நீதிக் களஞ்சியம்/நன்னெறி

விக்கிமூலம் இலிருந்து


நன்னெறி
(சிவப்பிரகாச சுவாமிகள்)

கடவுள் வாழ்த்து

மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ,
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.


நூல்


என்றும் முகமன் இயம்பாதவர்கண்ணும்,
சென்று பொருள் கொடுப்பர். தீது அற்றேர்; துன்று சுவை—
பூவின் பொலிகுழலாய்—பூங் கை புகழவோ,
நாளிற்கு உதவும் நயந்து?1

மாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது; ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிது என்க! ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ,—நன்னுதால்!- ஒண் கருப்பு
வில்லோன் மலரோ, விருப்பு?2

தங்கட்கு உதவிலர் கைத் தாம் ஒன்று கொள்ளின், அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க!—தங்க நெடுங்
குன்றினால் செய்தனைய கொங்கையாய்!—ஆவின்பால்
கன்றினால் கொள்ப, கறந்து.3

பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ் செல்வம் வேறு
பிறர்க்கு உதலி ஆக்குபவர் பேறு ஆம்;—பிறர்க்கு உதவி
செய்யாக் கருங் கடல் நீர், சென்று பயல், முகந்து,
பெய்யாக் கொடுக்கும், பிறர்க்கு.4

நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்,
நோக்கின், அவர் பெருமை நொய்து ஆகும்;—பூக் குழலாய்!—
நெல்லின் உமி சிறிது நீங்கி, பழமைபோல்
புல்லினும், திண்மை நிலை போம்.5

காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றித்
தீது இல் ஒரு கருமம் செய்பவே;—ஓது கலை
எண் இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய்!—நோக்குமால்
கண் இரண்டும் ஒன்றையே காண்.6

'கடலே அனையம் யாம், கல்வியால்!' என்னும்
அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே;—
முனிக்கு அரசு கையால் முகந்து, முழங்கும்
பனிக் கடலும், உண்ணப்படும்.7

உள்ளம் கவர்ந்து எழுத்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க!—வெள்ளம்
தடுத்தல் அரிதோ? தங் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ? விளம்பு!8

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்,
வலியோர்தமைத் தாம் மருவில்;—பலி ஏல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே,
படர் சிறைய புள்ளரசைப் பார்த்து.9

தம் குறை தீர்வு உள்ளார், தளர்ந்து, பிறர்க்கு உறூஉம்
வெங் குறை தீர்ச்சிற்பார், விழுமியோர்;—திங்கள்
கறை இருளை நீக்கக் கருதாது, உலகில்
நிறை இருளை நீக்கும், மேல் நின்று.10

பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய், புல்லியர்பால் அன்றியே,
மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம்:—துப்பின்
சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவலி? போய்ச்
சுழற்றும், சிறு புன் துரும்பு.11

வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல்தானே புதுமை!—திருந்திழாய்!—
சீத நீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ, நிற்றல் வியப்பு?12

பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர், மேலோர்;—சுரக்கும்
மலை அளவு நின்ற முலை மாதே!—பதியின்
கலை அளவு நின்ற, கதிர்.13

'தொலையாப் பெருஞ் செல்வத் தோற்றத்தோம்?' என்று,
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்;—
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ங்கோ தாய்!—மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.14

இல்லானுக்கு அன்பு இங்கு, இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்தும், அவற்கு என் செய்யும்?—நல்லாய்!—
மொழி இவார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
விழி இலார்க்கு ஏது விளக்கு?15

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து, உயர்ந்தோர்,
தம்மை மதியார், தசை அடைந்தோர் தம்மின்
இழியினும், செல்வர், இடர் தீர்ப்பர்;—அல்கு
கழியினும் செல்லாதோ, கடல்?16

'எந்தை நல்கூர்ந்தான், இரப்பார்க்கு ஈந்து' என்று அவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ?—பைந்தொ டீஇ!—
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி.17

இன்சொலால் அன்றி, இரு நீர் வியன் உலகம்.
வன்சொவால் என்றும் மகிழாதே;—பொன் செய்
அதிர் வளையாய்!—பொங்காது அழற் கதிரால், தண்ணென்
கதிர் வரவால் பொங்கும், கடல்.18

நல்லோர் வரவால் நகை முகம் கொண்டு இன்புறீஇ,
அல்லோர் வரவால் அழுங்குவார், வல்லோர்;—
திருந்தும், தளிர் காட்டித் தென்றல் வரத் தேமா;
வருந்தும், சுழல் கால் வர.19

