நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திருமதி. P. பாலாமணி அம்மாள்

விக்கிமூலம் இலிருந்து

திருமதி. P. பாலாமணி அம்மாள்

இவர்கள் கணிகை குலத்தவர்கள், சிறு வயதிலேயே தன் ஜாதித் தொழிலுடன் நாடகமாடுவதற்கு ஆரம்பித்தார்கள். இவர்கள். கம்பெனியில் எல்லோரும் ஸ்திரீகளே, இவர்களுடைய அக்காள் முக்கிய ஆண் வேடங்களும் பாலாமணி முக்கிய ஸ்திரீ வேடங்களும் தரித்து நடிப்பார்கள். இவர்கள் ஆடிய முக்கிய நாடகங்கள் டம்பாச்சாரி விலாசம், தாராச்சாங்கம், குலேபகாவலி முதலியவைகளாம். கொஞ்ச காலம் கந்தசாமி முதலியார் இவர்கள் கம்பெனியில் நாடகமாட கற்பிக்கும் உபாத்தியாயராக சேர்ந்தார். அச்சமயம் எனது லீலாவதி சுலோசனா முதலிய நாடகங்களை பாலாமணி ஆடி வந்தார். கொஞ்சகாலம் கோவிந்தசாமி ராவ் அவர்களும் இக்கம்பெனியில் சூத்திர தாராக சேர்ந்திருந்தார். என் அனுமதியின் மீது சென்னையில் ஒருமுறை பாலாமணி லீலாவதி சலோசனாவில் நடித்தபோது என்னை நேரில் வந்து அழைக்க நான் போய் பார்த்தது ஞாபகமிருக்கிறது. நாடகம் சுமாராய் தான் இருந்தது. ஆயினும் பாலாமணி சுலோசனாவாகவும் அந்த அம்மாளில் மூன்றில் ஒரு பங்கு இல்லாத ஒரு பெண் சுலோசனாவின் அக்காளாகிய லீலாவதியாக நடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த நாடகத்திற்கும் இவர்கள் நடித்த ராமாயண நாடகத்திற்கும் சித்தாந்த சரபம் முத்துசாமி கவிராயர் நல்ல பாட்டுகளை எழுதிக்கொடுத்தார். சில வருடங்கட்குப் பின் இந்த கம்பெனி கலைந்துவிட்டது. மிகவும் பொருள் தீட்டிய பாலாமணியும் வறுமையில் அகப்பட்டுக் கஷ்டப் பட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.