நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சகஸ்ரநாமம் அவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

திரு. சகஸ்ரநாமம் அவர்கள்

இவர் பிறந்தது 1913-ஆம் வருடம், இவர் சிறு வயதில் சில நாடகக் கம்பெனிகளின் நாடகங்களைப் பார்த்து தானும் நாடகமாட வேண்டு மென்று விருப்பம் கொண்டார். சுமார் 14 வயதில் ஓர் நாடக கம்பெனியில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி சேர்ந்தவுடன் இவர் தந்தை அதை தடுத்துப் பார்த்தார். அதனாலும் கல்விமேல் மனம் செல்லாது நாடகமாடுவதிலேயே இவர் மனம் சென்றது. அதன் மீது இவர் தந்தை நாடகமாடுவதற்கே அனுமதி கொடுத்து விட்டார். முதலில் இவருக்கு உற்சாகமளித்தது திரு என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் நடிப்பாகும்.

இவர் அக்காலத்தில் அபிமன்யு சுந்தரி என்னும் நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார். அச்சமயம் அபிமன்யுவாக் நடித்தவர், தற்காலம் பிரசித்தி பெற்ற நடிகராகிய திரு T. K. ஷண்முகம் அவர்கள். பிறகு இவர் காலஞ்சென்ற திரு M. கந்தசாமி முதலியார் அவர்களால் பல நாடகப் பாத்திரங்கள் ஆடுவதில் பயிற்சி செய்யப்பட்டார். இதனால் கந்தசாமி முதலியார் அவர்களையே இவர் தனது நாடகக் குருவாகக் கொண்டனர். 1935-இல் டி. கே. எஸ் சபையாருடன் ‘மேனகை' என்னும் திரைப்படத்தில் முதல் முதல் நடித்தார். பிறகு பல நாடக சபைகளோடு சேர்ந்து நடித்து வந்தனர். பிறகு என். எஸ். கே. தயாரித்த படங்களிலும் ஜீபிடர் கம்பெனி யிலும் பணியாற்றி வந்தார். பிறகு ஏற்பட்ட மதுரை பால வினோத சபாவில் சில பாத்திரங்களைத் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு ஒற்றைவாடை தியேட்டரில் என். எஸ். கே நாடக சபை நடத்திய நாடகங்களில் பங்கெடுத்துக் கொண்டார். பிறகு 'நாம் இருவர்', 'ரத்த சோதனை' என்ற நாடகங்களில் நடித்தார். பைத்தியக்காரன் என்ற நாடகத்தை இவரே எழுதி அதில் முக்கிய பாத்திரமாக நடித்து பெரும் புகழ் பெற்றார். 1952-இல் இவர் தன் சொந்தமாக 'சேவாஸ்டேஜ்' என்னும் நாடக சபையை ஸ்தாபித்தார். 1956 முதல் பி. எஸ். ராமையா அவர்கள் எழுதிய பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள், பூவிலங்கு முதலிய நாடகங்களில் பங்கெடுத்துக் கொண்டு நல்ல முறையில் நடித்தார். பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதம் என்னும் நாடகத்தைப் பாட்டுகளாக நடத்திய போது அதில் பங்கெடுத்துக் கொண்டார். அன்றியும் தி. ஜானகி ராமன் எழுதிய நாலு வேலி நிலமும், வடிவேலு வாத்தியார் என்னும் நாடகமும், கோமல் சுவாமிநாதன் எழுதிய புதிய பாதை, தில்லை நாயகம் என்கிற நாடகங்களையும் இவர் நடத்தி வருகிறார். இதன் பிறகு இவர் சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் மாஸ்கோ, தாஷ்கண்ட், லெனின் கிராட், கிழக்கு பெர்லின் முதலிய ஊர்களுக்குப் போய் அங்குள்ள நாடகக் குழுவினரால் மரியாதை செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பல நாடக விஷயங்களைக் கற்றுக் கொண்டது மன்றி தமிழ் நாடகத்தின் பெருமையை அவர்களுக்குத் தெரிவித்து வந்துள்ளார்.