நாட்டு வளமும் மக்கள் வளமும்
தமிழன் கண்ட நாடு
தமிழன் வாழ்க்கையைப் பார்க்கப் புகுமுன், ‘அவன் நாடு எத்தகையது? எதை அவன் நாடு எனநினைத்தான்?’ என்பதைக் காணவேண்டும். தமிழனுக்கு ஒரு வேதம் தந்த திருவள்ளுவர், நாட்டைப்பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்:
‘நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரு நாடு.’
(குறள்–739)
இதன் கருத்தென்ன? முயற்சி செய்யாமல் பலன் தரக் கூடியதே நாடு என்பது மட்டும் அன்று; பெருமுயற்சி செய்து சிறு பயன் தருவதும் நாடு அன்று. வளம் என்பன இயற்கையாகக் கிடைக்கும் நலன்களாம். இதனை வேறு பாடல்களாலும் அறியலாம். மதுரைக் காஞ்சி என்றொரு நூல் உண்டு. மாங்குடி மருதனார் என்ற புலவர் பெருமான், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைப் பாடிய பாடலாகும் அது. அதில் பாண்டி நாட்டைப்பற்றி அவர் கூறுவதாவது:
மழைதொழில் உதவ, மாதிரங் கொழிப்ப,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்கு விளங்க,
(மதுரைக்காஞ்சி, 10–15)
என்பது.