நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/14. கொற்றவை சாட்சியாக...

விக்கிமூலம் இலிருந்து

14. கொற்றவை சாட்சியாக...

திர்பாராத விதமாகத் தன்னை நோக்கிப் பெருகும் அந்தப் பரிவின் காரணம் அவளுடைய அநுமானத்திற்கும் எட்டாததாகவே இருந்தது. பெரியவர் திருமோகூருக்கு வந்திருப்பதையோ, தான் போய் அவரைச் சந்தித்ததையோ தாயிடம் கூட அவள் சொல்லவில்லை. இரவு நெடுநேரம் உறக்கமின்றி, அவள் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த போதும், “பெண்ணே அந்தி மயங்குகிற வேளையில் புறப்பட்டுப் போய்க் கொற்றவைக் கோவிலில் இப்படி உறங்காமலிருக்க வரம் பெறுவதற்காகத்தான் அவ்வளவு நாழிகை காத்திருந்து வேண்டி வந்தாயா!” என்றுதான் தாயே அவளைக் கடிந்து கொண்டாள். தான் கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகச் சொல்லி விட்டுப் பெரியவர் அனுப்பியிருந்த ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றதைப் பற்றித் தாய் ஐயுறவில்லை என்பதை, அவளுடைய சொற்களாலேயே விளங்கிக் கொண்டாள் செல்வப்பூங்கோதை. மறுநாள் காலை பொழுது புலர்ந்து நீராடி முடித்ததுமே, உரலில் தினை இடிக்கத் தொடங்கினாள் அவள். இப்படி அடிக்கடி அவள் தினை இடிப்பதும் வழக்கமான காரியமே என்பதனால், தாய் அதைப் பற்றியும், அவளை எதுவும் கேட்கவில்லை. பெரியவரே வாய் திறந்து கேட்டிருக்கிறார் என்பதனால், நல்ல செந்தினையாக எடுத்து முறத்தில் இட்டு, நொய்யும், நுறுங்கும் களைந்து புடைத்த பின்பே, உரலில் கொட்டி இடிக்கலானாள். நாவின் சுவைக்கு ஆசைப்பட்டுத்தான் பெரியவர் தேனும், தினை மாவும் கொண்டு வரச் சொல்லித் தன்னை வேண்டிக் கொண்டதாக அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. கசப்பு நிறைந்த காஞ்சிரங் காயையும் வேப்பிலைக் கொழுந்தையும் தின்று உடலை வைரம் பாய்ந்ததாக்கிக் கொண்டிருப்பவர், தேனுக்கும் தினை மாவுக்கும் ஆசைப்பட்டுத் தன்னை வரவழைத்துப் பேசியிருக்க முடியும் என்பதை அவளால் ஒப்புக் கொள்ளவும் இயலவில்லை. வேறு ஏதோ பெரிய வேண்டுகோளைத் தன்னிடம் கேட்பதற்கு ஏற்ற பரிவையும், பக்குவத்தையும் உண்டாக்குவதற்குத் தக்கபடி தான் இருப்பதையும், இல்லாததையும் சோதித்து ஆழம் பார்க்கவே இந்த ஏற்பாடோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது. சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், மிகவும் சிரத்தையாகத் தினை மாவை இடித்துப் பிசைந்தாள் அவள். மாளிகைப் பணியாட்களிடம், நல்ல கொம்புத் தேனாகத் தேடி இறக்கிப் பிழிந்து வருமாறு அனுப்பினாள். பிற்பகலுக்குள் செங்குழம்பாகப் புத்தம் புதிய கொம்புத் தேன் பிழிந்த நுரையோடு வந்து சேர்ந்தது. பதம் பார்த்து அளவாகவும் சுவையாகவும் கலந்து நெல்லிக்கனிப் பிரமாணத்திற்கு உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டாள். தனியே ஒரு சிறிய குவளையில் தேனும் எடுத்துக் கொண்டாள். பெரியவரைத் தேடி அவள் மாளிகையிலிருந்து புறப்படும் போது, பிற்பகல் கழிந்து மாலை வேளை தொடங்கியிருந்தது. முதல் நாளைப் போலவே கொற்றவைக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுத் திரும்பி வருவதாகத்தான் தாயிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. இன்றும் ஆபத்துதவிகள் தன்னைத் தேடி வந்து அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்த்திராமல் அவளே புறப்பட்டிருந்தாள். வழியில் கொற்றவைக் கோயிலை, வலம் வந்து வணங்கிச் செல்லவும் நேரம் இருந்தது. அந்த வழிபாட்டையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு, அப்புறம் ஆலமரத்தடிக்குச் சென்றாள் அவள்.

