நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/7. சினம்

விக்கிமூலம் இலிருந்து

7. மதங்கொண்ட யானை
(சினம்)

சினம் என்பது மதங்கொண்ட யானை; அதை அடக்கி ஆண்டால் அது பணிந்து நீ உயர ஏற வழிவகுக்கும். யானை மீது பவனி வர இந்த உலகம் உன்னைக் கண்டு பணியும்; பிறர் பகை தணியும். சினத்தை எப்படி அடக்குவது? கொசு தொல்லைதான். அதற்காக நீ வீட்டையே கொளுத்த முடியுமா? ஈ உன் கையில் உட்காருகிறது; அதற்காக அதனைத் துரத்த நீ உன் கையை வெட்டிக் கொள்ள முடியுமா? பிறர் தரும் தொல்லைகள் அதற்காகக் கடக்க வேண்டும் சினத்தின் எல்லைகள். சினம் நல்லது அன்று.

வீட்டில் பற்றாக்குறை; வெளியே தொடர்ந்து வரும் தொல்லைகள்; அவற்றிற்கு இல்லை எல்லை; சுமை தாங்கித் தாங்கி முதுகு வளைந்து விட்டது. “படமுடியாது இனித் துயரம், பட்டதெல்லாம் போதும்” என்று உயிர்விடத் துணிவது அவசரம், ஆவேசம், இது வாழ்க்கையைச் சினப்பது; அறிவுடையவர்கள் எதையும் சீர் தூக்கிப்பார்ப்பர். துன்பம் உலக இயற்கை; அதற்காகப் பொறுமையை இழக்காமல் யார் மீதும் சினக்காமல் தன் கடமை மீது கருத்து ஊன்றுவர்.

“யாகாவாராயினும் நாகாக்க” என்று சோ காக்கும் வழி கூறினார் வள்ளுவர். சோ காக்க என்று கூறுவதால் அவரையும் “சோ” என்று கூறலாம். இவர் அறிவாளி; கோமாளி அல்லர், பிறரை வருத்தும் சொற்களை அறிவுடையார் என்றும் கூறார், காய்தல் அகற்றுக; உவத்தல் கொள்க; வாழ்க்கை சாய்வது இல்லை.

காசுக்கு உதவாத கம்மியர்கள் கண்டபடி பேசுவார். அதற்காக நீ விம்மிப் பொருமுதல் வீண் செயலாகும். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணி அவர்களைத் தெருட்டுவது கருதி அறிவுரை கூறவேண்டாம். அவர் மீது சினந்து பயனில்லை. மேன்மக்கள் பொறுமையைக் காட்டுவர். கீழ் மக்கள் சிறு சொல் கூடப் பொறுக்கமாட்டார்கள். அடக்கம் என்பது யாது? முடங்கிக் கிடந்து ஒடுக்கம் கண்ட முதியவர் கொள்ளும் நடுக்கம்; அஃது அடக்கம் அன்று.

கோடிக்கணக்கில் குவித்த அவன் தன்னைத் தேடி வருவோர்க்கு ஜோடிப் புடவை தருகிறான் என்றால் அது கொடை அன்று; ஊர்ப் பெருந்தனக்காரன்; செருக்கு மிக்கவன்; அவன் காந்தி சீடன் ஆகினால் அஃது உண்மையில் வியப்புச் செய்திதான். வலிவுள்ளவன் மெலிவு காட்டுவது பாராட்டத்தக்கது. இல்லாதவன் கொடை மதிக்கத்தக்கது.

குடிப்பெருமை உடையவர் என்றும் கண்ணியமும் கட்டும் கொண்டு நடப்பர். நற்குடிப் பிறந்த நயத்தால் நாகமெனச் சீறுபவன் வேகம் அடங்கி விரும்பத்தக்கவன் ஆகின்றான். மந்திரத்துக்கு நாகம் கட்டுப்படுகிறது. குடிப்பெருமைக்குத் தனிமனிதன் விட்டுக் கொடுக்கிறான். உயர்குடிப் பிறந்தவர்கள் சினம் காட்டுவது இல்லை.

“வெற்றிக்கு வழியாது? அதனைக் கற்றுத் தருகிறது நாலடியார். எதிரி அவன் கண்டபடி பேசினாலும் நீ பதறி அவனை எதிர்க்காதே. தீமைகளைக் கண்டும் காணாமலும் விட்டுவிடு; இஃது உனக்கு ஏற்றம் தரும்; இது நாலடியார் சொல்லும் மாற்றம்.”

“உன் நண்பன்தான்; நீ சொன்ன சொற்களை அவன் சுடுசொற்களாக ஏற்கிறான்; தீயினால் சுட்டபுண்; அதன்வடு மாறவில்லை. வெந்நீர் தணிந்தால் தண்ணீர் ஆகிறது. பெரியோர் சினம் வெந்நீர், அஃது ஆறாமல் இருக்காது; விரைவில் குளிர்ந்துவிடும்.”

“நன்றி ஒருவர் செய்தக்கால் அந்நன்றியை மறவாமை நயப்புடையதாகும். அடுக்கிய இடுக்கண்கள் பல செய்திருந்தாலும் அவற்றை வடுக்களாகக் கொள்ளார் மேலோர். நாய் கடிக்கிறது என்றால் அதனைத் திருப்பிக் கடிக்கவா முடியும்? கீழ் மகன் தடித்துப் பேசுவான். அதற்காக மடித்துத் திருப்பித் தாக்கத் தேவை இல்லை. அவன் உன்னை மடையன் என்று கூறிவிட்டால் அதற்காக அவனைக் கடையன் என்று கழறாதே. அவசரப்பட்டு ஆராயாமல் சொல்லி இருக்கிறான். அவன் தெளிவு பெற்றால் தவறு உணர்வான். திருப்பித் தாக்கி விட்டால் அவன் கூற்று மெய்யாகிவிடும்; அதற்கு நீ துணை செய்யாதே; சால்பு கெடும்; சினத்தை விடுக.”