நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/பொருட்பால்

விக்கிமூலம் இலிருந்து


பொருட்பால்
14. கல்வி

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. 131

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. 132

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலைத்து வைக்கப் படும். 133

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. 134

கல்வி கரையில; கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 135

தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார்-காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல். 136

தவலருந் தொல்கேள்வித் தன்மையு டையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து)
உம்ப ருறைவார் பதி. 137

கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு. 138

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. 139

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங்-கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில். 140

15. குடிப்பிறப்பு


உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று. 141

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமுன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது-வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு. 142

இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று. 143

நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும்;-எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்? 144

கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்;-எல்லாம்
இரப்பார்க்கொன் றியாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார். 145

இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம்-கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள. 146

செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை. 147

ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறுஉந்-திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார். 148

செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்;-புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று. 149

எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும். 150

16. மேன்மக்கள்


அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன்-திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின். 151

இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்! விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்பெய்த கோல்? 152

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார்;-உரங்கவறா
உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்
செய்வர் செயற்பா லவை. 153

செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி. 154

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து. 155

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து. 156

கள்ளார்,கள்ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்,-தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர். 157

பிறர்மறை யின்கட் செவிடாய்த திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய புறங்கூற்றின்
முகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 158

பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப;-என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. 159

உடையா ரிவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்;-உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து. 160

17. பெரியாரைப் பிழையாமை


பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்;-வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர். 162

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால,-நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார். 163

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின். 164

எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று;-தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். 165

நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை;-விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு 166

மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா-துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு 167

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்;-பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும். 168

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்;-ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண். 169

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்;-தெரியுங்கால்;
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின் 170

18. நல்லினம் சேர்தல்


அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பணிப் பற்றுவிட் டாங்கு 171

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல். 173

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால்-தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு 173

இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்;-பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின். 174

ஊரங் கனநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்;-ஒருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து 175

ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஒங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின். 176

பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்;-தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நலல
பெரியார் பெருமையைச் சார்ந்து. 177

கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம். 178

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்;-கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும். 179

மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர்;-புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால். 180

19. பெருமை


ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்;-காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள். 181

இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்;-அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர். 182

மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின்-அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள. 183

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது. 184

உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல-செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றி
செய்வர் செயற்பா லவை. 185

பெருவரை நாட! பெரியோர்கண் தீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்;-கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும். 186

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பரிவாம்-அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும். 187

மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)
ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே, நலவருள்
நன்மை வரம்பாய் விடல். 188

கடுக்கி யொருவன் கடுஞ்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று. 189

முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்;-அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும். 190

20. தாளாண்மை


கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்
கேளிவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்
தாளர்க் குண்டோ தவறு; 191

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்,
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின் 192

உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்;-அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும். 193

இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை-இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று. 194

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை;-தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். 195

ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார்-ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. 196

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் விழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 197

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ?-யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர். 198

தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு-ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கு
பேராண்மை இல்லாக் கடை. 199

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச்சோ றார்வர் கயவர்;-கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும். 200

21. சுற்றந்தழால்


வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும். 201

அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன். 202

அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;-அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு 203

உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;-நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு. 204

இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால்-துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார். 205

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போன்ற கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது. 206

நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;-கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது. 207

முட்டிகை போல முனியாது வைகலுங்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டா ரெனப்படு வார். 208

நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழிஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால். 209

விருப்பிலா ரில்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து. 210

22. நட்பாராய்தல்


கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே;-குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு. 211

இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது;-பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று. 212

யானை யானையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய். 213

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்;-பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு. 214

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;-தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல். 215

கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கி னனையர்;-தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு. 216

கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்;-விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217

நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு. 218

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால்-அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று. 219

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு. 220

23. நட்பிற் பிழை பொறுத்தல்


நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கு உண்டு 221

செறுத்தோறுடைப்பினுஞ் செம்புனலோ டுடார்,
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு 222

இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ;-நிறக்கோங்கு
உருவவண் டார்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறையிருவர் நட்பு 223

மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப!
விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுதற்கு முட்டிய தீ 224

இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் பொன்னோடு
நல்லிற் சிதைத்ததி நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால் 225

இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ-துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற் றென்றுதங்கை 226

இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; கலந்தபின்
தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரிற் கடை 227

ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்:காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று 228

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல் 229

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல்-நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக 230

24. கூடா நட்பு


செறிப்பில் பழங்கூரை சேறனை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர்;-கறைக்குன்றம்
பொங்கருவி தாமும் புனல்வரை நன்னாட!
தங்கரும முற்றுந் துணை 231

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம்-மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்காற் சீரிலார் நட்பு 232

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால்-நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று 233

பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும்-அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு 234

செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும்-மெய்யாக
இன்புறுஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறுஉம் பெற்றி தரும். 235

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறுபடும் 236

முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு 237

முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல்-நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக 238

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ;-தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு 239

உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று 240

25. அறிவுடைமை


பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா 241

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்
கணிகல மாவ தடக்கம்-பணிவில் சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமுர்
கோத்திரங் கூறப் படும் 242

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்;
தன்னாற்றா னாகும் மறுமை; வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர் 243

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புட்ையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது 244

கடல் சார்ந்தும் இன்னிர் பிறக்கும் மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்
இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார் 245

பரா அரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரு உச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று 246

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புனரிற் புணருமாம் இன்பம்;-புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியும் நோய் 247

நன்னிலைக்கண் தன்னை நிறப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான் 248

கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல்-அருமரபின்
ஒதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை யன்ற தறிவு 249

கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா-ஒரு நிலையே
முட்டின்றி முன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம் 250

26. அறிவின்மை


நுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்;-எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம் 251

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,
பூவின் கிழத்தி புலந்து 252

கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்-மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும் 253

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று 254

புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம்-கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து 255

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர்-பனையின்மேல்
வற்றிய ஒல கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி 256

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தாறுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைநகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு 257

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு 258

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறுஉம் ஈப்போல், இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாரும், தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு 259

கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால்-மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் 260

27. நன்றியில் செல்வம்


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளைவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிவார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று 261

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார் 262

மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லுற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை 263

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடைய ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து 264

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில். 265

நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து 266

நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்;
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை. 267

வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்-வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருணையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து 268

பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வா
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து 269

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்;-தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்; செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின் 270

28. ஈயாமை


நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;-அட்டது
அடைந்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு 271

எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றஞ் செய்தார் தலைப்படுவர்;-மற்றைப்
பெருஞ்ச்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும்
என்பார் அழிந்தார் பழிகடலத் துள் 272

துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றி கலான்
வைத்துக் கழியும் மடவோனை-வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும் 273

கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்ச்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும் 274

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்றுாறல் பார்த் துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 275

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;-தனதாயின்
தானும் அதனை வழங்கான்; பயன்துவ்வான்;
யானும் அதனை அது. 276

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார்-உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்த்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல 277

தனதாகத் தான்கொடான்; தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர்;-தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னே அவர்கொடுக்கும் போழ்து 278

இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை-விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ் 279

ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்-காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள் 280

29. இன்மை


அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்னுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை 281

நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்;-தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து 282

கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்;-கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர் 283

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே;-வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில் 284

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்;
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்குருவி
கன்மேற் கழுஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு 285

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளு ரிருந்துமொன் றாற்றாதான்;-உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று 286

நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்;-கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்!நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார் 287

இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளுர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று 288

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே
துப்பரவு சென்றுலந்தக் கால் 289

ஆர்த்த பொறி அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவம்;-நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர் 290

30. மானம்


திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும்-எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே
மான முடையார் மனம் 291

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்;~தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய் 292

யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு 293

இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தலால்;-செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு 294

பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்;-சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று 295

மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார் 296

கடையெலாம் காய்பசி அஞ்சமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும்-புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும் 297

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்
உலையூதுந் தியேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம் 298

நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண் 299

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வழ்ந்த துண்ணா திறக்கும்;-இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின் 300

31. இரவச்சம்


நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர் 301

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு 302

இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி-புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்
டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303

திருதன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல் 304

கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை-இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு 305

இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற்-கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு 306

என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான்-குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன் 307

புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின் 308

ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால்;-பரிசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி? 309

பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க; கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ 310

32. அவை அறிதல்


மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல் 311

நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்
தீப்புலவற் சேரார் செறிவுடையார்;-தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும் 312

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்;-கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்,
பலவுரைக்கும் மாந்தர் பலர் 313

கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டிவிடும் 314

வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
கரைவித்துப் போலுந்தம் பல் 315

பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
முடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து 316

பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள் 317

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும்-மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு 318

பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்-பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட்!
உரையாமோ நூலிற்கு நன்கு? 319

இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ?-இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில். 320

33. புல்லறிவாண்மை


அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்;-பொருளல்லா
ஏழை அதனை இகழந்துரைக்கும் பாற்கூழை
முழை சுவையுணரா தாங்கு 321

அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றில்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு 322

இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும்-தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்? 323

உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால்;-பலருள்ளும்
கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள் 324

எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை;-வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின் 325

முப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான்-நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும் 326

தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார் 327

சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம் 328

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி;-மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார் 329

என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை;-அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு 330

34. பேதமை


கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்து செம்மாப்பார் மாண்பு 331

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஒசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு 332

குலந்தவங் கல்வி குடிமைமுப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும்-நலஞ்சான்ற
மையறுதொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் 333

கன்னணி நல்ல கடையாய மாக்களின்;
சொன்னனி தாமுணர வாயினும்-இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்
றுற்றவர்க்குத் தாமுதவ லான் 334

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண்டேலாதிார் மாட்டும்-கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து 335

தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர்-புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று 336

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு, புறுஞ்சுற்றும்;-யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர் 337

நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்;-எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைப்பட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள் 338

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை-தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு 339

கற்றளவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும் 340

35. கீழ்மை


கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல்;-மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும் 341

காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின்-கீழ்தான்
உறங்குவோம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன்று உரைத்து 342

பெருநடைதாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்;-பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ் 343

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்;-பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு. 344

பொற்கலத் துட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்;-அச்சீர்
பெருமை யுடைத்தாகக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறுபடும் 345

சக்கர்ரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்;-எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும் 346

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும் 347

கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் 348

பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர்; விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர் 349

கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை;-ஐயகேள்
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும் 350

36. கயமை


ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடக்குப;-முத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார். 351

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை;-வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது 352

கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா. 353

கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணிர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றையவர் 354

தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
உளநீரார் மாதோ கயவர்; அளிநீரார்க்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின் 355

மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன்றுள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும் 356

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதி தாயின்
எழுநூறுந் தீதாய் விடும். 357

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்;-கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழ மாகுத லின்று 358

இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்-தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர் 359

நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்;-ஓரும்
நிறைப்பெருஞ்ச் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் லன்னா ருடைத்து 360

37. பன்னெறி


மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்?-விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு 361

வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது 362

எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்;-சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பிணி-அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்;-இம்முவர்
கொண்டானைக் கொல்லும் படை 363

கடியெனக் கேட்டுக் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்;-பேர்த்துமோர்
இற்கொண் டினிதிருஉம் ஏமுறுதல் என்பவே,
கற்கொண் டெறியுந் தவறு 364

தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல்; கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை 365

கல்லாக் கழிப்பர் தலையாயர்,நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்,கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர் 366

செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால்-அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூரா!
மகனறிவு தந்தை யறிவு 367

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு 368

இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்;-மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று 369

புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல;-புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி, அறவே அறும் 370

38. பொதுமகளிர்


விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல;-விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும் 371

அங்கோட் டகலல்குல் ஆயிழையால் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்;-செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து 372

அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன்;-தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது 373

ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்;-காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு 374

பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும்-ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார் 375

பொத்தகநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த - பொற்றொடியும்
போர்தகர்க்கோ டாயினாள்; நன்னெஞ்சே!
நிற்றியோ போதியோ நீ? 376

ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை 377

ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடாம் - மான்நோக்கில்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே
செந்நெறிச் சேர்தும்என் பார் 378

ஊறுசெய் நெஞ்சம்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேறமொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம் உடம்பினார் 379

உள்ளம் ஒருவன் உழையதா வொண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த வுடம்பி னார் 380

39. கற்புடை மகளிர்


அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும், விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை 381

குடநீரட் டுண்ணும் இடுக்கண் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள் 382

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும்-மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல் 383

கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதாரள் பெண் 384

எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார் 385

உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நானுடையாள் பெற்ற நலம் 386

கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டாறாம் ஊரன்; ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும் 387

கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று-துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை 388

சாய்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்;தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான் 389

அரும்பவிழ் தாரினான் எம் அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண, கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை 390