பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

அகநானூறு - மணிமிடை பவளம்



(தான் சென்ற தொழில் முடிந்ததும், தலைமகனின் உள்ளம் தன் காதலியின் நினைவிலேயே ஆழ்ந்தது. விரைந்து சென்று அவளைக் கூடி மகிழ்தல் வேண்டும் எனத் துடிக்கும் அவன், தன் தேர்ப்பாகனிடம், தேரினை விரைவிலே செலுத்துமாறு, இப்படிக் கூறுகின்றான்)

        செல்க, பாக! எல்லின்று பொழுதே-
        வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன்
        விசைத்துவாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்,
        கொடுநுகத்து யாத்த தலைய, கடுநடைக்,
        கால்கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி, 5

        பால்கடை நுரையின் பரூஉ மிகப்பு அன்ன,
        வால்வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கம்
        சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்,
        சாந்துபுலர் கலம் மறுப்பக் காண்தகப்
        புதுநலம் பெற்ற வெய்துநீங்கு புறவில், 10

        தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள்,
        ஐதுணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த
        திரிமரக் குரலிசைப் கடுப்ப, வரிமணல்
        அலங்குகதிர்த்த திகிரி ஆழி போழ,
        வரும்கொல்-தோழி!-நம் இன்உயிர்த் துணைஎனச், 15

        சில்கோல் எல்வளை ஒடுக்கிப் பல்கால்
        அருங்கடி வியனகர் நோக்கி,
        வருந்துமால் அளியள் திருந்திழை தானே.

“தோழி! தேரினைச் செலுத்துவதிலே வல்லவனாகிய பாகன், குதிரைகளை அடக்கிச் செலுத்துவதற்குரிய கடிவாளக் கயிற்றினைப் பூட்டுவான். கொல்லன் வலித்து இழுக்கின்ற துருத்தியினைப்போல வெம்மையாகப் பெருமூச் செறிந்தவாறே, வளைந்த நுகத்திலே பூட்டப்பெற்ற தலையினவாகிய கடிய நடையினையும் காற்றினைப்போன்று செல்லும் இயல்பினையும் கொண்ட குதிரைகள், வேகமாகச் செல்லும். பால் கடையுங் காலத்தே எழும் வெண்மையான நுரையின் பெரிய மிதப்பினைப் போன்ற மிகவும் வெண்மையான வாயின் நுரையானது, வழியிற் பின்னே தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும். அது சிலம்பியின் நூலைப்போல மெல்லிதாகச் சிதறிக்கொண்டு மிருக்கும். அது சந்தனம் பூசிக்காய்ந்த மார்பிலே மறுச் செய்யும். காண்பதற்குத் தகுதியாகப் புதிய நலத்தினைப் பெற்று விளங்கும் வெம்மை நீங்கிய காட்டிலே குதித்துச் செல்லும் நடையினவாகிய மரையினங்கள், தேரின் வரவுக்குப் பயந்து, தம்நிலைகெட்டு