நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/6. துறவு

விக்கிமூலம் இலிருந்து

6. கூறாமல் சந்நியாசம் கொள்
(துறவு)

இருள் உன்னைச் சூழ்ந்து கிடக்கிறது; அதை நீக்க ஒளிக்கதிர் தேடுகிறாய்; குச்சி கொண்டு கொளுத்துகிறாய்; குத்துவிளக்கு எரியவைக்கிறாய். கும்மிருட்டுக் கம்முகிறது. ஒளி வீசுகிறது. மறுபடியும் விளக்கு அணைகிறது; இருள் சூழ்கிறது; இது என்ன விளையாட்டு? சிறுவர் விளையாடும் கண்ஆம்மூச்சி; விளையாட்டா? ஒளி தவம்; இருள் மருள்.

தவம் செய்கிறான்; அவன் பாவம் நீங்குகிறது; தவம் கெடுகிறது; பாவம் வந்து சுடுகிறது. இதுதான் இந்த மின்மினி விளையாட்டு; கண்மணி பாவம் செய்யாதே; தவத்தை மேற்கொள்.

அவன் அறிவாளி; சிந்தித்துத்துப் பார்க்கிறான்; ஞானம் பெறுகிறான்; “செல்வம் நிலைக்காது; நோய் விலக்கினாலும் அவனையே இலக்காகக் கொள்ளும் நண்பன்; ஒட்டிக் கொண்டு உறவாடும் இளைஞன்; மூப்பு அவனுக்கு யாப்பு: அஃது அவனை இறுகக் கட்டி நடமாடச் செய்யாமல் அடக்கி வைக்கிறது சாக்காடு அவனை அழைக்கிறது. இந்த நான்கு செய்திகளையும் எண்ணிப் பார்க்கிறான். நண்ணுகிறது ஞானம். விளைவு அவன் இப்பொழுது துறவி.

தம் கடமை எது என்று எண்ணிச் செயல்படுகிறான். அவன் எதற்குக் கவலைப்பட வேண்டும்? கவலைக்கே அச்சம்தான் காரணம், சாத்திரங்களை நாடுவதும் கோத்திரங்களைத் தேடுவதும் துறவிக்குத் தேவை இல்லை. துறவிக்குக் கவலை ஒரு துரும்பு; எதற்கும் அவன் கவலைப்படவே மாட்டான், ஆவது ஆகட்டும், போவது போகட்டும் என்று அவன் நினைக்கிறான்; ‘நாளை’ அதனை அவன் நம்புவதில்லை; ‘நேற்று’ அது பழங்கதை; ‘இன்று’ அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

கட்டி வைத்த வீடு, கடன்காரன் ஒற்றி வைத்ததற்காகப் பற்றிக் கொண்டான். இளமை இன்பம் செய்தது; ஆனால் அஃது அவனை விட்டு நாள் ஆக ஆக அகன்று செல்கிறது. எழில் மிக்கவன் என்று பொழிலில் சந்தித்த அழகி ஒரு காலத்தில் பேசினாள். வனப்புமிக்கவள் என்று கனத்த மொழியில் இவனும் சாதித்தான்; இருவரும் அது கற்பனை என்று அறிகின்றனர். ஈட்டி வைத்த புகழ் இவை எல்லாம் மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்குகின்றன. மறுபடியும் இந்தப் பற்றுகள்! தேவைதானா? துறவு என்ற நிலை அடைந்துவிட்டால் இந்தச் சின்ன சின்ன ஆசைகள் அவனைத் தின்னத் தொடங்குவதில்லை. அவன் வாழ்வு பின்னப்படுவதில்லை.

இன்பம் தேன் துளி; மேலே தேன் கூடு; கீழே பாழும் கிணறு, மரத்தின் விழுதுகள் அவற்றோடு பாம்பின் தொகுதிகள், சொட்டும் தேன் அவன் நாவிற்குச் சுவை தருகிறது; என்றாலும் மனம் ‘திக்கு திக்கு’ என்று அடித்துக் கொள்கிறது. எல்லாம் இந்தச் சிறு துளிக்குத்தான் அவன் செய்யும் தகிடு தத்தங்கள்; தாள மேளங்கள். எண்ணிப்பார்த்தால் இந்தப் பாசம் என்பதைக் கயிறாகக் கொண்டு தொங்கமாட்டான். கிணற்றில் வீழ்ந்து சாகமாட்டான். இவற்றை விட்டு வெறியேறிச் சுதந்திரப் பாதையில் நடப்பான்.

