நான்மணிக்கடிகை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை


கடவுள் வாழ்த்து[தொகு]

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்

கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்

புதுமலர் ஒக்கும் நிறம்.1


2[தொகு]

படியை மடியகத் திட்டான் அடியினால்

முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து

ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்

அருமை யழித்த மகன். 2

3[தொகு]

எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து. 3

4[தொகு]

பறைபட வாழா அசுணமா உள்ளங்

குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து

நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்

சொற்பட வாழாதாஞ் சால்பு. 4

5[தொகு]

மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து

ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப

கேளிரான் ஆய பயன். 5

6[தொகு]

கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்

ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி. 6

7[தொகு]

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி

சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று

அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்

பொருளிற் பிறந்து விடும். 7

8[தொகு]

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய

அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்

கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்

போற்றாதார் மன்னர்ச் செலவு. 8

9[தொகு]

கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு

உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்

செய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில். 9

10[தொகு]

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றா கெடும். 10

11[தொகு]

நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்

குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்

தான்செல் உலகத் தறம். 11

12[தொகு]

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர

மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி

இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை

நயத்திற் பிணித்து விடல். 12

13[தொகு]

கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த

நன்றியை நன்றாக் கொளல்வேண்டும் - என்றும்

விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்

ஆக்கும் சிதைக்கும் வினை. 13

14[தொகு]

பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு

கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை ஊடி

முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்

தவத்தால் தருகுவர் நோய். 14

15[தொகு]

பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற

பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து

ஆர்தலின்நன்று பசித்தல் பசைந்தாரின்

தீர்தலின் தீப்புகுதல் நன்று. 15

16[தொகு]

வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்

இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்

கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்

இன்மைக் குழியுள் விரைந்து. 16

17[தொகு]

இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து

மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு

செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது

வேண்டின் வெகுளி விடல். 17

18[தொகு]

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்

பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்

தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்

கற்றான் கடந்து விடும். 18

19[தொகு]

பொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாக

மூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்

மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்

தகுதி இறுவாய்த்து உயிர். 19

20[தொகு]

மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்

வினைக்காக்கம் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்

நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்

கேளிர் ஒரீஇ விடல். 20

21[தொகு]

பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்

கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய

மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்

பாடல் அதிர்ந்து விடும். 21

22[தொகு]

மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்

திசைக்குப்பாழ் நட்டோ ரை இன்மை இருந்த

அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்

கற்றறிவு இல்லா உடம்பு. 22

23[தொகு]

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த

கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்

கூடார்கண் கூடி விடின். 23

24[தொகு]

புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்

பேணாது செய்வது பேதைமை - காணாக்

குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த

கண்ணாரச் செய்வது கற்பு. 24

25[தொகு]

மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும்

அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும்

நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்

உடனுறையும் காலமும் இல். 25

26[தொகு]

நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த

அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட

தேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்

உள்ளானால் உள்ளப் படும். 26

27[தொகு]

அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த

எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்

கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி

நட்டார்கண் விட்ட வினை. 27

28[தொகு]

அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்

விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்

கொலைப்பாலுங் குற்றமே யாம். 28

29[தொகு]

கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்

பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்

துளிநோக்கி வாழும் உலகம் உலகின்

விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. 29

30[தொகு]

கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்

புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்

தத்துவ மான நெறிபடரும் அந்நெறி

இப்பால் உலகின் இசைநிறீஇ

உப்பால் உயர்ந்த உலகம் புகும். 30

31[தொகு]

குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்

பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்

செறிவுழி நிற்பது காமம் தனக்கொன்று

உறுவுழி நிற்பது அறிவு. 31

32[தொகு]

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்

கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்

இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத

வன்கையின் வன்பாட்டது இல். 32

33[தொகு]

புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த

நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்

முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்

இன்னாவித் தாகி விடும். 33

34[தொகு]

பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு

அணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின்

புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்

வல்லென்ற நெஞ்சத் தவர். 34

35[தொகு]

அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும்

தாயின் சிறந்த தமரில்லை யாதும்

வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின்

இளமையோ டொப்பதூஉம் இல். 35

36[தொகு]

இரும்பின் இரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின்

நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்

அரிய அரியவற்றாற் கொள்ப பெரிய

பெரியரான் எய்தப் படும். 36

37[தொகு]

