நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு சிவாஜி கணேசன்

விக்கிமூலம் இலிருந்து

திரு சிவாஜி கணேசன்

இவர் சிறுவயதில் T. K. S. பிரதர்ஸ் கம்பெனியில் நடித்தவர். T. K. S. பிரதர்ஸ்களால் நாடகத் தொழிலில் தேர்ச்சியடையப் பெற்றார். பிறகு பெரியவனான போது சில முக்கிய பாத்திரங்கள் கொடுத்தார்கள். அவைகளில் ஒன்று சிவாஜி நாடகத்தில் கதாநாயகன் பாத்திரம். அந்த நாடகம் பல நாட்கள் நடந்தபடியால் கணேசன் அவர்கள் பெயர் பரவலாயிற்று. இதனால் இவருக்கு 'சிவாஜி' கணேசன் என்னும் பட்டப் பெயரும் அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு சில கம்பெனிகளில் சேர்ந்து முக்கிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நடத்திவருகிறார். கொஞ்சகாலத்திற்கு முன்பாக தேசாபிமானியாகிய கட்டபொம்மு என்னும் வீரருடைய சரித்திரத்தை நாடகமாக நடத்தி மிகுந்த கியாதி பெற்றார். என்னுடைய மனோகராவில் அதைப் பேசும்படமாக மாற்றியபோது அப்பட முதலாளிகள் மனோகரன் பாத்திரத்தை சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கலாமா? என்று என்னைக்கேட்டார்கள். அப்படியே செய்யுங்கள், அதை அவர் நன்றாய் நடித்து உங்களுக்குப் பணத்தை அதிகமாய் சேர்ப்பார் என்று சொன்னேன். ஆயினும் அப்படத்தில் நான் எழுதிய பாகங்களை மாற்றாதபடி இவர் நடித்ததெல்லாம் நன்றாய் இருந்தது, மாற்றிய பாகங்கள் அவைகள் பொருத்தமா யில்லாதபடியால் அவர் நடித்தது நானும் விரும்பவில்லை. பார்த்த அநேக ஜனங்களும் அவ்வாறே கூறினர். இதற்கு சிவாஜி கணேசன் உத்தரவாதமல்ல. கதையின் போக்கை மாற்றியவர்கள் தான் உத்தரவாதம். இதன் பிறகு இவர் அநேக பேசும் படங்களில் நடித்துவருகிறார், அன்றியும் ஒருமுறை எகிப்து தேசத்திற்குப்போய் நடிப்பில் சிறந்தவர் என புகழப் பெற்று பரிசுகள் பெற்றவர். மேலும் அமெரிக்காவுக்குப்போய் தமிழ் பேசும் படங்களின் பெருமையை பரவச்செய்த பெருமை இவருடையதாகும்.

இவர் கம்பீரமான தோற்றமும் குரலுமுடையவர். ஆகவே வீர ரசத்தில் நடிப்பதில் இவருக்கு தற்காலம் இணையில்லை என்று சொல்லலாம். இன்னும் இவர் பல்லாண்டு வாழ்ந்து தேசாபிமான நாடகங்களில் நடித்து தமிழ் நாடகத்தின் பெயரை ஈசன் கருணையால் முன்னுக்குக் கொண்டுவருவாராக.