பக்கம்:அஞ்சலி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 119

பாஞ்சாலி இங்கே வந்துதான் வேலையெல்லாம் கத்துக்கிட்டா. இங்கேதான் ஆளானாள். இங்கேதான் தன் குட்டிங்களைப் பெத்தாள். தான் போனப்பறம் தன்னிடத்துலே பாஞ்சாலி இங்கேதான் இருக்கணும். இருக்கப்போறா. என்னைப்போலேயே தனக்கு வேளை வந்ததும் பாஞ்சாலி இங்கேதான் போவப்போறா. பாஞ்சாலி இந்த வீட்டுக்கு மருமவ. பாஞ்சாலி இந்த வூட்டுக்குப் பொண்ணு. பாஞ்சாலி நல்ல பொண்ணு...

“அளுவாதே பொண்ணே. குழந்தைக்கு ஆவாது. நான் சொல்லுறேன் கேளு இங்கே வா.”

பாஞ்சாலி குழந்தை மாதிரி அருகே வந்தாள். பூரணி, பாஞ்சாலியின் மேலாக்கின் கீழ் அடிவயிற்றில் கை வைத்தாள். கையடியில் உயிர்ப்பிண்டம் புரண்டது. ஸ்பரிசத்தின் அதிர்ச்சி, திடீரென அவளுடைய வெளி நினைவை மூர்ச்சையில் கொண்டுபோய்விட்டது. அவள் எங்கோ படிப்படியாய் அலை அலையாய்த் தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள். விழுந்தடித்து ஒடும் மாட்டின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குவதுபோல், உள் நினைவைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவள் மூர்ச்சை வழி இழுபட்டுச் செல்கையில் போகும் வழியெல்லாம் அவள் மேல்தோல் சட்டைகள் ஒவ்வொன்றாய் உரிவதுபோல், வருடங்கள் வயதுகள் கழன்று விழுந்து கொண்டு இளையவளாய் ஆகிக்கொண்டிருந்தாள். திடீரென அவளை இழுத்துச் செல்லும் மாட்டின் எதிரே யாரோ பூமியிலிருந்து முளைத்துத் தோன்றி அதன் இரு கொம்புகளையும் கையால் பிடித்து இழுத்து அதன் வேகத்தை நிறுத்தி அதைச் சட்டென அப்பால் பிடித்துத் தள்ளியது போன்றிருந்தது. பூரணி பிடி தளர்ந்து கீழே வீழ்ந்தாள். அவள் கைகள் இரு பாதங்களின்மேல் வீழ்ந்து இறுகப் பற்றின. கண்கள் அவள் கணவன் முகத்தில் விழித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/129&oldid=1033453" இலிருந்து மீள்விக்கப்பட்டது