நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/எங்கிருந்தோ வந்தது

விக்கிமூலம் இலிருந்து

82. எங்கிருந்தோ வந்தது!

மூணாறிலிருந்து உடுமலைக்குப் புறப்படும் கடைசி பஸ் புறப்பட்டு விட்டது. எஸ்டேட் வாசலிலிருந்த டீக்கடையில் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. டீக்கடை ராமுண்ணி நாயர் ஓய்வு ஒழிச்சலின்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான். நாயர் டீக்கடையில் வியாபாரம் உச்ச நிலையை அடையும் நேரம் அதுதான். தோட்டத் தொழிலாளிகள் கொழுந்து போட்டு விட்டு, அன்றாடக் கூலியை வாங்கிக் கொண்டு வெளி வரும் போது, நாயருடைய கடையில் தேங்காய் எண்ணெயில் வறுத்த நேத்திரங்காய் வறுவல் கமகமத்துக் கொண்டிருக்கும்.

அரையணாவுக்கு வறுவலையும், ஒரு டீயையும் சாப்பிடாமல் அங்கிருந்து நகர எப்படிப்பட்ட ஆளுக்கும் மனம் வராது. நாயர் கடைக்கு விளம்பர போர்டு கிடையாது. உட்காரப் பெஞ்சுகள் கூடக் கிடையாது. வாசலில் சொதசொதவென்று ஈரம் கசிந்து கொண்டிருக்கும். ஆனாலும் வியாபாரத்துக்கு மட்டும் குறைவில்லை. நாயர் கடை வியாபார ரகசியமெல்லாம், அந்த நேந்திரங்காய் வறுவலின் மணத்துக்குள்தான் அடங்கியிருந்தது.

அந்த இடம் மூணாறில் ஒரு கேந்திர ஸ்தானம். தேயிலைத் தோட்டங்களின் பிரதேசத்துக்கு நடுமையான சாலை அது. ஆல்வாய், உடுமலை, பொள்ளாச்சி முதலிய வெளியூர் பஸ்கள் வந்து நிற்குமிடம். புறப்படுமிடமும் அதுதான்.

அப்போது மாலை ஆறரை மணிக்கு மேலிருக்கும். பிசுபிசுவென்று இளஞ் சாரல் தூறிக்கொண்டிருந்தது. தொழிலாளிகள் கூட்டம் குறைந்து விட்டது. சாவகாசமாகக் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு தோட்டக் கங்காணிகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். முதுகுகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் நீண்ட கூடைகளோடு, கூலிக்காரப் பெண்கள் காலனிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஏற்கனவே மேகங்கள் கும்மென்று இருண்டிருந்தன. இப்போது அந்தி இருட்டும் சேர்ந்து கொண்டது. மலை முகடுகளைப் பாலாடை போல் வெண்ணிற மூடு பனி போர்த்திருந்தது. காட்டுக் கோழிகள், மிளா மான்கள், யானைகள் ஆகிய வனவிலங்குகள் தொலைவில் இருப்பதற்கு அறிகுறியான ஒலிகள் மங்கலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

எஸ்டேட்டுகளில் இரவுக் காவலுக்குப் போகும் பாராக்காரர்கள், கரும் பூதங்களைப் போலப் பெரிய பெரிய கம்பளி அங்கிகளைப் போட்டுக் கொண்டு போனார்கள். மலை நடுவே இருந்த மெயின் ரஸ்தாவின் ஜீப்கள், தோட்டத்து லாரிகள், டாக்ஸிகள், சர்வீஸ் பஸ்கள் சதா போன வண்ணமேயிருக்கும். இன்று ரஸ்தாவில் சூனிய அமைதி குடி புகுந்திருந்தது.

ராமுண்ணி நாயர் டீக்கடையை இழுத்து மூடுவதற்குத் தயாராகி விட்டான். மேற்குப் பக்கம் ரஸ்தாவிலிருந்து வந்த ஒரு புத்தம் புதிய ‘ஹில்மன்’ கார் நாயர் கடை வாசலில் வந்து நின்றது. காருக்குள் வேட்டையாடும் துப்பாக்கிகளோடு, வெள்ளைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு வெள்ளைக்கார யுவதியும் வீற்றிருந்தாள். அவருடைய மனைவியாகத்தான் இருக்கவேண்டும். காரை ‘டிரைவ்’ செய்துகொண்டு வந்த ஆள் யாரோ உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர் மாதிரி இருந்தார். தோற்றத்திலிருந்து மலையாளி என்றே அனுமானிக்க முடிந்தது.

