நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. டி. கே. பகவதி

விக்கிமூலம் இலிருந்து

திரு. டி. கே. பகவதி

தமிழகத்தின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களான டி. கே. எஸ். சகோதரர்கள் நால்வரில் திரு. டி. கே. பகவதி நான்காவது சகோதரர். இவர் 11—2—1918-இல் பிறந்தார். இவர் தமது 7-வது வயதிலேயே மதுரைத் தத்துவமீன லோசனி வித்துவ பால சபாவில் நடிகராக சேர்க்கப் பெற்றார். 1925-இல் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை துவக்கப் பெற்றதும், அதில் சில்லரை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சின்னஞ்சிறு வயதில் இவர் பெரும்பாலும் நகைச் சுவை யளிக்கும் 'பபூன்' வேடங்களிலேயே தோன்றினார். டி. கே, பகவதி தன் சகோதரர் திரு டி. கே முத்துசாமியிடமும் ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியாரிடமும் நாடகப் பயிற்சி பெற்றார். இளமைப் பருவத்திலேயே ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா முதலிய நாவல் நாடகங்களில் இவர் கதா நாயனாக அருமையாக நடித்தும், பாடியும் பெருமை பெற்றிருக்கிறார்.

டி. கே. பகவதி கதாநாயக வேடங்களில் நடித்தபோது இவருக்கு நாயகியாக நடித்தவர் நடிப்புப் புலவர் திரு. கே. ஆர் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 1935-ஆம் ஆண்டு முதல் டி. கே. பகவதி பல்வேறு நாடகங்களில் பிரதம பாகத்தை ஏற்று நடிக்கத் தொடங்கினார். 1939-இல் 'சிவலீலா' நாடகத்தில் சிவபெருமானுடைய பல்வேறு வேடங்களில் நூற்றுக் கணக்கான நாடகங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். தமிழ் வரலாறு நாடகங்களில் கதா நாயனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இவரது பெருமை மேலும் ஓங்கியது. இமயத்தில் நாம், இராஜ ராஜசோழன் முதலிய நாடகங்களில் சேரன் செங்குட்டுவன், இராஜராஜ சோழன் ஆகிய வேடங்கள் இவருடைய அபார நடிப்புத் திறமைக்குச் சான்றாக விளங்கின. ராஜராஜ சோழன் என்னும் நாடகம் அரு, ராமநாதன் அவர்கள் எழுதியது அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகத்தில் மகேந்திர பல்லவனாகத் தோன்றியது இவருக்குப் பன்மடங்கு சிறப்பைத் தேடித்தந்தது.

திரு. பகவதி நடிப்புத் துறையில் மட்டுமல்ல, நிர்வாகத் துறையிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். 1950 முதல் டி. கே. எஸ். நாடக சபையின் நிர்வாக பொறுப்பு முழுவதும் இவரே ஏற்று நடத்தி வருகிறார். புது தில்லியில் பாரத அரசாங்கத்தாரால் அமைக்கப் பெறும் நேஷனல் தியேட்டர் அமைப்பு ஆலோசனை குழுவில் பகவதி ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் நாடு சங்கீத நாடக சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் முதலிய அமைப்புகளில் இவர் அங்கம் வகித்து வருகிறார்.

தமிழ் நாடு அரசாங்க நாடக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் உறுப்பினராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். 1950 முதல் டி. கே, எஸ், நாடக சபை தயாரித்த 'இன்ஸ்பெக்டர், கள்வனின் காதலி, ரத்தபாசம், தமிழ் செல்வம், வாழ்வில் இன்பம், தேச பக்தர் சிதம்பரனார், சித்தர் மகள், இராஜ ராஜ சோழன், சிவகாமியின் சபதம், உயிர்ப்பலி, பாசத்தின் பரிசு முதலிய பல்வேறு நாடகங்களுக்கு இவர் தயாரிப்பாளராக இருந்து உதவி யிருக்கிறார். தேசீய பெருமை வாய்ந்த நாடகங்களான 'முதல் முழக்கம்', 'தேச பக்தர் சிதம்பரனார்' ஆகிய நாடகங்களில் பகவதி கட்ட பொம்மனாகவும், சிதம்பரனாராகவும் திறம் பெற நடித்து நாடக ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

டி. கே. பகவதி நாடக உலகில் சிறந்த இடம் பெற்றிருப்பதோடு திரைப்படத் துறையிலும், பல படங்களில் முக்கிய பாகமேற்று நடித்திருக்கிறார். 1935-இல் சிறந்த படமென்று பொது மக்களால் பாராட்டப் பெற்ற 'மேனகாவில்' பகவதி கதா நாயகன் வராகசாமியாக நடித்தார். தொடர்ந்து பாலாமணி, குமாஸ்தாவின் பெண், பில்ஹணன், மனிதன், இன்ஸ்பெக்டர், ரத்தபாசம், சம்பூர்ண இராமாயணம், மகா வீர பீமன், குலமகள் ராதை முதலிய திரைப்படங்களில் முக்கிய பாகமேற்று நடித்திருக்கிறார்.