மறக்களி மன்னர்முன் தோன்றும் சிறந்த

அறக்களி இல்லாதார்க்கு ஈயமுன் தோன்றும்

வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி

ஊரில் பிளிற்றி விடும். 37

38[தொகு]

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்

நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்ய

முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்

வழங்கத் தளிர்க்குமாம் மேல். 38

39[தொகு]

நகைஇனிது நட்டார் நடுவண் பொருளின்

தொகைஇனிது தொட்டு வழங்கின் - வகையுடைப்

பெண்இனிது பேணி வழிபடின் பண்இனிது

பாடல் உணர்வார் அகத்து. 39

40[தொகு]

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்

இரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் பரப்பமைந்த

தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்

செய்யாமை செல்சா ருயிர்க்கு. 40

41[தொகு]

கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்

கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட

இனியவே செய்ப அமைந்தார் முனியாதார்

முன்னிய செய்யுந் திரு. 41

42[தொகு]

திருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக்

கூற்றமுங் கூறுவ செய்துண்ணாது - ஆற்ற

மறைக்க மறையாதாங் காமம் முறையும்

இறைவகையான் நின்று விடும். 42

43[தொகு]

பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்

நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்

உடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்

கண்டனவும் காணாக் கெடும். 43

44[தொகு]

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த

வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய்

மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி

மன்னர்சீர் வாடி விடும். 44

45[தொகு]

ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்

காதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க

தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்

முந்துதான் செய்த வினை. 45

46[தொகு]

பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட

ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா

நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் நலம்மாறின்

நண்பினார் நண்பு கெடும். 46

47[தொகு]

நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற

விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்

பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்

ஊடல் உணரா ரகத்து. 47

48[தொகு]

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய

மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்

அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்

முகம்போல முன்னுரைப்ப தில். 48

49[தொகு]

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்

தவமிலார் இல்வழி இல்லை தவமும்

அரச னிலாவழி இல்லை அரசனும்

இல்வாழ்வார் இல்வழி யில். 49

50[தொகு]

போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்

தாதினான் நந்துஞ் கரும்பெல்லாந் - தீதில்

வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்

நனையினான் நந்தும் நறா. 50

51[தொகு]

சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்

பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்

வரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்

றில்லென்றல் யார்க்கும் அரிது. 51

52[தொகு]

இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்

உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா

முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்

தன்னடைந்த சேனை சுடும். 52

53[தொகு]

எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை

உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து

சேர்தற் பொருள தறநெறி பன்னூலும்

தேர்தற் பொருள பொருள். 53

54[தொகு]

யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்

மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின்

வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோ டொப்ப உள. 54

55[தொகு]

எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;

ஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு

அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்

செறிவுடையான் சேனா பதி. 55

56[தொகு]

யானை யுடையார் கதன்உவப்பர் மன்னர்

கடும்பரிமாக் காதலித் தூர்வர் - கொடுங்குழை

நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை

அல்லார் உவப்பது கேடு. 56

57[தொகு]

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்

துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்

ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ

டெண்ணக் கடவுளு மில். 57

58[தொகு]

கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்

செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென

உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்

புற்றன்னர் புல்லறிவி னார். 58

59[தொகு]

மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்

பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்

துறப்பார் துறக்கத் தவர். 59

60[தொகு]

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்

என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர். 60

61[தொகு]

இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்

முனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்

தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்

இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா ஒழுக்கத் தவன். 61

62[தொகு]

ஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன்

கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்

பாடறியா தானை இரவு. 62

63[தொகு]

நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து

வழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து

கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி

நன்றூட்ட நந்தும் விருந்து. 63

64[தொகு]

பழியின்மை மக்களால் காண்க வொருவன்

கெழியின்மை கேட்டா லறிக பொருளின்

நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியால்

போற்றாதார் போற்றப் படும். 64

65[தொகு]

கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின்

உருவின்றி மாண்ட வுளவா - மொருவழி

நாட்டுள்ளும் நல்ல பதியுள பாட்டுள்ளும்

பாடெய்தும் பாட லுள. 65

66[தொகு]

திரியழல் காணில் தொழுப விறகின்

எறியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமைபா ராட்டும் உலகு. 66

67[தொகு]

கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்

முளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்

ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்

துன்புறுவாள் ஆகின் கெடும். 67

68[தொகு]

ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்

புல்லினான் இன்புறூங்உங் காலேயம் - நெல்லின்

அரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்

வரிசையான் இன்புறூஉம் மேல். 68

69[தொகு]

பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்

முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு - என்னும்

அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்

அவாவிலார் செய்யும் வினை. 69

70[தொகு]

கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்

வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து

வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்

நல்லர் சிதையா தவர். 70

71[தொகு]

மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்

முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்

புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு

வானம் உரைத்து விடும். 71

72[தொகு]

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்

மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்

ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்

சோற்றான்வீ றெய்தும் குடி. 72

73[தொகு]

ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன்

ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட

குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்

வளத்தனைய வாழ்வார் வழக்கு. 73

74[தொகு]

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்

நாழிகை யானே நடந்தன - தாழியாத்

தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்

வெஞ்சொலா லின்புறு வார். 74

75[தொகு]

கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்

ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்

பொய்யாவித் தாகி விடும். 75

76[தொகு]

தேவ ரன்னர் புலவரும் தேவர்

தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்

கற்றாரைக் காத லவர். 76

77[தொகு]

தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்

சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்

விடுகென்ற போழ்தே விடுக உரியான்

தருகெனின் தாயம் வகுத்து. 77

78[தொகு]

நாக்கி னறிப இனியதை மூக்கினான்

மோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்

கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து

எண்ணினான் எண்ணப் படும். 78

79[தொகு]

சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்

தாவாத இல்லை வலிகளும் - மூவா

இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்

கேடுஇன்றிச் சென்றாரும் இல். 79

80[தொகு]

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற

நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்

ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்

மகிழான் அறிப நறா. 80

81[தொகு]

நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை

விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்

படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ

மாறுள் நிறுக்கும் துணிபு. 81

82[தொகு]

கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்

உயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்

கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்

வெகுளி கெடுத்து விடல். 82

83[தொகு]

நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்

குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்

வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்

பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. 83

84[தொகு]

நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்

செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்

கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்

துடையார்க்கும் எவ்வூரு மூர். 84

85[தொகு]

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்

மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள். 85

86[தொகு]

நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்

பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்

நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்

ஆடலாற் பாடு பெறும். 86

87[தொகு]

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்

நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்

நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்

கேளிர் ஒரீஇ விடல். 87

88[தொகு]

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்

தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன

நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்

கொள்ளாமை வேண்டும் பகை. 88

89[தொகு]

பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்

தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு

அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக

செல்லா இடத்துச் சினம். 89

90[தொகு]

மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்

பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய

நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த

தூணின்கண் நிற்கும் களிறு. 90

91[தொகு]

மறையறிய அந்தண் புலவர் முறையொடு

வென்றி அறிப அரசர்கள் - என்றும்

வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி

அணங்கல் வணங்கின்று பெண். 91

92[தொகு]

பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்

பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினும்

சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்

கொன்றான்மேல் நிற்குங் கொலை. ... 92

93[தொகு]

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்

இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற

மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்

கயம்பெருகின் பாவம் பெரிது. 93

94[தொகு]

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்

தமரல்லார் கையகத் தூண். 94

95[தொகு]

எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்

கல்லா வளர விடல்தீது - நல்லார்

நலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது

கொள்கை யழிந்தக் கடை. 95

96[தொகு]

ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து

போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்

கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்

உண்ணாட்டம் இன்மையும் இல். 96

97[தொகு]

கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை

புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை

பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை

கள்வன் அறிந்து விடும். 97

98[தொகு]

வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்

சாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய

பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்

கீழ்கள்வாய்த் தோன்றி விடும். 98

99[தொகு]

வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்

சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்

கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்

பேதையார் முன்னர்ப் படின். 99

100[தொகு]

மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம்

பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்

பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை

மாசுடைமை காட்டி விடும். 100

101[தொகு]

எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை

புண்ணெக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய

யாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்

பண்புடையாள் இல்லா மனை. 101

102[தொகு]

ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து

வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்

தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்

உரன்சிறி தாயின் பகை. 102

103[தொகு]

வைததனால் ஆகும் வசையே வணக்கமது

செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த

பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம். 103

104[தொகு]

ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவ னறியா தவனும் ஒருவன்

குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்

கணன்அடங்கக் கற்றானும் இல். 104

105[தொகு]

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய

காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஓதிற் புகழ்சால் உணர்வு. 105

106[தொகு]

இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா

வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்

நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்

வீவிலா வீடாய் விடும். 106


நான்மணிக்கடிகை முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=நான்மணிக்கடிகை&oldid=487161" இலிருந்து மீள்விக்கப்பட்டது