பெரியவர் தம் நோய்போல், பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க:—தெரியிழாய்!—
மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக்
கண்டு, கலுழுமே, கண்.20

எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலை ஆம்;—எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில்
வீயும், கர நீர் மிகை.21

ஆக்கும் அறிவான் அலது, பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க!—நீக்கு—
பவர் ஆர், அரவின் பரு மணி கண்டு என்றும்
கவரார், கடலின் கடு.22

பகர்ச்சி மடவார் பயில், நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் நெகிழ்ச்சி
பெறும்:—பூரிக்கின்ற முலைப் பேதாய்! —பல கால்
எறும்பு ஊரக் கல் குழியுமே.23

உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும், கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே;—வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய், வேம்பு அன்றோ,
காக்கை விரும்பும் கனி?24

கல்லா அறிவின் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே;—வில் ஆர்
கணையின் பொலியும் கருங்கண்ணாய்!—நொய்து ஆம்.
புணையில் புகும் ஒண் பொருள்.25

உடலின் சிறுமை கண்டு. ஒண் புலவர் சுல்விக்
கடலின் பெருமை கடவார்;—மடவரால்!—
கண் அளவாய் நின்றதோ. காணும் கதிர் ஒளிதான்?
விண் அளவு ஆயிற்றே? விளம்பு!26

கைம்மாறு உகவாமல், கற்று அறிந்தோர், மெய் வருந்தி,
தம்மால் இயல் உதவி தாம் செய்வர்;—அம்மா!
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும், வலியன தாம் மென்று.27

முனியினும் நல்குவர், மூதறிஞர்; உள்ளக்
கனிவினும் நல்கார், கயவர்;—நனி விளைவு இல்
காயினும் ஆகும். கதலிதான்; எட்டி பழுத்து—
ஆயினும் ஆமோ? அறை!28

உடற்கு வரும் இடர், நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர்,
அடுக்கும் ஒரு கோடி ஆக, தடுக்கம் உறார்—
பண்ணின் புகலும் பனி மொழியாய்!—அஞ்சுமோ,
மண்ணில் புலியை மதி மான்?29

கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதல்முன்,
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே!—வெள்ளம்
வருவதற்கு முன்னர், அணை கோலி வையார்,
பெருருதற்கண் என் செய்வார்? பேசு!30

பேர் அறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே,
வீரமொடு காக்க விரைகுவார்;—நேரிழாய்!—
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன்மேல்
கை சென்று தாக்கும் கடிது.31

பன்னும் பனுவல் பயன் தேர் அறிவு இலார்
என்னும் அறங்கள் வலி இலவே:—நன்னுதால்!—
காய் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ,
தாழ் ஒன்று இலதாயின்தான்?32

எள்ளாது இருப்ப, இழிஞர் போற்றற்கு உரியர்;
விள்ளா அறிஞர் அது வேண்டாரே:—தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம்: அன்றிக்
கரை காப்பு உளதோ, கடல்?33

அறிவுடையார் அன்றி, அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார். சிறிதும்;—பிறை நுதால்!—
வண்ணம் செய் வாள் விழியே அன்றி, மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ, இருளைக் கண்டு?34

கற்ற அறிவினரைக் காமுறுவர், மேன்மக்கள்;
மற்றையர்தாம் என்றும் மதியாரே:—வெற்றி நெடு
வேல் வேண்டும் வாள் விழியாய்?—வேண்டா, புளிங்காடி;
பால் வேண்டும், வாழைப் பழம்.35

தக்கார்க்கே ஈவார். தகார்க்கு அளிப்பார் இல், என்று,
மிக்கார்க்கு உதவார், விழுமியோர்;—எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றி, காட்டு முளி
புல்லுக்கு இறைப்பரோ, போய்?36

பெரியார் முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும்; தெரியாய் கொல்—
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய்!—விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று, தாழ்ந்து!37

நல்லார் செயும் கேண்மை நான்தோறும் நன்று ஆகும்;
அல்லார் செயும் கேண்மை ஆகாதே;—நல்லாய்! கேள்:
காய் முற்றின், தின் தீம் கனி ஆம்; இளந் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்?38

கற்று அறியார் செய்யும் கடு நட்பும், தாம் கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே—பொற்றொடீஇ!—
சென்று படர்ந்த செழுங் கொடி மென்பூ மலர்ந்த
அன்றே மணம் உடையது ஆம்.39

பொன் அணியும் வேந்தர், புனையாப் பெருங் கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார்; பின்னும் அணி
பூணும் பிற உறுப்பு,—பொன்னே!—அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ? காண்!40