பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 333


        சிதர்சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
        வந்தன்று அம்ம, தானே;
        வாரார் தோழி! நம் காத லோரே. 20

குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் மண்டிலமானது, தன்னுடைய ஒளி முழுவதும் விளக்கம் அறுமாறு கெட்டுப் பகல் வேளையிலே அழிந்து தோன்றுவதுபோல, மெல்ல மெல்ல நம் நெற்றியின் ஒளியும் போய் ஒளிந்துகொண்டது. முயற்சியால் பொருள் ஈட்டித் தருவதற்கான நீக்கமற்ற நெஞ்சத்துடனே, தமது வேல் ஒன்றே துணையாகக் கொண்டு அவ்ரும் நம்மைப் பிரிந்து சென்றனர். -

தயிர் கடைவதுபோன்ற குரலினையுடையதான, ஒளியுள்ள கோடுகளைக் கொண்ட வேங்கையானது, பிளந்த வாயினதாகக் கிடக்கும் தன்னுடைய பெண்புலியின் மிகுதியான பசித் தன்மையைக் காணப் பொறாததாகிக், கடுமையான பனஞ்சிறாய்களைப் போன்ற பருத்த மயிர்களையும் சிறுத்த கண்களையுமுடைய காட்டுப் பன்றியானது வருகின்ற தன்மையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இயல்புடையது காடு.

அதன் பரப்பாகிய அகன்ற இடத்திலே, பொந்துள்ள மரத்தின் புள்ளிபட்ட நீழலிலே, வழிச் செல்வாராகிய புதியவர்கள், வழிநடந்து தளர்ந்தவர்களாகக் களைப்பாறி இருப்பார்கள். அத்தகைய ஈரமற்ற வெம்மையான சுரத்தினையும் கடந்து சென்றவர் நம் காதலர். அவர், நம்மிடத்தே வராது போன காலத்திலே,

தோழி! கூர்மையான வாயினையும், நெருப்புக் கொழுந்து விட்டு எரிந்தாற்போல விளங்கும் அழகான மயிர்ச்சிறகினையும் உடையது, மனையிலே வாழும்கோழியினது, ஆற்றலுடைய சேவல், போரிடும் காலத்திலே கிளர்ந்து எழுகின்ற அதன் கழுத்தினைப்போல அடர்த்தியாகப் பூத்துள்ள, பொங்கும் அழலைப் போன்ற முருக்கமரத்தினது ஒள்ளிய கொத்திலேயுள்ள மதுவினை வயிறார உண்ட வண்டினம், அத் தேன் நிலத்திலும் சிதறுமாறு உகுத்த, செவ்வியையுடைய இளவேனிற் காலமும் வந்துவிட்டது. ஆயினும், நம் காதலுடையவரோ இன்னும் வாராதிருக்கின்றனரே? (என் செய்வோம்?)

என்று? தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குப் பருவங்கண்டு அழிந்து சொன்னாள் என்க.