பக்கம்:அஞ்சலி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 153

ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். அந்தி வர்ணங்கள் தோட்டத்தில் தோய்ந்துகொண்டிருந்தன. கிணற்றடியில் சின்னான் கழுத்துக்குக் கீழ் குளித்துவிட்டு உடம்பைத் துடைத்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஜன்னலண்டை வந்தான்.

“என்னா சாமி ஒடம்பு எப்படி? எங்க வவுத்தே நல்லா ஒரு கலக்கு கலக்கிட்டையே! உன்னைக் கட்டையாட்டமான்னா தூக்கிட்டு வந்தோம்! நான் அப்பவே சொன்னேனே! ‘இந்தமாதிரியெல்லாம் சின்ன அய்யாவை இந்தமாரிதி வேளையிலே தனியா உலாத்தவிட்டா இந்த மாரிதிதான் முடியும்னு. நீங்கள்ளாம் ரொம்ப ரொம்ப படிச்சவங்களாயிருந்தாலும் இந்தமாதிரி விசயங்களுலே நாங்க சொல்றதே மிஞ்சக்கூடாது சாமீ’ இது ஒரு காத்து சம்மந்தம். இப்படித்தான் என்னப்பனை ராவெல்லாம் தேடிட்டு வெள்ளி வேளைக்கு ஒரு வயலுலே, அறுத்த முளைமேலே, குப்புற விழுந்திருச்சிக் கிடந்தாரு. வாயாலும் மூக்காலும் ரத்தத்தைக் கக்கிட்டு; நெஞ்சிலே மூச்சு முரடுது; மேல்மூச்சு வாங்கிட்டு அப்போ சொன்னாரு ‘சின்னான் டேய்! கருப்பஞ் சோலைக்கு வடவண்டை களத்துமேட்டுலே கையெழுத்து கலையற வேளையிலே தனியாப் போவாதேன்னு”

ஏதோ எனக்கு மாத்திரம் பக்கத்துச் சுவருக்குக்கூடத் தெரியாதபடி சொல்லும் முறையில் இன்னும் சற்று நெருங்கி வந்தான்.

“இதோபாரு சாமி, பாத்தியா என் கழுத்துலே இந்த கல்லுக் கட்டியிருக்கே இது ஒருத்தருக்கும் அகப்படாது; இதைக் கட்டிட்டு நீ வெளியிலே கிளம்பிட்டா, எந்தக் காத்து, மோகினிகூட உன்கிட்டே ஒண்னும் ஆட்டிக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/163&oldid=1033470" இலிருந்து மீள்விக்கப்பட்டது