அங்கே அவள் சென்ற போது, உள்ளே அமர்ந்து கொண்டிராமல் ஆலமரத்தின் விழுதுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக நடந்து உலவிக் கொண்டிருந்தார் பெரியவர். அவளைப் பார்த்ததும், அவரருகே மரத்தடியில் நின்றிருந்த ஆபத்துதவிகள் இன்னும் தொலைவாக விலகிச் சென்று நின்று கொண்டனர்.

“வா, அம்மா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில நாழிகைகளில் நான் கோநகரை நோக்கிப் புறப்பட வேண்டும்” என்றுதான் கூறி வரவேற்றாரே ஒழிய, அவள் கைக்கலசத்தில் இருந்த தினை மாவையோ குவளையில் இருந்த தேனையோ அவர் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஐயா தேனும், தினைமாவும் கொண்டு வரச் சொன்னீர்களே! நானே காலையிலிருந்து மா இடித்துப் பிசைந்து புதுத்தேன் பிழிந்து கொண்டு வந்திருக்கிறேன்” என்று அவள் கூறினாள்; அவருக்கு அது மறந்து போயிற்றா, அல்லது அதைவிடப் பெரிய வேறு ஏதாவது நினைவு அவரைப் பற்றி விட்டதா என்று புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் அவள். அவரோ ஒரு சிறிதும் தயங்காமல், பசுமைப் பாய் பரப்பியது போன்ற அந்தப் புல் தரையில் அப்படியே அமர்ந்து, கீழே உதிர்ந்திருந்த பழுத்த ஆலிலை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரத்தை நீட்டும் ஒரு துறவியைப் போல், அதை அவள் முன் நீட்டினார்.

உடனே அவள் சிரித்துக் கொண்டே, இரண்டு உருண்டைத் தினை மாவை அந்த ஆலிலையில் இட்டுக் குவளையிலிருந்த சிறிது கொம்புத் தேனையும் ஊற்றினாள். அவ்வளவில் “எனக்கு இது போதும் அம்மா! மற்றவற்றை எல்லாம் அப்படியே, அதோ அவர்களிடம் பாத்திரத்தோடு கொடுத்து விடு...” என்று கூறித் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவிகளைச் சுட்டிக் காட்டினார். அவளும் அப்படியே செய்தாள்.