“நாயர்...! நாயர்...!”

“யாரு மேனன் ஸாரா?” கடையின் உட்புறத்திலிருந்த ராமுண்ணி நாயர் கேட்டுக் கொண்டே வெளியே வந்தான்.

“என்னப்பா, நீ இன்னும் தயாராகவில்லையா?”

“இதோ ஒரு விநாடியிலே வந்து விடுகிறேனுங்க” என்று கூறி உள்ளே சென்றான் நாயர். கால்நாழிகையில் டீக்கடைக்குள்ளிருந்து வேட்டையாடுவதற்குரிய ஆடையோடு துப்பாக்கி சகிதம் வெளியே வந்தான். டிரைவருக்கு அருகில் நாயர் உட்கார்ந்து கொண்டதும் கார் புறப்பட்டு மூணாறில் சோத்துப்பாறை என்ற மலைக்குச் செல்கிற ரஸ்தாவில் சென்றது.

ராமுண்ணி நாயர் அந்தப் பிராந்தியத்தில் பெயர் பெற்ற விகாரி (வேட்டை நிபுணன்), டீக்கடையோடு வேட்டையாடப் போவதும், வேட்டையாட வருபவர்களுக்கு கைட் (வழிகாட்டி)ஆகச் செல்வதும் அவனுக்கு உபதொழில்கள். அதில் நல்ல வருமானமும் உண்டு.

ன்று மாலையும் அப்படித்தான் ஒரு ‘சான்ஸ்’ அவனுக்குக் கிடைத்திருந்தது. அர்ச் வுட் என்ற வெள்ளைக்காரத்துரைக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று புகுந்து அழித்து வந்தது. நாள் தவறாமல் தொடர்ந்து ஒரு வாரகாலமாக இப்படி யானையால் தோட்டத்திற்குத் தீங்கு ஏற்படவே, ‘அகப்பட்டால் அந்த யானையைச் சுட்டு விடலாம்’ என்று பிடபிள்யூ டி அனுமதி பெற்றார் அர்ச் வுட் துரை. எஸ்டேட் மானேஜரான கோப்பு மேனன் டீக்கடை நாயரைத் துரையின் உதவிக்கு அழைத்திருந்தார்.

எஸ்டேட் அருகில் யானை பழகுகிற இடத்தில் உயர்ந்த மரங்களுக்கு இடையே மூங்கில் கழிகளால் ஒரு பரண் கட்டப்பட்டிருந்தது. அந்தப் பரணின்மேல் இரவு முழுவதும் காத்திருந்து, எப்படியாவது யானையை வேட்டையாடி விடவேண்டும் என்று துரை, மேனன், நாயர் மூவரும் சேர்ந்து திட்டமிட்டிருந்தார்கள். துரையின் அருமந்த மனைவி லில்லி அர்ச் வுட் வேட்டையைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டதால் அவளையும் உடனழைத்துச் சென்றனர். எஸ்டேட் கட்டிடத்தில் இருந்த ‘ஷெட்டில்’ காரை நிறுத்திவிட்டு யானை வேட்டைக்காகப் போட்டிருந்த பரண்மேல் அவர்கள் எல்லாரும் ஏறி நின்றுகொண்டனர்.

நாலைந்து பெரிய சிங்கோனா மரங்களின் கிளைகள் சந்திக்கும் இடத்தில், மூங்கில் கழிகளால் எழுபதடி உயரத்தில், பத்து இருபது அடி நீள, அகலத்துக்கு அந்தப் பரண் அமைக்கப்பட்டிருந்தது. மலைச் சரிவிலிருந்த எஸ்டேட்டுக்குள் மிருகங்கள் எந்த வழியாகப் பிரவேசிப்பது வழக்கமோ, அந்த வழியிலேயே பரண் இருந்தது.

அவர்கள் பரணில் ஏறுகிறபோது ஏழேகால் மணி. ‘கீ-இ-இ’ என்ற சிள்வண்டுகளின் ஓசை அடர்ந்த இருட்டு. நான்கு பேர் கையிலும் ‘டார்ச்லைட்’ இருந்தன. பரண்மேல் மூங்கில் உறுத்தாமல் இருப்பதற்காகக் கித்தான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக விரிக்கப்பட்டிருந்தன. இதனால் சிமெண்டு பூசிய தரையைப் போலப் பரண் சமதளமாகத் தோன்றியது.

