நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. N. சம்பந்த முதலியார்

விக்கிமூலம் இலிருந்து

திரு. N. சம்பந்த முதலியார்

அவர்கள் இவர் நான் கண்ட நடிகர்களுக்குள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவர். இவர் சென்னை ஸ்பென்ஸர் அண்ட் கோவில் முக்கிய உத்தியோகஸ்தர்களில் ஒருவராய் இருந்தவர் இவர் நடுவயது வரையில் நாடகமே ஆடாதிருந்தவர். பிறகு நான் சுகுண விலாச சபையில் நடித்ததை பன்முறை பார்த்து தானும் நாடகமாட வேண்டுமென்று இச்சைகொண்டதாக என்னிடம் நேராகக் கூறியுள்ளார். அதன் பேரில் அவரிருந்த கம்பெனியில் பல தக்க சிறுவர்களை சேர்ந்து ஓர் நாடகக் குழுவை ஏற்படுத்தினார். இதில் அந்த கம்பெனியிலிருந்தவர்களை தவிர மற்றவர்களை சேர்ப்பதில்லை, இவர் எனது பெரிய நாடகங்களை யெல்லாம் தான் நடத்த வேண்டுமென்று தீர்மானித்து அவைகளில் நான் நடித்த முக்கிய பாகங்களையே தானும் நடித்து வந்தார் பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களைத் தவிர மற்றவர்கள் நாடகங்களில் நடிப்பதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்ததாக பலருக்குக் கூறியது எனக்குத் தெரியும். சுகுண விலாச சபையில் நான் நடிக்கும் போதெல்லாம் மிகவும் கூர்மையாக கவனித்து என்னைப் போலவே நடித்து வந்தார் என்று நான் கூறவேண்டும், அன்றியும் நாடகம் ஆரம்பிப்பதில் சரியாக மணிப்பிரகாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று தீர்மானித்து அப்படியே நடந்து வந்தார். இவர் மற்ற நடிகர்களுக்கு ஒத்திகை நடத்தும்போது என்னைப் போலவே மிகவும் கண்டிப்பாய் நடத்தி வந்தார் என்று எனக்குத் தெரியும். முக்கியமான ஒத்திகைகளுக்கெல் லாம் என்னை வரவழைத்து நேரில் நடத்தியிருக்கிறார். இவர் நடித்த எனது முக்கியமான நாடகங்கள் மனோகரா, லீலாவதி சுலோசனா, காலவரிஷி, சபாபதி, புத்த அவதாரம் முதலியவைகளாம். மேற்கண்ட நாடகங்களில் சில காட்சிகள் ஜோடிப்பதில் எங்கள் சபையைவிட அதிக விமரிசையாய் ஜோடித்து நடத்தி வந்தார். இவரது நாடகங்களைப் பார்க்க தனது ஆபீஸ் ஆங்கில உத்தியோகஸ்தர்களையெல்லாம் எப்போதும் இவர் வரவழைப்பது வழக்கமாகும். இவர் தனது 60வது வயதானவுடன் உபகாரசம்பளம் பெற்று பல வருடங்கள் வாழ்ந்திருந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகதான் காலகதியடைந்தார். அச்சமயம் எனது சிறந்த நண்பர்களுள் ஒருவராகிய இவரை எனக்கு முன்பாக மரித்ததைப் பற்றி நான் மிகவும் வருத்தப்பட்டேன். இவரைப் போல் இன்னும் சிறந்த நடிகர்கள் இருப்பார்களாயின் தமிழ் நாடகமானது இப்போது இருப்பதைவிட இன்னும் கியாதி பெற்றிருக்கும் என்று நான் உறுதியாய் கூறுவேன்.