‘தேனும் தினை மாவும் கொண்டு வா’ என்று முதல் நாளிரவு அவர் தனக்குக் கட்டளையிட்டது தன் சிரத்தையையும், உபசரிக்கும் இயல்பையும் சோதிப்பதற்காகத்தான் என்பது இப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. தன்னைப் புரிந்து கொள்ள அது ஒரு பாவனை என்பதை அவள் விளங்கிக் கொண்டாள். உண்பதிலோ, ருசிகளிலோ அந்த மாபெரும் அரச தந்திரிக்கு அவ்வளவு அக்கறை இல்லை என்பது முன்பே அவளுக்குத் தெரிந்திருந்த உண்மை, இன்று மீண்டும் உறுதிப்பட்டது. கடந்த காலத்தில் பல நாட்களில் தந்தை சொல்லி, அவள் கனிகளும், தேனும், தினை மாவும் கொண்டு வந்து அவருக்குப் படைத்த போதுகளிலேயே அவரைப் புரிந்து கொண்டிருந்தாலும், நேற்று அவரே தினை மாவுக்காகவும், தேனுக்காகவும் தவிப்பது போல் ஆடிய சாதுரிய நாடகம் அவளையே ஏமாற்றியிருந்தது. அவர் ஏதோ பெரிய காரியத்திற்காகப் பேதையாகிய தன்னை ஆழம் பார்க்கிறார் என்பதை, அவள் தன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாள். அவர் உண்ணுகிற வரை பொறுத்திருந்த அவள், பதற்றமின்றி நிதானமாக அவருடைய இருப்பிடம் வரை சென்று கை கழுவவும், பருகவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை உபசரித்தாள். பின்பு அவரே என்ன சொல்லுகிறார் என்று எதிர் பார்த்துக் காத்திருப்பது போல் சிறிது நேரம் அவருடைய முகமண்டலத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணுடனும் கூடவே பிறந்துவிடும் பிறவி சாதுரியமும், பாதுகாப்பு உணர்வுமே அப்போது அவளுக்குத் துணை நின்றது. அவரோ அவள்தான் முதலில் கேட்கட்டுமே என்று விட்டுப் பிடிப்பது போன்ற மன நிலையில், தேனையும் தினை மாவையும் பற்றி மட்டும் நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லிவிட்டு வாளா இருந்தார். 'எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்! எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்?’ என்று அவளை எண்ணி ஏங்கித் தவிக்க விட்ட பின், ஒடி ஒடித் தவித்த மானைத் தந்திரமாக வலை வீசிப் பிடிப்பது போல், இறுதியாக அவளை வீழ்த்தும் சாதுரியமான வேடனைப் போன்று தன் சொற்களை அடக்கி மெளனமாகக் காத்திருந்தார் அவர். எதிர் எதிர் மெளனங்களை இருவருமே ஒருவருக்கு ஒருவர் விரும்பாத அந்த நிலை, சிறிது நேரம் நீடித்தது. ஆவலை அடக்க முடியாமல் அவள் தன் மெளனக் கோட்டையின் கதவுகளைத் தானே திறந்து கொண்டு வெளிப்பட்டாள்:

“ஐயா! தாங்கள் இந்தப் பேதையைத் தனியே கூப்பிட்டனுப்பிய காரியம் பெரியதாயிருக்க வேண்டும். அது இன்னும் எளியாளிடம் தெரிவிக்கப்படவில்லை... அந்தக் கட் டளைக்காகவே இன்னும் இங்கே காத்து நிற்கிறேன் நான்...”

“உன்னிடம் நான் இங்கிருந்து புறப்படு முன், ஒரு நல் வாக்கு வேண்டப்போகிறேன் என்று நேற்றே சொல்லி யிருந்தேன்... நினைவிருக்கிறதா, செல்வப் பூங்கோதை?”

“நன்றாக நினைவிருக்கிறது ஐயா.”

“ஒரு வீரனின் குறிக்கோள் தன் வாளுக்கு மட்டும் வெற்றியைத் தேடுவதோடு நிறைவு பெற்றுவிடுகிறது அம்மா! ஆனால் என்னைப் போல ஒர் அரச தந்திரி, தாம் சார்ந்திருக்கும் தேசம் முழுமையும் வெற்றி பெறுகிற வரை அறிவினால் போராட வேண்டியிருக்கிறது... இடைவிடாமல் போராட வேண்டியிருக்கிறது. நிகழ்கால வெற்றிக்காக மட்டுமின்றி, எதிர்கால வெற்றியையும் இன்றே தீர்மானித்துப் போராட வேண்டியிருக்கிறது.”

