பக்கம்:அகமும் புறமும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 241


சுங்க அலுவலர்

இவ்வடிகளிலிருந்து அறியவேண்டும் பொருள்கள் இரண்டுண்டு. அச்சுங்க அலுவலர் ‘வலியுடைய வல்லணங்கினோன்’ என்று கூறப்படுகிறார். ஏன்? சுங்கம் வசூலிப்பவருக்கு வலிமை எதற்காக? ஈண்டு வலிமை என்றது மனவலிமையை. அம் மனவலிமை இல்லாதவன் சுலபமாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு அரசனை ஏமாற்றுபவன் ஆகிவிடலாமல்லவா? இந்நாளில் வாழும் நமக்கு இது ஒன்றும் புதுமையன்று. ஆனால், பழந்தமிழ் நாட்டில் அரச நீதியை நடத்துபவர் எங்ஙனம் மனத்திட்பம் வாய்ந்தவராய் இருந்தனர் என்பதை இவ்வடிகள் அறிவுறுத்துகின்றன. மேலும், ஒன்று நோக்க வேண்டும். அவர் வெறுஞ் செம்மையுடையவராக மட்டும் இருத்தல் போதாது. பிறர் அவரை ஏமாற்றுவர். அவர் அங்ஙனம் செய்யாதிருக்க, அலுவலர் தமது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருக்க வேண்டும். இது கருதியே ஆசிரியர் அவர் படை வலியாலும், தம் அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருந்தார் என்பதை அறிவிப்பதற்காக ‘வல்லணங்கினோன்’ (பிறரை வருத்தக்கூடிய பலமுடையவன்) என்று கூறுகிறார். இம்மட்டோடு இல்லை. இவையெல்லாம் இன்றுங்கூட இருக்கக் காண்கிறோம். ஆனாலும், திருட்டுத்தனமாகச் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ‘கள்ளக் கடத்தல்’(Smuggling) இன்றும் நின்றபாடில்லை. அத்தகைய செயல் அந்நாளில் இல்லை என்பதை ஆசிரியர் ‘அருங்கடிப் பெருங்காப்பின்’ பொருள்கள் இருந்தனவெனக் கூறுமுகத்தால் கூறுகிறார்.

இவற்றால் அரேபியா, பர்மா முதலிய வெளிநாட்டு வாணிகத்தோடு கங்கை வெளி, இலங்கை முதலிய இடங்களுடன் உள் நாட்டு வாணிகமும் நன்கு நடந்தமை அறியப்படுகிறது.