எல்லாருடைய துப்பாக்கிகளையும் வாங்கிப் பரணின் ஒரு மூலையில் சேர்த்து வைத்திருந்தான் நாயர். அர்ச்வுட்டும் திருமதி அர்ச்வுட்டுமாக ஆங்கிலத்தில் ஏதோ சுவாரஸ்யமான சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தனர். ராமுண்ணி நாயரும் கோப்பு மேனனும் பரணின் மற்றொரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, அடர்ந்து புதர் செறிந்த வழியில் யானை வருகிறதா என்பதை ‘டார்ச்லைட்’டை அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நாயர், அதை நீ நேரில் பார்த்ததில்லையே? யானை படு முரடு. அதோடு இப்போது அதுக்கு மதம் பிடித்த நிலை, உயரமே பன்னிரண்டடி சொல்லலாம். கொம்புகள் இரண்டரை அடிக்குக் குறையாது.”

“இதைவிட முரட்டு யானையெல்லாம், இந்த நாயர் கைத்துப்பாக்கியாலே குண்டு வாங்கிச் செத்துருக்குதுங்க. இதென்ன பிரமாதம்!”

“அது என்னமோ நாயர்! இன்றைக்கு இதைக் கொன்று தொலைக்காமல் திரும்புவதில்லை என்று துரை கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தப் பதினைந்து நாளைக்குள்ளே மட்டும் இந்த யானையினாலே, பத்தாயிரத்துக்கு மேல் நஷ்டம் என்றால் பார்த்துக் கொள்ளேன்?”

“யானை மட்டும் இன்றைக்கு வரவேண்டும். மூன்று பேரும் துப்பாக்கியை எடுக்க வேண்டியது. அது வந்ததும் குறி பார்த்து நான் ‘ரைட்’ கொடுத்ததும் ‘பயர்’ பண்ணிவிட வேண்டியது.”

“மூன்று குண்டுகளையும், அதற்கும் அதிகமாக வாங்கிக் கொண்ட பின்னும் அது தறிகெட்டு ஒடுமே, அப்பா!”

“அதை ஓடவிடாமல் செய்வதற்கு ஒரு வழி இருக்குதுங்க. தொடர்ந்து மர்ம ஸ்தானங்களாகப் பார்த்து நான் சுடுவேன். எப்படியும் அது விழுந்துதான் ஆகனும்.”

“உனக்கில்லாத சாமர்த்தியமா, நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். நீதான் வேட்டைக்கென்றே பிறந்தவன்.ஆயிற்றே! துரையின் நன்மதிப்பை அடைய உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.”

“அட! இதென்ன பிரமாதமுங்க? மூன்றாம் வருஷம் நாகர்கோவில் பக்கத்திலே, பாலமோர் எஸ்டேட்டிலே ஒரு வேட்டைக்குப் போயிருந்தேன். என் கையிலே இருந்ததெல்லாம் ஒரே ஒரு இரட்டைக் குழாய் ‘ரைபிள்’தான். இப்போதாவது பரண்மேல் இருக்கோம், அப்போ தரையிலே ஒற்றையாக நேருக்கு நேர் நின்றே, இரண்டு ‘கொம்பன்’களைச் சுட்டுத் தள்ளினேன். ‘பாலமோர்’ எஸ்டேட்டே ஆச்சரியப்பட்டது!”

“ராமுண்ணி, நீ சொல்லவா வேண்டும்? உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன?”

“இருங்க! இருங்க! புதரிலே ஏதோ சலசலப்புக் கேட்கிறாப் போல் இருக்கிறது. அந்த டார்ச்சை இப்படிக் கொடுங்க.”

ராமுண்ணி நாயர் கோப்பு மேனன் கையிலிருந்த டார்ச்சை வாங்கி வழிமேல் அடித்துப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை.

துரை ஆங்கிலத்தில் கோப்பு மேனனிடம் ஏதோ கேட்டார். மேனன் அதற்கு ஆங்கிலத்திலேயே மறுமொழி கூறினார். அடுத்து திருமதி துரையும் தனது கீச்சுக் குரலில் ஏதோ கேட்டாள். மேனன் அதற்கும் பதில் சொன்னார்.

