பக்கம்:அகமும் புறமும்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 353

என்றல்லவோ அவர் கூறிச் சென்றார்? வாழ்க்கையில் கொள்ளவேண்டிய குறிக்கோளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், ‘உயர்வு உள்ளல்’ என்ற கூறினார். ‘உயர்வு’ என்ற சொல் ஓர் ஒப்பு நோக்குச் சொல்லேயாகும். ஒன்றை நோக்க ஒன்று உயர்வு என்றுதான் கூறவேண்டும். எனவே இங்கு உயர்வு என்று கூறினதற்கு எவ்வாறு பொருள் கூற வேண்டும் என்று ஐயுறுவார்க்கு விளக்கம் தருவார் போன்று பின் அடியைக் கூறினார். ‘மற்றது தள்ளினும்’ என்ற கூற்றால், அக்குறிக்கோள் அடைய முடியாததாகும் என்ற குறிப்பையும் பெறவைத்தார். ‘அடையமுடியாத குறிக்கோளை வைத்துக்கொள்வதாற் பயன் என்ன?’ என்று வினவினால், அதற்கு விடை ‘தள்ளாமை நீர்த்து’ என்பதன்கண் அடங்கி விடுகிறது. அடைய முடியாவிடினும், அக்குறிக்கோளும், அதனை அடையச் செய்யும் முயற்சியும் ஏற்றுக்கோடற்பாலன என்பதே வள்ளுவர் வகுத்த நெறியாகும்.

தாழ்ந்த குறிக்கோள்

மேலும், மட்டமான குறிக்கோளைக் கொண்டிருந்து, அதனை அடைந்துவிடுவதைக் காட்டிலும், உயர்ந்த குறிக்கோளைக் கொண்டிருந்து, அதற்கெனத் தளரா முயற்சி செய்து அம்முயற்சியில் தோல்வியுறுதலே சிறந்தது என்பதும் தமிழர் கண்ட கொள்கையாம். இதனையே பெரியார்,


காண முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
(குறள்-772)

என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டுப் பெருநூல்களிற் காணப்படும் பெருமக்கள் கருத்துக்களும் அவர்கள் செய்த செய்கைகளும் இத்தகைய கருத்தையே அடிப்படையாகக் கொண்டவை.