நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/37. பன்னெறி

விக்கிமூலம் இலிருந்து

37. கதம்பப் பூக்கள்
(பன்னெறி)

அழகான வீடு; தோட்டம்; எடுபிடி ஆட்கள் எல்லாம் இருக்கின்றன. என்றாலும் அது ஏன் அந்த வீடு சோகக் காட்சி அளிக்கிறது? இஃது என்ன சுடுகாடா? மனித வாசனையே இல்லை, இந்த வீட்டு மகாலட்சுமி எங்கே? எல்லாம் இருக்கிறது; வீட்டைப் பராமரிக்க ஒரு கிருக லட்சுமி இல்லை; மனைவி இல்லாத வீடு அது அரண்மனையாக இருந்தாலும் அது வெறிச்சிடத்தான் செய்யும். நண்பர்கள் மட்டும் இருந்தால் அது சகவாசம். மனைவி இருந்தால்தான் அது சுகவாசகம்.

“மகளிர் நிறையைக் காத்துக் கொள்ளவில்லை என்றால் சிறைகாக்கும் காப்பு என்ன செய்யும்?” என்றார் வள்ளுவர். அது முற்றிலும் உண்மை; காவல் எவ்வளவு வைத்தாலும் ஒருத்தியின் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாது. அவள் நினைத்தால், எவ்வளவு காவல் இருந்தாலும் அதை மீறித் தன் விருப்பை நிறைவேற்றிக் கொள்வாள். தவறியவள் திருந்துவது கடினம். அவரவர் மனக்காப்பே தக்க காப்பு ஆகும்.

மனைவி நல்லவளாக வாய்ப்பது அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; “சற்று ஏறுமாறாக நடந்து கொண்டால் கூறாமல் சந்நியாசம் கொள்” என்றார் அவ்வைாயர். ஏன்? யாரைப் பார்த்து இவ்வாறு கூறினார். ‘எறி’ என்று கூறி எதிர் நிற்பாள். கணவனை எதிர்த்து அவன் சீற்றத்தைத் தூண்டுவாள்; இவளை ‘எமன்’ என்று தான் கூற வேண்டும். இது முதல் ரகம்; வேளைக்குச் சோறு சமைக்கமாட்டாள். கேட்டால், “நான் ஏன் சமைக்க வேண்டும்? அடுப்பு ஊதவா? என்று கேள்விகள் தொடுப்பாள்” இவள் இரண்டாவது ரகம்; இவளை என்ன என்று கூறுவது? ‘தீராத நோய்’ என்று தான் இயம்ப வேண்டும். சமைத்து வைப்பாள்; இதைப் போட்டுச் சோறு போடமாட்டாள். கேட்டால் “அதுகூட நீ போட்டுக் கொள்ளக் கூடாதா?” என்று அடம் பிடிப்பாள். இவளைப் ‘பேய்’ என்றுதான் கூற முடியும். இந்த மூவரும் கொண்டவனைக் கொல்லும் படையாவர்.

ஒருத்தியை மணந்தான் அவள் அழகி என்பதால்; அவளை அணைந்தான்; அவள் இவனை விட அழகனைத் தேர்ந்து ஓடிப் போய்விட்டாள். மற்றொருத்தியை உடனே மணந்தான். அவள் நோயாளி; இவனுக்குச் செலவு வைத்துவிட்டுச் சென்று மறைந்தாள். நாள் சிலகூட ஆகவில்லை. ‘மண மேடை’ என்ற விளம்பரத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கிறான். இவனைப் போல அறிவிலி யாரும் இருக்க மாட்டார்கள். இனிப் பணக்காரி என்று ஒருத்தியைத் தேடுவான்; அவளுக்கு இவன் ‘எடுபிடி’ ஆவான். கடைசிவரை இப்படிப் பட்டவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான். இருப்பார்கள். பெண்டாட்டி இல்லாமல் இவர்கள் வாழமாட்டார்கள். கேட்டால் “ஒன்டிக் கட்டையாக எப்படி வாழ்வது?” என்பார்கள், படட்டும் துயரம். இவர்களைத் திருத்தவே முடியாது. தவம் செய்து அறிவு தேடித் தனித்து இருந்து அமைதியாக வாழ்வது மிக உயர்ந்த வாழ்க்கை. இது தலையாய வாழ்வு. அடுத்தது மனைவி. பின் மக்கள் இந்த வட்டத்துள் அகப்பட்டு உழல்வது. இரண்டாம் தரமான வாழ்க்கை.இதற்கு இல்லறம் என்று பெயர் கொடுத்துச் சிறப்பிக்கின்றனர். மூன்றாவது உழைப்பு இன்றித் தன்மானம் விட்டு யார் பின்னாலாவது சென்று அடிபணிந்து அடிமையாக வாழ்தல்; இது கடைநிலை வாழ்க்கை.