அவர் எதற்காக இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது அவளுக்கு உடனே புரியவில்லை. ஆனால் மனம் மட்டும் பதறியது. பதற்றத்தோடு பதற்றமாக அவள் கேட்டாள்:

“ஐயா! பாண்டி நாட்டை மீட்கத் தாங்கள் மேற்கொண்ட துன்பங்கள் பெரியவை... நன்றிக்குரியவை... என்றுமே மறக்க முடியாதவை." “ஆனால், அந்தத் துன்பங்களைப் புரிந்து கொள்ளாமல், முன்பு சில வேளைகளில் நீயும் என் மேல் கோபப்பட்டு உனக்குள் கொதித்திருக்கிறாய், செல்வப்பூங்கோதை”

அவள் துணுக்குற்றாள். எல்லாமே அவருக்குத் தெரிந்திருக்குமோ என்று பயமாகவும் இருந்தது. ஆயினும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்:-

“அப்படி இந்தப் பேதை அறியாமையால் எப்போதேனும் எண்ணியிருந்தாலும், அதைத் தாங்கள் பொறுத்தருளக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் ஐயா!”

“கோபிப்பதற்கும், பொறுப்பதற்கும் இது தருணமில்லை பெண்ணே! நாளை, பொழுது புலர்வதற்குள் மதுரை மாநகரின் கோட்டையில் பாண்டியர் மீனக் கொடி பறக்கத் தொடங்கி விடும். அக்கொடியைக் கீழே இறக்கி, வேற்றவர் கொடி பறக்க நேரிடாமல் இருக்க, இங்குள்ள ஒவ்வொருவரும் சபதம் செய்ய வேண்டும். அந்த வகையில் நீ செய்ய வேண்டிய சபதமும் ஒன்றுண்டு.”

“தங்கள் கட்டளை எதுவாயினும் அதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன், ஐயா! தயங்காமல் சொல்லியருளுங்கள். ஏற்கத் தலை வணங்கி நிற்கிறேன்.”

“வெற்றி பெறும் பாண்டியர் நலனுக்கு இடையூறாக, எந்த நலனையும் நான் அடைய முயல மாட்டேன். பாண்டிய நாட்டின் நலனை விட, என் சொந்த நலன் பெரிதில்லை என்று கொற்றவை சாட்சியாக ஒரு சத்தியம் செய்ய வேண்டும் நீ. இப்படிச் சத்தியங்களையும், வாக்குறுதிகளையும் என்னுடன் பழகும் எல்லோரிடமும் நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன் அம்மா! அது போல் இப்போது உன்னிடமும் கேட்கிறேன்.”

செல்வப்பூங்கோதை உடனே அந்தச் சத்தியத்தைச் செய்ய முயன்ற போது, சொல் எழாமல் அவள் நா இடறி அரற்றியது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு அவர் கூறிய சொற்களையே, மீண்டும் சொல்லிக் கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்தாள் அவள். அவர் முகம் முதன் முதலாக அவள் கண் காண மலர்ந்தது. ஒரு மகிழ்ச்சிக்காக இப்படி வெளிப் படையாக அவர் மலர்வதை, இன்றுதான் அவள் காண்கிறாள். அது அவளுக்குக் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது.

“இப்படிச் சில சத்தியங்கள் செய்யும் போது, பொதுவாக இருக்கலாம். ஆனால், நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும். நீ இன்று செய்த சத்தியமும் அப்படிப் பெரியது. செல்வப் பூங்கோதை!” -என்றார் அவர்.

அவரே புகழ்ந்த இந்தச் சொற்களை உடனே அவளுக்குத் தெளிவாக விளங்கவில்லை என்றாலும், அவரை வணங்கி விடை பெற்றாள் அவள். அவரும் அவளை உணர்வு நெகிழ்ந்த குரலில், வாழ்த்தி அனுப்பினார். அவள் தயங்கித் தயங்கி நடந்து சென்றாள். அவள் தோற்றம் மறைந்ததும், ஈரம் நெகிழ்ந்திருந்த கண்களை மேலாடையால் துடைத்துக் கொண்டு, அவர் ஆபத்துதவிகளைக் கைதட்டி அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் நாம் கோநகர் செல்ல எல்லாம் ஆயத்தமாகட்டும்” என்று கட்டளையிட்டார். அவரது அந்தக் கட்டளைக் குரலில் இருந்த உணர்வின் நெகிழ்ச்சி, அவர்களுக்கே புதுமையாயிருந்தது.