“ஒன்றுமில்லை! நேரம் கழிந்துகொண்டே இருக்கிறதே? இன்று அது வராதோ? என்று கேட்டார். ‘வழக்கப்படி இன்றைக்கும் வந்துதான் தீரும்’ என்று நான் பதில் சொன்னேன். ‘மிருகங்கள் வழக்கமான பாதைகளை ஒரு போதும் மறக்க மாட்டா’ என்று படித்திருப்பதாக ‘அம்மா’ கூறினார்கள். ‘அது உண்மைதான்’ என்றேன் நான்” என்றார் மேனன், நாயரிடம்.

டசடவென்று மரங்கள் முறிபடுகிற ஓசை கோடைக்காலத்து இடிபோல ஒரு யானையின் பிளிறல். இருளை ஊடுருவிக்கொண்டு வந்த அந்தப் பயங்கரப் பிளிறலும் மரங்கள் முறிபடுகிற ஓசையும் பரண் மேலிருந்ததால் யாவரையும் குலை நடுங்கச் செய்தன. திருமதி அர்ச்வுட், துரையின் முதுகுக்குப் பின்னால் ஒடுங்கி மறைந்து கொண்டாள். முகத்தில் வெளிறலும் கண்களில் மிரட்சியுமாக அவள் பயந்து நடுங்கினாள். துரைக்கும் கோப்புமேனனுக்கும் கூட உள்ளுற நடுக்கம்தான். ஆனால் அதை நாயருக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு, தைரியசாலிகளாக நடித்தனர்.

உண்மையிலேயே பயப்படாமலும் நிதானத்துடனும் இருந்தவன் ராமுண்ணி நாயர் மட்டும்தான்.

“சப்தம் போடாமல் இருங்கள். கொஞ்ச அரவம் அதன் காதில் பட்டாலும் போதும் வந்த வழியே திரும்பி ஓடத் தொடங்கிவிடும்; அல்லது கீழே வந்து மரத்தை ஆட்டி அசைத்து நம்முடைய உயிருக்கே உலை வைத்து விடும்.” உடனிருந்தவர்களை எச்சரித்துவிட்டு ஓசைவந்த திக்கை நோக்கி டார்ச்லைட்டின் ஒளியைப் பாய்ச்சினான் நாயா்.

ஏறக்குறைய இருபது கெஜ தூரத்தில் ஒரு சிறு கருங்குன்று கனவேகமாக உருண்டு வருவதுபோல் அந்தக் கொம்பன் யானை அட்டகாசமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. குன்றின் நுனியில் இரண்டு வெள்ளைப் பிறைகள் முளைத்த மாதிரி நீண்ட தந்தங்கள் டார்ச் ஒளியில் மின்னின.

மகா தீரர்களைப்போல பேசிக் கொண்டிருந்த அர்ச்வுட் துரையும் துரையம்மாளும், கோப்பு மேனனும் பரணின் மேல் இருந்த இடம் தெரியவில்லை. மூலையில் பம்மிப் பதுங்கிக் கொண்டு விட்டனர்.

நாயர் அது வந்துகொண்டிருந்த திசையில் விளக்கைப் பாய்ச்சவும், அது சட்டென்று பதினைந்து கெஜ தூரத்தின் வழியிலேயே நின்று விட்டது. அநுபவஸ்தனான தானே தவறு செய்துவிட்டதை நாயர் அப்போதுதான் உணர்ந்தான். ‘டார்ச்’சை அனைத்து ஏற்றியதால் யானை சந்தேகமுறக் காரணமாக நடந்துகொண்டு விட்டோம் என்று தோன்றியது அவனுக்கு கப்பென்று ‘டார்ச்சை’ அணைத்துவிட்டு அவன் பேசாமல் இருந்தான்.

“என்னப்பா நாயர்?... ஏன் லைட்டை அணைச்சுட்டே?” கோப்பு மேனன் மெல்லிய குரலில் அவன் காதருகே முணுமுணுத்தார்.

“உஷ்! பேசாமல் இருங்கள். எல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன். கேட்கிறபோது துப்பாக்கியை மட்டும் அந்த மூலையிலிருந்து எடுத்துக் கொடுங்கள், போதும்...” நாயர் மேனனை எச்சரித்தான். ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தபடி மேனனும் துரையும் வேட்டையில் பங்கு கொண்டு யானையைச் சுடும் முயற்சியில் ஈடுபடுவதை இப்போது அச்ச மிகுதியினால் கைவிட்டு விட்டனர்.

