நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. டி. கே. ஷண்முகம்

விக்கிமூலம் இலிருந்து
திரு. டி. கே. ஷண்முகம்

திரு. டி. கே. ஷண்முகம் அவர்கள் தகப்பனாருக்கு, ஷண்முகம் அவர்கள் உட்பட நான்கு பிள்ளைகள். இந்த நான்கு பிள்ளைகளையும் அவர்களுடைய தகப்பனார் சிறு வயதிலேயே நாடகம் ஆடுவதில் சேர்ப்பித்தார். 1922-ல் ஷண்முகம் அவர்கள் தனது சிறு வயதிலேயே கிருஷ்ணசாமி பாவலருடைய பாலமனேகர சபாவில் மனோகரனாக நடித்தார். அதை நான் நேரில் பார்த்தபோது நாடகத்தின் முடிவில் ஷண்முகம் அவர்கள் நடித்ததைப்பற்றி சந்தோஷப்பட்டுப் பேசினேன். டி. கே. ஷண்முகம் அவர்கள் சிறுவயதில் பல பால நாடக சபைகளில் நடிகராயிருந்தார். பிறகு தன் சகோதரர்களுடன் 'ஷண்முகானந்த நாடகசபா' என்பதை ஸ்தாபித்து பல வருடங்களாக அதை விமரிசையாய் நடத்திவந்தனர். பிறகு ஏதோ காரணத்தால் அந்த சபை கலைக்கப்பட்டது; தற்காலம் வேறொரு பெயருடன் ஒரு நாடகசபையை ஏற்படுத்தி அதில் நடித்து வருகிறார். சென்னை ராஜதானியில் முக்கியமான பட்டணங்களில் பல வருடங்களாக நாடகங்கள் நடத்தி வருகிறார். சிங்கப்பூர், மலேயா முதலிய இடங்களுக்குப்போய் தன் குழுவுடன் பல தமிழ் நாடகங்களை நடத்தி மிகுந்த கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். இவர் நடித்த நாடகங்களில் முக்கியமானது 'ஒளவையார்'. இந்நாடகம் எழுதியது திரு. பி. எஸ். எத்திராஜ். அப்பாத்திரத்தை நடிப்பது மிகவும் கடினமாகும். இருந்தும் அப்பாத்திரத்தை நடிப்பதில் இவருக்கு சமானமில்லை யென்ற கீர்த்தியைப் பெற்றார். இவர் எனது நாடகங்களில் மனோகரன் நாடகத்தை பன்முறை பல இடங்களில் நடித்து நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அந்நாடகத்தை கொஞ்சமேனும் மாற்றாமல் அப்படியே ஆடிய சிலரில் இவர் முக்கியமானார். நான் நிர்மாணித்த மனோகரன் பாத்திரத்தின் குணாதிசயங்களை யெல்லாம் நன்குணர்ந்தவர். ஆகவே நூற்றுக்கணக்கான நடிகர்கள் மனோகரன் பாத்திரத்தை நடித்திருந்தபோதிலும் இவர் நடித்ததும் திரு. கே. ஆர். ராமசாமி நடித்ததும் தான் என் மனதிற்கு ஓரளவு உவகையைத் தந்தது. டி. கே. ஷண்முகம் அவர்கள் குழு தென்னிந்தியாவிலும் சிலோன் மலேயா முதலிய இடங்களிலும் நடித்தபோது பல நாடகங்களின் வரும்படியை பல தர்ம விஷயங்களுக்குக் கொடுத்திருக்கின்றனர். தற்காலம். இவர் தமிழ் நாடகத்திற்காக தனது உடல், பொருள், ஆவியெல்லாம் கொடுத்து அதை மிகவும் முன்னேறச் செய்திருக்கின்றனர் என்பதை ஒருவராலும் மறக்க முடியாது. இவருக்கு 1960-ஆம் ஆண்டில் சென்னை சங்கீத நாடக சங்கம் இவரது நடிப்புக்கலையை மெச்சி ஓர் பொற்பதக்கம் அளித்தனர். இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு பெரும் பொருளை தாராளமாக கொடுத்துள்ளார். அன்றியும் பல எளிய நடிகர்களுக்கு அவர்களுடைய கஷ்டகாலத்தில் பொரு ளுதவியும் செய்திருக்கிறார். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து அவ்வாறே செய்யவேண்டுமென்று கோருகிறேன்.