நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. கிட்டப்பா அவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

திரு. கிட்டப்பா அவர்கள்

இவரது பெயர் கிருஷ்ணசாமி என்றிருந்தும் எல்லோரும் இவரை கிட்டப்பா என்றே அழைப்பார்கள். மேற்சொன்ன கன்னையா கம்பெனியில் இவர் சிறு வயதிலேயே சேர்ந்து நடித்து வந்தார். கன்னையா அவர்களால் இவர் நடிப்புக் கலையைக் கற்றார். பிறகு பெரியவனான பிறகு இவரே அக்கம்பெனியில் முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். இவரது சங்கீதம், மிகவும் சிலாகிக்கத் தக்கது. கந்தர்வகானம் என்றே இதை சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாடுவதில் மூன்று ஸ்தாயிகள் வரை எட்டுவார். அப்படியிருந்தும் ஒரு அபஸ்வரமாவது கேட்கப்படாது. இவரும் ஸ்ரீமதி சுந்தராம் பாளும் ஒரு நாடகத்தில் நடிக்கிறார்கள் என்று பிரசுரம் செய்யப்பட்டால் நாடக தினத்திற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பாகவே டிக்கட்டுகள் ஆகிவிடும், ஒரு முறை பீபில்ஸ் பார்க் கொட்டகையில் சுகுண விலாச சபையார் லீலாவதி சுலோசனா நாடகத்தை ஒரு தர்ம பண்டுக்காக நடத்திய போது நான் ஸ்ரீதத்தனாக வேஷம் தரித்துக் கொண்டிருக்கையில், தான் அதுவரையில் நாடகங்களில் தரித்த விலையுயர்ந்த ரத்னங்கள் இழைத்த நகைகளையும் பொன் நகைகளையும் எடுத்துக் கொண்டு வந்து "நீங்கள் இவைகளில் என்ன வேண்டுமென்றாலும் அணியுங்கள்” என்று அன்புடன் கேட்டார். அதற்கு நான் “நீ கேட்டதே போதும் எனக்கு, மிகவும் சந்தோஷம் நான் இன்று நடிக்கும் நாடகத்தில் சன்யாசி வேடம் பூண வேண்டியவனாயிருக்கிறேன், பிறகு வேண்டுமானால் கேட்டனுப்புகிறேன்” என்று நான் பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது. இப்படிப்பட்ட நற்குணவானாயிருந்த போதிலும் தன் உடல் நலத்தை பாதுகாக்காதபடியால், இளவயதிலேயே இவர் பரலோகம் சென்றார். இதை நான் இங்கு எழுதுவது இவரது குற்றத்தைக் கூறும் பொருட்டன்று. நடிகர்கள் முக்கியமாக தங்கள் உடல் நலத்தை ஜாக்கிரதையாய் பாதுகாக்கவேண்டுமென்றுதான்.