விளக்கொளி நின்று போன பின் கால் நாழிகை அமைதியில் கழிந்தது. ஒருவிதமான சலனமும் ஓசையும் கேட்காததால் யானை நின்ற இடத்தைவிட்டு முன்புறத்திலோ பின்புறத்திலோ நகரவில்லை என்று தெரிந்தது.

சுடுவதற்குக் குறி வசதியாக அமைய வேண்டுமானால் அது இன்னும் அருகில் வரவேண்டுமென்பது நாயர் கருத்து. தாங்கள் உட்கார்ந்திருக்கிற பரணுக்கு நேராக அது வந்தவுடன் விளக்கை அடித்துக் குறி பார்க்கவேண்டும். குறிபார்த்த வேகத்திலேயே அது ஓட முயல்வதற்குள் குண்டுகளைச் சரமாரியாக அதன் உடலில் பாய்ச்சி முடித்துவிட வேண்டும்.

இந்தத் தீர்மானத்துடன் மேலும் சில விநாடிகள் பொறுமையைக் கடைப்பிடித்துப் பரண்மேல் அமைதியாக இருந்தான் அவன்.

‘சொத்’தென்று துப்பாக்கிகளின் மேலே ஏதோ விழுந்த மாதிரி ஓசை கேட்டது.

“மேனன் ஸார்! அது என்ன? துப்பாக்கி மேலே ஏதோ விழுகிறாப்போல ஓசை கேக்குதே?”

“ஒன்றுமில்லை நாயர் மரத்திலிருந்து ஏதோ சுள்ளி முறிந்து விழுந்திருக்கும். நீ காரியத்தைக் கவனி” நாயருக்கும் மேனனுக்கும் இடையில் மிக மெல்லிய குரலில் இந்தச் சம்பாஷணை நடைபெற்றது.

நாயர் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தான். யானை நகரவில்லை.கொம்பை ஆட்டிக்கொண்டு, அமைதியாக நின்ற இடத்திலேயே நிற்பது டார்ச்சின் உதவியின்றியே தெரிந்தது.

மீண்டும் ‘சொத்’தென்ற ஓசையுடனே துப்பாக்கிகளின் மேல் ஏதோ விழுந்தது. நாயர் துப்பாக்கிகளைப் பரணின் வடக்கு மூலையில், மரப் பொந்திற்கருகில் வைத்திருந்தான். இப்பவும் முன்போலவே ஏதாவது சுள்ளிதான் விழுந்திருக்கும் என்று சமாதானமடைந்தான்.

குண்டு வெடிக்கும் குழாய்களை வடபுறம் யானை வருகிற பாதையை நோக்கியும், கைப்பிடிகளைப் பரணின் பக்கமாக இருக்கும்படி துப்பாக்கிகளை வைத்த நினைவு அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது.

மேனனின் உதவியின்றி நாயரே, தான் உட்கார்ந்த இடத்திலிருந்து கை நீட்டி எடுக்கக் கூடிய சமீபத்தில்தான் துப்பாக்கிகள் இருந்தன.

யானை பரணுக்கு அருகில் வரவேண்டியதுதான் பாக்கி. நாயர் துப்பாக்கியைக் கைநீட்டி எடுத்துவிடுவான். துரையின் கையிலும் மேனன் கையிலும் நாயர் கையிலும் தனித்தனியே டார்ச் லைட்டுகள்.இருந்தன. ‘யானை அங்கே வருகிற வரை வெளிச்சம் போட்டு அதை மிரட்டி ஓட்டி விடக் கூடாது’ என்றுதான் பேசாமல் ஒண்டிக் கொண்டு பரணில் இருந்தனர்.

கொஞ்ச நாழிகை ஆயிற்று. யானை பழைய பாய்ச்சலோடு மீண்டும் முன்னேறியது. பரணுக்கு அருகிலும் வந்துவிட்டது. அப்பப்பா! என்ன பயங்கரமான மதவெறி? மலையே அதிர்ந்து போகும்படியாகப் பிளிறிக்கொண்டு, கொம்புகளை ஆட்டியபடியே கீழே வந்து விட்டது. குறி பார்க்கவசதியாக சமீபத்தில் யானை வரவும், நாயர் லைட்டை அடித்துக் குறி பார்த்துக்கொண்டே கையைத் துப்பாக்கியின்மேல் வைத்தான்.துப்பாக்கி அவன் கையில் வரவில்லை.ஆனால், என்ன ஆச்சரியம்?. அவன் தொடுவதற்கு முன்பே தானாகவே எல்லாத் துப்பாக்கிகளும் படீர்படீரென்று வெடித்தன. அத்தனைக் குழாய்களிலிருந்தும் குண்டுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்தன. துப்பாக்கிப் புகையும் அதன் நெடியும் பரண்மேற் சூழ்ந்தது.