விதை ஒன்று போட்டால் கரை ஒன்று காய்க்காது. இதுவும் இதற்கு நிகரான ஓர் உவமை. மற்றொன்றையும் சொல்லி முடிக்கிறோம். நெல்விதை போட்டால் அதே ரகம்தான். நெல்லூர் அரிசி என்றால் அது வேலூரில் விளையாது. அதுபோல் ‘தந்தை அறிவு மகன் அறிவு’ என்று நாலடியார் கூறுகிறது. எனவே மகன் அறிவாளியாக இருக்க அவன் தந்தையும் ஒரு காரணம் என்பது தெரிகிறது. இது வருணாசிர தருமத்தின் ஒரு பக்கம்; தந்தை சிற்பியாக இருந்தால் மகன் கையில் சிற்றுளி பிடிப்பான்; வித்தியாசம் காலம். சில சில வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் அப்பனைத் தோல் உரித்து போட்டது போல அவன் மகன் இருக்கிறான் என்று பேசக் கேட்கிறோம். இஃது எப்படி? சிந்தித்துப் பார்க்கவும்.

யார் எப்படி என்று கேட்டால் உருப்படியான பதில் கூற, முடியாது. இன்று வாழ்கின்றவர் நாளை தாழ்வோர்; சொல்ல முடியாது. இன்று கோடிக்கு உரியவர் நாளை அவர் ஊர் தெருக்கோடிக்குப் போவதும் சகஜம்தான். ‘அறிவு மேதை’ என்றாலும் ஏதாவது அவசரப்பட்டுச் சில உண்மைகளைத் தெரிவிக்கிறான். உலகம் தாங்காது; அவன் தலைக்கு விலை பேசுவது இன்றைய வெறியாட்டு. யார் எப்படி ஆவார்கள் என்று கூற முடியாது. குபேரன் குசேலனாக மாறலாம்; குசேலன் குபேரனாக மாறலாம் என்று கூறுகிறார்கள். எதுவும் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. இதை வைத்துத்தான் இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை என்று பட்டின்த்து அடிகள் ‘யாரையோ நினைவில் நிறுத்தி இவ்வாறு கூறி இருக்கிறார். எல்லாம் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. நிலவரம் அப்படி; பங்குச் சந்தை விவரம் இப்படி.

அவன் செஞ்சிக் கோட்டை வாலிபன். இவன் வஞ்சிக் கோட்டை இளையவன். இருவரும் ஒரு சாலை மாணாக்கர். ஒரே தட்டில் சோறு, கட்டில் மட்டும் வேறுபட்டன. காரணம் சொல்லத் தேவை இல்லை. காலம் அவர்களைப் பிரிக்கிறது. பிரிந்துவிட்டார்கள். ஒருவன் கோட்டையில் அமைச்சர் பதவி; மற்றவன் எல்லாம் நஷ்டப்பட்டு ஒன்றும் இல்லாமல் படம் எடுத்து 'போண்டி' ஆனவன்; ஆண்டியாகிவிட்டான். அமைச்சன் இவனுக்கு நண்பன். அமைச்சனைப் பார்த்து உதவி கேட்கச்செல்கிறான். அங்கே ஒரு பி.ஏ.; பட்டதாரி அல்ல; P.A என்பதைத் தமிழில் இப்படித்தான் சொல்கிறார்கள். “ஐயாவைப் பார்க்க இயலாது. அதற்கு முன் அனுமதி தேவை” என்கிறான். இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நண்பன் நடராசன் என்று போய்ச் சொல்” என்று அனுப்புகிறான். “பார்க்க முடியாது” என்று பதில் சொல்கிறான். அன்று ஓசியில் சிகரெட்டுப் பிடித்த இந்தக் காசி விசுவநாதன் இன்று அமைச்சன்; இவன் மனம் நொந்து வீடு திரும்புகிறான். மனைவி கேட்கிறாள் “வெட்கமில்லையா? நண்பன் என்று அலட்டிக் கொண்டாயே” என்று அவள் நையாண்டி செய்கிறாள். அந்த அமைச்சு நடந்து கொண்டது சரியாகபடவில்லை. இவர்களை மாற்றவே முடியாது. பதவியில் உயர்ந்தவர் உதவி செய்யாமல் இருப்பது அவர்களுக்குச் சிறுமை; சீர்கேடு என்று நாலடி நவில்கிறது.

பூச்சூடி வந்த பூவை; அவள் ஊர் புதுவை; அவள் செய்து கொண்டாள் சிலரை வதுவை; அவள் இப்பொழுது விதவை. அவள் திறந்து வைக்கிறாள் கதவை. இன்று அவள் யாருக்கும் உரிமை இல்லை. அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவள் அழகில் மயங்குகிறான்; உள்ளதை இழக்கிறான்; பொருள் வற்றிவிட்டது; அவள் புதுவெள்ளம்; அதில் அவன் அடித்து செல்லப்படுகிறான். பொது மகளிர் உறவும் புது வெள்ளத்தில் வரவும் ஏறக்குறைய ஒன்றுதான். அவை நீடித்து நிற்பவை அல்ல; எனவே பூவையரைக் கண்டு மயங்காதே; புதுமை கண்டு மருளாதே.