமையாகச் செய்வதில், சுத்தமாகவும் ஒழுங்காகவும். சரியாகவும் செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டினான். இந்தப் பழக்கம் பிற் காலத்திலும் நிலை பெற்று வளர்ந்தது.

"எடுத்த காரியம் எதுவானாலும், அதை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்கணும், இது என் 'பிரின்சிபிள்' என்று அவன் அடிக்கடி சொல்வது வழக்கம், சொல்கிறபடி செய்வது அவனுடைய பழக்கம்.

வேலை பார்க்கிற இடத்தில், பலரும் கடியாரத்தைப் பார்த்தபடி இருப்பார்கள், ஐந்து மணி ஆகி விட்டதா என்று அடிக்கடி உற்று நோக்குவார்கள். ஐந்து ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கிற போதே, செய்த அலுவல்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, "அவசரம் ஒண்ணும் இல்லே. நாளைக்குச் செய்யலாம்: என்று மேசையின் இழுப்பறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு, கிளம்புவதற்கு ரெடி ஆகி விடுவார்கள். டாண் என்று ஐந்துக்கெல்லாம் மிடுக்காக வெளியே நடப்பார்கள். ஆனால், பரிபூரண ஆனந்தன் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டான். அன்றைய அலுவலைப் பூரணமாக முடித்த பின்னரே புறப்படுவான். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமானாலும் பரவால்லே எடுத்த வேலையை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்க வேணும் என்பான்,

மற்றவர்களும் அவ்விதம் செய்யவேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவர்களில் யாரும் அப்படிச் செய்ய முன்வரவில்லை; அவனை அப்பாவி, ‘பைத்தியாரன்' (பைத்தியக்காரன்) என்றும் கருதினார்கள்,

"இப்ப இப்படித்தான் இருப்பாரு. கல்யாணம் ஆகி விட்டால் இவரும் வழிக்கு வந்து விடுவாரு, இவருடைய சுத்தம் ஒழுங்கு. பூரண பெர்பெக்ட்தனம் எல்லாம் வீட்டுக்கு வந்து சேருகிற அம்மாவிடம் பலிக்குமா என்ன? பெண்கள் பெரும்பாலும் அவரவர் இஷ்டம் போல் மெத்தனமா, சோம்பேறித்தனமா, பெர்டக்ட் தன்மை எல்லாம் பார்க்காமல்தான் காரியங்கள் பண்றாங்க, பரிபூரண ஆனந்தருக்கு ஒரு பரிபூரண ஆனந்தியா வரப்போறா பார்ப்போம்!” என்று நண்பர் கள் கிண்டல் செய்வதும் சகஜமாகி விட்டது.

அது அவனை யோசிக்க வைத்தது. கவனிக்கச் செய்தது. பெண்களின் போக்குகளை, இயல்புகளை, பேச்சுகளை ஸ்டடி பண்ணும்படி தூண்டியது. இறுதியாக ஒரு முடிவுக்கு வரும்படி பண்ணி விட்டது.

'நமக்கு ஒத்து வரக் கூடிய பெண் கிடைக்கமாட்டாள். நம்மை அவள் வழிக்கு இழுத்து விடக் கூடியவளாகவே பெண் இருப்பாள். நம்முடைய பிரின்ஸியின் கொள்கை, சுபாவம் எல்லாம் எவளோ ஒருத்தியினால், ஒதுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, நம்மிடமிருந்து அகற்றப் பட்டு சேச்சே., அது சரிப்படாது. ஆகவே நமக்கு நமது பூரண ஆனந்த வாழ்க்கைதான் முக்கியமே தவிர, வாழ்க்கைத் துணை முக்கியம் இல்லை. துணைவி இல்லாமலே நம்முடைய வாழ்க்கை பெர்பெக்ட் ஆக இயங்கும்.

அவனுடைய சிந்தனை காட்டிய வழி இது. அதன் படியே நடந்தான் அவன். அதற்காக அவன் வருத்தப்பட நேர்ந்ததும் இல்லை.