இனியும் தாமதித்து என்ன பயன்? இளமை விணே கழிகிறது; நோயும் மூப்பும் உடன்பிறப்புகளாக இணைந்து வந்து சேரப் போகின்றன. அவற்றின் நண்பர்கள், இருமல், பொருமல், மடித்து வைத்த மருந்துப் பொட்டலங்கள், டானிக்குகள், அவற்றை ஊற்றிக் கொடுக்க ‘வெள்ளை ரோஜாக்கள்’, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத் தப்பித்துக் கொள்பவன் தான் அறிவாளி; பேசாமல் சந்தியாசம் கொள். எந்தக் கவலையும் வராது; பற்றுகள் அணுகா.

அறிமுகம் ஆனவன்தான்; அதனால் தேடி வந்து அழைப்பிதழ் தருகின்றான். மணவிழாவிற்கு வருக என்று. “தனியாக இருந்து நீ இனித் துணையாக ஒருத்தியைத் தேடுகிறாய். இதன் அணையாக நீ எதைச் சாதிப்பாய்?” என்று கேட்கிறேன். “நன்மகனைப் பெற்று நானிலம் வாழ்விப்பேன்” என்கிறான். “அவள் மலடி ஆகிவிட்டால்” என்று வினா எழுப்புகிறேன். “என் செய்வது?” என்று கேட்கின்றான் “பொன் செய்வது” என்று புன்முறுவல் பூக்கின்றேன். அடுத்துத் தக்க வருவாய் இல்லை என்றால் எப்படி வாழ்வாய்?’ என்று கேட்கிறேன்.” 'இந்தச் சிக்கலில் அகப்படாமல் விலக வழி யாது?” என்கிறான். “பேசாமல் சந்நியாசம் கொள்! இது தான் நாலடி சொல்கின்ற ஓரடி”.

“மலை குலைந்தாலும் தன் நிலைகுலையாத மாண்பு உடையவரே தவத்தை மேற்கொள்வர். நெஞ்சு உறுதி இல்லை என்றால் தவத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் எண்ணமாட்டார். இல்வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணற்க, துறவும் கடினமானதே; நல்லொழுக்கம் காத்துத் துறவுபேண வேண்டும். மேனகையைக் கண்டு நீ நகைக்கத் துவங்கினால் உன் வாழ்வு பிறர் ஏளனத்துக்கு ஆளாக அமையும்.”

ஒருகன்னத்தில் உன்னை அறைந்தால் மறு கன்னத்தை அவனுக்குக் காட்டு. “இறைவா! அவனை மன்னித்துவிடு” என்று பாவமன்னிப்புக் கேள். அவன் பண்பு கொள்ளுவான்; பணிவுபெறுவான்; திருவள்ளுவன் ஆவான்.

அருள் உள்ளம் கொண்டு அனைவரிடமும் பழகுதல் சிறந்த துறவறமாகும். கண் பார்க்கத் துடிக்கிறது; செவி கேட்கத் துடிக்கிறது; முக்கு நுகர்கிறது. மெய் பொய்யை நாடுகிறது. ஐந்து புலன்களும் உன் கட்டுக்கு அடங்காமல் காட்டு எருமையாகத் திரிகின்றன. இவற்றை நல்வழிப்படுத்திப் புன்மை அகற்றினால் நிச்சயம் நீ வீடு பெறுவாய்.

மனம் காத்தல் தூய்மைக்குவழி; அதுவே துறவுக்குத் திறவுகோல்.

இன்பம் இழுத்துப் பிடிக்கிறது; அது உன் வழியைத் தடுத்து நிறுத்துகிறது. நீ செல்லும் பாதை நேர்வழி, இன்பம் உன்னைத் தடுக்கும் பேர்வழி: அதனைப் பொருட்படுத்தாமல் கடமையை மேற்கொள்க. அது கடவுள் நெறி.

நாவின் சுவைக்கு அடிமையாவர் அவர் வெறியர்; பூவின் சுவைக்குப் பின்போவார் அவர் பூஜ்ஜியர்; நாதம் அஃது ஏதம்; உலக ஆசைகள் உன்னை விழுங்கும் பூதம். ஏணிப்படிகள் ஏறிச் சொர்க்கம் அடைய வேண்டும்; நீ ஏன் இப்படிப் பாம்பின் வாயில் அகப்படுகிறாய். துறவு கொள்க; அஃது உன்னை உயர்த்தும்.