160
அகநானூறு -களிற்றியானை நிரை
(பொருள் விரும்பிச் சென்ற தலைமகன், இடைவழியிலே தன் காதலியின் நினைவு நெஞ்சிலே மிகுந்துவிட, ‘நாம் பிரிந்து தொலைவிலே வந்தோமெனினும், அவள் குணங்கள் எம் மனத்துள் அகலாது நிலைத்து இருக்கின்றனவே என்கின்றான்.)
வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,
கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,
களிற்றுக் கன்றுஒழித்த உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து,
5
பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்,
10
சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,
எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே!
நெஞ்சமே!
கல்லாத இளைஞர்கள், சுரம் எல்லாம் மணங்கமழும், வலமாகச் சுரித்த வெண்கடம்பினது புதிய பூக்களைச் சுருள் கொண்ட வளைபோன்ற மயிரினையுடைய தம் தலையிலே விளங்கும்படி அணிந்து கொள்வர். உரல்போன்ற அடியினையுடைய பெண்யானையானது கானத்திலே அலறிக் கொண்டிருக்க, அதனுடைய களிற்றுக் கன்றினைப் பிரித்துக் கொண்டு வருவர். அந்த மகிழ்ச்சியினை உடையவர்களாகச் செருக்கு மிக்க, வலிய அடிமரத்தினையுடைய வெண்கடம்பின் வளவிய கொம்பினைப் பிளந்து, அதனின்றும் உரித்த வெண்மையான நார்க்கயிற்றினால் அக்கன்றினை அழுத்தமாகக் கட்டுவர். நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழமையான ஊரிலே, கள்விற்கும் நல்ல வீட்டின் வாயிலிடத்தே அதனைக் கொணர்ந்து பிணிக்கவும் செய்வர். அத்தகைய கல்லாத இளையரான வேடர்கட்குத் தலைவன் புல்லி என்பவன். அவனது விரிந்த இடத்தினையுடைய நல்ல நாட்டினிடத் தேயுள்ள, வேங்கட மலையினையும் நாம் கடந்து சென்றாலும்,
நெய்தலது பிணிப்புவிடும் ஒளி பொருந்திய மலரைப் போன்ற அழகினை ஏந்தியிருக்கும், குளிர்ந்த கண்ணினளாகிய எம் காதலியின் குணங்கள், சேய்மைக்கண் சென்றவர் என்று