பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 279



சிறப்பு: கொங்கர்களை வெருட்டி, அவர்களின் பல நாடுகளையும் கைப்பற்றிய பசும்பூண் பாண்டியன், வடுகர் பெருமகன் எருமை பற்றிய செய்திகள்.

(தலைமகனின் பிரிவினிடத்தே, வாடிமெலிந்துதுயருற்றனள் தலைவி. அதுகண்டு தானும் வருந்திய தோழி, அவளைத் தேற்றுவாளாக, “அவன் நின்னை மறந்துவிடுவான் அல்லன்; விரைவிலே வந்துவிடுவான்” என்று உரைக்கின்றாள்.)

        ‘வைகல் தோறும் பசலை பாய, என்
        மெய்யும் பெரும்பிறிது ஆகின்ற; ஒய்யென,
        அன்னையும் அமரா முகத்தினள், அலரே,
        வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி,
        நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் 5

        பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
        இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்குயான்
        சிலநாள் உய்யலென் போன்ம்’ எனப் பலநினைந்து
        ஆழல்-வாழி, தோழி!-வடாஅது,
        ஆர்.இருள் நடுநாள் ஏர்ஆ ஒய்யப் 10

        பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்
        கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்அறிந்து,
        இனம்தலைத் தரூஉம் துளங்குஇமில் நல்ஏற்றுத்
        தழுஉப்பினர் எருத்தம் தாழப் பூட்டிய
        அம்தும்பு அகல்அமைக் கமஞ்செலப் பெய்த 15

        துறுகாழ் வல்சியர் தொழுஅறை வெளவி,
        கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்
        நேரா வன்தோள் வடுகர் பெருமகன்,
        பேர்இசை எருமை நல்நாட்டு உள்ளதை
        அயிரியாறு இறந்தனர் ஆயினும்,மயர்இறந்து 20
        
        உள்ளுப தில்ல தாமே-பணைத்தோள்,
        குரும்பை மென்முலை, அரும்பிய சுணங்கின்,
        நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்,
        மாக விசும்பின் திலகமொடு பதித்த
        திங்கள் அன்னநின் திருமுகத்து, 25

        ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே.

தோழி! நீ வாழ்க! நாள்தோறும் பசலையானது மென்மேலும் படர்ந்துகொண்டிருக்க, என் உடலும் மெலிந்து விரைவிலே இறக்கும் நிலையினைப் பெற்று வருகின்றது;