பக்கம்:அஞ்சலி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 லா. ச. ராமாமிருதம்

“அவன் நிமிந்து பாத்தான். எழுந்திருச்சு நின்னான். அவன் மொவம் ஒரு மாதிரியா மாறிப்போச்சு, காத்தடிச்சா செவுத்து வெளக்குச் சுடரை கை மறைச்சா உள் விரல்லே ‘டால்’ அடிக்கல்லே. அதுமாதிரி அந்த மொவம் சாயம் தொஞ்சிப் போச்சி. அப்புறம் கடைசி வரைக்கும் அந்த முவம் அப்படியேதான் இருந்திச்சுன்னு என்னெண்ணம்.

“எனக்கு வெக்கமாப் போச்சு. அந்த இடத்தை விட்டு நவந்து, காவா தாண்டி நாலடி வந்துட்டேன். நடுவழியிலேயே தான் அவனை மறந்துகூடப் போயாச்சு. வூட்டுலே கழுத்து நிமிர நிக்குற ஒரு வண்டி வேலை மேலே நெனப்புபூட்டுது.

“வெள்ளி முளைக்கிற முன்னாலே வண்டிநெல் புளுக்கியாவணும். வேகமா நடையைக் கட்டினேன்.

“பின்னாலே ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினா அந்த ஆளைப் பார்த்தேன். நான் நின்னா அவனும் நின்னான்.நான் நவந்தா அவனும் நவந்தான். எனக்குத் திகிலாயிட்டுது. ஒட்டமா வீட்டுக்கு வந்து ட்டேன்;

“ஆனா அன்னிக்கு நடுராவுலே அடுப்புலே அண்டாவுலே கட்டையாலே நெல்லை நான் கிளர்றச்சே திடீர்னு ஆவிலேருந்து பிரிந்து ஜெவஜெவன்னு அந்த முகம் எழுந்திருச்சதும் எனக்குத் திக்குனு ஆயிட்டுது. செவுத்துலே அறைஞ்சு சாணியாட்டம் அப்படியே நின்னுட்டேன். நெல்லு புழுங்கின நாத்தம் திடீர்னு சாம்பிராணிப் புகையாட்டம் வாசனை தூக்குது. எனக்கு என்னான்னே புரியல்லே. இந்த நெனப்பு எங்கே இப்படி திடீர்னு வந்தது? அந்த நினனப்புக்கு ஒரு வாசனைகூட எப்படி வந்திச்சு? சட்டுனு அந்த உருவம் மறைஞ்சுட்டுது. மேல்காரியம் ஒடல்லே. எப்படியோ முடிச்சுட்டுது. வாசலுக்குச் சாணியைத் தெளிச்சுட்டு, தலைப்பை விரிச்சுத் தரையிலே விழுந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/138&oldid=1033458" இலிருந்து மீள்விக்கப்பட்டது