நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. வேல் நாயர்

விக்கிமூலம் இலிருந்து

திரு. வேல் நாயர்

இவர் மலையாள தேசத்தைச் சேர்ந்தவர். மலையாளியாயிருந்தும் தமிழ் நன்றாய் திருத்தமாய் பேசுவார். அன்றியும் சம்ஸ்கிருதமும் படித்தவர் நல்ல நடிகர். தமிழில்தான் நடிப்பார். அப்படி நடிக்கும்போது ஆங்காங்கு சில சம்ஸ்கிருத பதங்களையும் உபயோகிப்பார். இவர் தன் நாடகக் கம்பெனியூடன் தமிழ் நாடெங்கும் பன்முறை சுற்றி வந்திருக்கிறார், அக் காலத்தில் முக்கிய நாடகங்களுடன் நான் எழுதிய மனோகரா, கள்வர் தலைவன் முதலிய நாடகங்களை பன்முறை நடத்தி யிருக்கிறார், சற்றேறக்குறைய வாரத்தில் ஒருமுறையாவது எனது நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரைப் போல் எனது நாடகங்களை அநேக முறை நடத்திய நாடகக் கம்பெனிகளே கிடையாது எனக் கூறலாம். இதனால் இவருக்கு வருவாய் அதிகமாகக் கிடைத்தது. எனக்கும் ராயல்டி அதிகமாய் கிடைத்தது. இவர் தன் கம்பெனியை வெகு விமரிசையாய் நடத்தி வந்தார். மற்ற கம்பெனிகளில் சாதாரணமாய் நடிகர்களுக்கு சம்பளம் சரியாகக் கொடுப்பதில்லை என்னும் கஷ்டம் இவருடைய கம்பெனியில் கிடையவே கிடையாது. சில காலம் காலஞ்சென்ற M. கந்தசாமி முதலியார் இவரது கம்பெனியாருக்கு உபாத்தியாயராய் இருந்து நடிப்புக் கலையை கற்பித்ததை நான் அறிவேன், இவர் நடிகர்களை சரியாக நடத்தி வந்தபடியால் அவர்கள் இவர் கம்பெனியை விட்டு அகலாது பல வருடங்கள் உழைத்து வந்தார்கள்.

ஒரு முறை மன்னார்குடியில் சப் ஜட்ஜாயிருந்த எனது நண்பர் ஸ்ரீமான் பார்த்தசாரதி அய்யங்கார் நாடகத் தொழிலாளிகளையும் அமெச்சூர் (Amateur) நடிகர்களையும் ஒருங்கு சேர்த்து ஒரு நாடகம் நடிக்கவேண்டுமென்று, தொழிலாளிகளுள் வேல் நாயர், அனந்த நாராயண ஐயர், நடராஜ பிள்ளை முதலியாருடன் தானும், நானும் இன்னும் சில அமெச்சூர் நடிகர்களும் நள சரித்திரத்தை நாடகமாட வேண்டுமென்று தீர்மானித்தார், நானும் தமிழ் நாடகத்தை உயர்த்துவதற்கு இது ஒரு நல்ல காரணமாகும் என்று அதற்கு உடன்பட்டேன். நாடக தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே மன்னார்குடிக்குப் போனேன். வேல் நாயர் நளனாகவும் அனந்த நாராயண ஐயர் தமயந்தியாகவும். நடிக்கும் படி ஏற்படுத்தினேன். ஸ்ரீமான் பார்த்தசாரதி அய்யங்கார் வாஹீகன் ஆக நடிக்க உடன்பட்டார். நான் ஏதோ ஒரு சில்லரை பாத்திரத்தை எடுத்துக் கொண்டேன். முதல் ஒத்திகை நடத்தியபோது ஒரு காட்சியில் நளனும் தமயந்தியும் சேர்ந்து நடிக்க வேண்டியதை நடிக்கச் சொன்னேன். அவர்கள் அக்காலத்தில் வழக்கப்படி ஒருவாறு நடித்தனர். உடனே அதை நிறுத்தி இப்படி நடித்தால் நன்றாயிராதா என்று நான் நடித்துக் காட்டினேன். உடனே வேல் நாயரும் அனந்த நாராயண அய்யரும் என் அருகில் வந்து மற்ற பாகங்களையெல்லாம் நாளைகாலை உங்கள் வீட்டிற்கு வந்து நடிக்கிறோம் என்று என் காதில் மெல்ல ஓதினார்கள். பிறகு மற்ற நடிகர்களின் பாகத்தை சொல்லிக் கொடுத்து விட்டு வீட்டிற்குப் போனேன். வேல் நாயரும் அனந்த நாராயண அய்யரும் வந்து "ஆதி முதல் அந்தம் வரை எங்களுக்கு நடித்துக் காட்டுங்கள்" என்று கேட்க, அதற்கிணங்கி அப்படியே செய்தேன், பிறகு நாடகதினம் நான் சொல்லிக் கொடுத்தபடியே நன்றாய் நடித்தார்கள். நாடகதினத்தில் நல்ல வசூல் ஆயிற்று. செலவுபோக மிகுந்த தொகையை அங்கிருந்த ஒரு தர்ம கைங்கர்யத்திற்காக பார்த்தசாரதி அய்யங்கார் கொடுத்துவிட்டார். மேற்குறித்தபடி பார்த்தசாரதி அய்யங்கார் நாடகத் தொழிலாளிகளையும் அமெச்சூர் நடிகர்களையும் ஒன்றும் பேதமில்லாமல் கூடி நடிக்கச் செய்தது தமிழ் நாடகத்தின் பதவியை முன்னேற்றம் அடையச் செய்தது. என்று நான் கட்டாயமாய் கூற வேண்டும்.

வேல் நாயர் தன் உடல் நலத்தை சரியாக பார்த்து வந்தமையால் பல்லாண்டு வாழ்த்து ஒருவருடத்திற்கு முன்பு தான் காலமானார்.