அதிகாலையில் நாலரை மணிக்கு எழுந்தான். குளிர்ந்த நீரில் குளித்தான். ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரம் உலா போவான். ஒரு அம்மாள் பதிவாகச் சில பேருக்கு சமைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திய தனிச் சாப்பாட்டு விடுதியில் நேரம் தவறாது சாப்பிட்டான். வேலைகளை ஒழுங்காகக் கவனித்தான். ஓய்வு நேரத்தில் பத்திரிக்கைகள், புத்தகங்கள் படித்தான். சில நாட்களில் நண்பர்களோடு சுற்றுலா போய் வந்தான். சினிமா பார்த்தான். சந்தோஷமாகத்தான் இருந்தான்.

காலம் ஓடியது. பரிபூரண ஆனந்தம் பெரியவராகி, வேலையிலிருந்து ஓய்வு பெற்று, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்,

தனி உணவு விடுதி நடத்திய அம்மாள் இறந்து விட்ட பிறகு, ஆனந்தர் தனிப்பட்ட 'மெஸ்’களில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். நாளடைவில் மத்தியானம் ஒரு வேளை மட்டுமே சாப்பாடு என்று பழக்கப்படுத்திக் கொண்டார். அவருடைய உணவுப் பழக்கம் வசதியாக அமைந்து விட்டது.

காலையில் காப்பியும் பிஸ்கட்டுகளும். காப்பியை அவரே தயாரித்துக் கொண்டார். மதிய உணவு ஒரு ஒட்டலில் கும்பல் சாப்பிடுவதற்கு முன்னரே போய் சாப்பிட்டு வந்து விடுவார். மாலையில் காப்பி மட்டும். இரவில் பால், ரொட்டி, பழங்கள். ஆரோக்யமாக இருந்தார் அவர். இருந்தாலும், மரணம் பற்றிய நினைப்பு ஆனந்தரின் உள்ளத்தில் நிலைத்து நின்றது. தனது மரணத்துக்கும் முன்னேற்பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.

தான் இறந்ததற்குப் பிறகு தனது உடல் முழுமையாக, அப்படியே இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆகவே தன் சடலத்தை சமாதியில் பத்திரமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்தார்.

தன் வீட்டின் பின்புறத் தோட்டத்தில், நல்ல முறையில் சமாதிக் குழி தோண்டி, சிமிண்டினால் பூசி வைத்தார். உயிரோடு இருக்கிற போதே தனக்கான சமாதிக் குழியையும், சுற்றுப்புறக் கட்டுமான வேலைகளையும் சீராகவும் சுத்தமாகவும் அமைத்து, தானே கண்டு மகிழ முடிந்ததில் ஆனந்தருக்கு ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது.

இதர செலவுகளுக்கத் தேவைப்படக் கூடிய பணத் தையும் ஒரு பாங்கில் போட்டு வைத்தார் அவர். இறுதிச் சடங்குகள் எப்படி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, விளக்கமாகவும் எழுதி வைத்தார். முக்கியமானவர்களிடம் இவையற்றிச் சொல்லி ஏற்பாடும் செய்தார்.

தன்னுடைய வாழ்க்கையில் முழுமையான திருப்தியோடு நாட்களைக் கழிக்கலானார் ஆனந்தர்.

வாழ்க்கை விளையாட்டுப் புத்தி உடையது. அல்லது வாழ்க்கையை இயக்குகிற சக்தி விளையாட்டுத்தனம் கொண்டது என்று சொல்லலாம். அது பல பேரோடு குரூரமாக-ஒரு வக்கிரத் தன்மையோடு. விளையாடி விடுகிறது.

பரிபூரண ஆனந்தர் விஷயத்திலும் அப்படித்தான் அது நடந்து கொண்டது.

அறுபத்து நான்காவது பிறந்த நாளன்று ஆனந்தர் மகிழ்ச்சியோடு காலை உலா போய் கொண்டிருந்தார். நடை மேடை மீதுதான் போனார்.

ஆனாலும், வேகமாக வந்த லாரி ஒன்று தடம் தவறி தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தின் மீது ஏறி ஆனந்தரைத் தாக்கியது. அவரைக் கீழே தள்ளி நசுக்கி, ஒரு மரத்தின்மீது மோதிவிட்டு நின்றது.

உரிய முறைப்படி காரியங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனந்தர் உடல் சிதைந்து உருக்குலைந்து போயிருந்தது.

இவர்தான் பரிபூரண ஆனந்தர் என்று அடையாளம் கூடக் காண இயலாத விதத்தில் அவர் முகம் துவையலாகி விட்டது! பாவம்!