நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. எம். சுந்தசாமி முதலியார்

விக்கிமூலம் இலிருந்து

திரு. எம். சுந்தசாமி முதலியார்

இவர் முதன் முதல் சுகுண விலாச சபையில் நடித்தவர். மனோகரன் நாடகத்தில் வசந்த சேனை வேடம் தரித்தார். இவர் பிற்பாடு பல நாடக சபைகளைச் சேர்ந்து மற்றவர்கள் எழுதிய நவீனங்களில் சிலவற்றை நாடக ரூபமாக எழுதிக் கொடுத்தார். இவ்வாறு அவரால் எழுதப்பட்டவை இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், மேனகை முதலியவை. சுகுண விலாச சபையில் மனோகரா நாடகத்தில் நான் மனோகரனாக முதல் முதல் நடித்த போது இவரை வசந்த சேனை வேடத்தில் நடிக்க கற்பித்தேன். நான் சொன்னதை யெல்லாம் மிகவும் ஆவலுடன் கேட்டு அப்படியே நடித்தார். அன்றியும் சுகுண விலாச சபை நடத்திய எனது பல நாடகங்களை அநேக பால சபைகளுக்குக் கற்பித்தார். சிறு பிள்ளைகளை நடிக்கச் செய்வதில் மிகவும் நிபுணர் என்று பெயர் பெற்றதால் அநேக பால சபைகள் இவரை நாடினார்கள், அன்றியும் வேல் நாயர் கம்பெனி, பாலாமணி கம்பெனி, பாலாம்பாள் கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளும் இவரது உதவியை நாடியது எனக்குத் தெரியும். தன் ஆயுளையெல்லாம் நாடகக்கலைக்கு அர்ப்பணம் செய்தவர்களுள் இவர் ஒரு முக்கிய மானவர். இவருடைய மகனாகிய எம். கே. ராதா என்னும் நடிகனை பல வேடங்களில் நன்றாய் நடிக்கச் செய்தவர் இவரே யாவார்.

திரு. எம். கே. ராதா

இவர் எம். கந்தசாமி முதலியாருடைய பிள்ளை. சிறுவயதிலேயே கந்தசாமி முதலியாரால் நாடகக் கலையில் நன்றாய் பயில்விக்கப்பட்டவர். இவர் ஸ்ரீமான் S. S. வாசனுடைய ஜெமினி ஸ்டுடியோவைச் சேர்ந்தவர். அங்கு எடுக்கப்பட்ட அநேக பேசும் படங்களில் முக்கிய நடிகராக நடித்திருக்கிறார். அவர் நாடக மேடையில் நடித்த போது நான் பன்முறை பார்த்திருக்கிறேன். முக்கியமாக எனது கள்வர் தலைவன் நாடகத்தில் ஹேமாங்கதனாக நடித்தது மிகவும் நன்றாயிருந்தது, இவரும் மற்றவர்களைப் போலவே அந்நாடகத்தை சோக கரமாய் முடிக்காமல் சுபகரமாக முடித்து நடித்திருக்கிறார்.