நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ பாபநாசம் சிவன்

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீ பாபநாசம் சிவன்

இவரை நான் முதல் முதல் கோயமுத்தூருக்குப் போயிருந்தபோது அங்கு சந்தித்தேன். மணிமேகலை பேசும் படத்தை தயாரித்தவர் என்னை அதில் சில சீர்திருத்தங்கள் செய்ய கேட்டதுபோல் பாபநாசம் சிவன் அவர்களை பல புதிய பாட்டுகள் எழுதும்படி வரவழைத்தார். அங்கு நான் தங்கியிருந்தபோது இவருடன் பேசிக்கொண்டிருக்கையில் "நான் உங்களுடைய சில நாடகங்களில் பல வருடங்களுக்குமுன் நடித்திருக்கிறேன், முக்கியமாக மார்க்கண்டேயர் நாடகத்தில் நான் மார்க்கண்டேயனாக நடித்ததை பலர் புகழ்ந்திருக்கின்றனர்" என்றார். இவரை நான் கோயமுத்தூரில் பார்த்த சமயத்திலேயே இவர் வயோதிகராகத் தோற்றப்பட்டார். ஆயினும் தான் கட்டிய பாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தளரா ஊக்கமுடையவராய் இருந்தார் என்பதை நான் அறிவேன், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் "ஒரே ராகத்தில் ஒரு நாடகத்திற்கு பல ரசங்களுக்கேற்றபடி நான் கட்டிக் கொடுக்கமுடியும். அதன் சூட்சுமம் என்னவென்றால் மெட்டுக்களை பாவத்திற்கு தக்கபடி மாற்றவேண்டும்” என்றார். எனக்குத் தெரிந்தபடி இவர் சென்ற நாற்பது ஐம்பது வருடங்களாக அநேக தமிழ் நாடகங்களுக்கும் தமிழ் பேசும் படங்களுக்கும் மிகவும் இனிய பாட்டுகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது தமிழ் நாடக அபிமானிகள் அனைவரும் அறிந்த விஷயமே. இத்திறமைக்காக சென்ற வருடம் சங்கீத நாடக சங்கத்தார் இவருக்குப் பரிசு அளித்தது, இதை படிக்கும் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஈசன் கருணையால் இன்னும் பல்லாண்டு அதன் தொண்டினை செய்து நாடகத்தின் இசைப் பகுதியை மேம்படுத்துவாராக!