நூறாசிரியம்/ஆரிட ஆரும்

விக்கிமூலம் இலிருந்து

'96 ஆரிட ஆரும்'


உவர்துளி குறையினும் உறைப்புறை மிகினும்
ஆநெய் நாறும் நறுங்குழை அடினும்
தவிர்தல் செய்தே, இகுளை கவடின்றி
விழிதுவர்ப் பேறக் கடிமே! மொழியின்றி
அமைவேமைப் பின்னணைந்து தொங்குமுக மேந்தி 5
இமைபடரக் காந்தி இதழ்முத்திப் பிழைநோகும்
எம்ஐ தஞ்சுவை கூர எதிரிருந்தே
உய்வுனாப் பொதுள ஆரிட ஆரும
துய்தினை வயிலுங் கலைபயி லிடத்தே!


பொழிப்பு:

தோழி உணவின்கட் சிறிதே உப்புக் குறையினும், அன்றிக் கார்ப்புச் சற்றே மிகுந்திருப்பினும், ஆவின் நெய் நாறும்படி பொங்கல் சமைப்பினும் அவற்றை உண்ணாது விலக்கி, வஞ்சகமில்லாமல் சினந்து பேசுவார். மறுமொழி பேசாது அமைதியாய் இருக்கும் எம்மைப் பின்பு தழுவி; கவிழ்ந்த எம் முகத்தை நிமிர்த்தி, இமைகள் வருடுமாறு தன்முகத்தைப் பொருத்தி, வாயிதழில் முத்தி, தன் பிழைக்காக வருந்துகின்ற எம் தலைவர் தாம் விரும்பியுண்ணும் சுவை மிகுமாறு எதிரிலிருந்து உண்பிக்கும் உணவை நெருங்கியிருந்து ஆர் படைக்க உண்ணுவார்; முன்னர் நுகர்ந்த நினைவை மனங் கொண்டு கலைகள் பயிலும் இடத்தில்!

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் மேற்படிப்பின் பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து வேற்றுார்க்குச் சென்றிருந்தானாக, அவன் கூடியிருந்த காலத்து, நிகழ்ந்த உணவுத் தொடர்பான நிகழ்ச்சிகளை நின்ைவுகூர்ந்து, கலைபயிலிடத்தே அவர் சுவை மிகு உண்டியை அருகிருந்து ஆர் படைக்க உண்பார் என்று தலைமகள் தோழியிடத்தே வருந்திக் கூறுவதாக அமைந்தது இப் பாட்டு,

உவர் துளி குறையினும் - உணர்வின்கண் உப்பு சிறிதே குறையுமாயினும்

உவர்உப்பு துளி- சிறிதளவு.

உறைப்பு உறை மிகினும் - காரம் சிறிதே மிகுந்திருப்பினும், உறைப்பு - காரம் உறை துளி - சிறிதளவு.

ஆநெய் நாறும் நறும் குழை அடினும் - ஆவின் நெய் வீச்சமுற நல்ல பொங்கல் சமைப்பினும்,

பொங்கல் நல்லதே. எனினும் புத்துருக்கல்லாது சற்றே பழைய நெய்யைச் சேர்த்தமையால் எழுந்த நாற்றத்தால் அது ஏலாதாயிற்று.

நாறுதல் ஈண்டுத் தீய நாற்றத்தைக் குறித்தது. பொங்கல் நல்லதே என்பது நறுங்குழை என்பதனால் பெறப்படும்.

சோறுபோல் உதிரியாய் இல்லாது குழையச் செய்தலின் பொங்கல் குழை எனப்பட்டது. குழை என்பதனைக் கீரை எனக் கொண்டு அதற்கேற்ப உரைப்பினுமாம்.

தவிர்தல் செய்தே - உண்ணாது விலக்கி

இகுளை - தோழி!

கவடு இன்றி விழி துவர்ப்பு ஏறக் கடிமே - கள்ள மின்றிக் கண்சிவக்குமாறு எம்மைச் சினந்து பேசுவார்.

கவடு - வஞ்சகம், வெறுப்பை மனத்தில் வைத்துக் கொள்ளாமை ஈண்டுக் குறிக்கப்பெற்றது.

துவர்ப்பு - சிவப்பு. கண்சிவத்தல் சினத்தின் மெய்ப்பாடு கடிந்து பேசுதல் கடிதல் எனப்பட்டது. கடிம்-கடியும் என்பது தொக்கு நின்றது.

மொழி இன்றி அமைவேமை- மறுமொழி பேசாது அமைதியாய் இருக்கும் எம்மை,

தன்குற்றமுணர்ந்து, அவன் கடிந்து பேசுங்கால் உடனே மறுமொழி கூறாது அமைந்திருந்தது மட்டுமின்றி அவன் கடிந்தமைக்கு வருந்திப் பின்னும் அவனொடு உரையாடாமலே இருந்தாள் என்பதும் பெறப்படும்.

பின் அணைந்து - பிறகு வந்து தழுவிக் கொண்டு.

பின் என்பது காலம் பற்றியது.

தொங்கு முகம் ஏந்தி - கவிழ்ந்த எம் முகத்தை நிமிர்த்தி, புலவியால் முகங் கவிழ்ந்திருந்தால் போலும்.

இமைபடரக் காந்தி - இமைகள் வருடுமாறு முகத்தைப் பொருத்தி,

படர்தல் வருடுதல், காந்துதல்-ஒட்டுதல்.

இதழ்முத்தி - வாயிதழில் முத்தமிட்டு.

பிழைநோகும் எம்ஐ - தாம் கடிந்து பேசிய பிழைக்கு வருந்துகின்ற எம் தலைவன்.

தம் சுவை கூர எதிர் இருந்தே உய் உனா - தாம் விரும்பியுண்ணும் சுவை மிகுமாறு எதிரில் இருந்து யாம் உண்பிக்கும் உணவை.

தான் உண்பித்த உணவை நினைவுகூர்ந்தாளேனும் அவ்வுணவு ஈண்டு உணவு என்னும் அளவிலேயே நின்றது.

கூர்-மிக.

உய் உண - உண்பிக்கும் உணவு உய் செலுத்து.

பொதுளஆர் இட ஆரும் - ஆர் நெருங்கியிருந்து படைக்க உண்டார். அவன் உண்டி குறித்து வினவினளேனும் அங்கே ஒரு பெண்ணிருந்து படைத்தலுங்கூடுமோ என்னும் எண்ணம் அவள் மனத்தை அருவுதலும் அறிப்படும். பொதுள - நெருக்கமாக

துய் நினைவு அயிலும் கலை பயில் இடத்தே - முன்பு நுகர்ந்ததனைப் பற்றிய நினைவை மனங்கொள்ளும், கலைபயில் கழகத்தே

தன்னைப் போலவே அவனும் பண்டு நுகர்ந்ததனை நினைவுகூர்வான் என்னும் எண்ணத்தால் இவ்வாறு கூறினாள்.

இப்பாடல் முல்லை என்னும் அகத்திணையும், ஒதற்பிரிவுற்ற தலைமகனை நினைவுகூர்ந்து கிழத்தி தோழிக் குரைத்தது என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூறாசிரியம்/ஆரிட_ஆரும்&oldid=1251310" இலிருந்து மீள்விக்கப்பட்டது