யானை முன்னிலும் அதிக பயங்கரமாகப் பிளிறிக் கொண்டுவந்த வழியே திரும்பி ஓடலாயிற்று. ‘இதென்ன மாயமா? சூன்யமா? துப்பாக்கிகளை ஒருவரும் தொடாமலிருக்கும்போதே வெடிக்கின்றனவே! வேட்டைக்கு வாகாக வந்து நின்ற யானை ஒரு நொடியில் தப்பி ஓடிவிட்டது. நாயருக்கு ஏமாற்றம் தாங்க முடியவில்லை.

“வாட்? வாட்!”துரை ஆச்சரியத்தோடு வினாவினார். “என்ன நாயர்? இதென்ன துப்பாக்கி தானாக வெடிக்கிறது!” மேனன் வியந்தார்.

"வாட்-ஏ ஒண்டர்புல் இன்ஸிடெண்ட் (என்ன ஆச்சரியகரமான நிகழ்ச்சி)" - திருமதி அர்ச்வுட் கீச்சுக் குரலில் இரைந்து கத்தினாள். நாயர் ஆச்சரியந் தாங்காமல் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்ததுப்பாக்கிக் குவியலை நெருங்கி அவற்றின்மேல் டார்ச் ஒளியைப் பரவவிட்டான்.

என்ன விந்தை! அவனுக்கு அதைக் கண்டு வியப்பதா? ஆத்திரப்படுவதா என்றே புரியவில்லை!

"அப்போதே - சொத் என்று சத்தம் கேட்டபோதே நினைத்தேன்!" என்று நாயர் முணுமுணுத்தான். மற்ற மூவரும் நெருங்கிப் பார்த்தனர்.

இரண்டு பெரிய உடும்புகள் துப்பாக்கிகளை ஒன்று சேர்த்துக் கட்டிக்கொண்டு அவற்றின் குதிரைகள் இருந்த பக்கமாக அழுத்தி, இறுக்கி இழுத்துக் கொண்டிருந்தன. திட்டமிட்டு முன்னேற்பாட்டோடு செய்த பெரிய காரியத்தை, கேவலம் இரண்டு உடும்புகள் படுதோல்வியடையச் செய்துவிட்டன. அவைகள் எங்கிருந்து வந்தன? எங்கிருந்தானால் என்ன? எங்கிருந்தோ வந்தன; வேட்டை தவறியது தவறியதுதானே!

(1963-க்கு முன்)


நா. பார்த்தசாரதியின் நாவல்கள்
சரித்திர நாவல்கள்

மணிபல்லவம்
பாண்டிமா தேவி
நித்திலவல்லி
வெற்றிமுழக்கம் (உதயணன் கதை)
மகாபாரதம் (அறத்தின் குரல்)
கபாடபுரம்
வஞ்சிமாநகரம்

சமூக நாவல்கள்

பொன் விலங்கு
குறிஞ்சிமலர்
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி (சாகித்திய அகாதமி பரிசு)
துளசி மாடம் (இராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு)
சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு)
ஆத்மாவின் ராகங்கள்
பிறந்தமண்
கோபுர தீபம்
நீலநயனங்கள்

கற்சுவரகள
பொய்ம் முதங்கள்
நெற்றிக்கண்
அனிச்சமலர்
நெஞ்சக்கனல்
நினைவின் நிழலகள
நிசப்த சங்கீதம்
மனக்கண்
அநகிரகா
பட்டுப்பூச்சி
புதுமுகம்





கவிதை

மணிவண்ணன் கவிதைகள்


தமிழ்ப் புத்தகாலயம
பு:எண் 34 / ப.எண்.35. சாரங்கபாணித் தெரு,
காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே
தி.நகர் சென்னை - 600 017 தொலைபேசி-28340495, 28344528
மின் அஞ்சல் : tamiputhakalayam@yahoo.com
வலைப்பக்கம் : http://expage.com/tamilputhakalayam
http://akilan.50megs.com