நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/38. பொதுமகளிர்

விக்கிமூலம் இலிருந்து

38. விலைக்கு எளியர்
(பொது மகளிர்)

விளக்கு எரிய நெய் தேவை; அணையாமல் இருக்க அவ்வப்பொழுது அது வார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். விலைக்கு உரிய மகளிர் அவர் உறவுக்கு அவ்வப்பொழுது பணம் தேவை. காசு அது இல்லை என்றால் அவள் கால் துசுக்கும் மதிக்கமாட்டாள். அவள் வேசி; அதைப் பற்றிப் பேசிப் பின் ஏசி எதுவும் பயன் இல்லை. அவள் நேசம்; அது காசு.

காசு இருந்தது; அவள் உறவுமாக அற்று விளங்கியது. உயிரினும் இனியன் தான் என்றாள். “மலை உச்சியா கவலை இல்லை. அதையும் நச்சி ஏறி வருவேன்” என்றாள். “செங்கோடு எனினும் அதனோடு உயர்வேன்” என்றாள். காசு அழிந்தது; தொட்டுப் பார்த்தாள்; அது ஒலிக்கவில்லை; “மலை உச்சி” என்கிறான். 'அய்யோ என் கால் வலிக்கும்” என்கிறாள். “நடக்க இயலவில்லை; முடக்கு வலி” என்கிறாள். அடக்கமான பதில். “அடிப்பாவி நீ உருப்படவேமாட்டாய்”.

“அங்கண் விசும்பில் தேவர்கள் தொழும் செங்கண்மால்” என்று வந்து செப்புகின்றனர். அவள் ஒப்புக் கொள்ளவில்லை. “யாராயிருந்தாலும் இங்கே நுழைவுச் சீட்டு நோட்டுக் கட்டு; அதைக் கேட்டுப் பின் வந்தவருக்கு வழி காட்டு” என்கிறாள்.

கட்டிப் பொன் இல்லை என்றால் அவளைக் கட்டித் தழுவ அவள் இடம் தரமாட்டாள்; பட்டு உடை உடுத்திப் பகட்டாக வாழ்ந்தவள். அவன் இன்று தாழ்ந்துவிட்டான் என்றாலும் அவனுக்கு அங்கு இடமில்லை. அழகன்தான் என்றாலும் அவள் சிறிதும் இளகாள். செக்கிழுத்த சிதம்பரம் என்றாலும் மதிப்பில்லை. ‘செக்குக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்றால் அவன் மக்காக இருந்தாலும் அந்த ‘சக்கு’ என்ற அந்தப் பெண் பக்குவமாய் அவனிடம் பழகிப் பணம் பறிப்பாள். அது அவள் குணம்.

பாம்புக்குத் தலை காட்டும்; மீனுக்கு வால்காட்டும்; அது விலாங்கு மீன்; வந்தவரை நாளைக்கு என்று நாள் சொல்லி அனுப்பமாட்டாள். முடிவெட்ட அழைத்து உட்கார வைத்துப் படி என்று கொடுப்பாள் அங்கே பழைய நாளிதழ். அவனை மொட்டை அடித்து விட்டு அனுப்பி கீயூ வரிசையில் யார் ‘வியூ’ என்று அழைத்து அவர்களை அமர்த்துவாள்; சமர்த்து; சாதுரியம் மிக்கவள்; ஆளுக்கு ஏற்றபடி அவள் தளுக்கு; குலுக்கு; அவற்றைக் கொண்டு அவர்களை மகிழச் செய்வாள். அவள் மகிழம்பூ; அது அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப வீசும் மணம் என்பர்.

“பொன்னிற் பதித்த கல் நான்; உன்னை விட்டுப் பிரியேன்” என்றாள். அவளுக்கு அந்த உவமைக்காகவே சரடு ஒன்று வாங்கித் தந்தான். “அன்றில் பறவை நான்; பிரியேன்” என்றாள். இப்படி அவள் பேசிய காதல் உரைகள் பலவற்றில் மயங்கிவிட்டான். ‘அவள் உயிர்; நான் உடல்’ என்று அயர்ந்தான். இப்படி அவள் புதுப்புது உவமைகள் எழுதித் தந்தாள்; அன்று அவள் கவிதை; இன்று அரளி விதை; ஆட்டுக் கிடாய்போல்


12 முறுக்குக் காட்டுகிறாள். இந்தக் கிறுக்கு அவளிடம் காண்கிறான். அதற்குக் காரணம் அவள் செல்வச் செறுக்கு அழகுத் தருக்கு தொழில் மிடுக்கு.

காட்டுப் பசுபோலக் குழைந்தாள்; பழகினாள்; அழகினாள்; கேட்டுப் பொருள் பெற்றுவிட்டாள். இன்று பச்சைக் கொடி காட்ட அவனிடம் பசுந்தழை இல்லை; அவள் இச்சைப்படி இருந்த மிச்சமெல்லாம் கொட்டி அழுதுவிட்டான். அவன் வாழ்வு பழுது ஆகிவிட்டது. இந்த ஊரார் அவனைத் தொழுது வாழ்ந்தவர் இன்று புழுதி என்று அவனைத் துாற்றிப் பேசுவர். அவன் வாழ்வு பழுது ஆகிவிட்டது; பாழ்பட்டது அவன் வாழ்வு.

சின்ன மனுஷன் அவன் சீரழிந்து விட்டான்; அவன் வாழ்வு பின்னப்பட்டுவிட்டது. கன்னிப் பெண் என்று கருத்து இழந்தான்; கவிதைப் பெண் என்று அவள் ரசிகையானான். இன்று பிறர் கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு அவள் கைக்கு எட்டியவரை அளந்து கொடுத்தான்; பெருமை இழந்தான்; சிறியவன் ஆனான்.

உள்ளத்தில் கள்ளம்; உதட்டில் அன்பு மொழி வெள்ளம்; இப்படி இருவேறு நிலை. பிறரை மயக்குவது அவர்கள் கலை; அவர்களுக்குப் கொடுப்பது அதிக விலை; பேசுவது மானம்; நடத்துவது இழி தொழில்; ஏசுவது பிறர் செயலை; காசுவது தம் உடலை; அதை அடைய விரும்புகிறான் இந்த விடலை; அந்த உடல் சிறிது நேரத்துக்குக் காட்சி; விரும்பினால் அஃது ஆட்சி; பலருக்கும் பகிர்ந்து அளிப்பது அவள் மாட்சி, இவள் மனம் பல வகைப்பட்டது. இதற்குத் தேவை இல்லை சாட்சி.